10 October 2014

குச்சிகொளுத்தி ராமதாசுக்கு வன்முறையைக் கண்டிக்க அருகதை உண்டா?

சாத்தான் வேதம் ஓதுகிறது அல்லது ஓர் ஓநாய் வன்முறைக்கு எதிராக அகிம்சை பேசுகிறது என்றால் யாராவது நம்புவார்களா? அப்படிப் பேசிக்கொண்டிருக்கிறது இராமதாசு என்கிற ஓநாய். தான் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியதிலிருந்து வழி நெடுக வன்முறையின்மூலமும் அநாகரிகத்தின் உச்சத்தின்மூலமும் தமிழக அரசியலை மோசமான பாதைக்கு நகர்த்திச் சென்ற மிகப் பெரிய வன்முறையாளர் பா.ம.க. இராமதாசு, இப்போது அமைதியைப் பற்றியும் சட்டம்-ஒழுங்கைப் பற்றியும் பேசுகிறார். நாகரிகத்தைப் பற்றிப் பேசுகிறார். இதெல்லாம் தமிழக அரசியலுக்கு நேர்ந்த அவலம். 


சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா வகையறாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது. இதனையொட்டி தமிழகம் முழுக்க அதிமுகவினரால் போராட்டங்களும் ஆங்காங்கே பேருந்து உடைப்புகளும் எரிப்புகளும் நடந்தேறின. இச்செயல்கள் ஏற்கக்கூடியவையல்ல. தொண்டர்களின் உணர்ச்சிப் பெருக்காலும், விசுவாசத்தைக் காட்டுவதற்காகவும் நடந்தேறிய செயல்கள். இவற்றை முன்வைத்துத்தான் பா.ம.க. இராமதாசு நாளொரு அறிக்கையின் மூலம் அதிமுகவை மிரட்டிக்கொண்டிருக்கிறார். வன்முறையின் ஒட்டுமொத்த உருவமான, அநாகரிகத்தின் மறு வடிவமான, பிற்போக்குத்தனத்தின் புதிய வடிவமான இராமதாசுக்கு வன்முறை குறித்தோ, அமைதி குறித்தோ பேசுவதற்கு எதாவது அருகதை உண்டா? அவருடைய கடந்த கால வன்முறை வெறியாட்டத்தின் பட்டியலைப் பார்த்தாலே அவரது யோக்கியதை புரியும்.

வன்னியர் சங்கத்தின் தலைவராகவும் செங்கல்வராயன் நாயக்கர் அறக்கட்டளையின் இயக்குநராகவும் இருந்தவர் ஏ.கே.நடராசன். பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களைக் கொண்ட இந்த அறக்கட்டளையைக் கைப்பற்ற முயன்றார் இராமதாஸ். தனது மகள் கவிதாவின் சின்ன மாமனாரும் (சம்பந்தி) முன்னாள் டி.ஜி.பி.யுமான ராஜ்மோகன் என்பவரை அறக்கட்டளையின் தலைவராக்கச் சதித் திட்டம் போட்டார். விளைவு, 1996ஆம் ஆண்டு ஏ.கே.நடராசன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. அவரை நையப் புடைத்து மாடியிலிருந்து தூக்கி எறிந்தனர். படுகாயம் அடைந்த ஏ.கே.நடராசன் மூன்று ஆண்டுகள் கோமாவில் இருந்தார். இந்த வழக்கில் பயன்படுத்தப்பட்ட கூலிப்படையினர் தப்பித்துக்கொள்ள, பொய் வழக்கில் அன்றைய பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி வேல்முருகனும், அவரது குடும்பத்தினரும் பலிகடா ஆக்கப்பட்டனர்.

பா.ம.க.வில் தனித்துவமாக வளர்ந்த பேராசிரியர் தீரனை 1998ஆம் ஆண்டு இராமதாசு நீக்கினார். நீக்கப்பட்ட தீரன் ‘தமிழ் பா.ம.க.’ என்கிற கட்சியை உருவாக்கி ஊர் ஊராய் இராமதாசின் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தினார். ஆத்திரமடைந்த இராமதாசு தமது கட்சியின் அப்பாவி இளைஞர்களைத் து£ண்டி விட்டதன் விளைவு, ஆண்டிமடத்திற்குப் போகும்போது இரும்புலிகுறிச்சி அருகே பேராசிரியர் தீரன் அவர்களின் காரை வழிமறித்து பெட்ரோல் குண்டுகளை வீசி கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலை முன்னின்று நடத்திய இரும்புலிகுறிச்சியின் பா.ம.க. பொறுப்பாளர் தமிழ்ஒளி வழக்குச் செலவுக்காக தைலாபுரம் தோட்டத்திற்கு அலைந்ததுதான் மிச்சம். நாயை விரட்டுவதுபோல் விரட்டியடித்தனர் இராமதாசு குடும்பத்தினர். “இராமதாசு என்னை நயவஞ்சகமாகத் து£ண்டிவிட்டார். அதற்கு நான் பலிகடா ஆகிவிட்டேன்” என்று பின்னாளில் பேராசிரியர் தீரனிடமே உதவி வேண்டி நின்றார் தமிழ் ஒளி.

1999ஆம் ஆண்டு வாழப்பாடி இராமமூர்த்தி அவர்கள் வன்னியர் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி வன்னிய மக்களுக்காகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்தார். இதனைப் பொறுத்துக்கொள்ளாத இராமதாசு அப்பாவி இளைஞர்களைத் தூண்டிவிட்டு விழுப்புரம் அருகே வாழப்பாடி இராமமூர்த்தியின் காரை வழிமறித்துத் தாக்குதல் நடத்தினார்கள். இதில் வாழப்பாடியார் தப்பித்தாலும் பலர் காயமடைந்தார்கள். ஆனாலும் வாழப்பாடி இராமமூர்த்தியின் மீதான வன்முறைத் தாக்குதல் அவர் மறையும் வரை நின்றபாடில்லை.

வன்னியர் சங்கத்தை உருவாக்கியதோடு, பா.ம.க. என்கிற அரசியல் கட்சியையும் உருவாக்க உறுதுணையாய் இருந்த பு.த.அருள்மொழி, பு.த.இளங்கோவன் ஆகியோர் மீது கொலைவெறித் தாக்குதல்..

பா.ம.க.விலிருந்து பண்ருட்டி இராமச்சந்திரன் விலகியவுடன் அவரது அசோக் நகர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு..

முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீரவன்னியர் பேரவை நடத்திக்கொண்டிருக்கும்போது அப்பேரவையைக் கலைக்கும்படி மிரட்டினார் இராமதாசு. அதற்கு அஞ்சாத ஜெகத்ரட்சகன் தொடர்ந்து வன்னியர் பேரவை நடத்தி வந்தபோது ஜெகத்ரட்சகனின் சம்மந்தி டெல்டா நாராயணசாமியை குடும்பத்துடன் கடத்திக்கொண்டுபோய் மிரட்டியதன் விளைவாக வீரவன்னியர் பேரவை கலைக்கப்பட்டு அவரும் திமுகவில் போய்ச் சேர்ந்தார்.

இப்படி வன்முறை வெறியாட்டத்தின் மூலம் அரசியலைத் தொடர்ந்த இராமதாசு கொலைவெறியாட்டத்தையும் நிகழ்த்தியுள்ளார்.

பா.ம.க.விலிருந்து விலகிய பண்ருட்டி இராமச்சந்திரன் ‘மக்கள் நல உரிமைக் கழகம்’ ஒன்றைத் தொடங்கினார். பா.ம.க.விலிருந்து விலகி பலர் பண்ருட்டியாரின் கழகத்தில் இணைந்தனர். அப்படி இணைந்த கரவொலி கதிரவன் என்பவர் மிகத் தீவிரமாக இராமதாசின் சுயநல வெறியை மேடைகளிலும் துண்டறிக்கைகள் மூலமும் அம்பலப்படுத்தினார். மக்கள் நல உரிமைக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளராக சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்த கரவொலி கதிரவன் திடீரென லாரி ஏற்றிக் கொல்லப்பட்டார். இராமதாசின் இயக்கத்தால் நடைபெற்ற இந்தக் கொலையை, பின்னாளில் விபத்து என்று வழக்கை முடித்தார்கள்.

அதிமுகவில் முன்னாள் அமைச்சராக இருந்த சி.வி.சண்முகம் திண்டிவனம் பகுதியில் இராமதாசு குடும்பத்தினருக்குப் பெரும் சவாலாயிருந்தார். இதைப் பொறுக்க முடியாத இராமதாசு சி.வி.சண்முகத்தைக் கொலை செய்ய பா.ம.க.வின் அப்பாவி இளைஞர்களைத் தூண்டிவிட்டார். இராமதாசின் நயவஞ்சகத்தைப் புரிந்துகொண்ட இளைஞர்கள் யாரும் இதற்கு உடன்படவில்லை. ஆனாலும் கொலைவெறி தலைக்கேறிய இராமதாசு தனது மனைவி சரஸ்வதியின் சகோதரர் இராமச்சந்திரனின் இளைய மகன் ரகுவை (புதுச்சேரி அனந்தராமனின் தம்பி) கொம்பு சீவிவிட்டார். “கட்சியில் உனக்குப் பெரிய இடம் இருக்கு. முக்கியப் பொறுப்புக்கு வரப்போகிறாய்” என்றெல்லாம் ஆசை வார்த்தை காட்டவே ரகு தயாரானார். 2006ஆம் ஆண்டு திண்டிவனத்தில் சி.வி. சண்முகம் அலுவலகத்துக்குள்ளேயே கொலைவெறியுடன் கும்பல் ஒன்று புகுந்தது. சண்முகம் எங்கே என்று அரிவாளுடன் தேடியபோது, சண்முகத்தின் உதவியாளர் முருகானந்தம் அவர்களைத் தடுக்க அக்கொலைவெறிக் கும்பல் முருகானந்தத்தை வெட்டிக் கொன்றுவிட்டு சண்முகத்தைத் தேடியது. சண்முகம் தப்பித்து ஓடிவிட்டார். இருந்திருந்தால் அவரும் கொல்லப்பட்டிருப்பார். முருகானந்தம் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக இராமதாசு இரண்டாவது குற்றவாளியாக அன்புமணி, மூன்றாவது குற்றவாளியாக சரஸ்வதி, நான்காவது குற்றவாளியாக இராமதாசின் தம்பி சீனிவாச கவுண்டர் என்று இராமதாசின் குடும்பத்தினர் பதினொரு பேர் குற்றவாளிகளாக சட்டத்தின் முன் நின்றார்கள்.

இவ்வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றுவந்த ரகு அடிக்கடி தைலாபுரம் சென்று, “நீங்கபாட்டுக்கு கொலை செய்யச் சொல்லிட்டுப் போயிட்டீங்க... யாரு கோர்ட்டுக்கு செலவு பண்ணுவாங்க? என்று செலவுக்கான தொகையைக் கேட்க ஆரம்பித்தார். “அதெல்லாம் இல்ல... வெளிய போடா..” என்று இராமதாசும் அவரது மனைவியும் விரட்டியடிக்க “அப்படியென்றால் நான் அப்ரூவராக மாறி போலீசில் எல்லா உண்மையையும் சொல்வேன்” என்று ரகு சொன்னதும் பயந்துபோன இராமதாசு அப்போதைக்கு பேசி ரகுவை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். ஓரிரு நாளில் ரகு தர்பூசணித் தோட்டத்தில் இரவில் காவல் காத்துக்கொண்டிருந்தபோது கைத் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். காவல்துறையின் கருணையால், வழக்கம்போல் தற்கொலை வழக்காக முடித்தனர்.

பா.ம.க.வில் இளைஞர்களின் ஆதரவைப் பெருமளவில் பெற்று தனித்துவமாக வளர்ந்துவந்த பண்ருட்டி வேல்முருகனின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் பொறுமிக் கொண்டிருந்தார் இராமதாசு. 2011 தேர்தலில் பா.ம.க. படுதோல்வியைச் சந்தித்த பின் வேல்முருகன் அவர்களை கட்சியை விட்டு நீக்கினார். வேல்முருகனும் ஞாயம் கேட்டு ஊர் ஊராய் இளைஞர்களை அணிதிரட்டினார். இளைஞர்களும் பெருமளவில் வேல்முருகன் அவர்களின் பின்னால் திரண்டனர். இதனால் ஆத்திரமடைந்த இராமதாசு வழக்கம்போல் தனது கொலைவெறித் திட்டத்தைச் செயல்படுத்த ஆரம்பித்தார். திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக காடுவெட்டி அருகே போய்க்கொண்டிருந்தபோது காடுவெட்டி குருவின் ரவுடிக் கும்பல் வேல்முருகன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. இதில் பலர் காயமடைந்தனர்.

இப்படி ஒரு ரவுடியைப் போல கொலைகளையும் கொலை முயற்சிகளையும் இராமதாசு நடத்தியது வேறு இனத்தவர் மீதல்ல. எந்தச் சமூகத்திற்கு உழைப்பதாகச் சொல்லி கட்சியைத் தொடங்கினாரோ, அந்த சொந்த வன்னிய சமூகத்தினர் மீதுதான் இவ்வளவு கொலைவெறியாட்டத்தையும் நடத்தினார். பா.ம.க.வின் மாணவரணியின் பொறுப்பாளராக இருந்த அறிவுச்செல்வன் கார் விபத்தில் இறந்ததாக செய்திகள் வந்தன. இது விபத்தல்ல, கொலைதான் என்று அறிவுச்செல்வனின் தந்தை சொன்னதோடு இராமதாசுக்கு எதிராக 16 கேள்விகளை எழுப்பினார். அந்தக் கேள்விகள் ஒட்டுமொத்த வன்னிய மக்களின் மனசாட்சியாய் இராமதாசின் முன் நிற்கின்றன.
சொந்த மக்களையே தன்னுடைய குடும்ப வளர்ச்சிக்காகப் பலி கொடுத்துவரும் இராமதாசு அப்பாவி தலித் மக்களை மட்டும் சும்மா விட்டுவிடுவாரா?

தலித்துகளின் தலைநிமிர்வுக்காகக் களமாடிவரும் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மீது பல முறை, பல்வேறு இடங்களில் கொலைவெறித் தாக்குதலை நடத்தினார் இராமதாசு. அத்தாக்குதலையெல்லாம் சிறுத்தைகள் முறியடித்தன. ஆனாலும் எத்தனையோ தலித் இளைஞர்கள் இராமதாசின் சாதிவெறியால் கொல்லப்பட்டனர். தர்மபுரி சேரி மட்டுமல்ல பெரம்பலூர், ஒகளூர் சேரி மட்டுமல்ல வட மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட சேரிகள் தீக்கிரையாக்கப்பட்டன.

மரக்காணம் கலவரம் 
காதல் நாடகம், சாதி கவுரவம் என்று தலித்துகளுக்கு எதிராகப் பல சாதிகளை ஒருங்கிணைத்து தமிழகம் முழுக்க வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டார். காதலித்துத் திருமணம் செய்துகொண்டு தனது காதல் மனைவியோடு வாழ்ந்த இளவரசனையும் திவ்யாவையும் பிரித்ததோடு இளவரசனைக் கொலை செய்துவிட்டு தனது சாதிய தாகத்தைத் தீர்த்துக் கொண்டார்.

இவையெல்லாம் இராமதாசின் கொலைவெறி, வன்முறை அரசியலுக்கு எடுத்துக்காட்டுகள். (தலித்துகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்துச் சொல்வதென்றால் அதற்குத் தனியாக ஒரு புத்தகமே போடலாம்)

தி.மு.க. தலைவர் கலைஞருக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு செய்தியாளரிடம் பேசிய இராமதாசு, “கலைஞர் அரசியல் நாகரிகத்தைக் கடைப்பிடிப்பவர், அந்த நாகரிகம் பாராட்டுக்குரியது” என்று சொன்னார். கலைஞர் நாகரிகமானவர்தான். ஆனால் இராமதாசு நாகரிகமானவரா? தருமபுரி கலவரத்திற்குப் பிறகு அவர் பேசிய பேச்சுக்களை இப்பவும் ‘யூ டியூப்’பில் பார்க்கலாம் அவரது நாகரிகத்தின் லட்சணத்தை (இணைக்கப்பட்டுள்ளது: குச்சிகொளுத்தி ராமதாசின் சாதி வெறி பேச்சு & காடுவெட்டி குருவின் சாதி வெறி பேச்சு). ஆசிரியர் கி.வீரமணி, ஜி.ராமகிருஷ்ணன், சுப.வீரபாண்டியன், கொளத்தூர் மணி மற்றும் எழுத்தாளர்கள் கவிஞர்கள் பலரை அவன், இவன் என்று ஒருமையில் பேசியதும், முதுபெரும் அரசியல்வாதியான, கலைஞரை மேளம் அடிக்கிற பயல், சாதிகெட்ட பயல், அவன் கூட இருந்தால் கட்டியிருக்கிற வேட்டியக்கூட உருவிடுவான் என்று பேசியதும்தான் நாகரிக அரசியல் பண்பாடா?


பா.ம.க. தொடங்கியதிலிருந்து இராமதாசின் பேச்சுக்களையும் நடவடிக்கைகளையும் பார்த்தால், முன்னுக்குப்பின் முரணாகவும் வேடிக்கையாகவும் இருக்கும். தனது குடும்பத்திலிருந்து மகனோ வேறு யாருமோ அரசியலுக்கு வரவே மாட்டார்கள் என்று சத்தியம் செய்த இராமதாசுதான் இப்போது அதே அன்பு புத்திரனுக்காகக் கேவலமான அரசியல் செய்து வருகிறார். திராவிடக் கட்சிகளோடும் தேசியக் கட்சிகளோடும் கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டு வெட்கமே இல்லாமல் அவர்களின் கூட்டணிக்காக நாக்குத் தொங்க அலைகிற நாயாக மாறிவருவது அரசியல் நாகரிகமா?

பேசுகிற இடங்களிலெல்லாம் வன்முறையைத் தூண்டி விடுவதும், தமிழர்களாய் ஒருங்கிணைந்து தமிழ்த் தேசிய அடையாளத்தை மீட்க வேண்டிய வன்னிய சமூகத்திற்கு சாதிவெறி ஊட்டி தவறாக வழிகாட்டுவதுதான் நாகரிகமா? சொந்தச் சமூகத்தை நாகரிக உலகத்திற்கு அழைத்துச் செல்லாமல் கற்காலத்துக்கு அழைத்துச் செல்வதுதான் வழிகாட்டும் அரசியல் தலைவரின் நாகரிகமா?

வன்னிய மக்களுக்காகப் பாடுபடுவதாகச் சொல்லும் இராமதாசு அந்த மக்களுக்குச் செய்தது என்ன என்று அவரது மனசாட்சியைக் கேட்டாலே தெரியும். அவர் அரசியலில் நுழைந்த காலத்தில் ‘டி.எஸ்.இ. 1819’ என்கிற ஓட்டை அம்பாசிடர் காரில்தான் சுற்றினார். இன்றைக்கு அவரது நிலை என்ன? மனைவி, மகன், மகள், பேரன், பேத்தி என ஒவ்வொருவருக்கும் பல கோடி மதிப்புள்ள சொகுசுக் கார்கள். ஒன்றரை ஏக்கர் நிலத்தை வைத்திருந்த இராமதாசுக்கு இன்றைக்கு 1000 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட தைலாபுரம் பண்ணை; ஏற்காட்டிலும் ஏலகிரியிலும் 1000 ஏக்கர் பரப்பளவில் எஸ்டேட்டுகள்; திண்டிவனம், விழுப்புரம் பகுதிகளில் மட்டும் 10க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள், கேஸ் ஏஜென்சிகள், கோடம்பாக்கத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நடிகை விஜயசாந்தியின் வீட்டை விலைக்கு வாங்கி மூத்த மகள் காந்திக்குக் கொடுத்தது, ஆழ்வார்பேட்டையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களாவை வாங்கி இளைய மகள் கவிதாவுக்குக் கொடுத்தது, கிழக்குக் கடற்கரைச் சாலையில் பங்களாக்கள் என்று சொத்துக்களைக் குவித்துள்ள இராமதாசு தன் சொந்த சாதி மக்களின் கண்ணீரைத் துடைத்திருக்கிறாரா? பசியைத் தீர்த்திருக்கிறாரா? (பார்க்க- ஆலம்பாடி மக்களின் அழுகுரல்: தூய்மைவாதமும், சாதியவாதமும் பதில் கூறுமா?) வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களைக் குவித்துள்ள இராமதாசு ஜெயலலிதாவின் வழக்குகளைப் பேசுவது காமெடியாக இருக்கிறது.

ஜெயலலிதாவின் கைதை ஒட்டி அதிமுகவினர் ஆங்காங்கே செய்துவரும் வன்முறைகளை ஒப்பீட்டளவில் பார்த்தால் சாதாரணம்தான். மாமல்லபுரத்தில் ஜெயலலிதாவை விமர்சனம் செய்து பேசிய பிறகு இராமதாசு கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அதையொட்டி நடந்த வன்முறைகளோடு, வெடிகுண்டு வீச்சுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அதிமுகவினரின் போராட்டங்கள் மிகமிகச் சாதாரணம்.


ஆக, எப்படிப் பார்த்தாலும் தமிழக அரசியலில் நாகரிகம் குறித்தோ, வன்முறை குறித்தோ, சொத்துக் குவிப்பு தொடர்பாகவோ பேசுவதற்கு இராமதாசுக்கு எந்த அருகதையும் இல்லை. இன்றைக்கு ஜெயலலிதாவுக்கு எதிராக இராமதாசு பேசி வருவது திருச்சி சிறையில் அடைத்ததால் உள்ள வெறுப்புணர்ச்சியாலும் பழிவாங்கும் உணர்ச்சியாலுமே தவிர வேறல்ல.

விஜயகாந்த், ஜி.ராமகிருஷ்ணன் போன்ற தலைவர்கள் அதிமுகவினரைக் கண்டிப்பதற்கு ஒரு ஜனநாயக உரிமை உண்டு; கடமையும் உண்டு. ஆனால் இராமதாசுக்குத் தெரிந்ததெல்லாம் வன்முறைதானே. அப்படிப்பட்ட வன்முறையாளருக்கு அதிமுகவினரையோ ஜெயலலிதாவையோ கண்டிக்க எந்த அருகதையும் இல்லை. தமிழகத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டிய தீய சக்தி இராமதாசுதான். இதை கலைஞர் உட்பட அனைவரும் புரிந்துகொண்டு எச்சரிக்கையாய் இருப்பது எதிர்காலத் தமிழ்நாட்டிற்கு நல்லது.

08 October 2014

ஆலம்பாடி மக்களின் அழுகுரல்: தூய்மைவாதமும், சாதியவாதமும் பதில் கூறுமா?

தூய்மை இந்தியா என்கிற பெயரில் இந்தியாவை தூய்மைப்படுத்தப் போவதாக பிரதமர் மோடி அறிவித்தாலும் அறிவித்தார். நடிகர்கள் கமல், சூர்யா, சல்மான்கான் உட்படப் பலர் துடைப்பமும் கையுமாக அலைகிறார்கள். இந்தியாவில் இப்போது ஒரே பிரச்சனை தூய்மை இல்லாததுதான். வறுமை ஒரு பிரச்சனை இல்லை; சாதி ஒரு பிரச்சனையில்லை; அணு உலைகளால் ஏற்படும் பாதிப்புகள் பிரச்சனை இல்லை; பட்டினிச் சாவுகள் ஒரு பிரச்சனை இல்லை; மனிதன் மலத்தை மனிதனே அள்ளும் அவலம்கூட ஒரு பிரச்சனை இல்லை. இப்போதைக்கு மோடிக்கு ஏற்பட்டுள்ள தலையாய பிரச்சனை இந்தியா சுத்தமாக இருக்க வேண்டும் என்பதுதான். 80 விழுக்காடு கிராமங்களைக் கொண்ட இந்தியாவில், எத்தனையோ கிராமங்கள் இன்னும் கழிப்பறைகளைப் பார்த்தில்லை. காடுகளிலும் மலைகளிலும்தான் தங்கள் காலைக் கடன்களைக் கழிக்கிறார்கள். எத்தனையோ கிராமங்களில் இன்னமும் மின்சாரமே நுழையவில்லை. அப்படிப்பட்ட ஒரு கிராமத்திற்குள்தான் நாம் நுழைந்தோம். 


ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியைப் பார்த்து மகிழும் மக்கள் கூட்டம் ஒரு புறம் அலைமோதுகிறது. போகிற வழியெங்கும் டாஸ்மாக் மனிதர்களின் கூட்டம் குடியும் கூத்துமாய் தள்ளாடுகிறது. நீழ்வீழ்ச்சியில் தள்ளாடும் பரிசல்களில் பயணமானோம். தகடூர் தமிழ்ச்செல்வன், வழக்கறிஞர் ஜூலியஸ், ஜோஸ்வா ஐசக், கருப்பன், சேலம் அர்ஜூனன் ஆகியோரைக் கொண்ட குழுவுடன் ஒகேனக்கலின் அக்கரையில் பரிசலிலிருந்து இறங்கினோம். 

                               
கர்நாடக எல்லைக்குட்பட்ட அந்த கிராமத்தின் பெயர் ஆலம்பாடி. ஒகேனக்கல் பகுதியிலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் அக்கிராமத்தை நோக்கி ஷேர் ஆட்டோவில் பயணமானோம். பாதையை மக்களே உருவாக்கியிருக்கிறார்கள். வெறும் பாறைகளும் செம்மண் புழுதியும்தான் வரவேற்றது. அடர்ந்த அந்த காட்டுப் பகுதிக்குள் ஆங்காங்கே ஆடுகளும் மாடுகளும் மேய்ந்துகொண்டிருந்தன. மனிதர்கள் குறைவுதான். பறவைகளின் கீச்சுச் சத்தங்களும் நீர்வீழ்ச்சியின் இசைச் சாரலும் இதமாக இருந்தன. தக்காளிச் செடிகளும், மிளகாய்ச் செடிகளும் காய்களைச் சுமந்துகொண்டே வயல்வெளியைப் பசுமையாக்கிக் கொண்டிருந்தன. புளிய மரங்களும், மூஞ்சை மரங்களும் காற்றை அள்ளி வீசிக் கொண்டிருந்தன.

மேடு பள்ளங்களில் முதுகு வலியோடு ஆட்டோவில் பயணமானாலும் இவற்றையெல்லாம் ரசிக்க ரசிக்க வலியெல்லாம் போயே போய்விட்டன.

“இதுதாங்க எங்க ஆலம்பாடி” என்றார் எதிர்ப்பட்ட ஒருவர்.

“என்னங்க இங்க கொஞ்சம் வீடுதான் இருக்கு!” என்று கேட்டபோது,

“இது காலனிக்காரங்க வீடு” என்று சொன்னார்.

விசாரித்த பிறகுதான் தெரிந்தது அவர்கள் பழங்குடியினத்தைச் சேர்ந்த சோளகர்கள். ஆலம்பாடி கிராமத்தினருக்கும் சோளகர்களுக்கும் எந்த ஒட்டும் இல்லை; உறவும் இல்லை.

ஆலம்பாடி கிராமத்திற்குள் நுழைந்தபோது ஒரு கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கிடந்த 80 வயது பெரியவரைச் சந்தித்தபோதுதான், பல செய்திகளைச் சொன்னார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக இதே கிராமத்தில்தான் வசித்து வருகிறார் அந்தப் பெரியவர்.


இப்போதுள்ள பிரச்சனை அந்த கிராமத்திலிருந்து எல்லோரையும் அப்புறப்படுத்த முயற்சிக்கிறது கர்நாடக வனத் துறை. 100 வீடுகளையும் 300 ஆட்களையும் கொண்ட அந்த ஊரில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. பாம்போ, பூச்சியோ கடித்தால்கூட பரிசலில் வந்து பென்னாகரம்தான் போக வேண்டும் அல்லது மேச்சேரி செல்ல வேண்டும். மருத்துவமனை இல்லை. ஒரே ஒரு பள்ளி உண்டு. அதுவும் கன்னடப் பள்ளி. 10 நாட்களுக்கு ஒருமுறைதான் ஆசிரியர் வருவார். இதுதான் கல்வியின் நிலை. அப்படியென்றால் படிக்கின்ற மாணவர்களின் நிலை எப்படி என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

இத்தனையிலும் கொடுமை அந்த ஊரில் மின்சாரமே இல்லை என்பதுதான். மொத்த வீடுகளுக்கும் சேர்த்து ஆங்காங்கே மூன்று சோலார் கம்பங்கள்தான் நிற்கின்றன. இதிலிருந்துதான் வருவதுதான் இரவு விளக்கு வெளிச்சம். பெரும்பாலான வீடுகளில் மண்ணெண்ணெய் விளக்குகள்தான். இருக்கின்ற மூன்று தெரு விளக்குகள் இரவில் எப்போது வேண்டுமானாலும் அணையலாம். இப்படி போசமான நிலையில் உள்ள அந்த கிராமத்தில் கன்னடர்களும் சிலர் இருக்கிறார்கள். தமிழர்கள் பெருவாரியாக வசிக்கின்ற அக்கிராமத்தில் கன்னடர்களுக்கு மட்டும்தான் வீடு பட்டா போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். தமிழர்களுக்கு இல்லை. கடந்த 5 ஆண்டுகளாகவே ஆலம்பாடியை அப்புறப்படுத்த முயற்சிக்கிறது கர்நாடக அரசு. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் புலிகள் சரணாலயம்தான்.


ஒகேனக்கலுக்கு அப்படியே பின்னால் புலிகள் சரணாலயம் ஒன்றை அமைத்து அதற்கான பணிகளையும் செய்துகொண்டிருக்கிறது கர்நாடக அரசு. இதற்கு இடையூறாக இருக்கும் ஒரே கிராமம் இந்த ஆலம்பாடிதான். அதனால்தான் இக்கிராமத்தினர் யாரும் ஆடு, மாடுகளை வளர்க்கக் கூடாது என்று கர்நாடக அரசு அங்குள்ள மக்களுக்கு நோட்டீசு வழங்கியிருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அக்கிராமத்தில் உள்ளவர்களை அப்புறப்படுத்தும் பணியையும் தொடங்கிவிட்டதாக அப்பெரியவர் அச்சப்பட ஆரம்பித்தார்.

“தம்பி இந்த மண்ணுலதான் எல்லாத்தையும் பார்த்தேன்... இங்கேயே சாக வேண்டியதுதான். ஆனால், இந்த மண்ண விட்டு எங்கேயும் போக மாட்டோம்” இப்படித்தான் அங்குள்ள அனைவரும் கூறுகிறார்கள்.


கர்நாடக மாநிலம் கொள்ளேகால் மாவட்டத்தைச் சேர்ந்த ஆலம்பாடி கிராமம் இப்போது வரைபடத்திலிருந்து காணாமல் போவதற்கான வாய்ப்புகள்தான் அதிகமாய் உள்ளன. போன நாங்கள், “உங்களுக்காகப் போராட விடுதலைச் சிறுத்தைகளும் திராவிடர் கழகமும் (வழக்கறிஞர் ஜூலியஸ் திராவிடர் கழகத்தின் பொறுப்பாளர்) துணை நிற்போம்” என்று நம்பிக்கை ஊட்டினோம். நல்ல பசி. அங்கிருந்த பெண்களிடம் ஏதேனும் கஞ்சி அல்லது கூழ் இருக்கிறதா என்று கேட்டுப் பார்த்தோம். பாவம் வேலை முடிந்து காடு கழனிகளில் கிடைப்பதைத்தான் அன்றாட உணவாகச் சாப்பிடுகிறார்கள். உணவுக்காக மாலை வரை காத்திருக்கச் சொன்னார்கள்.

கிளம்பும்போது ஒருவர், “தம்பி நாங்க படையாச்சிங்கதான். ஆனா எங்க நிலைமையைப் பாருங்கள்..” என்று கண்ணீரோடு சொன்னார்.


தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சாதி கவுரம் என்று பேசி அந்த கவுரவத்தைக் காப்பாற்ற கலவரங்களையும் கொலைகளையும் செய்யத் தூண்டிவிடும் மருத்துவர் இராமதாசுக்குத் தெரியுமா இப்படி ஒரு வாழ்நிலையில் படையாச்சிகள் இருப்பது? இச்சமூகத்தின் விடுதலைக்கும் சேர்த்துக் குரல் கொடுப்பதுதான் மனிதநேயம். சாதி பார்த்துக் குரல் கொடுப்பது ஏமாற்று வேலையாகும். வன்னியர்களின் விடுதலைக்கும் சேர்த்துத்தான் விடுதலைச் சிறுத்தைகள் களமாடும் என்கிற உறுதியோடு ஆலம்பாடியைவிட்டு வெளியேறினோம்.


நீர் வீழ்ச்சியின் சத்தமும் பரிசல்காரர்களோடு பயணிக்கும் அந்தப் பறவைகளின் இசையும் இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. பாவம் அக்கரை ஆலம்பாடி மக்களின் அழுகுரல்கள் இந்த நீர்வீழ்ச்சிச் சத்தங்களில் கரைந்து போகின்றன. 

சாதி கவுரவத்தைப் பேசுவோரும் தூய்மையைப் பேசுவோரும் ஆலம்பாடி கிராமம் போன்று ஆயிரக் கணக்கான கிராமங்கள் இந்தியாவைக் கேள்வியெழுப்பிக் கொண்டிருக்கின்றன. இந்தக் கேள்விகளுக்கு தூய்மை வாதமும், சாதியவாதமும் பதில் கூறுமா?

30 September 2014

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு - செவப்பா இருக்கிறவங்க ஊழல் செய்ய மாட்டாங்களா?

'ஸ்நேக் பாபு' வடிவேலு நகைச்சுவைக் காட்சிபோல் தமிழக அரசியல் சிரிப்பாய்ச் சிரிக்கிறது.  ஒரு திரைப்படத்தில் அரசியல்வாதியாய் வரும் வடிவேலுவிடம் கையொப்பம் கேட்கும் கதாநாயகன் மாதவனிடம் லஞ்சம் கேட்பார்.  மாதவனோ லஞ்சத்தைக் கொடுக்க மறுத்து, இலவசமாய் கொடுக்க வேண்டிய வேட்டி சேலையை வடிவேலு பதுக்கிவிட்டார் என்று பொதுமக்களிடம் போட்டுவிடுவார்.  பொதுமக்களோ கோபத்துடன் வடிவேலுவை நையப் புடைக்க ஆரம்பிப்பார்கள்.  அப்போது ஒருவர், "டேய் செவப்பா இருக்கிறங்க பொய் சொல்ல மாட்டங்கடா" என்று சொல்லிக்கொண்டே அடிப்பார்.  

அதுபோல செவப்பாய் இருக்கும் ஜெயலலிதா ஊழல் செய்திருக்க மாட்டார் என்று அந்தக் காமெடியை உண்மையாக்க முயற்சித்து வருகின்றது ஒரு கூட்டம்.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், 27-9-2014 அன்று 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது சிறப்பு நீதிமன்றம்.  சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 10 கோடி ரூபாய் அபராதத்துடன் கூடிய 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை.  கடந்த 18 ஆண்டுகளாக வாய்தா வாய்தா என்று இழுத்தடித்து ஒரு வழியாக இப்போதுதான் தீர்ப்பு வந்திருக்கிறது.  சட்டத்தின் முன் யாவரும் சமம் என்பதுதான் நமக்குச் சொல்லித் தரப்பட்டிருக்கிறது.  


தீர்ப்பை எதிர்த்து மேல் நீதிமன்றங்களில் தங்கள் தரப்பு ஆதாரங்களை அல்லது வாதங்களைக் கொடுத்து வழக்கிலிருந்து விடுவித்துக்கொள்ள ஜெயலலிதாவுக்கு நிறைய வாய்ப்புகளும் சனநாயக உரிமையும் உள்ளது.  
ஆனால், அந்த சனநாயகத்தின் மீது நம்பிக்கை கொள்ளாமல் தமிழகம் முழுக்க அதிமுகவினரைக் கொண்டு வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டுவிட்டு சிறை சென்றிருக்கிறார் ஜெயலலிதா.  இத்தகைய வன்முறையின் மூலம் சட்டத்தைக் கையிலெடுத்து நீதியை அடி பணிய வைக்க முயற்சித்துள்ளார் ஜெயலலிதா.  தமிழகம் முழுக்க அம்மாவின் தொண்டரடியார்கள் பேருந்துகளை எரிப்பது, உடைப்பது, கடைகளை அடித்து நொறுக்குவது என்று 27ந் தேதியை தொடங்கிவிட்டார்கள்.  தமிழகம் முழுக்க இத்தகைய வன்முறை வெறியாட்டம் நின்றபாடில்லை. எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் உண்ணாவிரதம், பேரணிகள், கருப்புச்சட்டை அணிந்து போராட்டம், ரயில் மறியல் போராட்டம் என தமிழகம் முழுக்க அதிமுகவினர் ஜெயலலிதா மீதான விசுவாசத்தைக் காட்ட போட்டி போட்டுக்கொண்டு கலவரம் செய்துகொண்டிருக்கின்றனர்.  

இந்தப் போட்டியில் மைய அரசின் முன்னாள் சட்ட அமைச்சர் ராம்ஜெத்மலானியும் இறங்கிவிட்டார்.  'நீதியரசர் ஜான் மைக்கேல் அளித்தது தீர்ப்பே அல்ல; அது அரசியல் வெறுப்புணர்ச்சி' என்று கொதித்து, லண்டன் விமானத்திலிருந்து குதித்து பெங்களூரு வந்தே விட்டார்.  


இவர்களுடன் சினிமாக்காரர்களும் தங்கள் விசுவாசத்தைகக் காட்டுவதற்கு நல்ல வாய்ப்பு என்று உண்ணாவிரதத்தில் (30-9-2014) உட்கார்ந்துவிட்டார்கள்.  ஊழல் செய்தார் என்பதற்காகத்தான் ஜெயலலிதாவுக்குத் தண்டனை தரப்பட்டுள்ளது.  காவிரி நீர் உரிமை கோரியதாலோ, அல்லது முல்லைப் பெரியாறு உரிமை கோரியதாலோ ஜெயலலிதாவுக்குத் தண்டனை விதிக்கப்படவில்லை.  
ஆனால், தமிழ்நாட்டு உரிமைக்காக ஜெயலலிதா சிறைக்குச் சென்றதுபோல் சினிமாக்காரர்கள் சேப்பாக்கத்தில் உண்ணாவிரதத்தில் உட்கார்ந்துவிட்டார்கள்.  

நடிகர் விஜய் கடந்த 2011 ஆகஸ்ட் மாதம் புதுதில்லியில் ஊழலுக்கு எதிராக அன்னாஅசாரே உண்ணாவிரதம் இருந்தபோது மேடைக்கே சென்று வாழ்த்தினார்.. பாராட்டினார்.  பாராட்டியது மட்டுமல்லாமல் இந்தியாவில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும்.  அதற்காக இயக்கம் எடுக்கும் அன்னா அசாரே பிரதமராகவும் வேண்டும் என்று முழங்கினார். ஊழலுக்கு எதிராக டெல்லிக்கு சென்று அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் விஜய், இங்கே ஊழலுக்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து தன் அப்பா இயக்குனர் சந்திரசேகரை அனுப்பி ஆதரவு தெரிவித்து இரட்டை வேடம் போடுகிறார்.



அதே நாளில் சென்னையிலும் சினிமாக்காரர்கள் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார்கள்.  நடிகர்கள் சரத்குமார், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்-நடிகைகள் ஊழலுக்கு எதிராக மைக் பிடித்து முழங்கினார்கள்.  ரஜினியும் கமலும் ஊழலுக்கு எதிராக அறிக்கை மட்டும் விட்டுவிட்டுப் படப்பிடிப்புக்குப் போய்விட்டார்கள்.  அன்றைக்குத் தமிழகம் முழுக்க ஊழல் எதிர்ப்புக்காக முழங்கிய அதே சினிமாக்காரர்கள் இன்று ஊழலுக்குத் தண்டனை கொடுத்தவுடன் இதையும் எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.  


இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் ஜெயலலிதா பெற்ற தண்டனைக்குக் காரணமே காவிரி நீருக்காகப் போராடினார் என்றும், தில்லியை எதிர்த்தார் என்றும் அரிய பெரும் கண்டுபிடிப்புகளை அவர்களது திரைக் கதைகளைப் போலவே அள்ளிவிட்டார்கள் நடிகர்கள்.  விசுவாசத்தைக் காட்ட எப்படியெல்லாம் நடிக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது சிரிப்புதான் வருகிறது.  

தமிழகம் முழுக்க வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு வெறியாட்டம் நடத்திவரும் அதிமுகவினரால் தமிழகத்தின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.  இத்தகைய அராஜகங்களைக் கண்டிக்கத் துப்பில்லாத சினிமாக்காரர்கள் உண்ணாவிரதம் இருப்பது யாரை ஏமாற்ற?  சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய காவல்துறையே கையைக் கட்டி, வாயைப் பொத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை நினைத்தால் இது சனநாயக நாடுதானா என்று கேட்கத் தோன்றுகிறது.


வன்முறை செய்த ஒருவர் மீதுகூட வழக்குப் பதிவு செய்யாமல், தொலைக்காட்சி செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்த கலைஞர் மீதும், ஸ்டாலின் மீதும் வன்முறையைத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யும் காவல்துறையின் போக்கு சர்வாதிகாரப் போக்காக மாறியுள்ளது.  சட்டத்தின்படிதான் காவல்துறை நடக்க வேண்டுமே தவிர விசுவாசத்தின்படி அல்ல.  வன்முறையைத் தடுத்து நிறுத்தச் சொல்லி இன்னமும்கூட முதல்வர் பன்னீர்செல்வம் எந்த வழிகாட்டலும் செய்ய வில்லை. 



ஊழலுக்கு எதிராக இயக்கம் நடத்திய அன்னாஅசாரே முதல் அரவிந்த் கெஜ்ரிவால் வரை யாருமே இத்தகைய வன்முறைப்போக்கைக் கண்டிக்க முன்வராததற்கு வேறு உள்நோக்கம் இருப்பதாகத்தான் புரிந்துகொள்ள முடிகிறது.

வன்முறை, அராஜகத்தின் மூலம் சட்டத்தை அடிபணிய வைக்க முடியும் என்றால், இது தவறான முன்மாதிரியாக அமைந்திடாதா?  இதே வழிவகைகளை வலுத்தவர்கள் ஆங்காங்கே கையாண்டால், சட்டமும் நீதியும் எதற்கு?  ஜெயலலிதா சட்டத்தின் முன் தான் நிரபராதி என்று நிரூபித்து வெளியே வருவதுதான் நல்ல சனநாயகமாகும்.  அதைவிடுத்து அச்சுறுத்தி பிணையில் வருவது சனநாயகத்திற்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எரானதுதான். 

செவப்பா இருக்கிறவங்க பொய் சொல்ல மாட்டாங்க என்று சொல்வதுபோல ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்த அவாள்கள் ஊழல் செய்ய மாட்டார்கள் என்று தெரிவிக்கத்தான் இத்தனை வன்முறைகளும் போராட்டங்களும்.  இதுதான் உள்ளீடான மநுநீதி.

 வரலாறு நெடுக வன்முறை மூலம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவர்கள் அதே பணியை இன்னமும் தொடருகிறார்கள்.  அதற்காகத்தான் ராம்ஜெத்மலானியும் நிற்கிறார்.  இதே துடிப்பு லல்லு பிரசாத் யாதவ் வழக்கில் தீர்ப்புச் சொல்லப்பட்டபோது இருந்திருந்தால் ராம்ஜெத்மலானி உண்மையான சட்டவல்லுநர் என்று புரிந்துகொள்ளலாம்.  அவாளுக்கு ஒரு நீதி சூத்திரவாளுக்கு ஒரு நீதியாகத்தான் அரசியலமைப்பையே மாற்ற முயற்சிக்கிறார்கள்.  அந்த நீதிதான் மநுநீதி. நாளையேகூட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறையிலிருந்து வெளிவரலாம்.  அப்போது நீதி சிறைப்படும்.

27 September 2014

மெட்ராஸ்: சுயநல அரசியலுக்குப் பலியாகும் ஒரு சமூகத்தின் கதை

பாரதி கண்ணம்மா திரைப்படத்தில் ஒரு காட்சி.  அவ்வளவு சீக்கிரம் அந்தக் காட்சியை மறந்து விட முடியாது.  ஊர்ப் பெரிய மனிதரான விஜயகுமார், அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களை கொட்டும் மழையில் அடித்து விரட்டிக்கொண்டே, “எங்களுக்கு உதவியா இருக்கிறதுக்குத்தான் உங்களை இங்கே குடியமர்த்தியிருக்கோம்.  இப்ப உங்களுக்கு எங்க பொண்ணு வேணுமாடா?” என்று ஆதிக்க சாதி வெறியுடன் கத்துவார்.  தலித்துகள் வேறு நாட்டைச் சார்ந்தவர்கள் போலவும், அவர்களை எங்கிருந்தோ இந்த மண்ணுக்குக் கூட்டி வந்தது போலவும் ஆதிக்கச் சாதியினருக்கு அடிமை வேலை செய்வதற்காகத்தான், அவர்கள் ஊருக்கு வெளியே குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் போலவும் இயக்குநர் சேரன் அந்தக் காட்சியைப் படத்தில் காட்டியிருப்பார்.  இம்மண்ணின் மைந்தர்களான தாழ்த்தப்பட்ட மக்களின் வரலாறு, சமூக-அரசியல் குறித்த பார்வை எதுவுமே இல்லாமல்தான் இதுகாறும் திரைப்படங்கள் வந்துள்ளன.


இந்துத்துவச் சிந்தனையாளர்களாக, நிலப்பிரபுத்துவச் சிந்தனையாளர்களாகத்தான் பல இயக்குநர்கள் இப்படி அலைகிறார்கள்.  சமூகம் குறித்த பார்வையோ, சாதி எப்படி உருவானது என்கிற வரலாற்றுப் புரிதலோ இல்லாமல்தான் சமூகம் குறித்துப் பேசுகிறார்கள்; காட்சி அமைக்கிறார்கள்.  சேரி - குப்பங்களில் வாழும் தாழ்த்தப்பட்ட - மீனவ மக்களை ரவுடிகளாக, அல்லது காமெடியன்களாக, திருடர்களாக, அழுக்கானவர்களாக, அறுவருப்பானவர்களாகத்தான் காட்டியிருக்கிறார்கள்.  

காமெடி நடிகர்கள் விவேக், சந்தானம் உள்ளிட்ட பல நடிகர்கள் சாதாரணமாக ‘அட்டு ஃபிகர்’ என்று சொல்லுவார்கள்.  அவர்கள் இந்தச் சொல்லாடலைத் தெரிந்துதான் சொல்கிறார்களா அல்லது தெரியாமல் சொல்கிறார்களா என்று தெரியவில்லை.  ‘அட்டு’ என்பது என்ன மொழி? எங்கிருந்து வந்தது.  ‘பிut’ என்கிற வார்த்தையிலிருந்துதான் வந்திருக்க முடியும். ‘பிut’ என்றால் குடிசை.  குடிசைகள் அதிகம் இருக்கிற சேரிப் பகுதிகளிலிருந்து வரும் பெண்களைக் கிண்டல் செய்கிற சொல்லாடல்தான் இந்த ‘அட்டு’.  இந்தச் சொல் ஒரு சமூகத்தையே இழிவுபடுத்துகிற வகையில் பயன்படுத்தப்படும் சொல் என்பதை எந்த இயக்குநராவது புரிந்து வைத்திருக்கிறார்களா? 

தலித்துகளுக்கென்று தனி அடையாளம் உண்டு; ஒரு தனி பண்பாடு உண்டு; கலை-இலக்கியம் உண்டு. ஆனால் இவற்றையெல்லாம் குறித்து எந்தத் திரைப்படமும், கலை-இலக்கியவாதிகளும் கவலைப்பட்டதில்லை.  வெளியே முற்போக்கு சிவப்பு அரசியலைப் பேசக்கூடிய இயக்குநர்கள்கூட ஆதிக்க சாதி குறித்த கதைகளைத்தான் படமாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.  இதில் பாரதிராஜாவோ, பாலாவோ விதிவிலக்கல்ல.  சமூக மாற்றத்திற்காகக் களமாடிய தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவராகக் காட்டிக் கொள்கிற நடிகர் கமல்ஹாசன்கூட சாதிப் பெருமை பேசும் ‘தேவர்மகன்’, ‘விருமாண்டி’ போன்ற படங்களைத்தான் எடுத்தார்.

இயக்குநர் பாலாகூட நல்ல இயக்குநர் என்று பெயர் பெற்றவர்; பல விருதுகளை வாங்கியுள்ளார்.  ஆனால் அவரது ‘அவன் இவன்’ படத்தில் கொடூர வில்லனாகக் காட்டப்படுபவர் மாடு அறுக்கும் தொழில் செய்பவர்.  மாட்டை அறுப்பவன் தலித் சமூகமாகத்தான் அடையாளம் காட்டுவார்கள்.  அந்தச் சமூகத்தில் உள்ளவனை வில்லனாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர் பாலா.
இப்படி.. தாழ்த்தப்பட்ட மக்களின், பண்பாட்டையும் வரலாற்றையும் இதுவரை யாருமே கதைக் களமாக்க முன்வராத சூழலில் மிகத் துணிச்சலாக எடுக்கப்பட்டுள்ள படம்தான் ‘மெட்ராஸ்’.  இத்திரைப்படம் மூலம் பல்வேறுவிதமான ஆதிக்கச் சிந்தனை உள்ளவர்களை குலைநடுங்க வைத்திருக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித்.  

தென் மாவட்ட மக்களின் - குறிப்பாக மதுரை மாவட்ட தேவர் மக்களின் - வாழ்க்கைப் பதிவு, கொங்குக் கவுண்டர்களின் வாழ்க்கைப் பதிவு என்று பல திரைப்படங்கள் சாதிப் பெருமையை முன்னிறுத்தி எடுக்கப்பட்டுள்ளன.  தங்களை வாழ வைக்கும் சென்னை மாநகரில் உட்கார்ந்துகொண்டு, அந்த சென்னை மக்களுக்கு எதிராகவே படம் எடுக்கிறார்கள்.  

ஆனால் சென்னையின் மண்ணின் மைந்தர்களான, அதுவும் வியாசர்பாடி, புளியந்தோப்பு பகுதி மக்களின் வாழ்வியல் முறை, அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அவர்களைப் பயன்படுத்தும் அரசியல் என்று கதைக்களம் உருவாக்கப்பட்டிருக்கிறது. திராவிடக் கட்சிகளின் அரசியலால் வடசென்னை எப்போது பார்த்தாலும் முட்டலும் மோதலுமாய் இருக்கிறது.  அவரவர் சக்திகளுக்கு விளம்பரம் எழுதுவதற்காக சுவர் பிடிக்கும் தகராறிலிருந்து, கொலை வரை போய்க்கெண்டிருக்கிறது.

சுவர் என்பது வெறும் சுவரல்ல;  அது காலம் காலமாய் நிறுவப்பட்டிருக்கும் அதிகாரம் என்று கதை விரிகிறது.  இந்தப் பகை அடுத்தடுத்த தலைமுறைகளிலும் தொடர்கிறது.  அரசியல்வாதிகள் தங்கள் தேர்தல் அரசியலுக்கு எப்படியெல்லாம் சேரி மக்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை உள்ளீடாகக் கொண்டுதான் கதை நகர்த்தப்படுகிறது.

‘மெட்ராஸ்’ படத்தில் மிகப் பிரமாண்டமான வீடுகள் இல்லை; செட்டுகளும் இல்லை. மிகக் குறுகிய அவுசிங் போர்டு வீடுகளுக்குள்தான் கேமரா புகுந்து விளையாடுகிறது.  பறந்து பறந்து அடிக்கும் ஹீரோத்தனமான சண்டைகள் இல்லாத எதார்த்தமான தெருச் சண்டைகள், கதாநாயகி சிரித்தவுடனேயே வெளிநாடுகளில் பல்வேறு அரை குறை ஆடைகளுடன் ஆட்டம்போடும் எந்தக் காட்சியையும் இதில் திணிக்காமல், மிக நேர்த்தியாக அன்றாடம், பார்த்துப் பழகிய இடங்களையே அழகியலாக காட்சிப்படுத்தியிருப்பது மிகச் சிறப்பு.



‘மெட்ராஸ்’ படமும் ஓர் ஆழமான நட்பைப் போற்றும் கதைதான்.  கிருஷ்ணப்ப நாயக்கர் குடும்பத்தின் அரசியல் ஆதிக்கத்தை எதிர்க்கும் அன்பு, அரசியல் கட்சி ஒன்றின் இளைஞர் அணி பொறுப்பாளர் ஆகிறார்.  அன்புவின் நண்பர்தான் ஹீரோ காளி (கார்த்திக்).  கொல்லப்பட்ட கிருஷ்ணப்ப நாயக்கரின் (கவிஞர் ஜெயபாலன்) படத்தைச் சேரிச் சுவரில் மிகப் பிரமாண்டமாக வரைந்து வைத்து அதை அழிக்க முடியாத அளவு பல்வேறு வதந்திகளைப் பரப்புகிறார்கள்.   அந்தப் படத்தை அழிக்க முயற்சி செய்கிறான் அன்பு.  இதனையொட்டி நடக்கும் கோஷ்டிச் சண்டைகளும், கொலைகளும்தான் கதை.
படித்துவிட்டு ஐ.டி.யில் வேலை பார்க்கும் கதாநாயகன் காளிக்கும், அன்புக்கும் இடையேயான நட்பு, அன்பும் அவனது மனைவி மேரிக்கும் இடையேயான காதல் உறவு, வியாசர்பாடி மக்களுக்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்பு எல்லாம் அப்படி அப்படியே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
தன் வேலையுண்டு, காதல் உண்டு என்று சுற்றும் காளி, நண்பன் அன்புவை எதிரிகளிடமிருந்து காப்பாற்றச் சண்டையிடும் காட்சி இதுவரை திரையுலகம் பார்த்திராதது.  மிக எதார்த்தமாக, ஹீரோத்தனம் இல்லாமல் தப்பித்துச் செல்லும் நோக்கிலேயே தற்காப்புக்காகச் சண்டையிடும் காட்சி மிகச் சிறப்பு.  பகைவனை கொலை செய்துவிட்டு தப்பிக்க முடியாமலும், வழி தெரியாமலும் திணறும் காட்சி எதார்த்தமானதாக இருக்கிறது.  பின்பு சரண்டராகப் போகும் நீதிமன்ற வளாகத்திலேயே அன்பு கொல்லப்படுவதும், கொல்லப்பட்ட பிறகு நடக்கும் அரசியல் விளையாட்டும் எதிர்பாராதது.  துரோக அரசியல்தான் தன் நண்பனை வீழ்த்தியது என்பதை அறிந்து கொதிக்கும் கதாநாயகன், நண்பனின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் கிருஷ்ணப்ப நாயக்கரின் ஓவியத்தை அழிப்பதும், துரோகத்தை வெல்வதும்தான் கதை.  இந்தக் கதைக்குள்தான் புதுக்கவிதை போன்ற நாயகன் - நாயகியின் காதல், கட்சித் தலைமையின் துரோகம், ஏமாற்று வேலை என்று எகிறிக்கொண்டே போகிறது.  இறுதியில் ஓவியம் அழிக்கப்பட்ட சுவரில் ரெட்டைமலை சீனிவாசன் அறக்கட்டளை சார்பாக கல்வியை வலியுறுத்தி விளம்பரம் செய்திருப்பார்கள். நாயகனும் நாயகியும் அம்பேத்கர் பாடசாலையில் நின்று, ‘நாம் கல்வி கற்க வேண்டும், அத்துடன் சமூக அரசியலுடன் கூடிய அரசியலையும் கற்க வேண்டும்’ என்கிற புரட்சியாளர் அம்பேத்கரின் அரசியலைச் சொல்லி படத்தை முடிக்கிறார்கள். 

சேரி மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி தலித்துகளை இருட்டுக்குள் தள்ளும் அரசியலை வெளிச்சமாக்கியிருக்கிறது இந்த ‘மெட்ராஸ்’ திரைப்படம்.  தமிழ் தமிழ் என்று பேசுபவர்கள்கூட சாதி, மதம் என்று வரும்போது கத்தியைத் தூக்கிக்கொண்டு நிற்பார்கள் என்று கதாநாயகன் பேசுவது இங்குள்ள போலித் தமிழ்த் தேசியவாதிகளை தோலுரித்துக் காட்டுகிறது.  சண்டை ஒன்றில் கதாநாயகன் அடிபட்டவுடன் வேறு நல்ல அமைதியான இடத்திற்குப் போவோம் என்று அப்பா சொல்லும் அப்பாவிடம், “இது நம்ம இடம், நாம ஏன் வெளியில போகணும்?” என்று காளி கேட்பது மண்ணுரிமை அரசியலை முன்னிறுத்துகிறது.



அன்பு கொல்லப்பட்டவுடன் அவனது பிணத்தின் முன்பு கானா பாலா பாடும் பாடல் துக்கமானது.  சாவு வீட்டின் முன்பு வியாசர்பாடி இளைஞர்கள் ஆடும் சாவுக் கூத்து மிகைப்படுத்தப்படாமல் அப்படியே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  

சேரி மக்களின் திருமண வாழ்க்கையில் வரதட்சணை என்பது ஒரு பிரச்சனையே இல்லை என்பதை கதாநாயகன் - கதாநாயகி நிச்சயதார்த்தக் காட்சியின் மூலம் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.
இப்படி பல சிறப்புகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஜானி கதாபாத்திரம் மறக்கவே முடியாதது.  அவர் கொல்லப்படும்போது ஒட்டுமொத்தக் கோபமும் கிருஷ்ணப்ப நாயக்கரின் ஆட்களின் மீதுதான் திரும்புகிறது.  அப்படி கதை மாந்தராகவே ஜானி படம் முழுக்க வந்து போகிறார்...

சென்னை வடசென்னை
இந்தக் கறுப்பர் தமிழ் மண்ணை
யாரோ இசைப்பாரோ - எங்க
வேரை அசைப்பாரோ
எங்க ஊரு மெட்ராசு - அதுக்கு
நாங்கதானே அட்ரசு
.. என்ற படத்தின் தொடக்கப் பாடல் மூலம் சென்னையைப் பெருமைப்படுத்தும் மக்கள் கவிஞர் கபிலனின் வரிகளுக்கேற்ப இம்மண்ணின் வேர்களான தலித் மக்களின் வாழ்க்கையை வெறும் சாதிப் பெருமையாகப் பேசாமல், கடந்த கால சுயநல அரசியல் ஒரு சமூகத்தை எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொண்டது என்பதையும், அதிலிருந்து விடுபட சமூக அரசியலுடன்கூடிய கல்விதான் தேவை என்கிற கருத்தியலோடு படமாக்கிய இயக்குநர் பா.ரஞ்சித், இப்படத்தைத் துணிச்சலாகத் தயாரித்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உள்ளிட்டோரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.  வாழ்த்துக்கள்.