13 February 2021

மோடியை கொல்ல சதி - அம்பலமானது பாசிச பாஜகவின் NIA!

மோடியை கொல்ல சதி: 
அம்பலமானது பாசிச பாஜகவின் NIA

ஊபா என்னும் கொடுஞ்சட்டம் அரசியல் ரீதியாக தங்களுக்கு பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காகவே பாசிச பாஜக அரசு திருத்தம் செய்து செயல்படுத்தி வருவதை ஆதாரங்களோடு விடுதலைச்சிறுத்தைகள் அம்பலப்படுத்தி வருகிறோம்.
ஊபா சட்டதிருத்தம் செய்து நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்த போதே தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் கடுமையாக எதிர்த்தார்.
ஆனாலும் UAPA என்னும் அந்த கருப்புச்சட்டத்தை மோடி அரசு கைவிடுவதாக தெரியவில்லை.
அரசின் மக்கள் விரோதக்கொள்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் வழக்கறிஞர்கள், மனித உரிமை மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள், இசுலாமியர்கள்,கிறித்தவர்கள்,தலித்துகள் என அத்தனை தரப்பினரையும் இந்துத்துவ பாஜக அரசு வேட்டையாடி சிறைப்படுத்தி உள்ளது.பிரதமர் மோடியை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக பலரை ஊபா சட்டத்தில் சிறைப்படுத்தியது.
ஆனால் அவை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என நிரூபிக்கப்பட்டுள்ளது.
அது குறித்து பார்க்கலாம்

ரோனா வில்சன்!
இவர் கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர். தனது பட்ட மேற்படிப்பை புதுச்சேரி மத்திய பல்கலை. மற்றும் டெல்லி ஜே.என்.யூவிலும் முடித்தவர். 2018ஆம் ஆண்டு இவரது பி.எச்.டி. ஆய்வுக்கான விண்ணப்பம் லண்டன் பல்கலை. ஒன்றில் ஏற்கப்பட்டு அதில் சேருவதற்கான முயற்சியில் இருந்தார். இந்தியாவில் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு பிரச்சாரம் மற்றும் சட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.

பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் பொய்யாக சேர்த்து தண்டிக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்ட டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கீலானியின் வழக்கில் அவருக்காக பெரிதும் சட்டரீதியாக போராடியவர் வில்சன். 
கிலானி விடுதலைக்கு பின்பு அவருடன் இணைந்து 'அரசியல் கைதிகளின் விடுதலைக்கான குழு' (CRPP) தொடங்கப்பட்டது. அதில், கீலானி தலைவராகவும் வில்சன் மக்கள் தொடர்பு செயலாளர் பொறுப்பிலும் இருந்தனர். 2019 ஆக்டோபரில் கீலானி உடல்நலமின்றி மறைந்தார்.

ஊபா, தேசிய பாதுகாப்பு சட்டம் போன்ற கருப்பு சட்டங்களால் சிறையில் உள்ள இஸ்லாமியர்கள், தலித்துகள், ஆதிவாசிகளின் விடுதலைக்காக இந்த குழு போராடி வருகிறது. 
 இந்த குழுவின் உறுப்பினரான வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங், ஊபா சட்டத்தின் கீழ் மாவோயிஸ்டுகளுக்கு உதவியதாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள டெல்லி பல்கலை. பேரா.ஜி.என்.சாய்பாபா அவர்கள் வழக்கறிஞராக செயல்பட்டவர்.அதற்காக சுரேந்திர காட்லிங்கும் ஊபா சட்டத்தால் கைது செய்யப்பட்டார்.

திசம்பர் 31,2017 அன்று 
பீமா கோரேகானில் தலித்துகள் மீதான வன்முறையை தொடர்ந்து,
2018 ஜனவரியில் நடைபெற்ற கலவரம் தொடர்பான விசாரணையில் 
ஏப்ரல் 17, 2018ல் பல்வேறு இடங்களில் போலீஸ் சோதனையிட்டு ஆவணங்கள், லேப்டாப் ஆகியவற்றை கைப்பற்றினர்.
வழக்கறிஞர்கள் வில்சன் மற்றும் காட்லிங் லேப்டாப்கள் கைப்பற்றப்பட்டு அதில் 13 கடிதங்கள் இருந்ததாக ஜூன் 6, 2018 அன்று இருவரும் கைது செய்யப்பட்டனர்.


இது தொடர்பான வழக்கில் வில்சன், கவிஞர் வரவரராவ், சுதிர் தவாலே, ஆனந்த் டெலிடும்டே, சுதா பரத்வாஜ் உள்ளிட்ட மொத்தம் 16 பேரும் ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். பீமா கோரேகான் வழக்கு மற்றும் பிரதமரை கொல்ல சதி, மாவோயிஸ்டுகளுக்கு உதவி என வழக்குகள் உள்ளன. இன்றளவும் பிணை மறுக்கப்பட்டு உள்ளது. 
‘ரிப்பப்லிகன் பேந்தர்ஸ்’அமைப்பின் தலைவர் சுதிர் தவாலே ஏற்கனவே ஒருமுறை ஊபாவில் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்ட சூழலில்,
வழக்கறிஞர் காட்லிங் போராடி அவரை விடுவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோனா வில்சனிடம் கைப்பற்றப்பட்ட லேப்டாப்பின் பிரதியை நீதிமன்றம் மூலம் பெற்று அமெரிக்காவின் புகழ்பெற்ற 'அர்சனல் கன்சல்டிங்’எனும் டிஜிட்டல் தடயவியல் நிறுவனத்துக்கு அனுப்பட்டது.
அமெரிக்க பார் அசோசியேசன் ஏற்கனவே பீமா கோரேகான் வழக்கில் கைதானவர்களின் விடுதலைக்கு குரல் கொடுத்துள்ளது. அந்த அமெரிக்க பாரின் மனித உரிமை அமைப்பின் உதவியால் அர்சனல் அமைப்பு இலவசமாக ஆதாரங்களை ஆராய முன்வந்தது.
அர்சனல் அமைப்பு,
தமது 16 பக்க டிஜிட்டல் தடயவியல் ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில் வில்சனின் கம்ப்யூட்டர் மற்றும் கவிஞர் வரவரராவின் ஈமெயிலை பயன்படுத்தி ஜூன் 13, 2016 அன்று ஹேக் செய்யப்பட்டதை உறுதிசெய்துள்ளது.
இதன் மூலம் பயனர் அவரது லேப்டாப் கீ போர்டில் அழுத்துவது அனைத்தும் பதிவு செய்யப்பட்டு ஹேக்கருக்கு அனுப்பப்படும். மேலும், பயனருக்கு தெரியாமல் ஹேக்கரால் அந்த லேப்டாப்பை பயன்படுத்த முடியும்.


ஜூன் 2016லிருந்து   ஏப்ரல் 16, 2018 மாலை 4.50 மணி வரை ஹேக்கரால் பல்வேறு வகையில் லேப்டாப் பயன்படுத்தப்படுள்ளது.
ஏப்ரல் 17 போலீஸ் லேப்டாப்பை கைப்பற்றியது.
இந்த காலகட்டத்தில் வில்சனின் லேப்டாப்பில் கிட்டத்தட்ட 10 கடிதங்கள் புகுத்தப்பட்டுள்ளன.
அதில் கடைசி கடிமானது,
அதே ஏப்ரல் 2018ல் 6ஆம் தேதி புகுத்தப்பட்டுள்ளது. இந்த கடிதங்கள் தான் பிரதமர் மோடியை கொல்ல சதி, மாவோயிஸ்டுகளுக்கு ஆயுதங்கள் வாங்குவதற்கான சதி உட்பட பல குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக போலீஸ் முன்வைக்கிறது.

ஆனால் அர்சனல் அமைப்பின் ஆய்வில், ரகசியமாக புகுத்தப்பட்ட கடிதங்களை வில்சன் கடைசி வரை திறக்கவே இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், வில்சன் தனது லேப்டாப்பில் Microsoft Word மென்பொருளின் 2007 பதிப்பை பயன்படுத்தி வந்துள்ளார்.
ஆனால், போலீஸ் கைப்பற்றிய கடிதங்களோ Microsoft Word மென்பொருளின் 2010 அல்லது 2013 பதிப்பை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஆதாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அப்போதைய பாஜக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், 'இந்த குறிப்பிட்ட விடயம் குறித்து எனக்கு முழுதும் தெரியாது. ஆனால் அர்பன் நக்சல்கள் வழக்கை பொறுத்தவரை உறுதியான ஆதாரங்கள் உள்ளன' என்றார்.


கிட்டத்தட்ட 22 மாதங்கள் வில்சனின் லேப்டாப் ஹேக்கரின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. இன்னும் நேரமும் கூடுதல் ஆவணங்களும் கிடைக்கும் பட்சத்தில் அந்த ஹேக்கரையும் கண்டுபிடிக்கலாம் என்று தெரிவித்துள்ளது அர்சனல். மேலும், அந்த அமைப்பு எதிர்கொண்ட வழக்குகளிலேயே மிகவும் அபாயகரமானதாகவும், பெரிய அளவிலான ஹேக்கிங் திட்டமும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த புதிய ஆதாரத்தை வழக்கம் போல என்.ஐ.ஏ. மறுத்துள்ளது. தங்களது பூனே தடயவியல் ஆய்வகத்தில் இது போன்று எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. 
புதிய ஆதாரத்தோடு நீதிமன்றத்தை அணுகியுள்ள ரோனா வில்சன் என்.ஐ.ஏவிடமிருந்து இந்த வழக்கை, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவிற்கு மாற்றக்கோரியும்,
பொய்யான ஆதாரங்கள் அடிப்படையில் சிறையில் உள்ள தங்கள் 16 பேரையும் விடுவித்து, இழப்பீடு வழங்கவும் கோரியுள்ளார். மேலும், குறிப்பிட்ட ஹேக்கரை கண்டுபிடித்து தண்டிக்கவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
ஆனால் இது குறித்து எந்த பதிலும் சொல்லவில்லை NIA அதிகாரிகள்.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடுவதும் அரசாங்கத்தின் மக்கள்விரோதக்கொள்கைகளுக்கு எதிராக போராடுவதும் சனநாயகவாதிகளின் கடமை. அந்த கடமையை ஆற்றிய ரோனே வில்சன் உள்ளிட்ட அத்தனை பேரும் இன்று பழிவாங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பாசிச பாஜக அரசுக்கு எதிராக போராடி இவர்களின் விடுதலையை வென்றெடுப்பது சனநாயகவாதிகளின் கடமை.
அந்த கடமையை செயலாற்ற அணியமாவோம்!
          
 - வன்னி அரசு
   13.2.2021