05 November 2013

முள்ளிவாய்க்கால் முற்றமும் மன்னிக்காது!

ஓர் உன்னதமான விடுதலைப் போராட்டத்தை மேற்கொண்டவர் மேதகு பிரபாகரன் அவர்கள். சிங்கள இனவெறியர்களால் ஒடுக்குமுறைக்குள்ளான தமிழினத்தை விடுவிக்க களத்தில் வெடித்தவர்; தமிழர் விடுதலைக்காகவே துடித்தவர்; அதற்காகவே புலிப்படை படைத்தவர்.
1956ஆம் ஆண்டு இலங்கை அதிபர் பண்டாரநாயகா சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று பிரகடனப்படுத்தியதை எதிர்த்து தமிழர்கள் கொதிப்புற்றனர். இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் 1956 சூன் 5ஆம் நாள் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தின் முன்உள்ள காலி முகத்திடலில் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது. இப்போராட்டத்தில் தமிழறிஞர் வனப்பிதா தனிநாயகம் அடிகளார் கலந்துகொண்டு சிங்கள ஆதிக்கத்திற்கு எதிராக முழங்கினார். இதனால் சிங்கள இனவெறியர்கள் தமிழர்கள் மீது கடும் தாக்குதலை மேற்கொண்டனர். அம்பாறை மாவட்டம் உக்கினியாகலை அருகில் உள்ள கல்லோயா ஆற்றுப் பள்ளத்தாக்கில் நிறுவப்பட்டிருந்த கரும்புத் தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டிருந்த தமிழர்கள் மீதுதான் முதல் தாக்குதல் நடத்தப்பட்டது. அதுவும் அம்பாறையில் குடியேற்றப்பட்ட சிங்களர்களால்தான் அக்கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தமிழர்கள் 150 பேர் கொல்லப்பட்டனர். இதுதான் முதல் இனப்படுகொலை என்று இலங்கை அவசரகாலச் சட்ட நூல் தெரிவிக்கிறது.
இதற்கடுத்து தொடர்ச்சியான படுகொலைகள் பல மாவட்டங்களில் நிகழ்த்தப்பட்டன. தலைநகர் கொழும்பில் தினமும் தமிழர்கள் கொல்லப்பட்டனர். சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று அறிவித்துவிட்டு தமிழ் மொழியைப் புறக்கணித்ததால் ஏற்பட்ட புறக்கணிப்பு அரசியலிலிருந்து இனப்படுகொலை அரசியல்ரீதியாகவே பகிரங்கமாகவே நிகழ்த்தப்பட்டது. ஈழத் தந்தை செல்வாவும், பண்டாரநாயகாவும் 26-7-1957 அன்று ஓர் உடன்படிக்கை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். தமிழ்மொழிக்கு சம உரிமை தொடர்பான அவ்வொப்பந்தத்தை எதிர்த்து ஜே.ஆர்.ஜெயவர்த்தன கண்டிக்கு யாத்திரை கிளம்பினார். ஜெயவர்த்தனேவின் பிரச்சாரம் நாடு முழுக்க தமிழர்கள் மீது வெறுப்புணர்ச்சியைத் தூண்டியது (இப்போது இராமதாஸ் தலித்துகளுக்கெதிராகச் செய்வதுபோல்). தமிழர்கள் எல்லா நிலையிலும் எல்லா இடங்களிலும் புறக்கணிக்கப்பட்டனர். சூன் 1, 1981ஆம் அன்று தெற்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமான யாழ் நூலகத்தை இலங்கை இராணுவம் தீக்கிரையாக்கியது. இதில் 97,000 நூல்களும் சாம்பலாயின. அத்தனையும் வரலாற்றுச் சிறப்புமிக்க நூல்கள். 
இவ்வெறியாட்டத்திற்குப் பிறகு இனப்படுகொலைகள் தீவிரமாகின. சூலை 25, 1983 - திருநெல்வேலிப் படுகொலை, 1984 - வவுனியா மாவட்டம், சாம்பல் தோட்டம் படுகொலை; யாழ் மாவட்டம் சுண்ணாகம் காவல்நிலையப் படுகொலை; மார்ச் 28, 1984 - சுண்ணாகம் சந்தைப் படுகொலை; 1984 செப்டம்பர் - அனுராதபுரம் மாவட்ட எல்லை கிராமமான மதவாச்சிப் படுகொலை; 16-9-1984 - பருத்தித்துறை, சிக்கம் படுகொலை; 1984 திசம்பர் 1 - முல்லைத்தீவு மாவட்டம், ஒட்டுச்சுட்டான், ஓதியமலை படுகொலை; திசம்பர் 2, 1984 - முல்லைத் தீவு மாவட்டம் குமுழுமுனைப் படுகொலை, அதே நாளில் வவுனியா மாவட்டம் செட்டிகுளத்தில் படுகொலை என்று 1980களில் தொடங்கி தமிழர்கள் இன்றுவரை கொத்துக்கொத்தாகக்கொல்லப்பட்டு வருகின்றனர். சிங்கள இனவெறியர்களோடு இணைந்து இராணுவமே கொலைவெறியாட்டத்தை நடத்தியது. இத்தகைய சூழலில் வேறு வழியில்லாமல் காலம் தமிழர்களிடத்தில் ஆயுதத்தைக் கையளித்தது. ஆயுதங்களை மட்டுமல்லாது, பிரபாகரன் என்கிற போராளித் தலைவனையும் காலம் பிரசவித்தது. 
சிங்களர்களின் ஒடுக்குமுறைக்கெதிராகவும், புறக்கணிப்புகளுக்கெதிராகவும், பிரபாகரன் முன்னெடுத்த போராட்டங்களை வரலாறு திரும்பிப் பார்த்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அந்த அறம்சார்ந்த போராட்டங்கள் உலகம் முழுவதும் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கான போராட்டங்களாக மாறின. ஒடுக்கப்பட்டவர்களுக்கான விடுதலை வேட்கையாக புலிகள் உச்சரிக்கப்பட்டனர். உலகம் முழுக்கப் புறக்கணிக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், மேதகு பிரபாகரன் அவர்களின் போராட்டத்தை ஆதரித்தனர். அப்படிப் புலிகளின் போராட்டத்தை வெளிப்படையாக தமிழகத்தில் ஆதரித்த இயக்கங்களில் முக்கியமானது விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம். 
1990க்கு முன்பு விடுதலைப் புலிகளுக்கான ஆதரவும், அவர்களின் நடமாட்டமும் வெளிப்படையாக இருந்தது. ஆனால், 1991 மே 21க்குப் பிறகு அதாவது, இராஜீவ் கொலையுண்டதற்குப் பிறகு தமிழகத்தில் விடுதலை என்ற சொல்லையே உச்சரிக்கத் தயங்கினர். புலிகளை ஆதரித்தவர்கள் ‘தடா’ சட்டம் போன்ற தேசத் துரோகச் சட்டங்கள் மூலம் அச்சுறுத்தப்பட்டனர். இச்சூழலில் புறக்கணிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக 1991ஆம் ஆண்டு இறுதியில் ஓர் இயக்கத்தைத் தொடங்கினார் திருமாவளவன் எனும் இளைஞர். அந்த இயக்கத்திற்கு ‘விடுதலைச் சிறுத்தைகள்’ என்று பெயர் சூட்டினார். விடுதலை எனும் பெயரையே உச்சரிக்கப் பயந்த அந்த நெருக்கடி காலத்தில் ‘விடுதலைப் புலிகளின் தாக்கத்தால்தான் விடுதலைச் சிறுத்தைகள் என்று பெயரைச் சூட்டினேன்' என்று வெளிப்படையாகவும் துணிச்சலுடனும் அறிவித்தார். அறிவித்தது மட்டுமல்லாமல், விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறோம் என்று நெஞ்சுறுதியுடன் பிரகடனம் செய்தார்.
சாதியச் சிக்கல்கள் நிறைந்த தமிழகத்தில் - சாதியின் பெயரால் புறக்கணிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார் திருமாவளவன். சிங்கள இனத்தில் ஒடுக்குமுறையிலிருந்து உருவானது விடுதலைப்புலிகள் இயக்கம். சாதிய ஒடுக்குமுறைகளிலிருந்து உருவானது விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம். தேர்தல் புறக்கணிப்பு அரசியல் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டிய காலத்திலிருந்து, தமிழ்த் தேசிய அரசியலைச் சேரிகளில் விதைக்க ஆரம்பித்தார் திருமாவளவன். சாதிஒழிப்பும் தமிழ்த்தேசியமும் என்கிற எழுச்சி முழக்கம் சேரி இளைஞர்களிடையே முன்வைக்கப்பட்டது. அதனால்தான் மற்ற தலித் அமைப்புகளிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் முற்றிலும் மாறுபட்ட அமைப்பாகக் கவனிக்கப்பட்டது. வெகுமக்கள் மட்டுமல்லாது, அரசும் கூர்ந்து கவனித்தது. விடுதலைச் சிறுத்தைகளைக் கவனிப்பதற்காகவே ஒற்றுத்துறை ஒன்று இயங்கியது. ஆனால், எதற்கும் அச்சப்படாமல் துணிச்சலுடன் விடுதலைச் சிறுத்தைகளை வழிநடத்தினார் திருமாவளவன். 
1983ஆம் ஆண்டு மாணவராக இருந்தபோதே, மாணவர்களை ஒருங்கிணைத்துப் போராட்டங்களை முன்னெடுத்தது போல, மற்ற சனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து தற்போது தமிழ்த் தேசியக் களத்தில் களமாடி வருகிறார். 1984ஆம் ஆண்டு மாணவர் பருவத்தில் ‘விடுதலைப்புலி’ எனும் கையெழுத்து இதழ் நடத்தியது மட்டுமல்லாது, அதே ஆண்டில் பெரியார் திடலில் கவியரசர் கண்ணதாசன் பேரவை சார்பில் ஈழ விடுதலை ஆதரவு மாணவர் மாநாட்டை ஒருங்கிணைத்தார். மாணவப் பருவத்தில் தொடங்கிய போராட்டம் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது - வலிமையாக... விரிந்த களத்தில்.
1991ஆம் ஆண்டு இராஜீவ் கொலைக்குப் பிறகு தமிழ்நாடு எப்படி ஒரு நெருக்கடி நிலையைச் சந்தித்ததோ அதைவிடக் கடும் நெருக்கடியை 2001ஆம் ஆண்டு தமிழகம் சந்தித்தது. ஜெயலலிதா அம்மையார் வெளிப்படையாகவே விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் மீது யுத்தத்தைத் திணித்தார். விடுதலைப் புலிகளை ஆதரித்த பெரும்பாலானோர் ‘பொடா’வில் தளைப்படுத்தப்பட்டனர். பிரபாகரன் பெயரையோ அவரது படத்தையோ பயன்படுத்துபவர்களுக்கு சிறைக்கதவு திறந்தே வைக்கப்பட்டிருந்தது. இச்சூழலில், அடுத்த கைது திருமாவளவன்தான் என்று ஊடகங்கள் ஆரூடம் கூறின. இத்தகைய நெருக்கடியான காலகட்டத்தில்தான் 2002ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் யாழ்ப்பாணத்திற்குச் சென்றார். புலித் தளபதிகளோடு பயணமானார். புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களைச் சந்தித்தார். தமிழகம் திரும்பியதும் கைது செய்யப்படலாம் என்று தங்களது விருப்பத்தை தலைப்புச் செய்திகளாக்கின ஊடகங்கள். “தொடர்ந்து விடுதலைப் புலிகளை ஆதரிப்பேன்; கைது நடவடிக்கைக்கு அஞ்ச மாட்டேன்!” என்று விமான நிலையத்திலேயே செய்தியாளர்களிடம் முழங்கினார். தமிழக அரசின் அடக்குமுறைக்கெதிராக அடங்க மறுத்து, அதிரடிப் பாய்ச்சலில் பயணித்தது சிறுத்தைகள்.
இச்சூழல் குறித்து, யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தமிழ்மண் இதழுக்கு (சனவரி 2008) அளித்த நேர்காணலின்போது, “பழ.நெடுமாறன், வைகோ போன்றவர்களின் கைதுக்குப் பின்பு தற்போது விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசக்கூடாது என்கிற பிரச்சாரத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் மட்டும் கொஞ்சம் அடிபணிந்திருந்தால் ஈழப் போராட்ட ஆதரவுக்கான சவப்பெட்டியின் கடைசி ஆணியை அடித்து முடித்திருப்பார்கள். ஆனால் அதற்குக் கொஞ்சமும் இடம்கொடுக்காமல் விடுதலைச் சிறுத்தைகள் அந்த சக்திகளின் முயற்சியைத் தகர்த்து விட்டார்கள். ஈழப் போராட்டத்திற்கான ஆதரவு தமிழகத்தின் இனி அதிகரிக்கத்தான் செய்யும். அதைத் தடுக்க முடியாத அளவிற்கு விடுதலைச் சிறுத்தைகளின் செயல்பாடுகள் இத்தருணத்தில் சரியாக இருக்கிறது. தமிழகத்தில் கருத்துரிமைக்கு எதிரான நெருக்கடியை இறுக்கமான சூழலை விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் உடைத்திருக்கிறார். ஏனென்றால், விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களைக் கடத்துவது பெருமைதான் என்று வெளிப்படையாகப் பேசியதன் மூலம் அத்தகைய இறுக்கம் பிசுபிசுத்துப் போய்விட்டது. விடுதலைச் சிறுத்தைகள் மட்டும் கொஞ்சம் யோசித்துச் செய்வோம், கொஞ்சம் அடக்கி வாசிப்போம் என்று பின்வாங்கியிருந்தால் நிலைமை மோசமாகியிருக்கும்” என்று உண்மையை உலகுக்கு உரத்துக் கூறினார். இன்றைக்கும் திரு. சிவாஜிலிங்கம் அவர்கள் தமிழீழ மக்களுக்காக முதல்வர் விக்னேஸ்வரனுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
அப்படித்தான் ஜெயலலிதா அம்மையாரின் நெருக்கடிகளை உடைக்கும் வகையில் 23-11-2001 அன்று திருச்சி உறையூரில் ‘பொடா’ எதிர்ப்புப் பொதுக்கூட்டத்தில் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைக்க வேண்டிய தேவை இருக்கிறது என்று வெளிப்படையாக அறிவித்து அதற்கான செயல்திட்டங்களையும் மேற்கொண்டார். ‘பொடா’வை எதிர்த்து தொடர்ச்சியாக தமிழகத்தில் முழக்கமிட்ட ஒரே தலைவர் திருமாவளவன்தான். இதன் தொடர்ச்சியாக கடந்த 5-8-2002 அன்று சென்னை பாம்குரோவ் விடுதியில் பொடா எதிர்ப்பு முன்னணியை உருவாக்கும் வகையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். அக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் அய்யா நல்லக்கண்ணு, மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னணி தலைவர் டி.கே.ரங்கராஜன், சுப.வீரபாண்டியன், விடுதலை இராசேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். பொடா எதிர்ப்பு முன்னணியை உருவாக்கியதன் மூலம் தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலையை எதிர்த்து தமிழகம் முழுக்க போராட்டங்களை முன்னெடுத்தார் திருமாவளவன். கடைசிவரை பொடாவை எதிர்த்துப் போராடியது சிறுத்தைகள்தான்.
இதையொட்டி சூலை 2003ஆம் ஆண்டு தமிழகம் முழுக்க அடக்குமுறைச் சட்டங்கள் எதிர்ப்பு மாநாடுகள் மண்டலவாரியாக சிறுத்தைகளின் சார்பில் நடத்தப்பட்டன. பிப்ரவரி 16, 2006 அன்று ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாடு ஒன்று சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நடத்தப்பட்டது. இம்மாநாட்டில் இலட்சக் கணக்கான இளைஞர்கள் ஆர்த்தெழுந்தனர். 16-6-2006 அன்று தமிழகமெங்கும் ஈழத்தமிழர் பாதுகாப்பை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள், 6-7-2006 அன்று மயிலை மாங்கொல்லையில் ஈழத்தமிழர் பாதுகாப்புப் பொதுக்கூட்டம் என்று விடுதலை அரசியலுக்கான நெருப்பை சிறுத்தைகள் தொடர்ந்து அடைகாத்தது. விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வனின் படுகொலைக்குப் பிறகு, தமிழகத்தில் இரங்கலுக்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டது. இத்தருணத்தில்தான் ‘கண்டனமும் இரங்கலும் தேசத் துரோகமா?’ என்கிற முழக்கத்தோடு சனவரி 25, 2008 அன்று கருத்துரிமை மீட்பு மாநாடு சென்னையில் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. யார் வாய்மூடிக் கிடந்தாலும் நாங்கள் வாய்மூடி இருக்க மாட்டோம் என்று முழங்கினார்.
இதனையடுத்து தமிழகத்திலிருந்த இறுக்கம் தளர்ந்தது. விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ச்சியாக விடுதலைப் புலிகளின் தமிழீழ அரசியலை மையப்படுத்தியும், ஆதரித்தும் பல மாநாடுகளை தலைநகர் சென்னையிலேயே நடத்திக் காட்டியது. 2008 நவம்பர் மாதம் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில், ‘இந்திய அரசே போரை நிறுத்து! ஈழத் தமிழரைக் காப்பாற்று!’ என்கிற முழக்கங்களோடு அடுத்தடுத்த போராட்டங்களை அறிவித்தார். அக்டோபர் 23, 2008 அன்று இரயில் மறியல் போராட்டம்; 6-11-2008 - மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் உண்ணா நிலைப் போராட்டம், 11-11-2008 அன்று தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் தொடர்முழக்கப் போராட்டம், 18-11-2008 அன்று முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பில் பேரணி என தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஈழப் போராட்ட நெருப்பைப் பற்றவைத்தது சிறுத்தைகள். இதன் தொடர்ச்சியாக தமிழீழத்தை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டுமென்று வலியுறுத்தி, 26-12-2008 அன்று தமிழீழ அங்கீகார மாநாடு சென்னையில் நடைபெற்றது. அரசின் பல தடைகளைத் தகர்த்து இலட்சக்கணக்கான சிறுத்தைகள் புல்லாரெட்டி நிழற்சாலையை நிரப்பினர். 
தமிழீழ மக்கள் மீதான போரை நிறுத்த பலகட்டப் போராட்டங்களை நடத்திய பிறகும், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட பிறகும் போர் நிறுத்தப்படவில்லை. இதன் உச்சகட்டமாகத்தான் தலைவர் திருமாவளவன் அவர்களே, தமது உயிரை ஆயுதமாகப் பயன்படுத்தத் துணிந்தார். 15-1-2009 அன்று சென்னை மறைமலைநகரில் உயுராயுதமாக காலவறையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினார். நான்கு நாட்களாகத் தொடர்ந்த அந்த உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடர விரும்பாத சமூகவிரோதிகளின் சதியால் உண்ணாநிலைப் போராட்டம் முடித்து வைக்கப்பட்டது. ஆனாலும், தமிழீழத்தின் தேவையை தமிழர்களின் விடுதலை அரசியலை முன்வைத்து, மீண்டும் 28-5-2009 அன்று மன்றோ சிலையிலிருந்து சேப்பாக்கம் வரை விடுதலைச் சிறுத்தைகளின் அமைதிப் பேரணி நடைபெற்றது. ஈழப் போராட்டத்தில் கொத்துக்குண்டுகளால் கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்தும் பேரணியாக அது நடத்தப்பட்டது.
போர் முடிந்து, புலிகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டாலும், தமிழீழத்தின் தேவையும், விடுதலை வேட்கையும் தமிழர்களின் உயிர்மூச்சு என்பதை முன்னெடுக்கும் வகையில் 17-8-2009 அன்று எழும் தமிழ் ஈழம் எனும் மாநாட்டை நடத்தி உலகத் தமிழர்களிடையே நம்பிக்கையை விதைத்தார். விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் இத்தகைய வீரியமிக்க போராட்டங்களை நடத்தினாலும், மற்ற தோழமை இயக்கங்களின் சார்பில் நடைபெற்ற போராட்டங்களிலும் திருமாவளவன் கலந்துகொண்டு ஆதரவு கொடுத்து ஊக்கப்படுத்தினார். அந்த வகையில்தான் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற அத்தனைப் போராட்டங்களிலும் கலந்துகொண்டு போராட்டத்தின் களத்தை விரிவுபடுத்தினார். 
சிங்களப் பேரினவாதத்தால் புறக்கணித்து ஒடக்குமுறைக்குள்ளான தமிழ் மக்கள் விடுதலைக்காக தமிழகத்தில் ஒடுக்குமுறைக்குள்ளான தாழ்த்தப்பட்ட மக்களை அணிதிரட்டிப் போராடிய விடுதலைச் சிறுத்தைகளின் களப்பணிகளும் அர்ப்பணிப்பும் விடுதலைப்புலிகளுக்கு நன்றாகவே தெரிந்தது. அதனால்தான் தமிழீழத்தின் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் 2002ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மானுடத்தின் தமிழ்க்கூடல் மாநாட்டிற்கு தலைவர் திருமாவளவன் அவர்களை அழைத்தார். தமிழகத்திலிருந்து புலிகளால் அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட்ட ஒரே அரசியல் அமைப்பு விடுதலைச் சிறுத்தைகள்தான். அந்த அளவுக்கு வீரியமிக்க போராட்டங்களால் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் தமிழீழ ஆதரரவைக் கொண்டு சேர்த்த இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள். எளிய சமானிய மனிதர்களை விடுதலைப் புலிகளின் விடுதலைப் போராட்டடத்தை ஆதரிக்கிற வகையில் துணிச்சலை உருவாக்கிய இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள். சேரிகளிலும் குப்பங்களிலும் மேதகு பிரபாகரன் படங்களும், தமிழ்த் தேசியக் கருத்தியலையும் கொண்டு போய்ச் சேர்த்தது விடுதலைச் சிறுத்தைகளின் எழுச்சிமிகுந்த போராட்டங்களும் பரப்புரைகளும்தான். சுருக்காகச் சொன்னால், விடுலைப் புலிகளின் விடுதலை அரசியலை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்த்தது மட்டுமல்லாமல் இளைய தலைமுறையையும் போராட்டக் களத்தில் இறக்கியதும் விடுதலைச் சிறுத்தைகள்தான்.
விடுதலைச் சிறுத்தைகளுக்கே இத்தகைய களமாடுதல் தொடரும்போது பெரியாரால் உருவாக்கப்பட்ட திராவிடர் கழகத்துக்கு எந்த அளவுக்கு களங்கள் இருக்கும் என்பதை உலகம் அறியும். இலங்கை மண்ணில் தமிழர்கள் சுயமரியாதையோடு வாழ வேண்டுமானால் தனித் தேசமாகத்தான் பிரிய வேண்டும், தமிழீழம்தான் தீர்வாக அமையும் என்று தொடர்ந்து குரல்கொடுத்து வருபவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். அத்தகைய தளகர்த்தர் தலைமையில், எத்தனையோ போராட்டங்கள் தமிழகத்தில் வெடித்தன. பெரியார் திடலே ஈழப் போராட்டத்திற்கான களங்களை உருவாக்கித் தந்தது என்றால் யாரும் மறுக்க முடியாது. 
1983ஆம் அண்டு கொழும்பில் தமிழர்கள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பிறகு தொடங்கிய கலவரங்களால் தமிழர்கள் சொல்ல முடியாத துயரங்களை அடைந்தனர். இச்சூழலில் உடனடியாக பெரியார் திடலில் 18-6-1983 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை திராவிடர் கழகம் சார்பில் ஆசிரியர் கூட்டினார். 2-7-1983 அன்று சென்னை புல்லாரெட்டி நிழற்சாலையில் அனைத்துக் கட்சி கண்டனப் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. இதுதான் ஈழத்துக்கு ஆதரவான அனைத்துக் கட்சிகளின் சார்பில் நடைபெற்ற முதல் பொதுக்கூட்டம். இதனைத் தொடர்ந்து 1983 ஆகஸ்டு 15ஆம் நாளை துக்க நாளாக அறிவித்து, வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டங்களை அறிவித்தார் ஆசிரியர். தமிழ்நாடெங்கும் இப்போராட்டம் பற்றி எரிந்தது. ஆசிரியர் கி.வீரமணி உட்பட திராவிடர் கழகத்தினர் தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர். மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை என சிறைக்குப் போன தோழர்கள் விடுதலையான பிறகும் தொடர் போராட்டங்களை மேற்கொண்டனர்.
தமிழர் இறைச்சிக் கடைகளைக் கொழும்பில் திறந்து தமிழர்களைக் கொன்றழித்த ஜெயவர்த்தனே 23-11-1983 அன்று புதுதில்லிக்கு வருவதை எதிர்த்து ஆசிரியர் தலைமையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டங்களை தமிழகம் முழுக்க நடத்தி மீண்டும் கைதானார்கள். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் இனப்படுகொலைக்கெதிரான போராட்டங்கள் வெடித்தன. இச்சூழலில்தான், ஆசிரியர் அவர்களின் முன்முயற்சியால் ‘டெசோ’ உருவாக்கப்பட்டது. கலைஞர் அவர்களைத் தலைவராக முன்மொழிந்து மே 13, 1985 அன்று ‘டெசோ’ (தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பு) உருவானது. இவ்வமைப்பில் ஆசிரியர் கி.வீரமணி, பேராசிரியர் அன்பழகன், பழ.நெடுமாறன் ஆகியோர் உறுப்பினர்களாகச் செயல்பட்டனர். சிங்கள இனவெறியன் ஜெயவர்த்தனேக்கு எதிரான போராட்டங்கள் டெசோ சார்பில் தமிழகம் முழுக்கக் கிளர்ந்தெழுந்தன.
30-8-1985 அன்று டெசோ சார்பில் நாடெங்கும் நடைபெற்ற ரயில் மறியல் தமிழகத்தை உசுப்பியது. இப்போராட்டத்தில் ஆசிரியர் உட்பட தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில், விடுதலைப்புலிகளின் தொலைத்தொடர்புக் கருவிகளைத் தமிழக அரசு பறிமுதல் செய்ததைக் கண்டித்து 23-11-1986 அன்று அடையாறில் பிரபாகரன் உள்ளிட்ட போராளிகள் உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டபோது, ஆசிரியர் வீரமணி அவர்கள் பிரபாகரன் அவர்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தது மட்டுமல்லாது, அரசோடு பேசி தொலைத் தொடர்புக் கருவிகளைத் திரும்பக் கொடுக்க வைத்தார். அப்போது சட்டக்கல்லூரி மாணவராக இருந்த விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் அவர்களும் மாணவர்களைத் திரட்டி பிரபாகரன் உண்ணாநிலையிருந்த அடையாறு இல்லத்திற்கே சென்று அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
1987ஆம் ஆண்டு இராஜீவ்காந்தியும் ஜெயவர்த்தனேயும் போட்டுக்கொண்ட ஒப்பந்தம் தமிழர்களுக்கு எந்தப் பயனும் அளிக்காது என்பதை தமிழகமெங்கும் பிரச்சாரத்தை முடுக்கிவிடும் வகையில் 16-6-1987முதல் 21-6-1987 வரை முதல் கட்டமாகவும், 7-9-1987 முதல் 11-9-1987வரை இரண்டாம் கட்டமாகவும் நாடு முழுவதும் இராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை எதிர்த்து ஆசிரியர் தலைமையில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இது மட்டுமல்லாமல், 26-10-1987 அன்று வானொலி-தொலைக்காட்சி நிலையங்கள் முற்றுகைப் போராட்டம் ஆசிரியர் தலைமையில் எழுச்சியாக நடைபெற்றது. காவல்துறை வழக்கம்போல் ஆசிரியர் உள்ளிட்ட திராவிடர் கழகத்தினரைக் கைது செய்து சிறைப்படுத்தியது. இச்சூழலில் 22-12-1987 அன்று தமிழகம் வந்த ஜெயவர்த்தனேவின் பங்காளி இராஜீவ்காந்திக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஆசிரியர் தலைமையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய கையோடு, 25-1-1988 அன்று இந்தியக் குடியரசு விழாவிற்கு வந்த ஜெயவர்த்தனேவுக்கு கருப்புக்கொடி என்று எண்பதுகளில் தொடங்கிய வீரஞ்செறிந்த போராட்டங்களை இன்றும் கொள்கை வழுவாமல் நடத்திக்கொண்டிருக்கிற இயக்கம் - மற்ற இயக்கங்களுக்கு முன்னத்திஏராக வழிகாட்டும் வகையில் சனநாயகப் போரை நடத்தும் திராவிடர் கழகத்தின் களப்பணிகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. 
அப்பேரியக்கத்தை வலிமை குன்றாமல் நடத்திவரும் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தமிழீழப் போராட்டக் களத்தில் மட்டும் 22 முறை கைது செய்யப்பட்டுச் சிறை சென்றிருக்கிறார். 80 வயதைக் கடந்தும் இன்றும் இளைஞராக அனைவரையும் அரவணைத்து விருப்பு வெறுப்பின்றி பெரியார் வழியில், மானுடநேயத்துடன் சமரசமின்றிக் களமாடி வருகிறார். போராடி வருகிற இளைஞர்களை ஊக்கப்படுத்துவதோடு வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார். அப்படித்தான் விடுதலைச் சிறுத்தைகளையும் அரவணைத்து ஊக்கப்படுத்தி வருகிறார். பெரியார் திடல்தான் போராட்டக்காரர்களுக்கு உலைக்களமாகத் திகழ்கிறது. அந்த உலைக்களத்திலிருந்து உருவாக்கப்பட்ட ஆயுதம்தான் திருமாவளவன். அதனால்தான் எவ்விதச் சமரசமுமின்றி நெருக்கடிகளை உடைத்து பொதுநீரோட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடி வருகிறார். 
அந்த உலைக்களத்தில் வடிக்கப்பட்ட இன்னொரு ஆயுதம்தான் சுபவீ. தொண்ணூறுகளில் ‘விடுதலைக் குயில்கள்’ அமைப்பைத் தொடங்கி தமிழ் இனம் மானம் காக்கக் களத்திற்கு வந்த போராளி சுபவீ, கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தாலும் மாணவர்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டியவர். இதற்காகவே பலமுறை கல்லூரி நிர்வாகத்தின் நடவடிக்கைக்குள்ளானவர். 1992 மார்ச் மாதம் புலிகளை ஆதரித்து தமிழர் ஒற்றுமை மாநாடு நடத்தினார். கல்லூரிக்குப் போய்விட்டு போராட்டக் களம் நோக்கியே வந்து களமாடிய போராளி சுபவீ 1993ஆம் ஆண்டு மாவீரன் கிட்டு வீரச்சாவையொட்டு இரங்கல் நிகழ்ச்சி நடத்துவதற்காக, புலவர் புலமைப்பித்தன் உள்ளிட்ட உணர்வாளர்களோடு ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டார். அடிக்கடி போராட்டங்களினால் சிறைக்குப் போவதால் ஆசிரியர் பணி இடையூறாக இருப்பதாக உணர்ந்து, 1997ஆம் ஆண்டு தம்முடைய 45ஆம் வயதில் விருப்பு ஓய்வு கொடுத்துவிட்டு தீவிர இனவிடுதலைப் போராட்டத்தில் இறங்கினார்.
விடுதலைப்புலிகளின் ஆதரவாளன் என்கிற முத்திரை உங்கள் மீது விழுந்துள்ளதே என்று சுபவீயிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “அது முத்திரை அல்ல; எனது முகவரி” என்று வெளிப்படையாகத் தமது முகவரியைப் பெருமையாக அறிவித்தார்.
2002ஆம் ஆண்டு பொடா சட்டத்தின் மூலம் தமிழீழ ஆதரவாளர்களை அச்சுறுத்திவந்த நிலையிலும் புலிகளை ஆதரிப்பது எனது கடமை என்று அறிவித்ததன் மூலம் பொடா சட்டத்தின்கீழ் கைதாகி 494 நாட்கள் சிறை அனுபவித்தார். சிறைவாசத்திற்குப் பிறகும், முன்பைவிட அதிரடிப் பாய்ச்சலில் புலியாக தமிழகத்தில் களமாடி வருகிறார்.
தமிழகத்தில் பெரியார், அம்பேத்கர் கொள்கையை உயிர்மூச்சாகக் கொண்டு தலித்துகள் விடுதலையிலும், சமூக மாற்றத்திலும் அக்கறையுள்ள தலைவர்களாக வாழ்ந்து வருபவர்கள் ஆசிரியர் கி.வீரமணி, தொல்.திருமாவளவன், பேராசிரியர் சுபவீ. தலித்துகள் விடுதலையடைந்தால்தான் தமிழ்ச் சமூகம் முழுமையான விடுதலை அடையும் என்கிற கொள்கை நம்பிக்கையோடு களமாடி வருபவர்கள். அதனால்தான் தருமபுரி, மரக்காணத்தில் தலித்துகளுக்கெதிராக நிகழ்த்தப்பட்ட சாதிவெறியாட்டத்தை முதலில் கண்டித்துக் குரலெழுப்பினார்கள் ஆசிரியரும், பேராசிரியரும். ஈழவிடுதலைக் களம் என்றாலும், தலித்துகளின் விடுதலைக் களமானாலும், பெண்ணிய விடுதலைக் களமானாலும் முன்னணியில் நிற்பவர்கள். விடுதலைச் சிறுத்தைகளை நேசிப்பது மட்டுமல்லாது, எப்போதும் தோளோடு தோள் நிற்கும் தோழர்கள். உலகம் முழுக்க ஈழ விடுதலைக்காகச் சுற்றுப் பயணம் செய்தவர்கள். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களால் நேசிக்கப்பட்டவர்கள். 
இப்படிப்பட்ட தலைவர்களைத்தான் சிலர் ‘துரோகிகள்’ என்று சான்றிதழ் வழங்கியுள்ளனர். நிலப்பிரபுக்கள் ம.நடராசன் (சசிகலா), பொள்ளாச்சி மகாலிங்கம், விஐடி விசுவநாதன் போன்ற முதலாளித்துவப் பின்புலம் இல்லாதவர்கள்தான் இம்மூன்று தலைவர்களும். சாதாரண ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்கள்தான் இவர்களது பின்புலம். மக்களோடு மக்களாக இருப்பவர்கள், மக்களுக்காகவே வாழ்பவர்கள், முதலாளித்துவத்துக்கு எதிரான தொழிலாளர்களின் தோழர்கள்.. இப்படிப்பட்ட தலைவர்களை, பெரிய முதலாளிகளுடன், கொடிய மதவாதிகளுடன் இனவிடுதலைக் களத்தில் கைகோர்க்கும் சில சுயநல சக்திகள் ‘துரோகிகள்’ என்று குற்றப்பத்திரிகை வாசித்ததை முள்ளிவாய்க்கால் முற்றம் மட்டுமல்ல தமிழ்ச் சுற்றமும் ஏற்காது. 
 காலம் ஒருநாள் பதில் சொல்லும்.
- வன்னிஅரசு ( vanni.viduthalai@gmail.com)

0 comments:

Post a Comment