04 September 2025

உமர் காலித் உள்ளிட்ட 9 பேருக்கு பிணை மறுப்பு - காவி பாசிசத்தின் பிடியில் இந்திய நீதித்துறை!

புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்தளித்த இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கூறுகளில் ஒன்றான மதச்சார்பின்மையை நீர்த்து போகச்செய்யும் ஆர்.எஸ்.எஸ். சங்க பரிவார் கும்பலின் தொடர் முயற்சிகளில் ஒன்றாக குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்தது மோடி அரசு.


கடந்த 2019 திசம்பரில் குடியுரிமை திருத்த சட்டம் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட காலகட்டத்தில், இஸ்லாமியர்களின் பங்கேற்புடன் சனநாயக சக்திகள் போராட்டங்களை முன்னெடுத்தனர். தில்லி ஷாஹீன் பாக் போராட்டக் களம் நாடெங்கும் எதிரொலித்தது. அரசின் அடக்குமுறை - ஊடக இருட்டடிப்பு, இஸ்லாமிய வெறுப்பு பரப்புரை என அனைத்தையும் இஸ்லாமிய பெண்கள் துணிவுடன் எதிர்கொண்டனர்.


டெல்லி கலவரமும் எப்.ஐ.ஆர். எண் 59 ம் 


தலைநகர் தில்லியில் பல இடங்களில் மிக வீரியமாக நடைபெற்றவந்த போராட்டத்தில், அரசின் ஆதரவோடு வன்முறையை அரங்கேற்றி சங்க பரிவார கும்பல்  போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. கடந்த 2020ஆம் ஆண்டு பிப். 22 -24 ஆகிய நாட்களில் இஸ்லாமியர்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகள் தாக்கப்பட்டன, அவர்களின் வீடுகள், வணிக வளாகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர். 


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்ட பின்னணியில் அரங்கேறிய வன்முறை சம்பவத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் மிகவும் முக்கியமானதாக கருதப்படும் வழக்கு தான் எப்.ஐ.ஆர். 59/2020.



கடந்த 2020 பிப்ரவரியில் தில்லியில் வன்முறை நடைபெற்ற காலகட்டத்தில் 24மற்றும் 25 ஆகிய தேதிகளில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். 2019 திசம்பரிலிருந்து குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வந்தாலும், ட்ரம்பின் வருகையையொட்டி பெருமளவு வன்முறை சம்பவங்களை அரங்கேற்ற போராட்டக்காரர்கள் திட்டமிட்டதாகவும், அதற்காக பல மாதங்களாக சதி ஆலோசனையில் ஈடுபட்டதாகவும், இதன் விளைவாக தான் தில்லி கலவரம் முன்கூட்டியே திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் மதரீதியாக நாட்டை துண்டாடும் திட்டமும் இருந்ததாக அரசு சொல்லியது.


தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவ செயற்பாட்டாளர்கள் ஷர்ஜீல் இமாம் மற்றும் உமர் காலித் ஆகிய இருவரை தில்லி கலவரத்துக்கு மூளையாக செயல்பட்டதாக எப்.ஐ.ஆர். 59 குற்றஞ்சாட்டுகிறது. இந்த இருவருடன் சேர்த்து இந்த வழக்கில் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஜாமியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் ஆகியவற்றின் மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் என மொத்தம் 18 பேர் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.


1. தாஹிர் உசேன், 2. உமர் காலித், 3. காலித் சைஃபி, 4. இஷ்ராத் ஜெஹான், 5. மீரான் ஹைதர், 6. குல்ஃபிஷா ஃபாத்திமா, 7. ஷர்ஜீல் இமாம், 8. ஃபைசான் கான், 9. ஷடாப் அஹமத், 10. தஸ்லீம் அஹமத், 11. சலீம் மாலிக், 12. முகமது சலீம் கான், 13. அதார் கான், 14. சஃபூரா சார்கார், 15. ஷிஃபா-உர்- ரஹ்மான், 16. ஆசிஃப் இக்பால் தன்ஹா, 17. நடாஷா நர்வால், 18. தேவங்கனா கலிடா ஆகியோரை கைது செய்து சிறைப்படுத்தியது.


சாலையோர கடையில் மொபைல் சிம் விற்று வந்த ஃபைசான் கான் என்பவருக்கு 2020ஆம் ஆண்டும், பிஞ்சரா டோட் (கூண்டினை உடைத்தெறிவோம்) எனும் கல்லூரி மாணவிகள் அமைப்பை சேர்ந்த நடாஷா நர்வால் மற்றும் தேவங்கனா கலிடா ஆகியோருக்கு 2021ஆம் ஆண்டும் டெல்லி உயர்நீதிமன்றம் பிணை வழங்கியது. மேலும் ஜாமியா மிலியா பல்கலை மாணவர்களான இக்பால் தன்ஹா, சஃபூரா சர்கார் (கைது செய்யப்படும்போது 3 மாத கர்ப்பிணி), வழக்கறிஞர் இஷ்ராத் ஜெஹான் ஆகியோரும் வழக்கின் தன்மையின் அடிப்படையில் பிணை வழங்கப்பட்டது. 


எப்.ஐ.ஆர். 59 வழக்கில் கைது செய்யப்பட்ட 18 பேரில் 6 பேருக்கு 2 ஆண்டுகளிலேயே பிணை கிடைத்தும், மீதமுள்ள 12 பேரும் 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இந்த வழக்கில் ஒன்றுக்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், இதுவரை வழக்கு விசாரணை தொடங்கப்படவில்லை.


உமர் காலித்தின் சட்டப்போராட்டம்


இந்திய நீதித்துறையின் தற்போதைய பரிதாபகர நிலைக்கான சாட்சியாக மாணவ செயற்பாட்டாளர் உமர் காலித் பிணை வழக்கு அமைந்துள்ளது. முதல் பிணை மனுவை விசாரணை நீதிமன்றம் 2022ல் தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட சிறப்பு பிணை மனு மீதான விசாரணை கிட்டத்தட்ட 14 மாதங்களில் 14 முறை ஒத்திவைக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் 



உமர் காலித்தின் பிணை மனுவை விசாரித்தவர் நீதிபதி பெலா திரிவேதி. இவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக தேர்வாகும் முன்னர், குஜராத் முதல்வராக மோடி இருந்த காலகட்டத்தில் அம்மாநில அரசின் சட்டத்துறை செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


பீமா கொரேகான் வழக்கில் மகேஷ் ராவத் எனும் செயற்பாட்டாளருக்கு மும்பை உயர்நீதிமன்றம் வழங்கிய பிணையை நிறுத்தி வைத்தவர் நீதிபதி பெலா. பிணை கிடைத்தும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளார் ராவத். அதே போல, பேராசிரியர் சாய்பாபாவை விடுதலை செய்த உயர்நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்தவர் நீதிபதி பெலா. ஆனால் மறுவிசாரணையில் மீண்டும் அவரை விடுவித்தது மும்பை உயர்நீதிமன்றம். தீர்ப்பு வந்த 7 மாதங்களில் இறந்தே போனார் சாய்பாபா. இதே நீதிபதி தான், டெல்லி உயர்நீதிமன்றத்தில் 3 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள தங்கள் பிணை மனுவை விரைந்து விசாரிக்க கோரிய ஷர்ஜீல் இமாம் மற்றும் குல்ஃபிஷா ஃபாத்திமா ஆகியோரின் மனுவை தள்ளுபடி செய்தவர்.


’All The Appeals Are Dismissed’


எப்.ஐ.ஆர். 59ன் கீழ் சிறைவைக்கப்பட்டுள்ளவர்கள் பல்வேறு காலகட்டங்களில் விசாரணை நீதிமன்றத்தால் பிணை மறுக்கப்பட்டு, தில்லி உயர்நிதீமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்கின் தொடக்க காலகட்டத்திலேயே 6 பேர் வழக்கின் தரவுகள் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், சிறையில் உள்ள 12 பேரில் 9 பேரின் பிணை மனுவை ஒன்றாக விசாரித்தது தில்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஷாலிந்தர் கவுர் மற்றும் நவீன் சாவ்லா அமர்வு இந்த 9 பேரின் பிணை மனுக்கள் மீதான விசாரணை பல கட்ட இழுபறிக்கு பின்னர் முடிக்கப்பட்டு கடந்த ஜூலை 9ஆம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. நீதிபதி ஷாலிந்தர் கவுர் எழுதிய தீர்ப்பு செப். 2ஆம் தேதி வெளியானது. வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்ட சில நொடிகளிலேயே ’All The Appeals Are Dismissed’ என்று அறிவித்தார் நீதிபதி ஷாலிந்தர். பிணை கோரி தாக்கல் செய்த 9 பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம். அன்று மாலை 133 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு நகல் வெளியானது.



‘Bail is the rule; Jail is the exception’ - ’பிணை என்பது விதி, சிறை என்பது விதிவிலக்கு’ - இது தான் உச்சநீதிமன்றத்தில் நாம் அடிக்கடி கேட்கக்கூடிய வரி. பீமா கொரேகான் வழக்கில் பிணை வழங்கப்பட்ட அருண் பெரேரா, வெர்னான் கான்சல்வேஸ் மற்றும் சோமா சென் ஆகியோரது #ஊபா வழக்கிலும், தில்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மற்றும் தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியின் அமலாக்கத்துறை வழக்கிலும் தனிநபர் சுதந்திரத்தை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியது உச்சநீதிமன்றம்.


ஆனால் உமர் காலித், ஷர்ஜீல் இமாம், குல்ஃபிஷா ஃபாத்திமா போன்ற தோழர்களுக்கு ஆதரவாக மேலே குறிப்பிட்டுள்ள வழக்குகளின் தீர்ப்புகளை வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டியும், அவற்றை ஏற்க மறுத்துள்ளது உயர்நீதிமன்றம். மேலும், இதே வழக்கில் கைது செய்யப்பட்டு 2021ஆம் ஆண்டிலேயே மூவருக்கு பிணை வழங்கப்பட்டதன் அடிப்படையை இவர்களின் பிணை மனுவுக்கு பொருத்திப்பார்க்க முடியாது என்று சொல்லியுள்ளது நீதிமன்றம்.


அதுமட்டுமில்லாமல் ’3000க்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை, 30 ஆயிரத்துக்கும் அதிகமான மின்னணு ஆதாரங்கள், நூற்றுக்கணக்கான சாட்சிகள் என இந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு மேலும் சில ஆண்டுகள் ஆகக்கூடும். ஏற்கனவே விசாரணை எதுவும் தொடங்கப்படாமல் 5 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர்’ என குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதத்தை நிராகரித்தது மட்டுமில்லாமல், இத்தகைய பெரிய வழக்கை விசாரணை அமைப்புகள் சிறப்பாக கையாண்டுள்ளதாகவும், வழக்கு அதன்  இயல்பான போக்கில் (‘Natural Pace’) நடைபெறுவதாக நீதிபதி தீர்ப்பில் விளக்கமளித்துள்ளார்.



தில்லி கலவரம் நடைபெற்று 5 ஆண்டுகள் கடந்துவிட்டன. இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டாலும், இன்னும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் நிலையில் தான் வழக்கு உள்ளது. வழக்கு விசாரணை தொடங்கப்படாமல் வெறும் விசாரணை கைதிகளாகவே 5 ஆண்டுகளை கடந்து சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பிணை மனுக்கள் 3 ஆண்டுகளாக பல்வேறு நீதிமன்றங்களில் காத்துக் கொண்டிருந்தன. ஆனால் இதை தான் ‘இயல்பான போக்கு’ என்கிறது தில்லி உயர்நீதிமன்றம். உமர் காலித் போன்றவர்களுக்கு மட்டும் சிறை தான் விதி - பிணை என்பது விதிவிலக்கு என்று சொல்கிறது நீதிமன்றம். 


மனிதர்களை அச்சுறுத்தும் நாய்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கொடுக்கப்பட்ட தீர்ப்பை மறுவிசாரணை செய்ய அடுத்த சில நாட்களில் சிறப்பு அமர்வு அமைத்து, அந்த தீர்ப்பை நிறுத்திவைக்கும் நீதித்துறையை கொண்டது இந்நாடு. இங்கே தான் அரசியலமைப்பை பாதுகாப்பதற்காக போராடியதால் கைது செய்யப்பட்ட இந்நாட்டின் குடிமக்கள், பிணை எதுவும் இல்லாமல் 5 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டுள்ள அவலமும் அரங்கேறி வருகிறது.


டெல்லி கலவரத்தை தூண்டிய பாஜக தலைவர்கள்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் போது, ‘துரோகிகளை சுட்டுக் கொல்லுங்கள்’ என்று பொதுக்கூட்டத்தில் பேசிய அனுராக் தாகூர் அப்போது நிதியமைச்சகத்தில் இணை அமைச்சர், அடுத்து அமைந்த ஆட்சியில் தகவல் தொடர்பு அமைச்சர் பதவி அவருக்கு கொடுக்கப்பட்டது. அதே போல, ‘போராட்டக்காரர்களை காவல்துறை விரட்டவில்லை என்றால், நாங்களே தெருவில் இறங்குவோம்’ என்று தில்லி வன்முறைக்கு சில மணிநேரம் முன்பு வன்முறைக்கு தூண்டிய கபில் மிஸ்ரா தான் இப்போது தில்லி பாஜக அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர். கலவரக்காரர்களான மோடி - அமித்ஷா ஆகியோர் தலைமை வகிக்கும் ஆட்சியில் புனிதர்களா இருப்பார்கள்? கலவரக்காரர்கள் ஆட்சியில், சனநாயகவாதிகள் சிறைக் கொட்டடியில்.


பாசிச பாஜக அரசின் கூலிப்படையாக எதிர்க்கட்சியினரை குறிவைக்கும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சனநாயக சக்திகளை வேட்டையாடும் விசாரணை அமைப்புகளான சிபிஐ, என்.ஐ.ஏ., குடிமக்களின் வாக்குரிமையை திருடும் தேர்தல் ஆணையம் என இந்த பட்டியலில் நீதிமன்றங்களும் அதன் நீதிபதிகளும் தங்களை இணைந்துக் கொண்டுள்ளனர்.


காவி பாசிசத்திடம் தொலைத்த முதுகெலும்பை கண்டெடுக்குமா நீதித்துறை?காவி பாசிசத்திடமிருந்து சனநாயகத்தை பாதுகாப்பது ஒவ்வொரு சனநாயகவாதிகளின் கடமை. அந்த வகையில், உமர்காலித் உள்ளிட்ட 9 பேரையும் மீட்டெடுக்க மக்கள் மன்றத்தையும் தீவிரப்படுத்துவோம்!


- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி
4.9.2025

23 July 2025

அப்பாவி முஸ்லீம்கள் விடுதலை: மும்பை ரயில்களில் குண்டு வைத்தது சனாதன பயங்கரவாதிகளா?

கடந்த 2006, ஜூலை 11ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு 7 மும்பை புறநகர் ரயில்களின் முதல்நிலை பெட்டிகளில் 7 குண்டுகள் வெடித்தன. இதில் 187 அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டனர், 824 பேர் காயமடைந்தனர். மொத்தம் 13 பேர் மீது ‘தீவிரவாத தடுப்புக் குழு’ (ATS) குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. மேலும், 15 பேர் தேடப்படும் குற்றவாளிகளாவும், 2 பேர் இறந்துவிட்டதாகவும் அறிவித்தது.


இந்த வழக்கை விசாரித்து வந்த மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த 2015, செப். 30ஆம் தேதி தீர்ப்பளித்தது. அதில், குற்றஞ்சாட்டப்பட்ட 13 பேரில் 5 பேருக்கு தூக்கு தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. ஒருவர் மட்டும் விடுதலை செய்யப்பட்டார்.


மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கியிருந்த அப்பாவிகள்


தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள்:

1. கமல் அன்சாரி
2. முகமது ஃபைசல்
3. குத்புத்தின் சித்திக்
4. நவீத் உசேன்
5. ஆசிப் கான்


ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள்:

1. தன்வீர் அகமது
2. முகமது மஜீத்
3. ஷேக் முகமது
4. முகமது சஜீத்
5. முசாமில் ரகுமான் ஷேக்
6. சுஹைல் மெகமூத்
7. சமீர் அகமது


விடுதலை செய்யப்பட்டவர்: அப்துல் வாஹித் ஷேக்


தூக்கு தண்டனையை உறுதி செய்வதற்கு மும்பை உயர்நீதிமன்றத்தை மராட்டிய அரசு அணுகியது. தண்டனை விதிக்கப்பட்ட தோழர்களும் அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். மிகவும் எளிய பின்னணியை சேர்ந்த இவர்களால் வழக்கை மேற்கொண்டு நடத்த முடியாத சூழலில், நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட ஜாமியத் உலாமா-இ-இந்த் அமைப்பினர் இவர்களின் மேல்முறையீட்டு வழக்கை எடுத்து நடத்துவதற்கு முன்வந்தனர்.


மராட்டிய அரசால் மேல்முறையீட்டு வழக்கு மிகவும் தாமதமாக நடத்தப்பட்டு வந்ததால், வழக்கை விரைந்து நடத்த இஸ்லாமியர்கள் தரப்பு 2024ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தை அணுகியது. இதனால் நீதிபதிகள் அணில் கிலோர் & சந்தக் ஆகியோரை கொண்ட சிறப்பு விசாரணை அமர்வு அமைக்கப்பட்டு தொடர்ந்து 7 மாதங்கள் விசாரணை நடந்தது. இவ்வாண்டு சனவரியில் இறுதி தீர்ப்பு வழங்குவதற்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.


உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு நீதிபதிகள் அணில் கிலோர் & சந்தக்

கடந்த 2006ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, 2015ல் குற்றவாளிகளாக தூக்கு தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்ட 13 பேரும் நிரபராதிகள் என்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின் போது ஒருவர் கோவிட் தொற்றால் 2021ஆம் ஆண்டில் மறைந்தார். மீதமுள்ள 12 பேரும் மராட்டிய மாநிலத்தில் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 22.7.2025 அன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த 19 ஆண்டுகளில் ஒரு முறைகூட இந்த 12 பேருக்கு பிணை வழங்கப்படவில்லை என்பது தான் நெஞ்சை உலுக்கும் கொடுமை.


ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த தீர்ப்பு மொத்தம் 671 பக்கங்களை கொண்டுள்ளது. மிகவும் விரிவான தீர்ப்பை இரண்டு நீதிபதிகளில் ஒருவரான அணில் கிலோர் எழுதியுள்ளார்.


இந்த வழக்கில் அப்பாவி இஸ்லாமியர்களுக்காக நாட்டின் முக்கியமான சட்ட ஆளுமைகளை அணுகியது ஜாமியத் உலாமா-இ-இந்த். வழக்கில் உள்ள அனைவரும் அப்பாவிகள், நடைபெற்ற தீவிரவாத சம்பவத்துக்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாதவர்கள் என்பதை உறுதியாக நம்பிய வழக்கறிஞர் குழு அமைக்கப்பட்டது. இதில் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.நாகமுத்து, ஒடிசா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஓய்வு பெற்ற எஸ்.முரளிதர், நாடறிந்த வழக்கறிஞர் நித்யா ராமகிருஷ்ணன் ஆகிய மூன்று மூத்த வழக்கறிஞர்கள் மேல்முறையீட்டு சிறப்பு விசாரணை அமர்வில் ஆஜராகி வாதாடினர்.


மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.நாகமுத்து, எஸ்.முரளிதர் & நித்யா ராமகிருஷ்ணன்

நீதிபதி முரளிதருக்கு உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்று கொலீஜியம் பரிந்துரைத்த பின்பும், அதனை ஏற்க மறுத்தது ஒன்றிய பாஜக அரசு. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவே கடந்த 2023ல் ஓய்வு பெற்றார் நீதிபதி முரளிதர். இவருக்கு பதவி உயர்வு வழங்காமல் மோடி அரசு பயந்ததற்கான காரணம் இப்போது புரிந்திருக்கும்.


முந்தைய ஒன்றிய காங்கிரஸ் ஆட்சியில், துணை ராணுவப்படையுடன் இணைந்து மாவோயிஸ்ட்கள் என்ற பெயரில் அப்பாவி பழங்குடிகளை வேட்டையாடிய ‘சல்வா ஜுடும்’ எனும் தன்னார்வ கூலிப்படைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கை நடத்தி, அதனை சட்டவிரோதம் என்று தீர்ப்பை பெற்றவர் வழக்கறிஞர் நித்யா ராமகிருஷ்ணன். 


விடுதலைக்கு வித்திட்ட வரலாற்று தீர்ப்பு!


குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்து தண்டனை வழங்கிய சிறப்பு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உள்ள முரண்களையும், உரிய ஆதாரம் ஏதுமின்றி குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான மனநிலையில் விசாரணை அதிகாரிகள் செயல்பட்ட விதத்தையும் உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளிப்படுத்தி உள்ளது.


காவல்நிலைய விசாரணையில் கடும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, அழுத்தத்தின் பேரில் குற்றஞ்சாட்டப்பட்ட அப்பாவிகளிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்கள் தான் ஒட்டுமொத்த குற்றத்தையும் அவர்கள் மீது சுமத்துவதற்கு அடிப்படை ஆதாரமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களிடம் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை சமர்ப்பித்த RDX வெடிபொருள் தான் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்டது என்பது நிரூபிக்கப்படவே இல்லை. மேலும், குண்டுவெடிப்பில் என்ன வெடிபொருள் பயன்படுத்தப்பட்டது என்பது கூட காவல்துறை விசாரிக்கவில்லை. அரசு சார்பில் ஆஜர்படுத்தப்பட்ட சாட்சியங்கள் நம்பத்தகுந்ததாக இல்லை, அதிலும் சிலர் பல மாதங்கள் கழித்து சம்பவம் தொடர்பாக சாட்சி சொல்வதும், குற்றவாளிகளை அடையாளம் காண்பதும் சாத்தியமா? என்பது போன்ற அடுக்கடுக்கான சந்தேகங்களும் கேள்விகளும் தீர்ப்பில் உள்ளன.


இந்திய அரசால் பொய் குற்றச்சாட்டுகளின் பெயரில் சிறை வைக்கப்பட்டுள்ள அப்பாவி இஸ்லாமியர்களை மீட்கும் போராட்டத்தில் மேலும் ஒரு அழுத்தமான வெற்றியை பதிவு செய்துள்ளது ஜாமியத் உலாமா-இ-இந்த். 


யார் இந்த ஜாமியத் உலாமா-இ-இந்த்?


ஜாமியத் அமைப்பு இஸ்லாமிய அறிஞர்களின் அமைப்பு. இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து எண்ணற்ற இஸ்லாமிய அறிஞர்களை உயிர்கொடையாக கொடுத்தவர்கள். ஜின்னாவின் பாகிஸ்தான் பிரிவினையை எதிர்த்து, சுதந்திர இந்தியாவின் பக்கம் உறுதியாக நின்றவர்கள்.


ஜாமியத்தின் சட்ட உதவிக் குழு

இன்று அதே இந்திய நாட்டின் அரசால் தீவிரவாதிகள் என்று பொய்யாக குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் வாடும் அப்பாவி இஸ்லாமியர்களின் விடுதலைக்காக சிறப்பு சட்ட உதவி குழுவை அமைத்து நீதிமன்றங்களில் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது. இஸ்லாமியர்களின் அடிப்படை கடமைகளில் ஒன்றான ‘ஜகாத்’ மூலம் நிதியுதவி பெற்று சட்ட உதவி வழங்குகிறது ஜாமியத். இதுவரை 192 அப்பாவி இஸ்லாமியர்களை குற்றமற்றவர்கள் என்று நிரூபித்து விடுவித்துள்ளது.


போராளி ஷாஹித் ஆஸ்மி!


வழக்கறிஞர் ஷாஹித் ஆஸ்மி எனும் போராளியின் உயிர் தியாகம் தான் ஜாமியத்தின் சட்ட உதவிக்குழுவுக்கு விதையாக அமைந்தது. தீவிரவாத வழக்கு ஒன்றில் 7 வருடம் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஷாஹித், சிறையிலிருந்தவாறே பள்ளிப் படிப்பை முடித்து இளநிலை பட்டத்தையும் பெற்றார். தாம் எதிர்கொண்ட அரச வன்முறையை ஊக்கமாக கொண்டு வழக்கறிஞரானார். தீவிரவாத வழக்குகளில் சிக்குண்ட அப்பாவி இஸ்லாமியர்களுக்கு வாதாடினார்.


போராளி வழக்கறிஞர் ஷாஹித் ஆஸ்மி


‘தீவிரவாதிகளின் வழக்கறிஞர்’ என்று அழைக்கப்பட்ட ஷாஹித் ஆஸ்மி, கடந்த 2010ஆம் ஆண்டு தனது 32ஆம் வயதில் அவரது அலுவலகத்தில் வைத்தே சனாதனக் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார்.


சாகிற வரை  17 பேரின் விடுதலைக்கு காரணமாக அமைந்தார். தனது பெயரான ‘ஷாஹித்’ என்பதற்கேற்ப அரச வன்முறையிலிருந்து அப்பாவிகளை மீட்கும் களத்தில் தனது உயிரையே தியாகம் செய்தார் ஆஸ்மி. இவரை படுகொலை செய்த வழக்கும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. அதனூடாக, ஆஸ்மி குறித்து திரைப்படம் கூட வந்துள்ளது. அப்படிப்பட்ட மனித உரிமை போராளியாவார்.


மாலேகான் வழக்கில் சிறை மீண்ட அப்பாவிகள்

மாலேகான் குண்டுவெடிப்பும் தொடரும் சனாதன பயங்கரவாதமும்!


கடந்த 2008ஆம் ஆண்டு 8 பேர் பலியான மாலேகான் குண்டுவெடிப்பில் முதலில் இஸ்லாமிய மாணவர் அமைப்பை (சிமி) சேர்ந்த 9 இஸ்லாமியர்கள் தான் காரணம் என்று தீவிரவாத தடுப்பு குழுவால் (ATS) கைது செய்யப்பட்டனர். சிபிஐக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டபோதும், ATS விசாரணை சரி தான் என்றது சிபிஐ.


ஆனால் 2011ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரணையில் தான், மாலேகான் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது ‘அபினவ் பாரத்’ என்ற சனாதன பயங்கரவாத அமைப்பு தான் என்பதை கண்டுபிடித்தது. சம்ஜவுதா ரயிலில் குண்டு வைத்த தீவிரவாதி சாமியார் அசீமானந்தா இதனை வாக்குமூலமாக அளித்தார்.


சனாதன பயங்கரவாதிகள் சாமியார் அசீமானந்தா, சாமியார் பிரக்யா சிங் & கர்ணல் புரோஹித்

மாலேகான் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாஜக முன்னாள் எம்.பி. பெண் சாமியார் பிரக்யா சிங், கர்ணல் புரோஹித், மேஜர் உபத்யாய், அஜய் ராஹிர்கர், சுதாகர் திவேதி, சுதாகர் சதுர்வேதி மற்றும் சமீர் குல்கர்ணி ஆகியோர் என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ளனர். சாமியார் பிரக்யா சிங்குக்கு தூக்கு தண்டனையை கோரியுள்ளது என்.ஐ.ஏ.


இந்த வழக்கில் தூக்கு கயிற்றுக்கு முதலில் பொய்யாக நிறுத்தப்பட்ட அந்த அப்பாவி 9 இஸ்லாமியர்களுக்கும் வாதாடியது வழக்கறிஞர் ஷாஹித் ஆஸ்மி தான் என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணை கைதிகளாக 5 ஆண்டுகள் கழித்து 2011ல் பிணை கிடைக்கப் பெற்றது. 2016ஆம் ஆண்டு வழக்கிலிருந்து முழுவதும் விடுவிக்கப்பட்டனர்.


பிரதமர் மோடி & சாமியார் அசீமானந்தா

மும்பை ரயில் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் இருந்தபோது, குற்றஞ்சாட்டப்பட்டவர்களை ‘மரண வியாபாரிகள்’ என்று வர்ணித்தார் அரசு வழக்கறிஞர் ராஜா தாக்ரே.


2006 மும்பை ரயில் தொடர் குண்டுவெடிப்பு காலத்தில் சனாதன பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு, மாலேகான் குண்டுவெடிப்பு, மெக்கா மசூதி குண்டுவெடிப்பு, அஜ்மீர் தர்ஹா குண்டுவெடிப்பு வழக்குகளில் தொடர்புடைய சாமியார் அசீமானந்தா, சாமியார் பிரக்யா சிங் தாகூர், கர்ணல் புரோஹித் உள்ளிட்ட காவி தீவிரவாதிகளை மீண்டும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். மும்பை ரயில் குண்டுவெடிப்பில் இந்த மரண வியாபாரிகளுக்கு உள்ள தொடர்பை வெளிக்கொணர வேண்டும்.  


உச்சநீதிமன்றத்தின் முதுகெலும்பு!


கடந்த  ஜூலை 21ஆம் தேதி வெளியான தீர்ப்பை எதிர்த்து மராட்டிய அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது. ஜூலை 25 அன்று வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தலைமை நீதிபதி கவாய் அமர்வு தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் அழுத்தத்துக்கு ஆட்படாமல், அப்பாவிகளை விடுதலை செய்த உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும்.


தலைமை நீதிபதி சந்திரசூட் வீட்டில் மோடி பஜனை

பீமா கொரேகான் தொடர்பான அப்பட்டமான பொய் வழக்கில் சிறை வைக்கப்பட்டுள்ள அறிஞர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் கலைஞர்கள் உள்ளிட்டோரின் பிணையை கூட உறுதி செய்யாமல் தவிர்த்த வரலாறு கொண்டது தான் உச்சநீதிமன்றம். ஒன்றிய அரசுடன் இணக்கமாக சென்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டை விட, துணிந்து நின்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணாவை தான் மக்கள் கொண்டாடுகின்றனர் என்பதை தலைமை நீதிபதி கவாய் நினைவில் கொள்ள வேண்டும். ஏற்கனவெ ஒன்றிய அரசின் கூலிப்படையாக செயல்படும் அமலாக்கத்துறையையும் தேர்தல் ஆணையத்தையும் சட்டத்தின் துணை கொண்டு வறுத்தெடுத்து வருகிறார் என்பது ஆறுதல்.


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

புரட்சியாளர் அம்பேத்கரின் அரசமைப்பு சட்டம் தந்த முதுகெலும்புடன் உச்சநீதிமன்றம் நிமிர்ந்து நிற்கட்டும்.


அப்பாவி முஸ்லீம்களை படுகொலை செய்வதும் அவர்களை பொய் வழக்குகளில் சிறைப்படுத்துவதும் மோடி தலைமையிலான சனாதனக்கும்பலின் சதி வேலையாகவே தொடர்கிறது. இந்த பயங்கரவாதத்திற்கு  தலைமை நீதிபதி முற்றுப்புள்ளி வைக்கட்டும்.


- வன்னி அரசு
  23.07.2025

26 March 2025

கிரிமினல் பொன்.மாணிக்கவேலை காப்பாற்றும் ஆர்.எஸ்.எஸ்.!

காவல்துறை அதிகாரியாக பணியில் சேர்ந்ததிலிருந்து ஒரு கிரிமினலாக சுற்றிக்கொண்டருந்தவர் பொன்.மாணிக்கவேல். சாதி பின்னணி, RSS பின்னணி ஆகியவற்றுடன் ஊடகத்தையும் பயன் படுத்திக்கொண்டு யோக்கியவான் போல வலம் வந்தார். ஆனால், சிலை தடுப்புப்பிரிவு அதிகாரியாக பொறுப்பேற்ற பிறகு மக்களிடையே அம்பலமானார். சிலை கடத்தல் பேர்வழிகளோடு கூட்டு சேர்ந்தது மட்டுமல்லாது, RSS கும்பலோடும் இணைந்து இந்து அறநிலையத்துறையை ஊழல் மலிந்த துறையாக கட்டமைக்க திட்டமிட்டார். ஆனால், அத்தனையும் தோல்வியில் தான் முடிந்தது.



ஏனென்றால்,
இந்து அறநிலையத்துறை வரலாறு சாதாரணமானதல்ல; 1927ஆம் ஆண்டு ‘இந்து அறநிலையங்கள் சட்டம்’ கொண்டு வந்தது நீதிக்கட்சி. இதன் மூலம் குறிப்பிட்ட சமூகத்திடம் அடைபட்டுக் கிடந்த கோயில்கள் அனைத்து சமூகங்களுக்கும் பொதுவானதாக, அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.

இதன் தொடர்ச்சியாகத்தான், 1959ஆம் ஆண்டு,தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது இந்த துறையின் கீழ், 43712 கோயில்கள், 22 சமணக் கோயில்கள், 45 மடங்கள், 69 மடங்களுடன் இணைந்த கோயில்கள், 1263 அறக்கட்டளைகள் மற்றூம் 1130 குறிப்பிட்ட அறக்கட்டளைகள் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டியலில் வராத இன்னும் சில கோயில்கள் குறிப்பிட்ட சமூகத்திடம் சிறைபட்டு கிடக்கின்றன.



இந்து சமயத்தை பின்பற்றும் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளை நிலைநாட்ட திராவிட இயக்கம் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு நூறு ஆண்டுகள் வரலாறு உள்ளது. இந்தியாவுக்கே முன்மாதிரியாக விளங்கும் தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராக, இந்துக்கள் என்ற பெயரில் பார்ப்பன நலனுக்காக மட்டும் இயங்கும் ஆர்.எஸ்.எஸ். சங்கபரிவார கும்பல் காலங்காலமாக போரை தொடுத்து வருகின்றன.

தமிழ்நாட்டில் பெரும்பான்மையாக உள்ள இந்து சமய நம்பிக்கை கொண்டோரின் நலன்களுகாக இந்து சமய அறநிலையத்துறை முன்னெடுக்கும் ஒவ்வொரு திட்டத்தையும், அவாளுக்காகவே செயல்படும் நீதிமன்றங்கள் மூலம் தடுத்தும், முடக்கியும் வருகின்றனர். சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடக்கும் தமிழர் விரோத செயல்பாடுகளும், அவற்றுக்கு நீதிமன்றங்கள் வழங்கும் சட்ட பாதுகாப்புமே சாட்சி!

இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ் - பாஜக கும்பலுக்கு அடியாளாக கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருபவர் தான் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி பொன்.மாணிக்கவேல். சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் தலைவராக அம்மையார் திலகவதி ஐபிஎஸ் அவர்கள் நிகழ்த்திய பல சாதனைகள் பெரிதும் பேசப்படாத நிலையில், ஆர்.எஸ்.எஸ். கும்பலால் திட்டமிட்டு அந்த துறைக்குள் அமர்த்தப்பட்ட பொன்.மாணிக்கவேலை சுற்றி காவல்துறையினரை விட ஊடக கேமராக்கள் புடைசூழ தான் வலம்வருவார்.

திலகவதி IPS

காவல்துறையில் தனக்கு கீழ் பணிபுரியும் காவலர்களை ‘ஓப்பன் மைக்கில்’ அநாகரிமாக பேசுவார், அவமரியாதை செய்வார், அடாவடி போக்கோடு நடந்து கொள்வார், காவல்நிலைய விசாரணையில் மிருகத்தனமாக செயல்படுவார், மொத்தத்தில் காக்கி சட்டையில் செயல்பட்ட ஒரு சைக்கோ என்பது தான் காவல்துறையினரே பொன்.மாணிக்கவேலை பற்றி கூறும் குற்றச்சாட்டுகள். 

சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாவை நடைமுறைப்படுத்தும் முதல் வேலையாக, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் குறித்து பொதுவெளியில் தவறான, அவதூறான கருத்துகளை பரப்பிவிட்டார். இதன் உச்சமாக, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு தங்கம் வாங்கியது தொடர்பான வழக்கில், இந்து சமயஅறநிலையத்துறையைச் சார்ந்த நேர்மையான அதிகாரி திருமதி கவிதா அவர்களை பொய் வழக்கில் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தார். சிலை கடத்தல் வழக்குகளில் ஆய்வு என்ற பெயரில் ஊடக கேமராக்களுடன் நுழைந்து கோயில் நிர்வாக அதிகாரிகளை மிரட்டுவது, பொய்யான குற்றச்சாட்டுகளை ஊடகங்களில் தெரிவிப்பது என்று செயல்பட்டார். 

கோயில் சிலைகளை தினமும் பரிமாரிப்பது, பூஜை புனஸ்காரங்கள் செய்வது பார்ப்பன அர்ச்சகர்கள் தான். ஆனால் கோயில் சிலை கடத்தல் வழக்குகளிலோ அல்லது தங்கம் வாங்கியது குறித்தோ ஒரு பார்ப்பன அர்ச்சகர் மேலும் வழக்கு பதிந்ததில்லை. பொன்.மாணிக்கவேலுவின் குறி எப்போதும் பார்ப்பனரல்லாத இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளாக தான் இருந்துள்ளனர்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவிலிருந்து ரயில்வே பாதுகாப்பு படைக்கு மாற்றப்பட்ட பொன்.மாணிக்கவேலுவை, ஊரில் வேறு அதிகாரிகளே என்பது போல, மீண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கே சிறப்பு அதிகாரியாக நியமித்து உத்தரவிட்டது நீதிமன்றம். 2018ஆம் ஆண்டு பொன்.மாணிக்கவேல் பணி ஓய்வு பெற்றும் நீதிமன்றம் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டது. அரசின் எல்லா துறைகளிலும் நீண்டு விரிந்த ஆர்.எஸ்.எஸ். கும்பலின் கரங்கள் இவற்றை சாத்தியமாக்கின. நீதிமன்ற உத்தரவை தனக்கு சாதமாக வைத்துக்கொண்டு தமிழ்நாடு அரசுக்கு எதிராக, ஒன்றிய பாஜக அரசின் அடியாளாக செயல்பட தொடங்கினார் பொன்.மாணிக்கவேல்.

ஒரு கட்டத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றி வந்த SP ஒருவர், DSP ஒருவர், இன்ஸ்பெக்டர் 4 பேர், சப் -இன்ஸ்பெக்டர் 6 பேர் என்று மொத்தம் 12 அதிகாரிகள் கூட்டாக சேர்ந்து பொன்.மாணிக்கவேலுவுக்கு எதிராக காவல்துறை தலைமை இயக்குநரிடம் புகார் மனு அளித்தனர். தமிழ்நாடு காவல்துறை வரலாற்றில் முதன்முறையாக இந்த அவலம் நடந்தேறியது. அவர்களின் புகார் மனுவில், ”பொன்.மாணிக்கவேல் பொய்யாக வழக்கு பதிவு செய்ய வற்புறுத்துவதாகவும், மறுத்தால் மிக மோசமாக திட்டுவதாகவும் அதனால் எங்களை வேறு இடத்துக்கு பணி மாற்றம் செய்யுங்கள்” என்றும், இது குறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் தலைவராக நீதிமன்றங்களின் துணையோடு பொன்.மாணிக்கவேல் செயல்பட்ட காலக்கட்டத்தில், அவரால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளில் முக்கியமானவர் அதே துறையில் பணிபுரிந்த டிஎஸ்பி காதர் பாட்சா.

காதர் பாட்சா

2005ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம், பழவூர் நாறும்பூநாதர் கோயிலில் 13 சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன. 2006ஆம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் சேர்ந்தார் காதர் பாட்சா. ஆய்வாளர் ஜீவானந்தம் தலைமையில் காதர் பாட்சா உள்ளிட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர புலன் விசாரணைக்கு பின்னர், தீனதயாளன் என்ற சிலை கடத்தல் கும்பல் தலைவனை கைது செய்து, அவனிடமிருந்து 4 சிலைகளை மீட்டனர். பழவூர் வழக்கில் 2008ஆம் ஆண்டே இறுதி விசாரணைஅறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தது.

2017ஆம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு பொறுப்பேற்றார் பொன்.மாணிக்கவேல். தமிழ்நாட்டில் சிலை கடத்தலில்ல் மிகமுக்கிய குற்றவாளியான தீனதயாளன் மீதான வழக்கை நடத்தி அவருக்கு தண்டனை வாங்கி தந்திருப்பார் என்று நாம் நினைத்தால், அது தான் இல்லை. நடந்தது என்ன தெரியுமா?

தீனதயாளனை கைது செய்து சிலை கடத்தல் கும்பலை முடக்கி வைத்த ஜீவானந்தம், காதர் பாட்சா ஆகியோருக்கு எதிராக தீனதயாளனிடமிருந்தே ‘வாக்குமூலம்’ பெற்று, அவரை அப்ரூவராக மாற்றி, அந்த காவல் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கை பதிவு செய்தார் பொன்.மாணிக்கவேல்.

அதாவது பழவூர் சிலைகளை தீனதயாளன் வெளிநாட்டில் உள்ள சிலை கடத்தல் கும்பலை சேர்ந்த சுபாஷ் கபூரிடம் விற்றுவிட்டார். அந்த சிலை பல நாடுகளுக்கு அடுத்தடுத்து கடத்தப்பட்டு 2008ஆம் ஆண்டு இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், இந்த தகவலை மறைத்ததன் மூலம் சுபாஷ் கபூரை காப்பாற்ற காதர் பாட்சா உள்ளிட்ட அதிகாரிகள் முயன்றதாக வழக்கு.

உண்மை என்னவென்றால், வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு 2008ஆம் ஆண்டு இந்தியாவுக்கு திரும்பியதாக பொன்.மாணிக்கவேல் சொல்லிய சிலைகளை, 2007ஆம் ஆண்டு ஆய்வாளர்கள் ஜீவானந்தம் & காதர் பாட்சா குழுவினர் அதிகாரப்பூர்வமாக மீட்டு 2008ஆம் ஆண்டே தீனதயாளன் மீது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.

கடத்தல் கும்பல் தலைவன் தீனதயாளன், 2007ஆம் ஆண்டு தன்னை கைது செய்த அதிகாரிகளுக்கு எதிராக அதுவும் இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒரு வழக்கில், சம்பவ,ம் நடைபெற்ற 12 ஆண்டுகளுக்கு பின்னர் 2017ஆம் ஆண்டு ஒரு குற்றச்சாட்டை வாக்குமூலமாக கொடுக்கிறார். அதனை ஏற்று தீனதயாளனை அனைத்து குற்றங்களிலிருந்து விடுவித்து ‘அப்ரூவராக’ அறிவித்து தப்பிக்க வைத்துள்ளார் பொன்.மாணிக்கவேல். இந்த நபர் தான் நீதிமன்றங்கள் கொண்டாடும் யோக்கிய சிகாமணி!

தீனதயாளன்

இந்த கதை அவ்வளவு வலுவானதாக இல்லை என்று பொன்.மாணிக்கவேலுவுக்கு தோன்றியதால் என்னவோ, இன்னொரு ஜோடிக்கப்பட்ட வழக்கை டி.எஸ்.பி. காதர் பாட்சா மீது பதிவு செய்கிறார்.

2007ஆம் ஆண்டு அருப்புக்கோட்டைக்கு பக்கத்தில் விவசாய நிலத்தில் சிவன், பார்வதி மற்றும் சிவகாமி என மூன்று சிலைகள் அந்த நிலத்தின் உரிமையாளர்களால் கண்டெடுக்கப்படுகின்றன. அவர்கள் கிறிஸ்தவ சமயத்தை சேர்ந்தவர்களாக இருந்ததால், அந்த சிலைகளை ஒரு போட்டோகிராபர் கொண்டு படமெடுத்துவிட்டு தங்கள் ஷெட்டிலேயே வைத்து விடுகின்றனர்.

2008ஆம் ஆண்டு இந்த மூன்று சிலைகளையும் விலை கொடுத்து வாங்குகிறோம் என்ற பெயரில் அவற்றை மீட்க ரகசியமாக சென்ற டிஎஸ்பி காதர் பாட்சா தலைமையிலான போலீசார், சிலைகளை கண்டெடுத்த நிலத்தின் உரிமையாளர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி அவற்றை கொள்ளையடித்துவிட்டதாக வழக்கு. இதுவரை பொன்.மாணிக்கவேல் சொல்வது ஓரளவு நம்பும்படியாக இருக்கும். 

அடுத்து அவர் எழுதிய திரைக்கதை தான் டிவிஸ்ட்...

இந்த மூன்று சிலைகளையும் கடத்திய டிஎஸ்பி காதர்பாட்சா அவற்றை சிலை கடத்தல் தலைவன் தீனதயாளனிடம் 15 லட்சத்துக்கு விற்றுவிட்டாராம். அதுவும் தீனதயாளன் அவற்றை வாங்க மறுத்தபோதும், வலுக்கட்டாயமாக அவரது காரில் காதர் பாட்சா வைத்துவிட்டு சென்றாராம். அந்த சிலைகளில் இரண்டை டெல்லியை சேர்ந்த ஒருவரிடம் 20 லட்சத்துக்கு விற்றுவிட்டார் தீனதயாளன்.

சரி, இவ்வளவு பயங்கரமான குற்றச் சம்பவம் எப்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தெரிய வந்தது?

2016ஆம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தலைவருக்கு வந்த அனாமதேய மர்ம கடிதத்ததில் தான் இந்த குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டிருந்தது. அதுவும் 2008ஆம் ஆண்டு கடிதம் எழுதிய நபர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணிபுரிந்ததாகவும் கடித்தத்தில் சொல்கிறார். 

அடடா இப்படி ஒரு ‘தெளிவான’ ‘விரிவான’ மர்ம கடிதத்தை நாம் எங்கேயாவது பார்த்திருப்போமா?

இந்த ஜோடிக்கப்பட்ட வழக்குகளில் தான் டிஎஸ்பி காதர்பாட்சாவை அடுத்தடுத்து கைது செய்து 90 நாட்கள் பிணையை மறுத்து சிறையில் அடைத்தார் பொன்.மாணிக்கவேல்.

சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த சுபாஷ் கபூரை தாம் தான் ஜெர்மனியிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வந்தேன் என்று ஊடகங்களிடம் புலிகேசி மீசையை தடவியபடி பெருமை பேசுவார் பொன்.மாணிக்கவேல். ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால் தீனதயாளனை அப்ரூவர் என்று சொல்லி தப்பிக்கவிட்டதை போல, சுபாஷ் கபூரிடமும் கூட்டு சேர்ந்து அவர் மீதான வழக்குகளை திரும்ப பெற்றார் பொன்.மாணிக்கவேல்.

சுபாஷ் கபூர்

பல்வேறு கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய சுபாஷ் கபூரை 2012ல் இந்தியாவுக்கு கொண்டு வந்தது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு. ஜெர்மனியிலிருந்து நாடு கடத்தப்பட்டதால், சுபாஷ் கபூரை கைது செய்யவோ, வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவோ எந்த தடையும் இல்லை. ஆனால் வழக்கு விசாரணைக்கு மட்டும் ஜெர்மன் அரசின் அனுமதி வேண்டும். அதனால் அவன் மீது குற்றப்பத்திரிகை மட்டும் இப்போதைக்கு தாக்கல் செய்யலாம் என்று 2017ஆம் ஆண்டு பழவூர் வழக்கில் கூடுதல் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும்போது தெரிவித்தார் பொன்.மாணிக்கவேல். இதனை அரசு வழக்கறிஞரின் சட்ட ஆலோசனை பெற்று தாக்கல் செய்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஆனால் இரண்டு வருடங்களுக்கு பிறகு நீதிமன்றத்தில் அந்தர் பல்டி அடித்தார் பொன்.மாணிக்கவேல். அதாவது சுபாஷ் கபூர் மீதான வழக்குகளை காரணம் காட்டி ஜெர்மன் அரசு இந்திய அரசுடனான மற்ற நாடு கடத்தல் விவகாரங்களில் பிரச்சினை உருவாக்குவதாகவும், இதனால் இரு நாடுகளுக்கிடையிலான உறவில் சிக்கல் எழுவதாகவும், அதன் காரணமாக தமிழ்நாடு அரசு இந்திய நாட்டின் வெளியுறவு கொள்கைக்கு பாதிப்பு ஏற்படாதவாறு சுபாஷ் கபூர் மீதான பழவூர் மற்றும் விக்ரமங்கலம் வழக்குகளை திரும்ப பெறுவதாக அரசாணை வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு 'அறிவுறுத்தினார்'. 

மற்ற கடத்தல் வழக்குகளில் 10 ஆண்டுகள் தண்டனை பெற்ற சுபாஷ் கபூர் 2022ஆம் ஆண்டே தண்டனை காலம் முடிந்து இன்னும் சிறையில் உள்ளார். அவரை தங்கள் நாடுகளில் உள்ள வழக்குகளுக்கு நாடு கடத்த வேண்டும் என்று கோரி வருகிறது அமெரிக்காவும், ஜெர்மனியும். தண்டனையின் ஒரு பகுதியான அபராத தொகையை கட்டாமல் இந்திய சிறையிலேயே காலம் கடத்தி வருகிறார். 600 கோடி அளவுக்கு சிலைகளை கடத்தியதாக சுபாஷ் கபூர் மீது பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு வைத்தார். ஆனால் யோக்கிய சிகாமணி பொன்.மானிக்கவேலுவின் அதிரடியால் வெறும் 10 ஆண்டு சிறை தண்டனையோடு தப்பவிடப்பட்டார்.

சிலை கடத்தல் கும்பல் தலைவர் தீனதயாளனுடன் கூட்டு சேர்ந்து, அவனை தப்பிக்க வைத்ததுடன், அவனிடமிருந்தே வாக்குமூலம் பெற்று பொன்.மாணிக்கவேல் தமக்கு இழைத்த கொடுமைகளை பட்டியலிட்டு 2019ஆம் ஆண்டு நடவடிக்கை எடுக்க கோரினார் காதர் பாட்சா. இது தொடர்பாக சிபிசிஐடி போன்ற தமிழ்நாடு காவல்துறையின் தனிப்பிரிவு ஏதேனும் விசாரிக்க உத்தரவிடக்கோரி காதர் பாட்சா தொடுத்த வழக்கில் 2022ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

காதர் பாட்சா சிபிசிஐடி விசாரணை தான் கோரினார், ஆனால் வழக்கை விசாரித்த நீதியரசர் ஜெயச்சந்திரன் தனது 76 பக்க தீர்ப்பில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். அதில் காதர் பாட்சா அளித்த புகார் மனுவை விசாரிப்பது மட்டுமல்லாமல், 2005ஆம் ஆண்டு பழவூர் வழக்கிலும் ஏதேனும் தவறு நடந்திருப்பது கண்டறியப்பட்டால், அதிலும் தனியே சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.


நீதியரசர் ஜெயச்சந்திரன் தீர்ப்பு

நான் மேலே விவரித்த தகவல்கள் அனைத்தும் நீதியரசர் ஜெயச்சந்திரன் அவர்களின் தீர்ப்பிலும் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. அதில் யோக்கிய சிகாமணி பொன்.மாணிக்கவேல் செயல்பாடுகளை அக்குவேறு ஆணிவேறாக பிரித்துள்ளார் நீதிபதி. அது எந்த அளவிற்கு இருக்கிறதென்றால், நீதிபதி ஜெயச்சந்திரனின் தீர்ப்பில் தம்மை பற்றி கூறப்பட்டுள்ளவற்றை நீக்கக்கோரி உச்சநீதிமன்றம் சென்றார் பொன்.மாணிக்கவேல். உச்சநீதிமன்றமோ அவரது கோரிக்கையை பரிசீலனை செய்து, சட்டத்துக்குட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மட்டுமே அறிவுறுத்தியது. மேலும், தன் மீதான சிபிஐ விசாரணைக்கு தடை கேட்ட மனுவையும் தள்ளுபடி செய்து நீதியரசர் ஜெயச்சந்திரனின் தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.

2022ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, பல தடைகளை தாண்டி காதர் பாட்சாவின் புகாரை விசாரித்த சிபிஐ., கடந்த ஆண்டுஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி பொன்.மாணிக்கவேல் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. அதில் பொன்.மாணிக்கவேலுவுக்கு எதிரான காதர்பாட்சாவின் குற்றச்சாட்டுக் அடிப்படை முகாந்திரம் இருப்பதாகவும், பொய்யான கிரிமினல் வழக்கை டிஎஸ்பி காதர் பாட்சா மீது பதிவு செய்து, சட்டவிரோதமாக அவரை கைது செய்ததாகவும், பொய் குற்றச்சாட்டுகளை முன்வைக்க போலி ஆவணங்களை தயாரித்ததாகவும் மொத்தம் 13 பிரிவுகளில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. மேலும், அவரது இல்லத்திலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
பொன்.மாணிக்கவேலுவை கைது செய்வதற்கு சிபிஐ முனைப்பு காட்டியபோது, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்பிணை பெற்று தப்பித்தார்.

சிபிஐ எப்.ஐ.ஆர் நகல்

முன்பிணை தொடர்பான வழக்கு விசாரணையின் போது, பொன்.மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொன். மாணிக்கவேலை கைது செய்து காவலில் எடுத்து விசாரித்தால் தான், அவருக்கும் சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூருக்கும் உள்ள தொடர்பு குறித்து தெரிய வரும். எனவே முன்பிணை வழங்கக்கூடாது’ என்றும், ’உயர் நீதிமன்ற உத்தரவுபடியே பொன். மாணிக்கவேல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றும் சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது.

சிபிஐயின் பிடி இறுகி வந்த நிலையில், மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த விசாரணை நகலை கேட்டு தாக்கல் செய்தார் பொன்.மாணிக்கவேல். மற்ற ஆவணங்கள் தந்தால் விசாரணை பாதிக்கப்படும், முதல் தகவல் அறிக்கை மட்டுமே பகிர முடியும் என்று நீதிபதி உத்தரவிட, அதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார். நீதிபதி பி.புகழேந்தி வழக்கை விசாரித்து வந்தார்.

நிபந்தனை பிணையில் உள்ள பொன்.மாணிக்கவேல் சாட்சிகளை மிரட்டி வருகிறார். இதனால் அவருக்கு வழங்கப்பட்ட முன்பிணையை ரத்து செய்வதற்கான நடவடிக்கை தொடங்கியுள்ளோம் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தது சிபிஐ. மேலும், குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாலேயே வழக்கு பதிந்ததாகவும், கடத்தல்காரன் சுபாஷ் கபூரை காப்பாற்றும் நோக்கில் செயல்பட்டுள்ளார்’ என்றும் வாதிட்டது.


’நீதிமன்றத்தால் சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் மீது எந்த அடிப்படையில் வழக்குப் பதிவு செய்தீர்கள்? பொன்.மாணிக்கவேல் போன்ற ஓய்வுபெற்ற காவல் துறை உயர் அதிகாரிகள் மீது வழக்குகள் பதிவு செய்து, கைது செய்து விசாரிப்பது சரியா? குற்றம் சாட்டப்பட்ட நபரின் பேச்சைக் கேட்டு, இவ்வாறு வழக்குப் பதிவு செய்தால், முக்கிய வழக்குகளை விசாரிக்க, காவல் துறை உயர் அதிகாரிகள் எவ்வாறு முன்வருவர்? என பல அதிரடி கேள்விகளை எழுப்பிய நீதிபதி, ’முறையாக பணியாற்றும் அலுவலர்களை பாதுகாக்க வேண்டும். முறையான விவரங்கள் இன்றி பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல’ என்று கடந்த 13.3.25 சிபிஐ விசாரணைக்கு தடை விதித்துள்ளார்.

சாத்தான்கள் வேதம் ஓதும் நாட்டில், மக்களே சிறந்த நீதிபதிகள்!

டிஎஸ்பி காதர் பாட்சாவுக்கு நிச்சயம் நீதி கிடைக்க வேண்டும்!

ஆர்.எஸ்.எஸ். கும்பலின் அடியாள் பொன்.மாணிக்கவேல் இன்னும் எவ்வளவு காலம் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிப்பார் என்று நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்.

- வன்னி அரசு

நன்றி : நக்கீரன்

(மார்ச் 22 & 26 தேதியிட்ட நக்கீரன் இதழில் இரண்டு பாகமாக இந்த கட்டுரை வெளியானது)