19 February 2015

லிங்கா படப் பிரச்சனை - விடுதலைச் சிறுத்தைகள் ஞாயத்தின் பக்கமே நிற்போம்!

பால் வியாபாரம் பார்த்தாலும் சரி; துணி வியாபாரம் பார்த்தாலும் சரி... ஒரே பாடல் காட்சியில் பெரும் பணக்காரன் ஆகிவிடுவார் கதாநாயகன்.  பாடல் முடிந்தவுடனேயே காரிலிருந்து இறங்குவார். 
 
அப்படித்தான் சினிமா வியாபாரமும்.  கோடிகளைக் குவிக்க ஆசைப்பட்டுக் கோடம்பாக்கத்தில் தயாரிப்பாளர்களாக, விநியோகஸ்தர்களாக, கதாநாயகர்களாக ஆயிரக் கணக்கில் திரிகிறார்கள்.  வெற்றி பெறுகிறார்கள் சிலர்.  கோவணமாவது மிஞ்சியதே என்று ஊரைத் தேடி ஓட்டம் பிடிக்கிறார்கள் பலர்.
  
சினிமா சூது நிறைந்த உலகம்.  பெயரில்தான் தர்மனாக இருப்பார்கள்.  பெண்டாட்டி, பிள்ளைகளை விற்று சினிமா எடுக்கும் தர்மன்களாக மாறியிருக்கிறார்கள்.  இலாப-நட்டம் எந்தத் தொழிலிலும் உண்டு. சினிமாத் தொழிலில் மட்டும் புகழும் சேர்த்து உண்டு.  அப்படித்தான் இலாப நோக்கத்தோடு அண்மையில் 'லிங்கா' திரைப்படத்தை வாங்கிய வியாபாரிகளுக்கு பெரும் நட்டம் ஏற்பட்டிருப்பதாகச் சொல்லி போர்க் கொடி தூக்கியிருக்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

நடிகர் ரஜினிகாந்த் என்ற ஒற்றைப் பிம்பத்தை வைத்து, வியாபாரம் செய்திருக்கிறார்கள். ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் நாட்களில் சென்னை போன்ற பெரு நகரங்களின் சாலைகள் ஸ்தம்பித்துப் போகும். ரசிகர்களின் பணம் சாலைகளில் பட்டாசாக வெடித்துச் சிதறும்.  அந்த அளவுக்கு ஒரு 'ஓபனிங்' உண்டு. அதற்காகத்தான் பல கோடி ரூபாயைக் குதிரைப் பந்தயத்தில் கொட்டுவதுபோல் கொட்டுகிறார்கள்.  

இப்படிக் கொட்டுகிற சில படங்கள் 'ஓஹோ'வென ஓடுகின்றன.  ஏராளமான படங்கள் வந்த வேகத்திலேயே திரும்பி விடுகின்றன. 
 
இப்படி கமலின் எத்தனையோ படங்கள் தோல்வியடைந்திருக்கின்றன.  'ஆளவந்தான்', 'ஹேராம்' போன்றவை வியாபார அளவில் தோல்விப் படங்கள்தான். தயாரிப்பாளர்களுக்குப் பெரும் நட்டத்தை ஏற்படுத்திய படங்கள்தான்.  அதைப் போல முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்கள் பல தோல்வியைச் சந்தித்துள்ளன.  இந்தப் படங்களை வாங்கிய விநியோகஸ்தர் எவரும் சம்மந்தப்பட்ட நடிகர்களிடம் நஷ்ட ஈடு கேட்டதில்லை.  அடுத்தடுத்த படங்களை வாங்கி நட்டத்தைச் சரி செய்துகொண்டார்கள்.  இதுதான் திரையுலக மரபு.  இத்தகைய சுமூகமான உறவை நடிகர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் அனைவரும் பரஸ்பரம் மேம்படுத்திக்கொள்கிறார்கள்.

  

ஆனால் இப்போது, 'லிங்கா' படத்தின் விநியோகஸ்தர்கள் திரு. ரஜினி அவர்களிடம் நஷ்ட ஈடு கேட்பது நியாயம்தானா?  நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் மீதும் அவரது படங்கள் மீதும் நமக்கு பல விமர்சனங்கள் உண்டு.  அது வேறு.  ஆனால், புகழ்பெற்ற ஒரு கலைஞரை முன்வைத்து, 'பிளாக்மெயில்' செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
  
திரு. ரஜினிகாந்த் அவர்கள் ஒரு தொழில்முறைக் கலைஞர். சம்பளம் வாங்கினார்; நடித்துக் கொடுத்தார். அவ்வளவுதான் அவரது 'ரோல்'.  இயக்குநரும் அப்படித்தான்.  இதில் தயாரிப்பாளரும், விநியோகஸ்தர்களும்தான் இலாப வேட்டையாடத் துடிப்பவர்கள்.  இந்தக் குதிரைப் பந்தயத்தில் அடித்தால் ஜாக்பாட்.  இல்லையென்றால் தெருவிற்கு வரவேண்டியதுதான்.  இப்படி எத்தனையோ தயாரிப்பாளர்கள் தெருக்களில் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். வாரத்திற்கு பத்து திரைப்படங்கள் வெளிவருகின்றன. அதில் ஓரிரு படங்கள் மட்டுமே தப்பித்துக்கொள்கின்றன.  மற்ற படங்கள் எல்லாம் ஒரு காட்சிகூட ஓடுவதில்லை.  முன்பெல்லாம் தொழில் முறை வியாபாரிகளாக இருந்து சினிமாவை தொழிலாகப் பார்த்து நட்டம் ஏற்பட்டாலும் பொறுமையோடு காத்திருந்து வியாபாரம் செய்தார்கள். ஆனால் இப்போது அப்படியல்ல.  கார்ப்பரேட் நிறுவனங்கள் சினிமாவைக் கைப்பற்றிவிட்டன. அது மட்டுமல்லாமல் 'ரியல் எஸ்டேட்', சட்டத்திற்குப் புறம்பான 'நம்பர் 2' பிஸினஸ் மூலம் சம்பாதித்து சினிமாவுக்குள் வருபவர்கள்தான் இப்போது அதிகம்.  அப்படி தொழில்முறை விநியோகஸ்தர்களாக இல்லாதவர்களாகச் சேர்ந்து 'லிங்கா' படத்தை கொள்ளை இலாபம் கிடைக்கும் என்ற பேராசையில் வாங்கினார்கள்.  அவர்களின் முதல் வியாபாரமே நட்டத்தில் முடிந்துவிட்டது.

ஒரு தொழிலில் இலாபம்-நட்டம் வருவது சகஜம்தான்.  சினிமா என்பது இப்போது தொழிலாக இல்லாமல் சூதாட்டமாக மாறிவிட்டது. இந்தச் சூதாட்டத்தில் அரசியல்வாதிகளை இழுப்பது அநாகரிகம். அதைவிட அநாகரிகம் நடித்த நடிகர்களிடம் நட்டஈடு கேட்பது.  லிங்கா திரைப்படத்தைப் பொறுத்தவரை நட்டம் அடைந்ததாகச் சொல்லப்படும் விநியோகஸ்தர்கள் யாருமே தொழில்முறை விநியோகஸ்தர்கள் அல்ல.  அதுதான் இங்கு பிரச்சனை.  

உண்மையிலேயே நட்டஈட்டை வேந்தர் மூவிஸிடம்தான் இவர்கள் கேட்க வேண்டும். அதைவிடுத்து திரு. ரஜினி அவர்களிடம் கேட்பது தவறானது.  லிங்கா படத்தின் மூலம் இலாபம் அடைந்திருந்தால் அதிக இலாபம் அடைந்துவிட்டோம் என்று அந்தப் படத்தில் நடித்த நடிகர்களுக்கு எந்த விநியோகஸ்தராவது இலாபத்தில் பங்கு கொடுத்திருக்கிறார்களா?  அல்லது இலாபம் அடைந்தோம் என்று வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்களா?  லிங்கா திரைப்படத்தைப் பொறுத்தவரை விநியோகஸ்தர்கள் நட்டம் அடைந்துவிட்டதாகச் சொல்லி உண்ணாவிரதம், பிச்சையெடுக்கும் போராட்டம் என்று மிரட்டுவது தொழிலுக்கே எதிரானது. இதில் அரசியல்வாதிகளை இழுப்பது ஆபத்தானது.

பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் அடுத்தடுத்த படங்களை வாங்கித்தான் நட்டத்தைச் சரி செய்ய வேண்டுமே தவிர, மிரட்டுவது, பிளாக்மெயில் செய்வது சரியல்ல.  அதாவது பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவாக இருப்பதாக, தவறாக ஒரு சிலர் கட்சியின் பெயரை திரையுலகில் பயன்படுத்தி வருவதாகக் கேள்விப்படுகிறோம்.  அப்படிப் பயன்படுத்தினால் அது மிகவும் கண்டிக்கத்தக்கது.  

கடந்த மாதம் வள்ளுவர் கோட்டத்திற்கு முன்பு நடிகர் ரஜினி அவர்களுக்கு எதிராக விநியோகஸ்தர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது, விநியோகஸ்தர்கள் சார்பாக ஒருவர் என்னைத் தொடர்புகொண்டு, "எங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை வாழ்த்துவதற்காக சீமான் வருகிறார், தலைவர் திருமாவளவன் அவர்களும் வரவேண்டும்.  அவரைச் சந்திக்க அனுமதி கிடைக்குமா?" என்று கேட்டார்.  அதற்கு நான், "இது உங்கள் திரையுலகப் பிரச்சனை.  படத்தில் நட்டம் ஏற்பட்டதற்காக நடிகரிடம் பணத்தைத் திருப்பிக் கேட்பது முறையானதுமல்ல. எனவே நாங்கள் இதில் தலையிட மாட்டோம்" என்று சொன்னதும் அமைதியாகிவிட்டார்கள்.

ஆகவே, லிங்கா திரைப்படப் பிரச்சனையில் விடுதலைச் சிறுத்தைகளின் பெயரை யாராவது தவறாகப் பயன்படுத்தினால் அது கண்டனத்துக்குரியது.  அப்படிப் பயன்படுத்துவது தெரிந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். 
 
விடுதலைச் சிறுத்தைகளைப் பொறுத்தவரை எந்தத் தளத்திலும் ஞாயத்தின் பக்கமே நிற்போம்!

வன்னி அரசு.

1 comments:

Unknown said...

Arumaiyana nilappaadu sago....

Post a Comment