05 July 2021

அரச பயங்கரவாதத்தால் அருட்தந்தை ஸ்டேன் சுவாமி கொலை

அருட்தந்தை ஸ்டேன் சுவாமி கைது:
‘பீமாகோரேகான்’ சம்பவத்தை முன்வைத்து வேட்டையாடும் இந்துத்துவ பாஜக அரசு

இந்த 83 வயது பெரியவர் மாவோயிஸ்ட்களுடன் சேர்ந்து இந்தியாவுக்கு எதிராக சதி செய்ததாகவும் துரோகம் செய்ததாகவும் குற்றம் சுமத்தி தளைப்படுத்தப்பட்டுள்ளார். அதுவும் 'ஊபா' சட்டத்தில் தளை செய்திருக்கிறது தேசிய புலனாய்வு முகாமை என்னும் NIA அமைப்பு.

இவரது பெயர் ஸ்டேன்சுவாமி தமிழ்நாட்டைச் சார்ந்தவர். தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக தன்னை ஒப்படைத்துக் கொண்டவர். இந்தியாவின் இயேசு சபையில் இருந்து கொண்டு சமூக சேவை செய்து வந்தவர். அருட்தந்தை என்று அழைக்கப்படும் பாதர் ஸ்டேன் சுவாமி பழங்குடி மக்களுக்காக பணி செய்வதற்காக ஜார்கண்ட் மாநிலத்தில் வாழ்ந்து வந்தார்.

கடந்த அக்டோபர் 6, 2020 அன்று தேசிய புலனாய்வு அமைப்பைச் சார்ந்த அதிகாரிகள் அருட்தந்தை ஸ்டேன் சுவாமியை விசாரனைக்கு ராஞ்சி (ஜார்கண்ட் தலைநகர்) வருமாறு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். விசாரனைக்கு சென்றார். 
சுமார் 15 மணி நேர விசாரனைக்கு பிறகு 'ஊபா' சட்டத்தில் கைது செய்யப்பட்டதாக அறிவித்துள்ளது.

இந்தப் பெரியவர் அப்படி என்ன தவறு செய்து விட்டார்?

2017 திசம்பர் 31 அன்று மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 'எல்கார் பரிஷத்’மாநாடு நடைபெற்றது. 2018 சனவரி 1 அன்று பீமா கோரேகானில் தலித்துகள் வீரவணக்க நிகழ்வை நடத்தினர். அதையடுத்து அங்கு பெரும் வன்முறையை இந்துத்துவ பயங்கரவாதிகள் நடத்தினர். பதிலடி கொடுத்து மக்களை காத்தனர் மகாராஷ்டிர தலித்துகள். இந்த சம்பவத்தில் தலித்துகள்தான் தொடர்ந்து கைது செய்யப்பட்டனர். வன்முறை நடத்திய எந்த இந்துத்துவ இயக்கங்களை சார்ந்தோர் கைது செய்யப்படவில்லை. ஆனால்,எல்கார் பரிஷத் மாநாட்டில் கலந்து கொண்டு வன்முறையை தூண்டியதாக பல அறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் ‘ஊபா' சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் முக்கிய மானவர்கள் பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே ( இவர் புரட்சியாளர் அம்பேத்கரின் உறவினர்),
கவுதம் நவ்லாகா, கவிஞர் வர வரராவ், தொழிற்சங்கவாதி சுதா பரத்தவாஜ், சுதிர்தவாலே மற்றும் கபீர் கலைக் குழுவைச் சார்ந்த சாகர் கார்கே,ரமேஷ் கெய்சர், ஜோதி ஜக்தாப் உள்ளிட்ட 15 பேரை 'ஊபா' சட்டத்தில் கைது செய்து சிறைப்படுத்தியது. இந்துத்தவ பாஜக அரசு. இந்த பின்னணியில்தான் அருட்தந்தை ஸ்டேன் சுவாமி கைது செய்யப்பட்டுள்ளார். "தான் பீமா கோரேகானுக்கு சென்றதும் இல்லை; மவோயிஸ்டுகளை பார்த்ததும் இல்லை”என ஸ்டேன் சுவாமி மறுத்துள்ளார். ஆனாலும் தேசிய புலனாய்வு அமைப்பு நடக்க முடியாத இந்த பெரியவரால் தேசத்துக்கு ஆபத்து எனவும் மாவோயிஸ்டுகளுன் சேர் ந்து தேசத்துக்கு ஆபத்து விளைவிக்கும் சதி செயலில் ஈடுபட்டார் என பொய்யாக குற்றம் சுமத்தி ‘ஊபா' சட்டத்தில் சிறைப்படுத்தி இருக்கிறது.

அருட்தந்தை ஸ்டேன் கடந்த 50 ஆண்டுகாலமாக பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக போராடி வருபவர்.கேரளா, தமிழ்நாடு, ஜார்கண்ட் என பல்வேறு மாநிலங்களில் களப்பணி செய்து வந்தவர். ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக கடுமையாக உழைத்து வந்தவர். இதைத்தவிர பாதர் ஸ்டேன் எந்த குற்றத்தையும் செய்யவில்லை. முதிர்ந்த வயதில், ஓய்வெடுக்க வேண்டிய வயதில் 'ஊபா' சட்டத்தில் சிறைப்படுத்தும் கொடூர மன நிலை பாஜக கும்பலை தவிர வேறு யாருக்கு வரும்?

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பீமா கோராகானை வைத்துக் கொண்டு தலித்துகளை ஒடுக்குவதில் குறியாக இருப்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.
தலித்துகள், இசுலாமியர்கள், கிறித்தவர்கள் என குறிவைத்து இந்துத்துவ பாஜக அரசு வேட்டையாடுவதை எல்லோரும் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்த வேண்டும். அதற்காகப் போராடுவோம். 'ஊபா' சட்டத்தில் தளைப்படுத்தப்பட்டோரின் விடுதலைக்காக தேசிய அளவில் சட்ட ரீதியான பாதுகாப்பு அமைப்பை இப்போதாவது தொடங்க வேண்டும். அதுதான் அவசரமும் அவசியமும்.

 -வன்னி அரசு
  11.10.2020

***

அருட்தந்தை ஸ்டேன் கடந்த 9 மாதங்களாக விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஒரு நாளும் விசாரணைக்கு அவரை போலீஸ் அழைத்ததில்லை. கடந்த மார்ச் மற்றும் ஜூன் மாதம் இருமுறை பிணை கேட்ட அவரின் மனுவை என்.ஐ.ஏ. நீதிமன்றம் நிராகரித்தது. மே மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கடும் சட்ட போராட்டத்துக்கு பின்னரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த இரு மாதங்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்தவர், இன்று மதியம் அவரது பிணை மனு விசாரணைக்கு வருவதற்கு ஒரு மணி நேரம் முன்பு மருத்துவமனையில் இறந்து போனார். அவரது இறப்பு என்பது பாஜக அரசு நிகழ்த்தியுள்ள பச்சையான அரச பயங்கரவாதம்!

-வன்னி அரசு
05.07.2021

02 July 2021

ஊபா சட்டம்: மக்கள் போராளி அகில் கோகாய் விடுதலை

ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த 
அகில் கோகாய் 550 நாட்கள் கழித்து நேற்று விடுதலை செய்யப்பட்டார். 
தீர்ப்பை வாசித்த நீதிபதி ப்ரஞ்சல் தாஸ்,
“தீவிரவாத ஆபத்திலிருந்து மக்களை காக்கும் பணியில் நாட்டின் முன்னணி விசாரணை அமைப்பாக உள்ள என்.ஐ.ஏ.வின் செயல்பாடு அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது. என்.ஐ.ஏ.விடம் எதிர்பார்க்கப்படும் உச்சபட்ச தரத்தை கைக்கொள்ளவேண்டும்" என விமர்சித்துள்ளார்.

சரி, யார் இந்த அகில் கோகாய்?

நாடு முழுக்க குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் வெடித்தபோது, அசாம் மக்களை திரட்டி போராடிய அசாமி இவர்.
தேசவிரோத பாஜக அரசு அகிலை ஊபா சட்டத்தில் கடந்த டிசம்பர் 12, 2019 அன்று கைது செய்து,அவர் மீது 12 வழக்குகள் பதியப்பட்டன. அதில் 2 வழக்குகளில் ஊபா சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) விசாரித்தது.

சிறையிலிருந்தபடியே ‘ராய்ஜோர்தான்’
என்னும் கட்சியை தொடங்கினார்.
நடந்து முடிந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அசாமில் சிஏஏ வை எதிர்க்கும் கட்சிகளோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார்.
சிப்சாகர் தொகுதியில் பாஜக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டார்.
சிறையிலிருந்தபடியே தொகுதி மக்களிடம் கடிதங்கள் வாயிலாக பரப்புரை செய்தார். 
அகில் கோகாய் அம்மா பிரியடா கோகாய், மனைவி கீதாஶ்ரீ என குடும்பத்தினர் தேர்தல் பரப்புரை செய்தனர். பாஜக வேட்பாளர் சூரபி ராஜ்கோனை 11,875 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
சிறையிலிருந்தே அகில் பெற்ற வெற்றி அசாம் மக்களிடையே பெரும் எழுச்சியை உருவாக்கியுள்ளது. இப்போது ஊபா சட்டத்திலிருந்து விடுதலை ஆகியிருப்பது மேலும் எழுச்சியை அசாமியர் பெற்றுள்ளனர்.


விடுதலைக்கு பின்பு ஊடகத்திடம் 
பேசிய அகில் கோகாய், 'தீர்ப்பு எனக்கு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் சிறைப்பட்டுள்ளோருக்கும் நம்பிக்கையை தரும். இந்திய அரசு ஊபாவையும் என்.ஐ.ஏவையும் தவறாக பயன்படுத்தியுள்ளது தெளிவாகிறது.
தேசவிரோத பாஜக அரசு இந்த வழக்கை புரிந்து கொண்டு ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட அத்தனை பேரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும்'.

பொடா சட்டம் கடந்த 2002ல் அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் அரசியல் பழிவாங்கும் கருவியாக பயன்படுத்தப்பட்டு, பின்னர் 2004ல் திரும்ப பெறப்பட்டது.

அது போல வடகிழக்கு மற்றும் காஷ்மீரில் ராணுவத்தின் அட்டூழியங்களுக்கு சட்ட பாதுகாப்பு தரும் ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தையும், எதிர் கருத்து கொண்டோரை தேச விரோதிகளாக சித்தரித்து முடக்கும் தேசிய பாதுகாப்பு சட்டத்தையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.

தேசவிரோத பாஜக அரசு இவற்றை உட்படுத்துமா?

- வன்னி அரசு
  2.7.2021

19 June 2021

தேச விரோத பாஜகவிடம் பதில் இருக்கிறதா?

இந்திய ஒன்றியத்தின் அரசமைப்புக்கு எதிராக ஆளும் பாஜக அரசாங்கத்தால் கடந்த 2019 திசம்பர் 9,10 ஆகிய  தேதிகளில் குடியுரிமை திருத்த சட்டத்தை மக்களவை, மாநிலங்களவையில் கொண்டுவரப்பட்டது.
ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர் அமித்சா இச்சட்டத்தை அறிமுகப்படுத்தும் போதே இரு அவைகளிலும் கடும் எதிர்ப்பு உருவானது. ஆனாலும் பெரும்பான்மையை வைத்து வெற்றி பெற்றது.


ஒன்றியம் முழுக்க குடியுரிமை திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டங்கள் வெடித்தன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் கடந்த 22.2.2020 அன்று இக்கொடுஞ்சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி லட்சக்கணக்கான இளைஞர்களை திரட்டி பேரணி நடைப்பெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினரும் தலைவருமான எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைப்பெற்ற அப்பேரணி அரசியல் களத்தில் பெரும் அதிர்வை உருவாக்கியது.


தலைநகர் புது தில்லியிலும் மாணவர்களின் போராட்டம் தீவிரமானது. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தைச்சார்ந்த மாணவர்கள் வீதிக்கு வந்து போராட்டங்களை முன்னெடுத்தனர்.
அப்போராட்டங்களை முடக்கவும் அச்சுறுத்தவும் RSS ரவுடிகளை இறக்கி துப்பாக்கி,லத்திகளால் மாணவர்களை அடித்து விரட்ட முயற்சித்தனர். ஆனாலும் மாணவர்கள் அஞ்சாது போராட்டங்களை தீவிரப்படுத்தினர். பொதுமக்களும் சாகின் பார்க்கை உருவாக்கி அங்கேயே தங்கி போராட்டங்களை தீவிரப்படுத்தினர்.
இப்போராட்டங்களை ஒடுக்க தேசவிரோத பாஜக ஊபா சட்டங்களை மாணவர்கள் மீது பாய்ச்ச ஆரம்பித்தது.


கடந்த 2020 மே மாதத்தில் மட்டும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து முன்னின்று போராடிய இந்த பட்டியலில் உள்ள மாணவர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் மீது ஊபா சட்டம் பாய்ந்தது. 
1. அப்துல் காலித் (உமர் காலித் நண்பர்)
2. இஸ்ராத் ஜெஹான் (காங்)
3. மீரான் ஹைதர் (ராஷ்டிரிய ஜனதா தளம்)
4. தாஹிர் ஹுசேன் (ஆம் ஆத்மி)
5. குல்ஃபிஷா காட்டூம் (ஜாமியா)
6. சஃபூரா சர்கார் (ஜாமியா)
7. சஃபா உர் ரஹ்மான் (ஜாமியா)
8. ஆசிப் இஃபால் (ஜாமியா)
9. நடாஷா நர்வால் (டெல்லி பல்கலை)
10. தேவங்கனா கலிடா (டெல்லி பல்கலை)
11. ஷடாப் அஹமது
12. சலீம் மாலிக்
13. சலீம் கான்
14. அதர்
15. தஸ்லிம் அஹமது

பெரும்பாலானோர் ஆராய்ச்சி மாணவர்கள், முதுகலைப் பட்டதாரிகள். மொத்தம் 21 பேர் மீது டெல்லியில் கலவரம் நடந்த பின்னணியில் வழக்குகள் பாய்ந்தன. இதில் முக்கிய மாணவ தலைவர்களான
உமர் காலித் (முன்னாள் ஜே.என்.யூ மாணவர் தலைவர்),
ஷர்ஜீல் இமாம் ( ஜே.என்.யூ ஆராய்ச்சி மாணவர் - ஜனவரி 2020 சரணடைந்தார். 500 நாட்களுக்கு மேலாகசிறையில் இருக்கிறார்) ஆகியோரும் அடங்குவர்.


ஜவஹர்லால் நேரு பல்கலை ஆராய்ச்சி மாணவர்கள் நடாஷா நர்வால், தேவங்கனா கலிடா மற்றும் ஜாமியா மிலியா மாணவர் ஆசிப் இஃபால் ஆகியோர் 2020ஆம் ஆண்டு மே மாதம் சி.ஏ.ஏ. போராட்டத்தின் மூலம் மதக்கலவரத்தை தூண்டி வன்முறைக்கு வித்திட முயற்சித்தார்கள் என்றும், அமெரிக்க அதிபர் வருகையை மையப்படுத்தி சர்வதேச அரங்கில் இந்தியாவை அவமதிக்க போராட்டத்தை திட்டமிட்டு நடத்தியதாக போலீஸ் குற்றச்சாட்டி சிறைப்படுத்தினர்.

மே 2020லிருந்து ஊபாவில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர். மற்ற வழக்குகளில் பிணை கிடைத்தும் இந்த வழக்கால் சிறையில் இருந்தனர். பல முறை பிணை கேட்டும் கிடைக்கவில்லை. இச்சூழலில் மீண்டும் மே 15 அன்று தில்லி உயர்நீதிமன்றத்தில் பிணைக்காக முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் சித்தார்த் மிருதுள், அனூப் ஜெய்ராம் பிணைக்கான விசாரணையை நடத்தினர்.


அப்போது, “மாணவர்கள் மீது ஊபா சட்டத்தின் கீழ் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளான தீவிரவாத செயல்பாடு, தீவிரவாத செயல்பாடுகளுக்கு நிதி திரட்டுதல், தீவிரவாத செயல்களுக்கு சதி திட்டம் தீட்டுதல் என எதற்கும் குறிப்பிடும்படியாக எந்த ஆதாரமும் எங்கள் முன் வைக்கப்படவில்லை.
தில்லியின் நடுவே இருக்கும் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து மாணவர்களால் ஒருங்கிணைக்கப்படும் போராட்டத்தாலேயே ஆட்டம் காணும் அளவிற்கு இல்லாமல், நமது நாட்டின் அடித்தளம் மிக வலுவாகவே உள்ளது” என காவல்துறையின் குற்றச்சாட்டுக்களை விமர்சித்து தீர்ப்பளித்தனர்.

மேலும் நீதிபதிகள், “அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களின் நிலைப்பாட்டை முடக்கும் முனைப்பில் அரசியலைப்பு சட்டம் வழங்கும் போராடுவதற்கான உரிமைக்கும் தீவிரவாத செயல்பாட்டுக்கும் இடையேயான கோட்டை அரசு அழித்துள்ளது. அரசின் இத்தகைய செயல்பாடு தொடர்ந்தால் அது ஜனநாயகத்துக்கு ஆபத்தாக முடியும் என்று எச்சரித்தனர்.

பின்னர் பிணை கேட்டு விண்ணப்பித்த நடாஷா நர்வால், தேவங்கனா கலிடா, ஆசிப் இஃபால் ஆகியோருக்கு ஊபா சட்டத்திலிருந்து பிணை கிடைத்தது.
ஆனாலும் தில்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தில்லி போலீஸ்  அவசரம் அவசரமாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அனைத்து தடைகளையும் தகர்த்து மூன்று மாணவ போராளிகளும் சிறையிலிருந்து விடுதலையாகியுள்ளனர்.


குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்க போராடிய மாணவர்களில் சபூரா சர்கார் கர்ப்பிணியாக இருந்ததை தெரிந்தே போலிசார் அடித்து ஊபா சட்டத்தில் சிறைப்படுத்தினர். இப்படி அச்சுறுத்தி கொடுஞ்சட்டங்களால் அடக்கி ஒடுக்குவது சரியா என்பது தான் நீதிமன்றத்தின் கேள்வி.

இக்கேள்விகளுக்கு தேசவிரோத பாஜகவிடம் பதில் இருக்கிறதா?

- வன்னி அரசு

29 May 2021

லட்சத்தீவு : பாஜக குறி வைப்பது ஏன்?

எந்த மாநிலத்திலும் மக்கள் அமைதியாக நிம்மதியாக வாழ்ந்து வருவது பாஜகவிற்கு பிடிக்காது போல, அதிலும் யூனியன் பிரதேசங்கள் ஆக இருந்தால் எளிதாக தங்களுடைய சர்வாதிகாரத்தை நிலை நாட்ட முனைகிறது ஆளும் பாஜக அரசு.

ஏற்கனவே காஷ்மீர் மாநிலத்தை அந்த மக்களின் உணர்வுகளுக்கு எதிராக சிதைத்துப் போட்டது மோடி தலைமையிலான பாஜக. சிறப்பு அதிகாரமான 370 ரத்து செய்து ‘காஷ்மீரி’ எனும் தேசிய இனத்தை அழித்து வருவதை பார்த்தோம். அதேபோல இப்போது லட்ச தீவுக்குள் தமது இந்துத்துவ கவனத்தை செலுத்தி வருகிறது பாஜக. லட்சத்தீவு மக்கள் இப்போது தமது உரிமைகளை பாதுகாக்க போராடிக்கொண்டிருக்கிறார்கள். பக்கத்து கேரள மாநில மக்களும் ‘சேவ் லட்சத்தீவு’ என்னும் முழக்கத்தோடு போராடி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் லட்சத் தீவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி பிரஃபுல் கோடா பட்டேல் நீக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

               

லட்சத்தீவில் என்னதான் நடக்கிறது?

என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு முன் அந்த தீவு குறித்து தெரிந்து கொண்டால்தான் பாஜக ஆர்எஸ்எஸ் வகையறாக்களின் சதி பின்னணி தெரியும்.

பொதுவாக நமது சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளர்கள் 2 லட்சத்திற்கும் குறைவில்லாமல் இருப்பார்கள்.ஆனால் லட்சத்தீவில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 65 ஆயிரத்து 473 பேர் தான் வசித்து வருகிறார்கள்.அதாவது நமது தொகுதிகளில் கால்வாசி பேர் தான் லட்சத்தீவில் வசித்து வருகிறார்கள்.

இசுலாமியர்கள் 96.58 சதவீதம் பேர்,

கிறிஸ்தவர்கள் 0.49சதவீதம் ,

இந்துக்கள் 2.7 சதவீதம் பேர் வசித்து வருகிறார்கள்.

மதம் வேறு வேறாக இருந்தாலும் அத்தனை மக்களும் பழங்குடியினர்கள் தான்.


பேசுகிற மொழி மலையாளம், ஆங்கிலம் என இருந்தாலும் வட்டார மொழிகளான திவெகி, ஜெசரி தான் அதிகம் பேசப்படுகிறது. விவசாயம் அங்கே இல்லை. அதனால் மீன்பிடித் தொழிலும் தேங்காய் வியாபாரமும் தான் மக்களின் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை. 

கடந்த டிசம்பர் 5,2020 வரை அமைதியாக நிம்மதியாக இருந்த லட்சத்தீவு இப்போது தீவைச் சுற்றியுள்ள கடல் அலைபோல கொந்தளித்து நிம்மதி இழந்து வருகிறது.

பிரஃபுல் கோடா பட்டேல் தான் கடந்த டிசம்பர் மாதம் அந்த தீவில் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக மோடி அரசால் நியமிக்கப்பட்டார். பொதுவாக லட்சத்தீவு போன்ற யூனியன் பிரதேசங்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற அதிகாரிகள்தான் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்படுவார்கள்.

ஆனால், மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது தாம் நினைப்பதை செய்யக் கூடியவராக இருந்த இந்த பட்டேலை லட்சத்தீவுக்கு அனுப்பி வைத்திருப்பதுதான் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 


யார் இந்த பிரஃபுல் கோடா பட்டேல்?

முதலில் இவர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முழுநேர ஊழியர்.

2007 ஆம் ஆண்டு பாஜக சார்பில் குஜராத் ஹிமத் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2010ஆம் ஆண்டு குஜராத்தில் பரபரப்பாக பேசப்பட்ட வழக்கு 'ஷெராபுதின் போலி என்கவுண்டர்’ வழக்கின் பின்னணியில் அன்றைய குஜராத் மாநில உள்துறை அமைச்சர் அமித் ஷா கைது செய்யப்பட்டார். அமித்ஷாவுக்கு பதிலாக இந்த பிரஃபுல் கோடா பட்டேல் அமைச்சராக நியமிக்கப்பட்டார் அதற்குப் பிறகுதான் குஜராத் மாநிலத்தில் நிறைய இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இஸ்லாமியர் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வேட்டையாடப்பட்டனர். அதற்குப் பின் 2012ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பட்டேல் தோல்வி அடைந்தார். மோடி இந்திய ஒன்றியத்தின் தலைமை அமைச்சராக 2014ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு இந்த பிரஃபுல் பட்டேல், டையூ-டாமன் யூனியன் பிரதேசத்திற்கு தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். அங்கு போனவர் சும்மா இருந்தாரா என்றால் அதுவும் இல்லை.

பிரஃபுல் பட்டேல் நிர்வாக தலைவராக உள்ள டாமன் & டியூ யூனியன் பிரதேசத்தில் ஏழு முறை எம்பியாக இருந்தவர் மோகன் டேல்கர்.


2021 பிப் 22 அன்று மும்பையில் ஒரு ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை கடிதத்தில் பிரஃபுல் பட்டேல்  தான் அவரது தற்கொலைக்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் டாமன் பகுதி அதிகாரிகள், அரசியல்வாதிகள் பலரது பெயரையும் குறிப்பிட்டு, பிரஃபுல் பட்டேல் தூண்டுதலின் பேரில் அவர்கள் மிரட்டியதாக சொல்லியுள்ளார். மோகன் டேல்கர் இறக்கும்போதும் எம்பியாக இருந்தார்.

இவரது தற்கொலை வழக்கில் பிரஃபுல் பட்டேல் உட்பட 9 பேர் மீது தற்கொலைக்கு தூண்டிய வழக்கை மும்பை போலீஸ் பதிவு செய்துள்ளது . மோகனின் மகன் அபினவ் டேல்கர் மராத்திய முதல்வர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து, தனது தந்தையின் மரணத்துக்கு முழுமுதற் காரணம் பிரஃபுல் பட்டேல் தான் என்றும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளார். பிரஃபுல் பட்டேல் தனது தந்தையிடம் 25 கோடி கேட்டு மிரட்டியதாகவும், அவரது கல்லூரியை அபகரிக்க திட்டமிட்டதாகவும் புகாரளித்துள்ளார். மேலும், டாமனில் இறந்தால் தனது மரணம் மூடி மறைக்கப்படும் என்று அஞ்சியே,  திட்டமிட்டு மும்பைக்கு வந்து அப்பா தற்கொலை கொண்டுள்ளார் என்று அபினவ் குறிப்பிட்டுள்ளார்.

அப்படிப்பட்ட கொலைச்சதியுடையவரை, மிரட்டி பணம் பறிப்பவரை தான்

இப்போது கூடுதலாக லட்சதீவிலும் பொறுப்பு கொடுத்து அழகு பார்க்கிறார் மோடி.

அதாவது ஐஏஎஸ் அதிகாரிகள் நிர்வாகம் பார்க்கவேண்டிய பொறுப்புகளை முதன்முறையாக ஒரு அரசியல்வாதிக்கு அளித்த பெருமை மோடிக்கே சேரும். அதுவும் ஆர்எஸ்எஸ் போன்ற சமூக விரோத அமைப்புக்கு கொடுத்த பெருமைக்குரியவர் மோடி. 

சரி இந்த பிரஃபுல் கோடா பட்டேல் என்ன சட்டங்களை பிறப்பித்தார் ? எதற்காக இவ்வளவு எதிர்ப்பு ?

ஏன் அவர் திரும்ப பெறவேண்டும்? எனும் கேள்விகளுக்கு விடை தேடுவதற்கு முன்பு லட்சத்தீவு குறித்து கொஞ்சம் அறிந்தால்தான் பாஜக ஆர்எஸ்எஸ் கும்பலின் சதி நமக்கு புரியும்.

லட்சத்தீவில் பெரும்பான்மை அளவில் இசுலாமியர் தான் வசிக்கிறார்கள். இந்துக்கள், கிறிஸ்தவர்கள் வசித்தாலும் எல்லோரும் தாயாய் பிள்ளையாய் தான் வாழ்கிறார்கள். பெரிதாக குற்ற வழக்குகள் அங்கே இல்லை. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அடிப்படையில் 2017ஆம் ஆண்டு 8 வழக்குகளும் 2018-ல் 6 வழக்குகளும் 2019ஆம் ஆண்டு 16 வழக்குகள்  மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இதில் 12 வழக்குகள் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது போடப்பட்ட வழக்குகள். 2019-ம் ஆண்டு போதைப்பொருட்கள் வைத்திருந்ததாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மற்றபடி லட்சத்தீவில் பெரிதாக எந்த குற்றச் செயலும் நடந்ததில்லை. 

பங்காராம் எனும் ஒரே தீவில் மட்டும் தான் மதுவுக்கு அனுமதி. மற்றபடி லட்சத்தீவில் வேறு எங்கும் அனுமதி இல்லை. பிற மாநிலத்தவர் லட்சத்தீவில் துண்டு நிலத்தைக் கூட விலைக்கு வாங்க முடியாது. ஏனெனில் இது பழங்குடிகளின் பூர்வீக  மண்.  இவர்களுக்கு உணவு மாட்டுக்கறி தான். பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவில் ஆட்டுக் கறியும், கோழிக்கறியும் கொடுக்கப்பட்டு வந்தது. இதன் மூலம் அந்த மக்களின் உணவு முறையை புரிந்து கொள்ளலாம். 

இப்படியான அழகு பூமியை தான் பல சட்டங்களைக் கொண்டு வந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது பாஜக அரசு. 


சட்டங்கள் என்ன? 

1. LDAR - Lakshadweep Development Authority Regulation -  அதாவது லட்சத்தீவு மேம்பாட்டு ஆணைய ஒழுங்குமுறை வரைவு 2021 என்னும் பெயரில் ஒரு சட்டத்தில் திணித்து உள்ளது. இதன் மூலம் நிலங்களை அரசு எடுத்து வளர்ச்சிக்காக யாரிடமும் கொடுக்கலாம் யார் வேண்டுமானாலும் தொழில் செய்ய நிலங்களை வாங்கி குடியேறலாம்.

2.  விலங்குகள் பாதுகாப்பு சட்டம் 2021 (Lakshadweep Animal Preservation Regulation) சட்டத்தின் மூலமாக மாட்டுக்கறி வைத்திருந்தால் சிறை. அதுவும் ஓராண்டில் இருந்து 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை. ஒரு லட்சத்திலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதத்தொகை வசூலிக்கப்படும். பள்ளிகளில் அசைவ உணவு கிடையாது. சைவம் தான் ஆடு மாடு என எதையும் இறைச்சிக்காக கொல்லக்கூடாது. இச்சட்டத்தின் உள்நோக்கத்தை யார் வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம். அதாவது இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் லட்சத்தீவில் மாட்டுக்கறி தான் பிரதான உணவாக வணிகமாக வைத்திருக்கிறார்கள். இதைத் தடுப்பது தான் இச்சட்டத்தின் முக்கிய நோக்கம்.

3.  பஞ்சாயத்து ஒழுங்குமுறை வரைவு (Draft Lakshadweep Panchayat Regulation, 2021) மூலமாக இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் பங்கேற்க முடியாது‌. இந்த வரைவும் இஸ்லாமியர்களை குறிவைத்து தான் கொண்டு வரப்பட்டது என குழந்தைகளுக்கு கூட புரியும்.


4. சமூக விரோத செயல்கள் தடுப்புச் சட்டம் 2021 (Lakshadweep Anti social Activity Regulation) இதன்மூலம் யாரை வேண்டுமானாலும் கைது செய்து ஓராண்டு வரை சிறை படுத்தலாம். பொதுவாக லட்சத்தீவில் குற்றச்செயல்கள் குறைவாகத்தான் உள்ளன. இதை தேசிய குற்ற ஆவண காப்பகமே தெளிவுபடுத்தியுள்ளது. அப்படி இருக்கும்போது இச்சட்டம் எதற்காக? யாரை அச்சுறுத்த எனும் கேள்விகள் தொடர்கின்றன. சட்டங்கள் மட்டுமல்லாது கடற்கரை ஒழுங்குமுறை சட்டத்தின் மூலமாக காலம்காலமாக கடற்கரையில் கூடாரங்கள் அமைத்து மீன்பிடி தொழில் செய்து வரும் பழங்குடிகளின் கூடாரங்களை அடித்து அழித்து உள்ளனர். அங்கு புதிதாக  சுற்றுலாவுக்கான கட்டிங்களை எழுப்ப முயற்சித்து வருகிறது பாஜக அரசு. இவை மட்டுமல்லாது ஆசிரியர்கள் பணிநீக்கம், அங்கன்வாடி கடைகள் மூடல், ஒப்பந்த தொழிலாளர்கள் நீக்கம் இப்படி நீண்ட காலமாக அரசு பணியில் இருப்பவர்களை நீக்கியுள்ளது பாஜக அரசு. குறிப்பாக பால் பண்ணைகளை இழுத்து மூடி உள்ளது. அப்படியானால் பாலுக்கு என்ன செய்வது? என்று கேட்டால் குஜராத்திலிருந்து பால் இறக்குமதி செய்வோம் என்று சொல்கிறது லட்சத்தீவு நிர்வாகம். இப்படி ஏகப்பட்ட குளறுபடிகளை நிர்வாக அதிகாரியாக பொறுப்பு ஏற்றதில் இருந்து ஏற்படுத்தியுள்ளார் மோடியின் நண்பர் பிரஃபுல் கோடா பட்டேல்.

எதற்காக லட்சத்தீவு குறி வைக்கப்படுகிறது? 

கடந்த 2007, 2008ஆம் ஆண்டு மலேகான் குண்டுவெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு, சம்சவுதா ரயில் குண்டு வெடிப்பு சம்பவங்களில் கைதானவர்களில் முக்கியமானவர்கள் அசீமானந்தா சாமியாரும் பிரக்யா சாமியாரும் ஆவர்.  இவர்கள் இருவருமே ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சார்ந்தவர்கள். அசீமானந்தா, பழங்குடி மக்களிடம் பணி செய்வதற்காக அனுப்பப்பட்டவன். குறிப்பாக அந்தமான் தீவுக்கு அனுப்பப்பட்டு பழங்குடி மக்களில் பலரை படுகொலை செய்தான். 'கர்வாப்சி' நிகழ்ச்சி நிரலுக்கு பல தேவாலயங்களை அழித்து படுகொலைகளை முன்னின்று நடத்தியவன். அதன் பின்புதான் குண்டுவெடிப்பு சம்பவங்களில் அசீமானந்தா கைது செய்யப்பட்டான். இப்படி பழங்குடிகளை இஸ்லாமியர்களை அழிப்பதற்கு ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சார்பில் சட்டத்திற்குப் புறம்பாக அசீமானந்தா போன்றோரை அனுப்பி வைத்தார்கள். இப்போது ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் நேரடியாக நிர்வாக அதிகாரியாக நியமித்து சட்டத்தின்படி படுகொலைகளை நடத்துகிறது பாஜக அரசு. காஷ்மீரத்தை எப்படி சிதைத்ததோ அதே போல லட்சத்தீவையும் சிதைப்பது தான் பாஜகவின் சதித் திட்டம்.

இதற்கு முழு காரணம் அந்த தீவை கார்ப்பரேட்டுகளிடம் வணிகத்திற்காக ஒப்படைப்பது தான். அதுவும் குறிப்பாக இஸ்லாமியர்கள் வசிக்கும் அந்த தீவை அதானி மாதிரியான கார்ப்பரேட் கும்பலிடம் ஒப்படைப்பதுதான் பாஜகவின் சதித்திட்டம். இதற்கான செயல் அதிகாரி தான் இந்த பிரஃபுல் கோடா பட்டேல். மோடி தான் தலைமை அதிகாரி. 65 ஆயிரம் மக்கள் உள்ள லட்சத்தீவில் கடந்த 2004 நாடாளுமன்றத் தேர்தலில் 187 வாக்குகளை தான் பாஜக பெற்றது.2019 நாடாளுமன்ற தேர்தலில் 125 வாக்குகள்தான் பாஜக பெற்றது. நோட்டாவை விட குறைவான வாக்குகளைப் பெற்றது பாஜக. 


ஜனநாயக ரீதியாக லட்சத்தீவில் எதுவும் செய்ய முடியாத அவலத்தில், கோபத்தில் இப்படி மக்களை பழி வாங்குவது சரியா?  சனநாயகத்தை அழித்தொழிப்பது சரியா?

வன்னி அரசு

28.5.2021

13 February 2021

மோடியை கொல்ல சதி - அம்பலமானது பாசிச பாஜகவின் NIA!

மோடியை கொல்ல சதி: 
அம்பலமானது பாசிச பாஜகவின் NIA

ஊபா என்னும் கொடுஞ்சட்டம் அரசியல் ரீதியாக தங்களுக்கு பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காகவே பாசிச பாஜக அரசு திருத்தம் செய்து செயல்படுத்தி வருவதை ஆதாரங்களோடு விடுதலைச்சிறுத்தைகள் அம்பலப்படுத்தி வருகிறோம்.
ஊபா சட்டதிருத்தம் செய்து நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்த போதே தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் கடுமையாக எதிர்த்தார்.
ஆனாலும் UAPA என்னும் அந்த கருப்புச்சட்டத்தை மோடி அரசு கைவிடுவதாக தெரியவில்லை.
அரசின் மக்கள் விரோதக்கொள்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் வழக்கறிஞர்கள், மனித உரிமை மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள், இசுலாமியர்கள்,கிறித்தவர்கள்,தலித்துகள் என அத்தனை தரப்பினரையும் இந்துத்துவ பாஜக அரசு வேட்டையாடி சிறைப்படுத்தி உள்ளது.பிரதமர் மோடியை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக பலரை ஊபா சட்டத்தில் சிறைப்படுத்தியது.
ஆனால் அவை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என நிரூபிக்கப்பட்டுள்ளது.
அது குறித்து பார்க்கலாம்

ரோனா வில்சன்!
இவர் கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர். தனது பட்ட மேற்படிப்பை புதுச்சேரி மத்திய பல்கலை. மற்றும் டெல்லி ஜே.என்.யூவிலும் முடித்தவர். 2018ஆம் ஆண்டு இவரது பி.எச்.டி. ஆய்வுக்கான விண்ணப்பம் லண்டன் பல்கலை. ஒன்றில் ஏற்கப்பட்டு அதில் சேருவதற்கான முயற்சியில் இருந்தார். இந்தியாவில் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு பிரச்சாரம் மற்றும் சட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.

பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் பொய்யாக சேர்த்து தண்டிக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்ட டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கீலானியின் வழக்கில் அவருக்காக பெரிதும் சட்டரீதியாக போராடியவர் வில்சன். 
கிலானி விடுதலைக்கு பின்பு அவருடன் இணைந்து 'அரசியல் கைதிகளின் விடுதலைக்கான குழு' (CRPP) தொடங்கப்பட்டது. அதில், கீலானி தலைவராகவும் வில்சன் மக்கள் தொடர்பு செயலாளர் பொறுப்பிலும் இருந்தனர். 2019 ஆக்டோபரில் கீலானி உடல்நலமின்றி மறைந்தார்.

ஊபா, தேசிய பாதுகாப்பு சட்டம் போன்ற கருப்பு சட்டங்களால் சிறையில் உள்ள இஸ்லாமியர்கள், தலித்துகள், ஆதிவாசிகளின் விடுதலைக்காக இந்த குழு போராடி வருகிறது. 
 இந்த குழுவின் உறுப்பினரான வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங், ஊபா சட்டத்தின் கீழ் மாவோயிஸ்டுகளுக்கு உதவியதாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள டெல்லி பல்கலை. பேரா.ஜி.என்.சாய்பாபா அவர்கள் வழக்கறிஞராக செயல்பட்டவர்.அதற்காக சுரேந்திர காட்லிங்கும் ஊபா சட்டத்தால் கைது செய்யப்பட்டார்.

திசம்பர் 31,2017 அன்று 
பீமா கோரேகானில் தலித்துகள் மீதான வன்முறையை தொடர்ந்து,
2018 ஜனவரியில் நடைபெற்ற கலவரம் தொடர்பான விசாரணையில் 
ஏப்ரல் 17, 2018ல் பல்வேறு இடங்களில் போலீஸ் சோதனையிட்டு ஆவணங்கள், லேப்டாப் ஆகியவற்றை கைப்பற்றினர்.
வழக்கறிஞர்கள் வில்சன் மற்றும் காட்லிங் லேப்டாப்கள் கைப்பற்றப்பட்டு அதில் 13 கடிதங்கள் இருந்ததாக ஜூன் 6, 2018 அன்று இருவரும் கைது செய்யப்பட்டனர்.


இது தொடர்பான வழக்கில் வில்சன், கவிஞர் வரவரராவ், சுதிர் தவாலே, ஆனந்த் டெலிடும்டே, சுதா பரத்வாஜ் உள்ளிட்ட மொத்தம் 16 பேரும் ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். பீமா கோரேகான் வழக்கு மற்றும் பிரதமரை கொல்ல சதி, மாவோயிஸ்டுகளுக்கு உதவி என வழக்குகள் உள்ளன. இன்றளவும் பிணை மறுக்கப்பட்டு உள்ளது. 
‘ரிப்பப்லிகன் பேந்தர்ஸ்’அமைப்பின் தலைவர் சுதிர் தவாலே ஏற்கனவே ஒருமுறை ஊபாவில் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்ட சூழலில்,
வழக்கறிஞர் காட்லிங் போராடி அவரை விடுவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோனா வில்சனிடம் கைப்பற்றப்பட்ட லேப்டாப்பின் பிரதியை நீதிமன்றம் மூலம் பெற்று அமெரிக்காவின் புகழ்பெற்ற 'அர்சனல் கன்சல்டிங்’எனும் டிஜிட்டல் தடயவியல் நிறுவனத்துக்கு அனுப்பட்டது.
அமெரிக்க பார் அசோசியேசன் ஏற்கனவே பீமா கோரேகான் வழக்கில் கைதானவர்களின் விடுதலைக்கு குரல் கொடுத்துள்ளது. அந்த அமெரிக்க பாரின் மனித உரிமை அமைப்பின் உதவியால் அர்சனல் அமைப்பு இலவசமாக ஆதாரங்களை ஆராய முன்வந்தது.
அர்சனல் அமைப்பு,
தமது 16 பக்க டிஜிட்டல் தடயவியல் ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில் வில்சனின் கம்ப்யூட்டர் மற்றும் கவிஞர் வரவரராவின் ஈமெயிலை பயன்படுத்தி ஜூன் 13, 2016 அன்று ஹேக் செய்யப்பட்டதை உறுதிசெய்துள்ளது.
இதன் மூலம் பயனர் அவரது லேப்டாப் கீ போர்டில் அழுத்துவது அனைத்தும் பதிவு செய்யப்பட்டு ஹேக்கருக்கு அனுப்பப்படும். மேலும், பயனருக்கு தெரியாமல் ஹேக்கரால் அந்த லேப்டாப்பை பயன்படுத்த முடியும்.


ஜூன் 2016லிருந்து   ஏப்ரல் 16, 2018 மாலை 4.50 மணி வரை ஹேக்கரால் பல்வேறு வகையில் லேப்டாப் பயன்படுத்தப்படுள்ளது.
ஏப்ரல் 17 போலீஸ் லேப்டாப்பை கைப்பற்றியது.
இந்த காலகட்டத்தில் வில்சனின் லேப்டாப்பில் கிட்டத்தட்ட 10 கடிதங்கள் புகுத்தப்பட்டுள்ளன.
அதில் கடைசி கடிமானது,
அதே ஏப்ரல் 2018ல் 6ஆம் தேதி புகுத்தப்பட்டுள்ளது. இந்த கடிதங்கள் தான் பிரதமர் மோடியை கொல்ல சதி, மாவோயிஸ்டுகளுக்கு ஆயுதங்கள் வாங்குவதற்கான சதி உட்பட பல குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக போலீஸ் முன்வைக்கிறது.

ஆனால் அர்சனல் அமைப்பின் ஆய்வில், ரகசியமாக புகுத்தப்பட்ட கடிதங்களை வில்சன் கடைசி வரை திறக்கவே இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், வில்சன் தனது லேப்டாப்பில் Microsoft Word மென்பொருளின் 2007 பதிப்பை பயன்படுத்தி வந்துள்ளார்.
ஆனால், போலீஸ் கைப்பற்றிய கடிதங்களோ Microsoft Word மென்பொருளின் 2010 அல்லது 2013 பதிப்பை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஆதாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அப்போதைய பாஜக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், 'இந்த குறிப்பிட்ட விடயம் குறித்து எனக்கு முழுதும் தெரியாது. ஆனால் அர்பன் நக்சல்கள் வழக்கை பொறுத்தவரை உறுதியான ஆதாரங்கள் உள்ளன' என்றார்.


கிட்டத்தட்ட 22 மாதங்கள் வில்சனின் லேப்டாப் ஹேக்கரின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. இன்னும் நேரமும் கூடுதல் ஆவணங்களும் கிடைக்கும் பட்சத்தில் அந்த ஹேக்கரையும் கண்டுபிடிக்கலாம் என்று தெரிவித்துள்ளது அர்சனல். மேலும், அந்த அமைப்பு எதிர்கொண்ட வழக்குகளிலேயே மிகவும் அபாயகரமானதாகவும், பெரிய அளவிலான ஹேக்கிங் திட்டமும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த புதிய ஆதாரத்தை வழக்கம் போல என்.ஐ.ஏ. மறுத்துள்ளது. தங்களது பூனே தடயவியல் ஆய்வகத்தில் இது போன்று எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. 
புதிய ஆதாரத்தோடு நீதிமன்றத்தை அணுகியுள்ள ரோனா வில்சன் என்.ஐ.ஏவிடமிருந்து இந்த வழக்கை, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவிற்கு மாற்றக்கோரியும்,
பொய்யான ஆதாரங்கள் அடிப்படையில் சிறையில் உள்ள தங்கள் 16 பேரையும் விடுவித்து, இழப்பீடு வழங்கவும் கோரியுள்ளார். மேலும், குறிப்பிட்ட ஹேக்கரை கண்டுபிடித்து தண்டிக்கவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
ஆனால் இது குறித்து எந்த பதிலும் சொல்லவில்லை NIA அதிகாரிகள்.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடுவதும் அரசாங்கத்தின் மக்கள்விரோதக்கொள்கைகளுக்கு எதிராக போராடுவதும் சனநாயகவாதிகளின் கடமை. அந்த கடமையை ஆற்றிய ரோனே வில்சன் உள்ளிட்ட அத்தனை பேரும் இன்று பழிவாங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பாசிச பாஜக அரசுக்கு எதிராக போராடி இவர்களின் விடுதலையை வென்றெடுப்பது சனநாயகவாதிகளின் கடமை.
அந்த கடமையை செயலாற்ற அணியமாவோம்!
          
 - வன்னி அரசு
   13.2.2021