28 August 2012

நெருப்பைத் தின்று வெளிச்சமானவளே கரும்புலி செங்கொடி முதலாமாண்டு நினைவாக வன்னிஅரசு

தமிழ்க்குடி தழைக்க
தன்னையே தீய்த்த
எங்கள் குலக்கொடி
ஈடில்லா செங்கொடியே

இந்தியக் கொடி
தூக்குக்கொடியாய்
தமிழர் மூவர்
உயிர்குடிக்க
துடிதுடிக்க
தமிழர் நெஞ்சமெல்லாம்
பதைபதைக்க
நீ மட்டும்
தமிழர் நிலமெல்லாம்
விதைவிதைக்க
விடுதலை
வித்தானாய்

தீயிலும் வேகாத
ஒளியானாய் - கரும்
புலியானாய்

இலை மலர
ஈழம் மலருமென்று
ஆரூடம் சொன்னவர்கள்
அவாள்களின் முந்தானையில்
முகக்கரி துடைப்பதைக்
காணவொண்ணாமல்
கரிக்கட்டையாய் ஆனாயோ

புலி புலியென்று
நெடுமரமாய் நின்று
தமிழ்த்தேசியத்தின்
கெடுமரமாய்
போயசைத்
தாங்கிப் பிடிப்பதைப்
பொறுக்காமல்
உன்னை
நெருப்புக்குள்
கருக்கிக் கொண்டாயோ

செங்கோலிருந்தும்
தில்லி விருந்துக்காக
ஏமாற்று நாடகங்கள்
அரங்கேற்றிய
நயவஞ்சகத்தைக்
காணச் சகிக்காமல்
வெந்தணலுக்கு உன்னை
தின்னத் தந்தாயோ

வெந்ததைத் தின்று
விதிவந்தால் சாகும்
தமிழ்ச் சாதிக்கு
உயரூட்ட
நெருப்பைத் தின்று
வெளிச்சமானவளே

உன் வெளிச்சத்தில்
தில்லி இருட்டைப் பொசுக்கி
சிறுத்தைகள் நாங்கள்
தமிழர் விடுதலையை
வென்றெடுப்போம்!