03 August 2014

ராமதாசுக்கு புத்தி புகட்டும் சினேகா

நடந்து முடிந்த நாடாளுமன்றதேர்தல் பெரும் ஏமாற்றத்தை மட்டுமல்ல மன உளைச்சலையும் தந்தது. மானுட விடுதலைக்கு எதிரான -மனித நேயத்திற்கு எதிரான மதவெறியையும் சாதிவெறியையும் வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்துவதற்காக தன வாழ்நாளெல்லாம் உழைத்த தந்தை பெரியாரின் உழைப்பு தமிழகத்தில் வீணாகிவிட்டதே என்கிற வேதனை வாட்டிக்கொண்டே இருக்கிறது.
                                 
                தந்தை பெரியாரின் கொள்கைகளை செயல் வடிவமாகக் களமாடும் விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் தோல்வி என்பது பல கேள்விகளை முன்னிறுத்துகிறது. தருமபுரியில் சாதிவெறியும் கன்னியாகுமரியில் மதவெறியும் வெற்றி பெற்றதன் மூலம் தந்தை பெரியார்,புரட்சியாளர் அம்பேத்கர் போன்றோரின் கொள்கைகளும் உழைப்பும் தோற்று போய்விட்டன. எத்தனையோ இலக்கியங்கள்,கவிதைகள், சினிமாக்கள்கூட சாதியத்திற்கு எதிராகவும் மதவாதத்திற்கு எதிராகவும் படைக்க பட்டுள்ளன. அவையும் தோற்றுவிட்டதாக தான்  பார்க்கமுடிகிறது. சிதம்பரத்தில் தொல்.திருமாவளவன் அவர்கள் தோற்று போனதைகூட   இப்படிதான் வரலாற்று ரீதியாக பார்க்க வேண்டும்.                                            

சாதிவெறியை தமது சமூகத்தின் மீது திணித்து அதில் கவுரவம் எனும் விசத்தை விதைத்து அரசியல் பண்ணும் பா.ம.க. ராமதாசின் அயோக்கியத்தனம் மனு தரும காலத்தில் கூட இருந்தது இல்லை. காதலில் கூட அரசியல் பண்ணும் கேவலமான இழி பிறவியாக தமிழக அரசியலில் வளம் வருகிறார். இவரோடுகூட கூட்டு வைப்பவர்களை என்னவென்று சொல்வது?                                              

 தருமபுரி நத்தம்சேரியை சூறையாடிவிட்டு வெட்கமே இல்லாமல் சிங்கள இனவெறியை கண்டிப்பதும் இளவரசனை கொன்று விட்டு தமிழகத்தில் படுகொலைகள் அதிகமாக நடப்பதாக அறிக்கை விடுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது.(கொலைகார்களே அறிக்கை கொடுப்பது தான்) இத்தகைய சூழலில் தான் "சினேகாவின் காதலர்கள்" திரைப்படம் பார்க்க தமிழன் தொலைக்காட்சி நிறுவனர் திரு.கலைகொட்டுதயம் அழைத்திருந்தார். கதைகளமே வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது.பெரும்பாலும் சினிமா ஹீரோதனமாகதான் இருக்கும். ஆணாதிக்க சினிமாவில் விதி விலக்காக சினேகா ஹீரோ வாக வலம் வருகிறார். சினேகா கல்லூரியில் படிக்கும் போது  காதல் , வேலை கிடைத்ததும் காதல் என்று சமூகத்தில் ஒவருவரும்  எதிர்கொள்ளும் காதலை கவிதையாக காட்டி இருக்கிறார்கள். "காதலிச்ச உடனே உன்னோட படுதுடனுமா?" என்று சினேகா கேட்பது ஆணாதிக்க சிந்தனை மீது நெருப்பை எறிவது போலுள்ளது . நிறைவாக கொடைக்கானலில் இளவரசன் மீதும் காதல் கொள்கிறாள்.இளவரசன் மறுப்பதற்கான காரணத்தை சொல்லும் போது தருமபுரி சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது.                        


செருப்பு தைக்கும் அருந்ததியர் சமூகத்து இளவரசன் மீது காதல் கொள்கிறாள் ஆதிக்க சாதி பெண் ரம்யா. செருப்பு தைக்கும் இடத்திற்கும் இளவரசன் வசிக்கும் சேரிக்கும் தேடி தேடி போய் காதலிக்கும் ரம்யா, இளவரசனை கூட்டிக்கொண்டு போய் பதிவு திருமணம் பண்ணுகிறாள். செய்தியை அறிந்த ரம்யா குடும்பத்தினர் வழக்கம் போல் சாதி வெறியுடன் குதிக்கின்றனர். இச்செய்தியை அறிந்த ரம்யா இளவரசனை மட்டும்தப்பிது போக விட்டு பெற்றோர் தன்னை ஒன்னும் பண்ண மாட்டார்கள் என்று நம்பி மாலையும் கழுத்துமாக வீட்டுக்கு போகிறாள். பயங்கர கோபத்தோடு காத்திருந்த பெற்றோர் "ஏண்டி இப்படி கீழ்சாதிக்கரனை கல்யாணம் முடிச்சு கவுரவத்தை  கெடுத்துட்டியே" னு பெட்ரோல் ஊத்தி சொந்த மகளையே எரித்து விட்டு இளவரசனைகொலை செய்ய அலைகின்றனர். சாதிவெறியர்களுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டரே நேரடியாக உதவ கத்தியோடு கொடைகானல் போகிறார் . அங்கு இளவரசன் நண்பன் ஒருவனை சந்தித்து தண்ணி வாங்கி கொடுத்து இளவரசனை பற்றி கேட்க நண்பனோ, "உங்க சாதிகவுரவத்த காப்பாத்த ஊரு தாண்டி மலை தாண்டிவருவீங்களோ?" னு கேட்ட  அடுத்த நிமிடத்தில்  நண்பன் கொலை செய்ய படுகிறான். சாதி இந்துக்களின் எடுபிடியாக அடியாளாக போலீஸ் எப்போதுமே இருப்பதை இக்கதாபாத்திரம் சிறப்பாக அம்பலப்படுத்துகிறது.                                                             
பொதுவாக காதலை சொல்லாத எந்த திரைப்படமும் இல்லை என்கிற அளவில் தான் திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இன்னும் சொல்ல போனால் காதலை திரைப்படமாக எடுக்க கூடாது என்று தடை விதித்தால் திரைப்பட உலகமே ஸ்தம்பித்து போய்விடும். அந்தளவுக்கு காதல்...காதல்.. என்று காதலித்து கொண்டிருக்கிறார்கள். இச் சூழலில் தான் காதலை வைத்து அதில் சாதிகவுரவத்தை நுழைத்து அருவருப்பான அரசியல் செய்ய ஆரம்பித்தார்.இந்த அருவருப்பை திரையுலகத்தினர் பலர் கண்டித்தாலும் திரைப்படமாக எடுக்க யாரும் துணிய வில்லை.இச்சூழலில் தான் மிக துணிச்சலாக சினேகாவின்  காதலர்கள் திரைபடத்தை தயாரித்து இருக்கிறார் அண்ணன் கலைகோட்டுதயம். அவருக்கும் சிறந்த திரைக்கதையோடு சமூக அவலங்களை தோலுரித்து காட்டும் விதமாக இயக்கிய அண்ணன் முத்துராமலிங்கன் உள்ளிட்ட திரைப்பட குழுவினரை வரலாறு கண்டிப்பாக வாழ்த்தும்....பாராட்டும்.

26 November 2013

படித்துரைப் பாண்டியும் பழ.நெடுமாறனும்..! - வன்னிஅரசு



படித்துரைப் பாண்டியும் பழ.நெடுமாறனும்..!
வன்னிஅரசு
அந்த நகைச்சுவைக் காட்சியை தொலைக்காட்சிகள் எப்பொழுது ஒளிபரப்பினாலும் அதனைப் பார்த்து ரசித்துச் சிரிக்காதவர்களே இருக்க முடியாது! 
தேநீர்க் கடை முன்பு நடிகர் வடிவேலு தமது கோஷ்டிப் பரிவாரங்களுடன் போய் நிற்பார்.  கோஷ்டியில் ஒருவர் போய் டீக்கடைக்காரரிடம் "அண்ணனுக்கு ஒரு டீ போடு!" என்பார்.  டீக்கடைக்காரர் "டோக்கன் வாங்கு" என்பார்.  அவர் உடனே, "அண்ணே டோக்கன் வாங்கணுமாம்ணே" என்று வடிவேலுவிடம் வந்து சொல்வார்.  உடனே வடிவேலுமுகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு, "இந்தப் படித்துரை பாண்டிக்கிட்டயே டோக்கன் கேக்குறியா?  நீ இந்த ஊர்லயே இருக்க முடியாதுடா.. டேய்" என்று கத்திக்கொண்டே டீக்கடையை அடித்து நொறுக்கிவிட்டு, "எங்ககிட்டயவே..." என்று கத்திக்கொண்டே தனது கோஷ்டிப் பரிவாரங்களுடன் ஓடி ஒரு மறைவில் இருந்துகொண்டுதன் கோஷ்டி ஆளிடம், "டேய்... அந்தக் கடைக்காரன் கடையை இழுத்து மூடிவிட்டு ஓடுறானான்னு பார்.  அவன் ஓடிட்டா அவன் நமக்கு அடிமைஓடாவிட்டால் நாம் அவனுக்கு அடிமை" என்று மூச்சிரைக்கச் சொல்வார். கோஷ்டியிலிருந்து ஒருவர் எட்டிப் பார்க்கையில்டீக்கடைக்காரர் கடையை இழுத்து மூடிவிட்டு தனது வேட்டியால் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு ஓட்டம் பிடிப்பார்.  இதனைப் பார்த்தவுடன் கோஷ்டியில் ஒருவர், "அண்ணே ஓடுறான்ணே!" என்று சொல்வார்.  அப்போது வடிவேலு மிக உற்சாகமாக, "அப்ப இன்னையிலருந்து நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டான்டா" என்று பெரிய ரவுடி போல 'ஃபிலிம்காட்டுவார். 
படித்துரைப் பாண்டியைப் போல அய்யா நெடுமாறன் தனது படை பரிவாரங்களுடன் தமிழகத்தில் அரசியல் செய்து வருகிறார்.  இவ்வளவு காலமும் வீராவேசமாகப் பேசினார்கள். கருணாநிதியை ரவுண்டு கட்டினார்கள்.  வா... வந்து பார்... என்கிற அளவில் பிளந்து கட்டினார்கள்.  தமிழர் துரோகி என்றார்கள்தமிழர்களுக்கு எதிரி என்றார்கள்,தமிழகத்திலிருந்தே விரட்ட வேண்டும் என்றார்கள்.  உச்சகட்டமாக தெலுங்கர் என்றுகூறி மார் தட்டினார்கள்.  புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக்கு வந்தால்தான் எல்லாம் மாறும் என்று 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2011சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்தார்கள்.  இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றார்கள்.  இன்னும் கூடுதலாகப் போய் ஜெயலலிதாவை ['ஈழத் தாய்என்றார்கள். உண்மையான புரட்சித் தலைவி அம்மாதான் என்றார்கள்.  அதிமுகவினரைவிடக் கூடுதலாக ஜெயலலிதாவை அம்மா அம்மா என்று ஊர் ஊராய் தொகுதி தொகுதியாய் கூவினார்கள். ஈழவிடுதலையை வாங்கித் தருபவர் என்று அடையாளப்படுத்தினார்கள்.  அம்மா வந்தால் தமிழகத்தில் ஈழவிடுதலைக்கான போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என்றார்கள்.  ஏன்... அம்மாவே தலைமை தாங்கி ஈழப் போரை நடத்துவார் என்றெல்லாம் பிரச்சாரம் செய்தார்கள்.
அம்மா ஆட்சிக்கு வந்தார்இனப்படுகொலை செய்த இராஜபக்சேவைத் தண்டிக்கவும் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவும் வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் உடனடியாகத் தீர்மானம் நிறைவேற்றினார்.  தீர்மானத்தை வரவேற்று பழ.நெடுமாறன் ஆகா.. ஓகோ.. என வானுக்கும் மண்ணுக்கும் குதித்துக் குதித்து அறிக்கை வெளியிட்டார்.  எதிலும் இரண்டடி தாவி ஓடநினைக்கும் அண்ணன் சீமான்அதே அம்மாவைப் பாராட்டி சென்னை நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டினார்.  அது மட்டுமல்லாது அம்மாவைப் பாராட்டி வேலூரிலிருந்து சென்னை வரை நடை பயணம் வேறு.  அம்மாவே நாணி வெட்கப்படுமளவுக்கு புகழாரப் பொதுக்கூட்டங்கள்.
இந்தக் காட்சிகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கின.  கடந்த இரண்டாண்டுகளாகவே  தமிழகத்தில் மாவீரர் நாள் பொதுக்கூட்டங்களை நடத்த ஈழத்தாய் மறுத்து வருகிறார்.  மேதகு பிரபாகரன் அவர்களின் படங்களை அச்சிட்டு ஒட்டப்படும் சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டு வருகின்றன.  எந்த இடத்திலும் மாவீரர் நாள் விழாவுக்கோமே 18 முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் கூட்டங்களுக்கோ தமிழகத்தில் அனுமதி மறுக்கப்பட்டுவரும் நெருக்கடிகள் தொடர்கின்றன.  இந்நிலையில்தான் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்தன.  கட்சி பேதமின்றி அனைத்துக் கட்சிகளும் போராட்டங்களில் ஈடுபட்டன.  ஆனால் நெடுமாறன் வகையறாக்களோ இத்தகைய எந்தப் போராட்டத்திலும் பங்கேற்கவில்லை.  வெற்றி அல்லது வீரச்சாவு என முழங்கி 15 நாட்களாக உண்ணாநிலை அறப்போரில் ஈடுபட்ட தோழர் தியாகு அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும் களத்தில் குதித்தபோதுகூடஅவருக்கு வாழ்த்துச் சொல்லக்கூட நேரமில்லாமல் நெடுமாறன் தஞ்சை விளாரில் தங்கி முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.  தமிழர்களின் உணர்வுகளை மதித்து காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது.  அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மறுநாளே -  அதாவது நவம்பர் 13 அதிகாலை - முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச் சுவர்களையும்பூங்காவையும் தமிழகக் காவல்துறை இடித்துத் தள்ளியது. அங்கிருந்த நெடுமாறன் உள்ளிட்ட 83 பேரைபணி செய்ய விடாமல் தடுத்தாகச் சொல்லி வேனில் அள்ளிக்கொண்டுபோய் ஒரு திருமணத்தில் அடைத்தார்கள்.  எப்படியும் மாலை 5 மணிக்கு மேல் விட்டுவிடுவார்கள் என்று நினைத்திருந்தவர்களின் நினைப்பில் ஜெயலலிதா மண்ணைப் போட்டார்.  இரவோடு இரவாக 83 பேரையும் திருச்சி சிறைக்குள் திணித்தார்கள். 
முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பைக் கண்டித்தும்நெடுமாறன் உள்ளிட்ட 83பேர் கைதைக் கண்டித்தும் தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவுக் கட்சிகள்அமைப்புகள் அனைத்தும் அறிக்கை வெளியிட்டன.  'டெசோசார்பில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கே சென்று பார்வையிட்டுதமிழக அரசைக் கண்டித்ததோடுஇடிக்கப்பட்ட பகுதிகளை தமிழக அரசே கட்டித் தரவேண்டும்கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
9 நாட்கள் சிறைவாசத்திற்குப் பின் பிணையில் வெளிவந்த அய்யா நெடுமாறனை, 'வாராது வந்த மாமணி', 'தமிழ்த் தேசியப் போராளிம.நடராசன் சிறைவாயிலிலேயே ஆரத்தழுவி வரவேற்றார். பின்பு செய்தியாளர்களிடம் நெடுமாறன்மிகுந்த கோபத்துடனும்முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டும்அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டார். (இந்த இடத்தில் உங்களுக்கு வடிவேலு ஞாபகம் வந்தால் நாம் பொறுப்பல்ல)
"முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவரை இடித்த அதிகாரிகள் தன்னிச்சையாக எடுத்த முடிவாகத்தான் இருக்க முடியும்.  அவர்கள் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்கள் முதல்வரைத் தவறாக நினைப்பார்கள்" என்று 'வீராவேசமாகப்பேசினார்.  முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்தது தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தெரியாது என்றும்அதிகாரிகள் தன்னிச்சையாகவே இடித்தார்கள் என்றும் நெடுமாறன் கூறுவதன் மூலம் நிகழ்ந்த தவறுகளுக்கு ஜெயலலிதா காரணமல்ல என்று மக்களுக்குத் தெளிவுபடுத்துகிறாராம். 
தமிழகத்தை ஆட்சி செய்பவருக்கு தமிழகத்தின் எந்த மூலையில் எது நடந்தாலும் தெரிந்திருக்க வேண்டும்தானே.  "அமைச்சரே மாதம் மும்மாரி மழை பொழிகிறதா?" என்று வெளியில் என்ன நடக்கிறது என்பதுகூடத் தெரியாமல் ஆட்சி நடத்தும் மங்குனி அரசியா ஜெயலலிதா?  என்ன சொல்ல வருகிறார் நெடுமாறன்.  ஒன்றுமே தெரியாமல் ஜெயலலிதா ஆட்சிபுரிகிறாரா?  அல்லது ஜெயலலிதாவைக் காப்பாற்ற நினைக்கிறாரா?  சரிஜெயலலிதாவிற்கு தெரியாமல் இடித்தார்கள் என்றால்அய்யா சிறைக்குப் போனது கூடவா அம்மாவுக்குத் தெரியாது.  நீதிமன்றத்தில் பிணை கேட்டதுகூடவா தெரியாதுமுள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பின்போதுஅரசு அனுமதி வழங்காததால் அய்யா நீதிமன்றத்திற்குப் போனாரேஇதுகூடவா அம்மாவுக்குத் தெரியாது?  கொளத்தூர் மணி அவர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்ததுகூடவா தெரியாது?  இவையும் அதிகாரிகளே தன்னிச்சையாக எடுத்த முடிவுதானா?  மாவீரன் நெடுமாறன் இப்படி அந்தர் பல்டி அடித்துப் பேசும் அரசியல்தான் என்ன!
சரிநெடுமாறன்தான் இப்படி என்றால்வீழ்ந்துவிடாத வீரத்துக்கும்மாண்டுவிடாத மானத்துக்கும் சொந்தக்காரரான சீமான்நெடுமாறன் கைதையொட்டி முள்ளிவாய்க்கால் முற்றத்திலேயே செய்தியாளர்களிடம் பேசும்போது இந்நிகழ்வுக்கு மத்திய உளவுத்துறைதான் காரணமாக இருக்க முடியும்.  மத்திய அரசால்தான் தமிழக அதிகாரிகள் தமிழர்களுக்கு எதிராக நடக்கிறார்கள்.  இப்போக்கை தமிழக அரசு மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார்.  நெடுமாறன் எப்படிப் பேசினாரோ அதையே சீமானும் தமிழக அரசுக்கும் முள்ளிவாய்க்கால் இடிப்பு சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்று சொல்கிறார்.
இவ்வளவு கடுமையாகவும்தமிழினத்திற்கு விரோதமாகவும் நடந்துகொள்ளும் ஜெயலலிதாவைப் பார்த்து,ஜெயலலிதா செய்வது மக்கள் விரோதம் என்று சொல்லக்கூடத் துணிச்சல் இல்லாதவர்களாக இந்த 23ஆம் புலிகேசிகள் தமிழகத்தில் வலம் வருகிறார்கள்.  இதற்குக் காரணம் என்னவாக இருக்க முடியும்?  ஒன்றுமில்லை.  அடிப்படையில் கலைஞர் கருணாநிதி எதிர்ப்புதான்.  தமிழீழ விடுதலையோதமிழர் ஒற்றுமையோதமிழின விடுதலையோதமிழ்த் தேசிய அரசியலோ.. இந்த நெடுமாறன் வகையறாக்களுக்கு முக்கியமல்லகருணாநிதி எதிர்ப்புதான் முக்கியம் என்பதை முள்ளிவாய்க்கால் முற்ற இடிப்புக்குப் பின்னான இவர்களின் அரசியல் நமக்கு உணர்த்துகிறது.  கலைஞர் கருணாநிதி சாதாரணமாகத் தட்டினாலே அய்யோ இரத்தம்... என்று கூப்பாடு போட்டவர்கள்ஜெயலலிதா உலக்கையை வைத்து இவ்வளவு மோசமாக அடித்தும் தலையில் வருவது தக்காளி சட்னிதான் என்று சிரித்துக்கொண்டே துடைத்துக்கொண்டு வருகிறார்கள். 
இப்போது முதலில் சொன்ன வடிவேலுவின் காமெடிக் காட்சியை நினைத்துப் பார்த்தால்நெடுமாறனின் அரசியல் கண்டு நீங்களே விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்.
பாவம்... நெடுமாறன் வகையறாக்களுக்கு 'பில்டிங் ஸ்ட்ராங்.. பேஸ்மெண்ட் வீக்...என்ன செய்வது?  இந்த இலட்சணத்தில் தமிழீழத்தை மீட்கப் போகிறார்களாம்... தமிழ்த் தேசியத்தை அடையப் போகிறார்களாம்!
இவர்களது அரசியல் கண்டு ஜெயலலிதாவின் மைண்ட் வாய்ஸ் இப்படித்தான் சொல்கிறது - "எவ்வளவு அடிச்சாலும் நெடுமாறன் தாங்குறாரே... இவர் ரொம்ப நல்லவரு..."

08 November 2013

முள்ளிவாய்க்கால் முற்றத்தின் மீது கட்டப்படும் ஒரு புதிய அரசியல் அணி !!

மாவீரர்கள் என்றாலே நவம்பர் மாதம்தான் நினைவுக்கு வரும். உலகெங்கும் வாழ்கிற தமிழர்கள் அவரவர் வீட்டுக்குள் மாவீரர்களின் திருவுருவப் படங்களை வைத்துத் தீபம் ஏற்றி வணங்குவார்கள். தமிழீழத்தை அடைய உறுதிமொழியும் எடுத்துக்கொள்வார்கள்.


“இன்று புனிதமான நாள். தமது உன்னதமான உயிருக்கும் மேலாக தமது தேசத்தின் விடுதலையை அதிஉன்னதமாக நேசித்து அந்த உயரிய இலட்சியத்திற்காகச் சாவைத் தழுவிக்கொண்ட எமது மாவீரர்களை நாம் போற்றி வணங்கும் நன்னாள். எமது மாவீரர்களின் வீரஞ்செறிந்த போராட்ட வாழ்வையும் அவர்களது ஒப்பற்ற தியாகங்களையும் அற்புதமான அர்ப்பணிப்புகளையும் நெஞ்சில் நிறுத்தி நினைவுகூரும் இத்திருநாள்..”

என்று மாவீரர்கள் குறித்துப் பெருமையோடு மேதகு பிரபாகரன் அவர்கள் மாவீரர் நாளில் உரையாற்றுவார்.


மண்ணை மீட்க வீரச்சாவடைந்த மாவீரர்களை வணங்கி விளக்கேற்றி சிறப்புச் செய்யும் அந்த மகத்துவ நாள்தான் நவம்பர் 27. தமிழீழ மண்ணில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் துயிலும் இல்லங்களில்தான் தாய்மார்களும் குழந்தைகளும் குடும்பத்துடன் வந்து அந்த மாவீரர்களை வணங்குவார்கள். கண்ணீர்விட்டு அஞ்சலி செலுத்துவார்கள். அந்தளவுக்கு ஒவ்வொரு வீட்டிலும் ‘மாவீரர்கள்’ இருந்தார்கள்.

ஓர் இலட்சியப் பயணத்தில் தமிழீழத்தின் அடிக்கற்களால் தங்களை விதைத்துக்கொண்ட அந்த மாவீரர்களைப் போலவே பொதுமக்களும் வீரச்சாவடைந்தார்கள்.


விடுதலைப்புலிகளின் ஆளுகைக்குள் இருந்த பொதுமக்களுக்குத் தெரியும். எப்போது வேண்டுமானாலும் இனவெறியர்கள் தம்மைத் தாக்குவார்கள் என்று. ஆனாலும் மேதகு பிரபாகரன் கைப்பற்றிய சுதந்திரத் தமிழீழத்தின் சுதந்திரக் காற்றைச் சுவாசித்து வாழ்ந்தார்கள். சிங்களப் பேரினவாதத்தின் கடும் பொருளாதார நெரக்கடியையும் மீறி வாழப் பழகினார்கள். 2008ஆம் ஆண்டு சிங்களப் பேரினவாதம் போர் ஒப்பந்தத்தை மீறி போரைத் தொடங்கியபோதும் பொதுமக்கள் அச்சப்படவில்லை. “தாக்குல் நடத்தப் போகிறோம். எல்லோரும் இராணுவப் பகுதிக்குப் பாதுகாப்பாக வந்துவிடுங்கள்” என்று சிங்கள இராணுவம் ஹெலிகாப்டரில் பறந்துவந்து துண்டறிக்கை வெளியிட்டு எச்சரித்தார்கள். ஆனாலும், பொதுமக்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள விரும்பவில்லை. மேதகு பிரபாகரன் அவர்களை விட்டுவிட்டு ஓடிவிட விரும்பவில்லை. 2009 சனவரி 2ஆம் நாள் கிளிநொச்சியை உலக நாடுகளின் துணையுடன் சிங்களப் பேரினவாதம் கைப்பற்றிய பிறகும் பொதுமக்கள் பாதுகாப்புத்தேடி சிங்கள இராணுவம் அறிவித்த பாதுகாப்புப் பகுதிக்குள் செல்ல விரும்பவில்லை. ‘கிபீர்’ குண்டுகளும் ‘ஷெல்’களும் விழுந்தாலும் பொதுமக்கள் கிளிநொச்சியிலிருந்து பரந்தன் வழியாக தருமபுரம், விசுவமடு, உடையார்கட்டு, சுதந்திரபுரம், புதுக்குடியிருப்பு, இரணபாலை, மாத்தளன், புதுமாத்தளன், வலைஞர் மடம், வெள்ளா முள்ளிவாய்க்கால், முள்ளி வாய்க்கால் என்று இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து சென்றார்கள். அந்த இடப்பெயர்வுகளுக்கிடையே எத்தனையோ பேர் ‘கிபீர்’ தாக்குதலில் இறந்தார்கள். விசுவமடு, உடையார்கட்டு, சுதந்திரபுரம் பகுதிகளில் ‘ஷெல்’ தாக்குதலில் ஆயிரக் கணக்கில் செத்து விழுந்தார்கள்.


தாய் சாக, மகளும் மகனும் தாயைப் புதைக்கக்கூட வழியில்லாமல் அப்படியே போட்டுவிட்டு இடம்பெயர்ந்தார்கள். நேற்றுவரை தங்களோடு பேசி ஆறுதல்கூறி ஓடி வந்தவர்கள் செத்து பிணங்களாய் ஆங்காங்கே கிடந்ததைப் பார்த்துக் கண்ணீர்விட்டுக் கடந்துவரத்தான் முடிந்ததே தவிர வேறெதையும் செய்ய முடியாத கையறு நிலையில் இருந்தார்கள்.


அச்சூழலில்கூடசிங்கள இராணுவப் பகுதிகளில் பாதுகாப்புத் தேடி பொதுமக்கள் செல்ல விரும்பவில்லை. தங்களுடைய தலைவர் மேதகு பிரபாகரன் வழியிலேயே எதற்கும் சமரசமாகாமல் சாகத் துணிந்தார்களே தவிர, சிங்களப் பேரினவாதத்துக்கு அடிபணிய விரும்பவில்லை. அப்படிப் போராளிகளோடு போராளிகளாக மாண்டு மடிந்த பொதுமக்களின் தியாகமும் அர்ப்பணிப்பும் மாவீரர்களின் தியாகத்திற்கு இணையானதுதான்.
கொத்துக்குண்டுகளில் செத்து மடிந்தவர்கள் மட்டுமல்லாது, சிங்கள இராணுவத்தால் பிடிக்கப்பட்டு பல புலித் தளபதிகளைக் குறிப்பிட்டு, அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்று கேட்டு சித்ரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டவர்கள் அனேகம் பேர். பிஞ்சு பிள்ளைகள், பெண்கள், முதியவர்கள் என்று தமிழீழத் தேசத்திற்காக வீரச்சாவடைந்தவர்கள் எண்ணிக்கை இலட்சத்தைத் தாண்டும். அப்படி சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராக, சமரசமாகாமல் வீரச்சாவடைந்த போராளிகள் உள்ளிட்ட பொதுமக்களை வணங்கி அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழகத்தில் ‘முள்ளிவாய்க்கால் முற்றம்’ திறக்கப்படவுள்ளது. தஞ்சாவூர் அருகே உள்ள விளார் கிராமத்தில், நவம்பர் 8ம் நாள், இந்த முள்ளிவாய்க்கால் முற்றம் திறக்கப்படவுள்ளது. இதற்கான முழுச் செலவையும் ம.நடராசன் என்பவர் ஏற்றுள்ளார். இவர் தமிழீழப் போராட்டத்தை ஆதரித்தோ போராடியதோ இல்லை. தமிழீழம் குறித்தும் தேசிய இனவிடுதலை குறித்தும் இவருக்கு எவ்வித அரசியல் பார்வையும் இல்லை என்பது தமிழகம் அறியும்.



ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலைக்காகப் போராடிய மாவீரன் இமானுவேல் சேகரனைக் கொலை செய்த முதன்மைக் குற்றவாளி முத்துராமலிங்கத் தேவரின் வழியில் அரசியல் செய்து வருபவர். மருதுபாண்டியர் விழா, பூலித்தேவன் விழா என்று தமிழகத்தில் சாதி அரசியலை கடந்த காலங்களில் நடத்தியவர், நடத்தி வருபவர். சாதியவாதிகளுக்குப் பின்புலமாக இருப்பவர்.

அந்த வகையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை முன்னிறுத்தி நடத்தும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனுக்கும் பின்புலமாக இருந்து இந்த செயற்கரிய செயலைச் செய்துள்ளார். முள்ளிவாய்க்கால் முற்றத்திற்காகக் கொடுக்கப்பட்ட விளார் நிலம்கூட மோசடி செய்து வாங்கப்பட்ட நிலம் என்று ம.நடராசன் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.

எப்படியானாலும் முள்ளிவாய்க்காலில் மாண்டு மடிந்தவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவதற்கு இடம்கொடுத்து முழுச் செலவையும் பொறுப்பேற்றுக்கொண்ட ம.நடராசன் அவர்களது கொடைக்குணத்தைப் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

ஆனால், சிங்களப் பேரினவாதத்திற்கு அடிபணியாமல் சமரசமாகாமல் மாண்டு மடிந்த அம்மக்களின் தியாகத்தை அவமதிக்கும் வகையில், ஓர் சாதிய நிலப்பிரபுவிடம் அடிபணிந்து நினைவு முற்றம் அமைப்பதுதான் கவலையளிக்கிறது. அதுமட்டுமல்லாமல் முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு விழாவிற்கு பா.ஜ.க.வைச் சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன், இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அர்ஜூன் சம்பத், பொள்ளாச்சி மகாலிங்கம் போன்ற இந்துத்துவவாதிகளை அழைப்பது தமிழ்த் தேசியத்திற்குக் கேடுவிளைவிப்பது மட்டுமல்லாது, தவறான முன்னுதாரணமுமாகும். இத்தகைய செயல் மேதகு பிரபாகரனின் தமிழ்த் தேசியப் போராட்டத்தையும் அவரது தூய்மையையும் கொச்சைப்படுத்துவதாகத்தான் அமையும்.

பாரதிய ஜனதா கட்சி தமிழீழப் போராட்டத்தை ஆதரிக்கின்ற கட்சி அல்ல; தமிழீழம் அமைவதையும் விரும்புகிற கட்சி அல்ல. காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்னவோ அதே நிலைப்பாட்டைத்தான் பா.ஜ.க.வும் கொண்டுள்ளது. இதை பழ.நெடுமாறன் அவர்களே தமது ‘உருவாகாத இந்தியத் தேசியமும் உருவான இந்து பாசிசமும்’ என்கிற நூலில் தெளிவுபடுத்துகிறார்:

“காங்கிரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் தேசிய ஒருமைப்பாட்டைக் காக்க வேண்டுமானால் பலமான மத்திய அரசு மூலமே சாத்தியம். அதுவும் தன்னால் மட்டுமே அந்த ஒருமைப்பாட்டைக் கட்டிக்காக்க முடியும் என மார்தட்டுகிறது. மொழிவழி மாநிலங்களை அமைக்க மறுத்த பின்னர் மக்கள் போராட்டங்களின் விளைவாக மொழிவழி மாநிலங்களை அமைக்க ஒப்புக்கொண்ட காங்கிரசுக் கட்சி அம்மாநிலங் களுக்குரிய அதிகாரங்களை அளிக்க இன்னமும் மறுக்கிறது. பா.ஜ.க.வோ மொழிவழி மாநிலங்களை ஒழித்துவிட்டு ஒரே மத்திய அரசின்கீழ் 100 ஜன பாதங்களை அமைக்க வேண்டும் எனக் கூறுகிறது.

ஆக, இரு கட்சிகளுக்கிடையே அதிக வேறுபாடு இல்லை. காங்கிரஸ் கட்சி மிதவாத இந்துத்துவக் கட்சி. பா.ஜ.க. தீவிரவாத இந்துத்துவக் கட்சியாகும். காங்கிரஸ் கட்சி சமயச் சார்பின்மை முகமூடியணிந்து தனது உண்மை உருவத்தை மறைத்துச் செயற்படுகிறது. பா.ஜ.க.வோ ஒருபோதும் தனது நோக்கத்தை மறைக்காமல் பாசிச கோரமுகத்தை வெளிப்படையாகக் காட்டிச் செயற்படுகிறது. எனவே காங்கிரசுக்கும் பா.ஜ.க.விற்குமிடையே அதிக வேறுபாடுஇல்லை.” (பக்கம் 745) 

என்று மிகத் தெளிவாக விளக்குகிறார்.

அதாவது, காங்கிரசைவிட தீவிர இந்துத்துவக் கட்சி பா.ஜ.க.தான் என்று அய்யா பழ.நெடுமாறன் அம்பலப்படுத்துகிறார். பா.ஜ.க.வைப் பற்றி மேலும் அந்நூலில், 

“இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் பல மொழிகள் பேசும் தேசிய இனங்கள் தத்தமக்குரிய பகுதிகளில் தனித்தனித் தேசங்களாக அமைந்திடுமானால் பார்ப்பனிய ஆதிக்கம் சிதைந்து போகும். பாரதப் பண்பாடு என்ற பெயரில் பார்ப்பனியப் பண்பாட்டை நிலைநிறுத்த முடியாது. அந்தந்த மொழிக்குரிய பண்பாடுகள் ஓங்கி வளர்ந்து தாங்கள் நிறுவ முயலும் போலியான பாரதப் பண்பாட்டைச் சிதைத்துவிடும் என இந்துத்துவவாதிகள் கருதுகின்றனர்” (பக். 746) 

என்று அம்பலப்படுத்துகிறார்.

அதாவது, தேசிய இனங்கள் பிரிந்துபோக ஒருபோதும் இந்துத்துவவாதிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நெடுமாறன் கூறியிருக்கிறார்.

ஆனால், தமிழ்த் தேசிய இனத்திற்கான நாடாக தமிழீழம் அமைவதை மட்டும் பா.ஜ.க. ஏற்றுக்கொள்ளுமா? தனித்தேசத்திற்காக வீரச்சாவடைந்த அம்மக்களின் நினைவைப் போற்றும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு பா.ஜ.க.வினர் அழைக்கப்பட்டிருப்பது முரண்பாடு இல்லையா? அவமதிப்பது ஆகாதா?

தமிழீழத் தேசத்திற்காக மிகப் பெரிய அறப்போராட்டத்தை நடத்தியவர் மேதகு பிரபாகரன். சிங்களப் பேரினவாதத்தின் தாக்குதலில் இந்துக் கோவில்கள் பல சிதைக்கப்பட்டன. ஏனென்றால் தமிழீழத்தின் பெரும்பான்மையானவர்கள் இந்துக்கள்தான். ஏ9 நெடுஞ்சாலை வழியாக வரும்போது, இடைமறிக்கும் முறிகண்டி முருகன் கோவிலிலிருந்து யாழ்ப்பாணம் கந்தசாமி நல்லூர் கோவில் வரை இந்துக்கோவில்கள்தான். (கிறித்தவத் தேவாலயங்கள் குறைவுதான்). அப்படிப்பட்டக் கோவில்களையெல்லாம் சிங்களப் பேரினவாதம் உடைத்து நொறுக்கியது. முருகன்கோவிலில் முளைத்த அரச மர நாற்றுகளைத் தமிழர்கள் சுத்தம் செய்யும் நோக்கில் பறித்ததற்காக புத்தர் ஞானஒளி அடைந்த அரச மரத்தை இந்துக்கள் பறித்ததாகக் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட கொடுமையான காலத்தில்கூட மேதகு பிரபாகரன் அவர்கள் ‘இந்துக்களை கொடுமைப்படுத்துகிறார்கள்’, இந்து மதத்தின் கோவில்களைச் சிங்களமதவாதிகள் இடிக்கிறார்கள் என்று இந்துமதவாதத்தை முன்வைத்து அரசியல் தீர்வை உருவாக்க நினைக்கவில்லை.

சிங்கள மதவாதத்திற்கு எதிராக இந்து மதவாதத்தை ஒருபோதும் பிரபாகரன் முன்வைத்ததில்லை. அப்படி வைத்திருந்தால் இந்தியா முழுவதும் புலிகளுக்குப் பெரும் ஆதரவு உருவாகியிருக்கும். ஒருமுறை சிவசேனா தலைவர் பால்தாக்கரேகூட, “பிரபாகரன் ஒரு இந்து. ஆகவே, விடுதலைப் புலிகளின் போராட்டத்தை ஆதரிக்கிறேன்” என்று அவரது ‘சாம்னா’ இதழில் எழுதியபோதுகூட பிரபாகரன் இந்துத்துவத்தை முன்வைத்ததில்லை. “தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டம்’ என்றுதான் தேசிய இனத்தை முன்வைத்தார்.
                                 


                                          
                             
                                                              Source : Flickr : Arjun Sampath
மதவழியிலோ சாதி வழியிலோ தமிழர்களைத் திரட்டாமல் தேசிய இன அடையாளத்தோடு தமிழர்களைப் போராட்டக் களத்தில் ஒன்று திரட்டினார். அந்த வகையில் விடுதலைப்புலிகளின் போராட்டம் என்பது தூய்மையான தேசிய இனப்போராட்டமாகத்தான் உருப்பெற்று வலுப்பெற்றுள்ளது. ஆனால், அய்யா பழ.நெடுமாறன், பா.ஜ.க. புலிகளின் போராட்டத்தை ஆதரித்தது போலவும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழீழம் மலரப் போவது போலவும் கற்பிதம் செய்ய முயலுகிறார்.

2000 ஏப்ரல் 22ஆம் நாள் விடுதலைப் புலிகளின் படை சிங்கள இராணுவத்தை ஓடஓட விரட்டி ஆனையிறவு சமரில் வெற்றி பெற்றதையடுத்து யாழ்ப்பாணத்தை நோக்கி புலிகள் முன்னேறினர். யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில் உள்ள பளை நகரமும் ஏப்ரல் 30ஆம் நாள் புலிகளால் கைப்பற்றப்பட்டது. யாழ் நகருக்குள் 35,000 சிங்கள இராணுவ வீரர்கள் புலிகளால் முடக்கப்பட்டனர். ஏ9 சாலை முழுவதும் புலிகள் கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் தரை வழியாக சிங்கள இராணுவம் யாழ் நகருக்குள் நுழைய முடியவில்லை. 35,000 இராணுவ வீரர்கள் உணவின்றித் தவித்தனர். இராணுவத்தினரின் குடும்பத்தினர் கொழும்புவில் தங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில்தான், அன்றைக்கு சிங்களத் தேசத்தின் அதிபராக இருந்த சந்திரிகா உலக நாடுகளிடம் கெஞ்சினார். அப்போது, இந்தியாவின் ஆட்சிபீடத்திலிருந்த பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரதமர் வாஜ்பாய் அவர்களிடமும் ஓடிப்போய் புலிகளிடமிருந்து இராணுவ வீரர்களைக் காப்பாற்றுங்கள் என்று மன்றாடினார்.

உடனே பிரதமர் வாஜ்பாயும் கடல்வழியே கப்பல்களை அனுப்பி சிங்கள இராணுவத்தினருக்கு உணவு அனுப்பியதோடு புலிகளின் முற்றுகையிலிருந்தும் காப்பாற்றினார். அப்போது மட்டும் பா.ஜ.க. சிங்கள இராணுவத்தை காப்பாற்றாமலிருந்தால் இன்று இந்த முள்ளிவாய்க்கால் அவலமே ஏற்பட்டிருக்காது. யாழ்ப்பாணத்தையும் புலிகள் கைப்பற்றியிருப்பார்கள். அந்த அளவுக்கு புலிகளின் போராட்டத்தை நசுக்கிய பா.ஜ.க.வினரைத்தான் பழ.நெடுமாறன் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு அழைத்துப் பெருமைப்படுத்துகிறார்.

இது மட்டுமல்லாமல், பா.ஜ.க. ஆட்சியின்போது கடந்த 2000 ஜூன் 11, 12 ஆகிய நாட்களில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த்சிங் இலங்கைக்குச் சென்று அதிபர் சந்திரிகாவைச் சந்தித்து உரையாடிவிட்டு புலிகளை ஒடுக்குவதற்காகவும் அந்நாட்டின் வளர்ச்சிக்காகவும் இந்தியாவின் சார்பில் 100 மில்லியன் டாலர் கடன் உதவி வழங்குவதாக அறிவித்தார். இப்பயணம் குறித்து ஜஸ்வந்த் சிங் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இலங்கையின் ஒற்றுமை மற்றும் எல்லைக்குட்பட்ட ஒழுங்கமைவு குறித்து இந்தியா தொடர்ச்சியாக பொறுப்புணர்வுடன் இருக்கிறது. இலங்கையில் நிரந்தரத் தீர்வு காண இந்திய அரசின் ஆதரவு எப்போதும் உண்டு” என்று கூறினார்.

ஜஸ்வந்த்சிங்கின் அந்த இருநாள் பயணம் என்பது இந்திய-இலங்கை என்னும் இரு நாடுகளின் உறவை வலிமைப்படுத்தத்தான் என்றும் கூறினார். புலிகளின் ஆனையிறவு வெற்றிக்குப் பிறகு இந்தப் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி விடுதலைப்புலிகளின் போராட்டங்களை முடக்கிய பா.ஜ.க.வைத்தான் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு அய்யா நெடுமாறன் அழைத்து விருந்து வைக்கிறார்.

மேலும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழகத்திலிருந்து போராட்டங்கள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் கட்சியிலிருந்துகூட அமைச்சர்கள் வாசன், ஏ.கே.அந்தோணி, ஜெயந்தி நடராசன் போன்றோர் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். ஆனால் பா.ஜ.க.வின் தலைவர்களான நிதின்கட்காரி, வெங்கையா நாயுடு, அண்மையில் சேர்ந்த சுப்பிரமணியசாமி உட்பட பலர் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் என்கிறார்கள். இதுதான் பா.ஜ.க.வின் நிலைப்பாடு.

                            
                                                                  Source : The Hindu

அப்படிப்பட்ட இந்துத்துவ பா.ஜ.க.வைத்தான் நெடுமாறன் அழைத்து தமிழகத்தில் ஓர் அரசியல் ஆபத்தை உருவாக்க முயற்சிக்கிறார். இது முழுக்க முழுக்க தமிழ்த் தேசியத்திற்கு எதிரானது மட்டுமல்ல. சமயச்சார்பின்மைக்குப் பெரும் ஆபத்தானதுமாகும். இந்துத்துவத்தை பொது நீரோட்டத்தில் இணைத்தால் தமிழ்நாடு என்ன ஆகும் என்பதை நெடுமாறன் அவர்களே தமது ‘உருவாகாத இந்திய தேசியமும் உருவான இந்து பாசிசமும்’ நூலில் விளக்குகிறார்:

“உருவாகாத இந்திய தேசிய மாயையில் மயங்கிய தமிழர்கள் தங்களின் தனித்த அடையாளங்களை இழந்தார்கள். மொழி, இனம், பண்பாடு, வரலாறு ஆகியவற்றால் தொன்மையும் பெருமையும் பெற்றவர்கள் என்பதை மறந்த நிலைக்குத் தமிழர்கள் ஆளாக்கப்பட்டார்கள். ஆனாலும் இருபதாம் நூற்றாண்டு நெடுகிலும் தமிழறிஞர்களும் தலைவர்களும் அரும்பாடுபட்டு உருவாக்கிய தமிழ்த்தேசிய உணர்வால் தமிழர்கள் வாழ்வில் மறுமலர்ச்சியும் விடுதலை வேட்கையும் துளிர்விட்டுள்ளன. இதை அழிக்க இந்து பாசிசம் உள்நுழைந்துள்ளது.

இந்தியத் தேசியத் தளையில் சிக்கித் தவித்து விடுபடப் போராடிக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு மதவெறியூட்டி நிரந்தர அடிமை மயக்கத்தில் ஆழ்ந்த இந்துத்வா முயலுகிறது. இந்த அபாயத்திலிருந்து தமிழர்களைக் காக்க வேண்டிய கடமை தமிழ்த் தேசியவாதிகளுக்கு உண்டு. அந்தக் கடமையைத் தவறாமல் செய்வோம். தமிழ் மண்ணிலிருந்து இந்து பாசிசத்தை விரட்டியடிப்போம்.” (பக்கம் 752)

இப்படி, இந்து பாசிசத்தை விரட்டியடிப்போம் என்று அறைகூவல் விடுத்துவிட்டு அதே இந்துத்துவவாதிகளுக்கு சிவப்புக் கம்பளம் .. இல்லை.. காவிக்கம்பளம் விரிப்பதன் நோக்கம் என்ன?

அய்யாவின் கதர்ச்சட்டை காவியாக மாறுவதன் உள்நோக்கம் என்ன? ஓர் புதிய அரசியல் அணியைக் கட்டுவதாக இருந்தால் வெளிப்படையாகக் கட்டுங்கள். முள்ளிவாய்க்கால் முற்றத்தின் மேல் கட்டி மாவீரர்கள் மற்றும் பொதுமக்களின் தியாகத்தைக் களங்கப்படுத்தாதீர்கள்.

- வன்னிஅரசு ( vanni.viduthalai@gmail.com)

07 November 2013

நவம்பர் 7 - சாதிவெறி அரசியல் எதிர்ப்பு நாள் - போலித் தமிழ்த் தேசியவாதிகளை அடையாளம் காண்போம்!



அந்தக் கொடிய நிகழ்வு நடந்து ஓராண்டாகிவிட்டது. ஒரு நாட்டின் மீது படையெடுப்பு நடத்துவதைப்போல், சாதிவெறியர்கள் சேரிகளின் மீது படையெடுப்பு நடத்தி, குடியிருப்புகளைச் சின்னாபின்னப்படுத்திய நிகழ்வு நடைபெற்று ஓராண்டாகிவிட்டது.
நவம்பர் 7, 2012 அன்று தருமபுரி மாவட்டம், நாயக்கன் கொட்டாய், நத்தம் காலனி, அண்ணா நகர் காலனி, கொண்டம்பட்டி காலனி ஆகிய மூன்று சேரிகளை பா.ம.க.வைச் சேர்ந்த சாதிவெறியர்கள் தீக்கிரையாக்கினர். வீடுகளுக்குள் புகுந்து பொருட்களைக் கொள்ளையடித்துவிட்டு, சமையல் எரிவாயு சிலிண்டர்களைத் திறந்துவிட்டு, பெட்ரோல் குண்டுகளை வீசினர். சிங்கள இராணுவத் தாக்குதலில் நிலைகுலைந்து போன தமிழர்களின் வீடுகளைப்போல் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளெல்லாம் கருகிக் கிடந்தன.
பா.ம.க. தலைவர் இராமதாஸ் அவர்களால் வெறியூட்டப்பட்ட சமூகவிரோதிகளால் மூன்று சேரிகளும், இந்திய ஜனநாயகத்தைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் காட்சிப் பொருளாகி நின்றன. சாதியை ஒழிப்பதற்காகப் போராடிய புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியாரின் தத்துவங்களுக்குச் சவால் விடுகின்ற வகையில், அந்த மூன்று சேரிகளைக் கொளுத்திய, குச்சிக்கொளுத்திகளின் திருப்பணி எக்காளமிடுகிறது.
திவ்யா என்கிற வன்னிய சாதிப் பெண்ணை, இளவரசன் என்கிற தாழ்த்தப்பட்ட இளைஞன் ஏமாற்றித் திருமணம் செய்துகொண்டான் என்கிற குற்றச்சாட்டைச் சுமத்தித்தான் அந்த மூன்று சேரிகளும் தீக்கிரையாக்கப்பட்டன. இப்படியான காதல் திருமணங்கள், தருமபுரியில் மட்டும் நடந்தேறவில்லை. காதல் திருமணங்கள் அனைத்து எல்லைகளையும் மீறித்தான் சங்க காலத்திலிருந்து நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால், நடக்கக்கூடாதது நடந்துவிட்டதுபோல், இராமதாஸ் கும்பல் வெறியாட்டம் ஆடியது.
கடந்த காலம் வரை தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் என்கிற பெயரில் விடுதலைச் சிறுத்தைகளோடு இணைந்து மொழிப்போர் களத்தில் பா.ம.க செயல்பட்டது. தமிழர்களுக்காகவும், தமிழ்மொழிக்காகவும் பாடுபட்டது.. பாடுபட்டதுபோல் காட்டிக்கொண்டது. அப்புறம் என்ன இழவுக்கோ தொடங்கிய இடத்திற்கே பா.ம.க. திரும்பியது! கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக தேர்தல் அரசியலில் தொடர் தோல்விகளைச் சந்தித்ததாலும், கட்சியிலிருந்து திரு.வேல்முருகன் போன்ற செல்வாக்குள்ள தலைவர்கள் வெளியேறியதாலும், பதவி வெறி, பண வெறி, குடும்ப வெறி ஆகியன தலைக்கேறி, அதிகார வெறிக்காக, படுகொலை அரசியலை, தீ வைக்கும் அரசியலை, சாதிவெறி அரசியலைக் கையிலெடுத்து, அதையே கொள்கை முழக்கமாக்கி அதற்காகப் பக்கவாத்தியக் கோஷ்டிகளைச் சேர்க்க ஆரம்பித்தார் இராமதாஸ். அப்படி உருவான அமைப்பின் பெயர்தான் அனைத்து சமுதாயப் பேரியக்கம். ஊர் ஊராய் இந்த சாதிவெறி பக்கவாத்திய கோஷ்டிகளை அழைத்துச் சென்று தலித்துகளுக்கெதிரான பஜனைப் பாடல்களைப் பாடினார். அதன் விளைவுதான் மரக்காணம் கலவரம்.
வெளிப்படையாக சாதிவெறியைத் தூண்டி அதன் மூலம் எழும் கலவரத்தால், சாதிவெறியர்களை வாக்குகளாகத் திரட்டத் திட்டமிட்டதன் விளைவுதான் தலித்துகள் மீதான வெலைவெறித் தாக்குதலும் சொத்துக்கள் சூறையாடலும்.
இராமதாஸின் இந்த மலிவான அரசியலை ஜனநாயக முற்போக்கு சக்திகள் அடையாளம் கண்டு கண்டித்தன. அய்யா நல்லக்கண்ணு, ஜி.இராமகிருஷ்ணன், தா.பாண்டியன் போன்ற பொதுவுடைமைவாதிகளும், ஆசிரியர் வீரமணி, சுபவீ, கொளத்தூர் மணி, கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன் போன்ற பெரியாரியவாதிகளும், பெ.மணியரசன், தியாகு, மே 17 திருமுருகன் காந்தி போன்ற தமிழ்த் தேசியவாதிகளும், மனுஷ்யபுத்திரன், ஞானி, அ.மார்க்ஸ், அறிவுமதி, கனிமொழி, மறைந்த கவிஞர் வாலி, குட்டி ரேவதி, யுகபாரதி உள்ளிட்ட எழுத்தாளர்களும் கவிஞர்களும் வெளிப்படையாக இராமதாஸின் சாதிவெறிய அரசியலை அம்பலப்படுத்திக் கண்டித்தார்கள், எழுதினார்கள், போராடினார்கள்.
ஆனால், தமிழகத்தில் இதுகாறும் முற்போக்கு முகமூடி அணிந்து கொண்டு பேசிவந்த தமிழறிவு மணியன், மகஇக புரட்சிக்காரர்கள் போன்றவர்கள் பாம்புக்குத் தலையாகவும், மீனுக்கு வாலாகவும் இருந்து வருகின்றனர். இவர்கள் பகிரங்கமாக இராமதாஸின் சாதிவெறியை அம்பலப்படுத்துவதற்கும் கண்டிப்பதற்கும் பதிலாக,விடுதலைச் சிறுத்தைகளுக்கு இலவச அறிவுரைகளை வழங்கினார்கள். அத்துடன், இராமதாஸ் தலித்துகள் மீதும் சிறுத்தைகள் மீதும் என்ன அவதூறுகளைப் பரப்பினாரோ, அதே அவதூறுகளை அப்படியே பேசினார்கள்; எழுதினார்கள். இவர்களைவிட மோசமாக கள்ள மவுனம் சாதித்தவர்கள் தமிழ்த் தேசிய வேடதாரிகள். அயோத்திதாசப் பண்டிதர் மொழியில் சொல்வதென்றால் வேஷ பிராமணர்கள்.
தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் வெற்றிகரமாக இயங்கியதை வரவேற்ற தமிழறிஞர்கள் பலர், இராமதாசையும் இணைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். அந்த வகையில், தமிழறிஞர்களும் எழுத்தாளர்களும் ஓவியர்களும் ஒரு குழுவாக இராமதாசைச் சந்தித்து, தமிழ் மொழிக்காகவும், தமிழ் இனத்திற்காகவும் சிறுத்தைகளோடு இணைந்து செயல்படுங்கள் என்று கேட்டுக்கொண்டனர்.
அப்படித்தான் ஜி.கே.மணி கோ.க.மணியானார். ஏ.கே.மூர்த்தி அ.கி.மூர்த்தியானார். இராமதாஸ் இராமதாசு ஆனார். தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பலகட்டப் போராட்டங்கள் வெற்றிகரமாக நடந்தன. ஆனால், இதில் அரசியல் இலாபத்தோடுதான் இராமதாஸ் செயல்பட்டார் என்பதை பின்வந்த தேர்தல் காலங்களில் வெளிப்படுத்தினார். தருமபுரியில் அதை நிரூபித்தார். தமிழர் ஒற்றுமைக்கெதிராக தமிழர்களை சாதியின் பெயரால் வெறியூட்டி படுகொலை செய்யும் இராமதாஸின் பச்சை அயோக்கியத்தனத்தை தமிழ்த் தேசியம் பேசும் தமிழறிஞர்களும் கவிஞர்களும் ஓவியர்களும் துணிச்சலாகக் கண்டித்தார்களா?
தமிழுக்காக இராமதாஸ் பேசும்போது அய்யா என்றும், தமிழினப் போராளி என்றும் புளகாங்கிதம் அடைந்து பேசும் அதேவேளையில், தவறு செய்கிற போக்கினைக் கண்டிப்பதற்கும் துணிச்சல் வேண்டும். போர் வெறியோடு திரிந்த எத்தனையோ மன்னர்களை அறம் பாடி தமது எதிர்ப்பைத் தெரிவித்த தமிழ்ப் புலவர்களை சங்க இலக்கியங்களில் பார்த்திருக்கிறோம். அவர்களை தமிழறிஞர்களாக, கவிஞர்களாக தமிழகம் இன்னும் மதிக்கிறது. ஆனால், இங்கு தொன்மையான தமிழ் மொழி குறித்து அக்கறை கொள்பவர்கள், தொன்மையான தொல்குடிகளைப் பற்றி எவ்விதக் கவலையும் கொள்வதில்லை. சமூக மாற்றம் குறித்தும், அச்சமூகத்தின் விடுதலை குறித்தும் அக்கறையுடன் சிந்தனைகொள்பவர்களே உண்மையான அறிஞர்களாக இருக்க முடியும். ஆனால், இங்கு மொழி குறித்து கவலைகொள்பவர்கள் போலியாக, சந்தர்ப்பவாதிகளாகத்தான் இருக்கிறார்கள்.
சாதியத்தை விடமுடியாமல் பாவம் அவர்கள் தமிழர்வேடம் அணிந்து உலவுகிறார்கள். அப்படித்தான் தமிழ்த்தேசிய இயக்கவாதிகளும் வேடம் அணிந்து திரிகிறார்கள். புலி வேடம் போட்டவர்கள், மொழி வேடம் போட்டவர்கள், முற்போக்கு வேடம், புரட்சி வேடம் என்று வேஷம் கட்டி அலைகிறார்கள். அப்படி ஒரு வேடம் கட்டித் திரிகிற அய்யா பழ.நெடுமாறன் தமிழகத்தின் சாதியச் சிக்கல் குறித்து ஒருபோதும் கவலைகொண்டதாகத் தெரியவில்லை. தொடர்ந்து கொல்லப்பட்டுவரும் தொல்.தமிழர்களான தலித்துகள் குறித்து, அவருக்கு எவ்வித அக்கறையும் இருந்ததில்லை என்பதைத்தான் அவரது கடந்த கால அரசியல் இந்தத் தலைமுறைக்கு உணர்த்துகிறது. யார் சாதிவெறியர்களோ அவர்களைத் தமிழ்த் தேசியக் களத்தில் தமிழர் உணர்வாளர் என்கிற வேடம் அணியவைத்து அடையாளம் காட்டி வருகிறார். உதாரணம் ம.நடராசன்.
தருமபுரி மற்றும் மரக்காணத்தில் சாதிவெறியாட்டம் நடத்தியவர்களைக் கண்டித்து தமிழ்த் தேசியவாதிகளை ஒன்றுதிரட்டி இதுவரை போராட்டங்களை நடத்தியதில்லை. ஆனால், அத்தனைத் தமிழ்த் தேசியப் போராட்டங்களிலும் தலித்துகளின் பங்களிப்பை யாரும் மறுத்துவிட முடியாது.
விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தமிழ்த் தேசியக் களத்திற்கு வந்தபிறகுதான் தமிழ்த் தேசியப் போராட்டமே விரிவடைந்தது. முல்லைப் பெரியாறு உரிமை, காவிரி நீர் போன்ற தமிழகத்தின் ஆற்று நீர் உரிமை, நெய்வேலி மின்சாரம் மற்றும் அணுஉலை எதிர்ப்பு போன்ற தமிழர்களுக்கான அத்தனை உரிமைப் போராட்டங்களிலும், மற்ற தமிழ்த் தேசிய இயக்கங்களைவிடத் தீவிரமாக வெகுமக்களை அணிதிரட்டிப் போராடிய இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள். அப்படிப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் மீது அபாண்டக் குற்றச்சாட்டுகளை அள்ளித் தூவிய பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் அவர்களை வெளிப்படையாகக் கண்டித்து ஒதுக்காதவர்கள் எப்படி தமிழ்த் தேசியவாதிகளாகச் சொல்லிக் கொள்ள முடியும். தமிழ்த் தேசிய ஓர்மையைச் சிதைக்கும் கும்பலை அம்பலப்படுத்தாமல் கள்ள மவுனம் சாதிப்பவர்களும் சாதிவெறிக்குத் துணை போவதாகத்தானே அர்த்தம்.
இப்போது எல்லாம் முடிந்து ஓராண்டாகிவிட்டது. திரும்பிப் பார்த்தால் தமிழர் ஓர்மைக்கு யார் எதிரானவர்கள் என்று மக்கள் புரிந்துகொள்கிறார்கள். மூன்று சேரிகளும் எரிந்தன. தொடர்புடைய இளவரசன் கொல்லப்பட்டான். வெற்றிகரமாக அரங்கேற்றிய சாதிவெறியர்கள் வழக்கம்போல் அறிக்கைகள் விட்டுக்கொண்டு இன்னமும் அரசியல் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். தொலைக்காட்சிகளில் வெட்கமே இல்லாமல் விவாதம் என்கிற பெயரில் சாதியத்தைப் பிரச்சாரம் செய்கிறார்கள். தலித்துகளுடைய உரிமையை நசுக்கிச் சாகடித்துவிட்டு தமிழர் உரிமைக்காகக் கண்ணீர் வடிப்பதாக அறிக்கை விடுவது முரண்பாடில்லையா?
இதைக் கூட கண்டிக்காமல் கண்டும் காணாமல் இருக்கும் தமிழ்த்தேசியவாதிகளை, அச்சாதிவெறியர்களைவிடக் கொடூரமானவர்களாகத்தான் மக்கள் அடையாளம் காண்பார்கள்.
தமிழ்த் தேசிய விடுதலை என்பது சாதி, மத ஒழிப்புடன்கூடியதாகத்தான் இருக்க முடியும். சாதியத்தை மறுதலிப்பதாகத்தான் இருக்க முடியும். தமிழ்த் தேசியத்திற்கு நேரெதிரானது இந்தியத் தேசியம். இந்தியாவிலேயே இந்து, இந்தி, இந்தியாவைப் புறக்கணிக்கின்ற, எதிர்க்கிற ஒரே தேசியம் தமிழ்த் தேசியம். இந்துத்துவத்திற்கு எதிரான தேசியம் தமிழ்த் தேசியம்தான். ஆனால், தமிழ்த் தேசியவாதிகள் இந்துத்துவவாதிகளாக இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றனர். இல்லையென்றால், இந்துத்துவவாதிகளான பொன்.இராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி மகாலிங்கம், அர்ஜுன் சம்பத் போன்றவர்களோடு உறவு வைத்திருப்பார்களா?
இந்துத்துவத்தை உள்வாங்கிக் கொண்டதுதான் சாதியம். இந்துத்துவமும் சாதியமும் வேறு வேறல்ல. இவை குறித்துத்தான் புரட்சியாளர் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் வாழ்நாள் முழுக்க விவாதித்தார்கள், பிரச்சாரம் செய்தார்கள்.
படம் : தி இந்து 

அப்படி இந்துத்துவத்தை உள்வாங்கிக்கொண்ட டாக்டர் இராமதாஸ் பேசுகிற தமிழ்த்தேசியமும், பழ.நெடுமாறன் பேசுகிற தமிழ்த்தேசியமும் ஒரே நேர்க்கோட்டில் பயணிப்பதால்தான் இங்கே தமிழ்த்தேசியம் கேள்விக்குள்ளாகிறது. இராமதாஸ் தலித்துகளை ஊருக்கு வெளியே தள்ளி வைப்பதோடு, அரசியல் அதிகாரத்திலிருந்தும் புறக்கணிக்க விரும்புகிறார். நெடுமாறன் போன்ற தமிழ்த் தேசியவாதிகளோ முள்ளிவாய்க்கால் முற்றம் நிகழ்விலிருந்து தலித்துகளைப் புறக்கணிக்க விரும்புகிறார்கள். இருவரின் நோக்கமும் ஒடுக்கப்பட்ட மக்களைப் புறக்கணிப்பதுதான். பார்ப்பனியத்தின் இன்னொரு வடிவம்தான் புறக்கணிப்பு.
சமூகரீயாக நடைபெறும் புறக்கணிப்புகளுக்கு எதிராகத்தான் தந்தை பெரியாரும், புரட்சியாளர் அம்பேத்கரும் இந்துத்துவத்தின் கொடுங்கோன்மை என்று அம்பலப்படுத்தினார்கள். புறக்கணிப்பதும் தள்ளிவைப்பதும் நீண்டகாலமாகத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. வடிவத்தை மாற்றிக்கொண்டு புறக்கணிப்புகள் சேரிகளை முற்றுகையிடுகின்றன. பொதுக்குளத்திலே குளிக்கக் கூடாது, பொது வீதிகளில் நடக்கக் கூடாது, மேலாடை அணியக் கூடாது, முழங்காலுக்கு மேல்தான் ஆடை அணிய வேண்டும், பொது ஏலம் கேட்கக்கூடாது, ஊர் மந்தையில் உட்காரக் கூடாது, உனக்கும் ஊருக்கும் எந்தத் தொடர்பும் இருக்கக் கூடாது, ஊருக்கு வெளியே குடியமர்த்திக் கொள்ள வேண்டும், தேநீர்க் கடைகளுக்குக்கூட வரக்கூடாது.. இத்தனைத் தடைகளோடு முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கும் வரக்கூடாது.
ஊருக்காக அத்தனை வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு வேலை செய்தவனை கடைசியில் ஊருக்கு வெளியே போ என்று சொல்வதைப் போல, தமிழர் உரிமைக்கான அத்தனை களத்திலும் களமாடிய விடுதலைச் சிறுத்தைகளை முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு வரத் தகுதியில்லை என்று புறக்கணிப்பதும் பார்ப்பனியம்தான். இந்துத்துவம் எந்த வடிவத்திலும் ஒடுக்கிக்கொண்டேதான் இருக்கும்.. புறக்கணித்துக்கொண்டேதான் இருக்கும்.. இதனுடைய வெளிப்பாடுதான் இராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி அல்லது அனைத்து சமுதாயப் பேரியக்கம்.
புறக்கணிப்புகளையும் ஒடுக்குமுறைகளையும் உடைத்துக்கொண்டே எழுவதுதான் சிறுத்தைகளின் போர்க்குணம். அப்படி உடைக்கும் வகையில் நவம்பர் 7 சாதி எதிர்ப்பு அரசியல் நாளில் அனைவரும் உறுதியேற்போம்! போலித் தமிழ்த் தேசியவாதிகளை அடையாளம் காண்போம்!
சாதியத்தை வேரறுப்போம்! - தமிழ்த்
தேசியத்தை வென்றெடுப்போம்!

- வன்னிஅரசு ( vanni.viduthalai@gmail.com)