16 June 2024
சிலப்பதிகாரத்திலே ஒரு காட்சி.
பாண்டியனின் அரண்மனைக்குள் நுழைந்த கண்ணகி, செங்கோலும் வெண்குடையும் / செறிநிலத்து மறிந்துவீழ்தரும்/நங்கோன்றன் கொற்றவாயில் / மணிநடுங்க நடுங்குமுள்ளம்/ இரவுவில்லிடும் பகல்மீன்விழும் / இருநான்கு திசையும் அதிர்ந்திடும்/வருவதோர் துன்பமுண்டு/ மன்னவற் கியாம் உரைத்துமென
(பொருள்) அரசனுடைய செங்கோலும் வெண்கொற்றக் குடையும் நிலத்தில் மடங்கி வீழும். நம் மன்னனது வெற்றி தரும் வாயிலின்கண் கட்டிய மணி என்னுள்ளம் நடுங்கும் வண்ணம் அசையும். இரவு நேரம் வான வில்லைத் தோற்றுவிக்கும். பகற் காலத்து விண்மீன்கள் எரிந்து கீழே விழும், எட்டுத் திசையும் அதிரும், ஓரு துன்பம் மன்னனுக்கு வர இருக்கிறது. நான் அரசனுக்கு இச் செய்தியைக் கூறுகிறேன் என்று கண்ணகி கூறுவார். இதே செய்தியைத் தான் 18-வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் மோடி என்கிற மன்னனுக்கு கூறியுள்ளது.
மோடியின் 400 தொகுதி வெற்றி முழக்கம் வெற்று முழக்கமாகிவிட்டது. ராமர் கோயில் அரசியலுக்கு சம்மட்டி அடி விழுந்துள்ளது. ராமர் கோயில் இருக்கும் ஃபைசாபாத் தொகுதியிலேயே பாஜக மண்ணைக் கவ்வியுள்ளது. பாஜக வேட்பாளர் லல்லு சிங்கை விட, அவரை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாடி வேட்பாளர் அவ்தேஷ் பிரசாத் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். கூடுதல் மகிழ்ச்சி என்னவென்றால், ராமர், இந்துத்துவா என தலித்துகளுக்கு எதிராக செயல்பட்ட லல்லு சிங் தோற்றது தலித் வேட்பாளரான அவ்தேஷ் பிரசாத்திடம் தான்.
![]() |
அகிலேஷ் யாதவ் உடன் அவ்தேஷ் பிரசாத் |
நாட்டின் ஒரே
பழங்குடியின முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன்
அமலாக்கத்துறையால் சிறை வைக்கப்பட்ட நிலையில், ஒன்றிய பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக
இருந்த அர்ஜூன் முண்டா, சோரனின் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். ஜார்கண்ட்டின் பழங்குடியினருக்கான
ஐந்து தொகுதிகளிலும் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.
பாஜக ஆளும் ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் பாஜகவின் அரசியல் சரிவு பட்டவர்த்தனமாகிவிட்டது. மோடி தனது தொகுதியான வாரணாசியில் பெற்ற வெற்றியை விட இரண்டு மடங்கு கூடுதல் வாக்குகளுடன் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளார். வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து மீண்டும் களமிறங்கிய மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராயுடன் கடும் போட்டிக்கிடையே தான் வெற்றி பெற முடிந்தது. கடந்த 2019ஆம் ஆண்டு 4.8 லட்சமாக இருந்த வாக்கு வித்தியாசம் இப்போது வெறும் 1.5 லட்சமாக சரிந்துள்ளது. சிவசேனா என்ற மாநில கட்சியை உடைத்ததன் விளைவை மகாராஷ்ட்ராவில் பாஜக அனுபவித்துள்ளது. விவசாயிகளை கொடுமைப்படுத்தியதற்கு பஞ்சாபில் பாஜகவிற்கு விவசாய பெருங்குடி மக்கள் பாடம் புகட்டிவிட்டார்கள். இவை எல்லாவற்றையும் விட, ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கத்தை வைத்து அரசியல் செய்த மோடி – ஆர்.எஸ்.எஸ். கும்பல், தேர்தல் முடிவுக்கு பிறகு ராமர் தங்களுக்கு கை கொடுக்கவில்லை என்பதால் “ஜெய் ஜெகந்நாத்”என்ற முழக்கத்திற்கு மாறிவிட்டார்கள். கடவுளையே மற்றியவர் மோடி ஒரு பச்சை சுயநலவாதி என்ற முகத்திரை கிழிந்து தொங்குகிறது.
![]() |
மோடியை ஆட்டம் காணவைத்த அஜய் ராய் |
தேசிய இனங்களின் எழுச்சிக்கு முன்பாக மோடியின் இந்துத்துவா கொள்கை படுதோல்வி அடைந்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் பொறியாளர் ரஷீத், காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித் பால் சிங், இந்திரா காந்தி கொலையாளிகளில் ஒருவரான பியாந்த் சிங்கின் மகன் சரப்ஜித் சிங் கல்சா ஆகியோர் வெற்றி மோடியின் சர்வதிகாரத்திற்கு எதிரான தேசிய இன எழுச்சியாகவே சித்தரிக்கப்படுகிறது. ஒட்டு மொத்தத்தில், அறுதிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும் என்ற அனைத்து ஆரூடங்களையும் பொய்யாக்கி, மோடியின் சர்வாதிகாரத்திற்கு சவுக்கடி கொடுத்துள்ளது 18-வது மக்களவைத் தேர்தல். மோடிக்கு கிடைத்துள்ள இந்த தோல்வி, இந்தியாவின் ஆன்மாவான மதச்சார்பின்மைக்கும், பிரிவினைவாத எதிர் பேச்சுக்கும் கிடைத்த பதிலடியாகவே பார்க்கலாம்.
இந்திய தேர்தல் அரசியல் வரலாற்றில் மோடி ஒரு சர்வாதிகாரி என்பதை தொடர்ச்சியாக நக்கீரனில் எழுதி வருகின்றேன். அவரின் தேர்தல் முடிவு எப்படி இருக்கிறது என்பதை முன்பே பல அத்தியாயங்களில் எழுதியுள்ளேன். அவை மக்கள் தீர்ப்பு முன்பு உண்மையாகிவிட்டதை பெருமையோடு பகிர்ந்து கொண்டு, சர்வாதிகாரத்திற்கு எதிராகவும் மதச்சார்பின்மைக்கு ஆதரவாகவும் களமாடி தங்களின் தீர்ப்பை அளித்த இந்திய மக்களை ஆரத்தழுவி முத்தமிடலாம்.
![]() |
பாஜகவின் கூலிப்படையான தேர்தல் ஆணையம் |
எத்தனை எத்தனை பொய்களை மிஞ்சி இந்த வரலாற்று சாதனையை இந்திய மக்கள் கொடுத்திருக்கிறார்கள். தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பாகவே கருத்து கணிப்பு என்ற போர்வையில் ஊடகங்கள் செய்த பித்தலாட்டங்கள், மத்திய விசாரணை முகமைகளை கையில் வைத்துக்கொண்டு மோடி செய்த சர்வாதிகாரத்தனம், தேர்தலின் கண்ணியம் கெட்டுப் போகும் போது கூட கண்ணை மூடிக்கொண்டிருந்த தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் என பல நெருக்கடிகளுக்கு மத்தியில் தான் இந்தியா கூட்டணியின் முதுகை தட்டிக்கொடுத்தும் பாஜகவை தலையில் கொட்டு வைத்தும் ஒரு தேர்தல் முடிவை மக்கள் கொடுத்திருக்கிறார்கள்.
பொய்யான கருத்துக்கணிப்பு:
ஜூன் 1 ஆம் தேதி வெளியான அனைத்து ஊடகங்களின் கருத்துக்கணிப்புகளும் 350க்கும் மேற்பட்ட இடங்களை பாஜக தனித்துக் கைப்பற்றும் எனக் கூறின. நியூஸ் 24 டுடே வெளியிட்ட கருத்துக்கணிப்பில் 400க்கும் மேற்பட்ட இடங்களை பாஜக கூட்டணி பிடிக்கும் என குறிப்பிட்டது. இந்தியா டுடே-ஆக்சிஸ் இந்தியா கருத்துக்கணிப்பு 361-401 இடங்களும், டுடே சாணக்கியா பாஜகவுக்கு 335 இடங்களையும் பாஜக கூட்டணிக்கு 400 இடங்களையும் கொடுத்தது.
![]() |
மோடி மீடியாவின் தேர்தல் கருத்துக்கணிப்பு |
தி டைம்ஸ் நவ் – இ.டி.ஜி கருத்து கணிப்பு 358 இடங்களை பாஜகவுக்கு வழங்கியது. ரிபப்ளிக் 359 இடங்களை பாஜக தனித்து கைப்பற்றும் எனக் கூறியது. நியூஸ் 18 கருத்து கணிப்பில் 315 இடங்களை பாஜக வசப்படுத்தும் எனக் குறிப்பிட்டது. இத்தனை ஊடகங்களும் பாஜகவின் ஊதுகுழலாக இருந்துள்ளன என நிரூபித்துவிட்டது மக்களின் தீர்ப்பு. அதாவது, தமிழ்நாடு புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி 10 இடங்களில் தான் களமிறங்கியது. ஆனால், மோடியின் மீடியா மாஃபியாக்கள் 12-13 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றும் என கூறின. ஜார்க்கண்டில் சி.பி.எம் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட்டது. ஆனால்,3 இடங்களில் வெற்றி பெறுவார்கள் என்று கூறியது. கேரளாவில் பாஜக அதிக வெற்றியை பதிவு செய்யும் என்றது மோடி மீடியா. ஆனால், முடிவு வேறாக வந்துள்ளது.
மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசத்தில் பாஜக அமோக வெற்றி பெறும் என்றது கருத்து கணிப்பு முடிவுகள். ஆனால், நடந்தது என்ன, ஒட்டு மொத்தமாக உத்தரப்பிரதேசத்தில் 80 இடங்களில் பாஜக வெறும் 33 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 2014-ல் 71 இடங்களிலும் 2019ல் 62 இடங்களிலும் வென்ற பாஜக 2024ல் வெறும் 33 இடங்களை கைப்பற்றி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பாஜகவை எதிர்க்கும் துணிவு யாருக்கும் இல்லை என்று பேசிய ஸ்மிருத்தி இராணி வெற்றி பெறுவார் என்றார்கள். அவருக்கும் படுதோல்வி. காங்கிரஸ் – சமாஜ்வாதி படுதோல்வி அடையும் என்றது கருத்து கணிப்பு, ஆனால், பாஜகவை விட 37 இடங்களில் சமாஜ்வாதியும் 6 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் முத்திரை பதித்துள்ளது.
![]() |
உ.பி. புல்டோசரை வீழ்த்திய மூவர் அணி |
மகாராஷ்டிராவில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று கூறிய கருத்து கணிப்பு முடிவுகள் தவிடு பொடியாகியுள்ளது. இந்தியாவின் அதிக அரசியல் நெருக்கடி உள்ள மாநிலமாக பார்க்கப்பட்ட மகாராஷ்டிராவில் பாஜக படு தோல்வியைக் கண்டுள்ளது. 48 தொகுதிகளைக் கொண்ட இங்கு 30 தொகுதிகளை இந்தியா கூட்டணி கைப்பற்றியது. 2019ல் பாஜக 23 இடங்களிலும் 18 இடங்களில் அதன் கூட்டணி கட்சிகளும் வென்றன. அதே நிலை தொடரும் என்றன மோடியின் மீடியா மாஃபியாக்கள். ஆனால், 2004ல் கருத்துக்கணிப்பு பொய்யானது போலவே 2024 கருத்துக்கணிப்புகளையும் பொய்யாக்கிவிட்டது தேர்தல் களம்.
ஒட்டுண்ணி பாஜக விழுங்கிய கட்சிகளும்:
மோடி – ஆர்.எஸ்.எஸ் - இந்துத்துவா கருத்தியல்களை எதிர்த்த கட்சிகள் மட்டுமே தற்போது இந்திய அரசியலில் உயிர்பெற்று வந்துள்ளன. மோடியை எதிர்த்த, விசிக தலைவர் தொல்.திருமாவளவன், திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, சரத்பவார், உத்தவ் தாக்கரே உள்ளிட்டவர்களின் கட்சிகள் வலுவான வெற்றியைப் பதிவு செய்துள்ளன. ஆனால், அரசியல் ஒட்டுண்ணி போல் இருந்து கொண்டு அதிமுக, ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர்.பி., ஒடிசாவின் பிஜூ ஜனதாதளத்தின் மீது சவாரி செய்த பாஜக அந்த கட்சிகளின் அடையாளத்தை அழித்துவிட்டது.
![]() |
பாஜக விழுங்கிய நவீன் - ஜெகன் |
மோடி அமைச்சரவையில் ரயில்வே துறை அமைச்சராக இருந்த அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசா மாநிலத்தின் பிஜூ ஜனதாதளத்தின் உதவியுடன் தான் மாநிலங்களவைக்கு சென்று ரயில்வே அமைச்சராகவே ஆனார். பாஜகவையும் மோடியின் சர்வாதிகாரத்தனத்தையும் சரியான நேரத்தில் எதிர்க்காததன் விளைவை நவீன் பட்நாயக் இன்று கண்டடைந்துவிட்டார். கூட்டணியில் இருந்த பிஜூ ஜனதாதளத்தையே ஒட்டுண்ணி பாஜக விழுங்கி, ஆட்சியை கவிழ்த்துவிட்டது. இதே நிலைமை தான் ஆந்திராவின் ஜெகன் மோகனுக்கும் நேர்ந்துள்ளது. பாஜகவின் ஒட்டுண்ணி தனத்திற்கு பலியான மற்றொரு கட்சியாக அதிமுக இருக்கிறது. 2017க்கு பிறகு பாஜகவின் கைப்பாவையாக இருந்த அதிமுக 2019க்கும் பிறகு பாஜகவில் மொத்தமாக கரைந்துவிட்டது. இப்போது, அதிமுகவின் நிலை என்ன? ஒட்டுண்ணி பாஜக அதிமுகவை முழுவதுமாக தின்று செறித்ததால் தனது அரசியல் எதிர்காலத்தையே தொலைத்துவிட்டு நிற்கிறது அதிமுக. இதே நிலை தான், ஏக்நாத் ஷிண்டேவுக்கும். ஏக்நாத் ஷிண்டேவை வைத்து சிவசேனாவை உடைத்து பாஜகவுக்கு மகராஷ்டிரா பாடம் கற்றுக்கொடுத்துவிட்டது. அங்கு, பாஜகவும் வெற்றி பெறவில்லை. ஏக்நாத் ஷிண்டேவும் காணாமல் போய்விட்டன.
![]() |
பாஜக திண்று செரித்த அதிமுக |
மதவாத – சாதியவாத – பிரிவினையின் தோல்வி:
2024நாடாளுமன்ற தேர்தல் நுணுக்கமான பல அம்சங்களை வெளிப்படுத்தியுள்ளது. அதில், முக்கியமானது, மோடி கையில் எடுத்த மதவாத, இனப் பிரிவினைவாதத்திற்கு எதிராக இந்தியர்கள் நிற்கிறார்கள். இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. உத்தரப்பிரதேசத்தில் ’புல்டோசரை யார் மீது ஏற்றலாம் என்று யோகி ஆதித்யநாத்திடம் கற்றுக்கொள்ளுங்கள்’ என்று கூறிய மோடி
மீதே புல்டோசரை ஏற்றி பாடம் புகட்டியிருக்கிறார்கள் மக்கள். இஸ்லாமிய வெறுப்பு அரசியலை பேசிய பாஜக உத்தரபிரதேசம் அயோத்தியிலேயே தோற்றுள்ளது. மணிப்பூரில் மொய்தி – குக்கு இன மக்களிடையே பாஜக பிரிவினையை ஏற்படுத்தி அரசியல் செய்தது. மணிப்பூரில் 227 பேர் கொல்லப்பட்டனர். 70,000 பேர் அகதிகளாக்கப்பட்டனர். கலவரத்தை தடுக்க பாஜக தவறியது. நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் உள்ளேயும் திமுக – காங்கிரஸ் கடுமையாக நீதி கேட்டு போராடியது. விசிக தலைவர் திருமாவளவன், ரவிக்குமார் உள்ளிட்டோர் மணிப்பூர் களத்தை நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஆனால், மோடி வாய் திறக்கவே இல்லை. மணிப்பூரில் 2 தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. அங்கு, காங்கிரஸ் பெற்ற வாக்குகளை கணிக்கும் போது, மொய்தி – குக்கி இரண்டு இனமக்களுமே பாஜக மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்பது வெளிப்பட்டுவிட்டது.
ஜம்மு – காஷ்மீரில் பாஜக மீதான கோபம் மக்களிடம் தேர்தல் முடிவுகள் மூலமாக வெளிப்படத்தொடங்கிவிட்டது. 2019 ஆட்சிக்கு வந்த பிறகு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ மோடி அரசு நீக்கியது. இதன் விளைவுகளை காஷ்மீர் மக்கள் பாஜகவுக்கு அளிக்கின்றனர். காஷ்மீரின் பாராமுல்லா தொகுதியில் ஆச்சரியமான முடிவை மக்கள் கொடுத்துள்ளனர். பொறியாளர் ரஷீத் என்று அழைக்கப்படும் சுயேச்சை வேட்பாளர் அப்துல் ரஷித் ஷேக் வெற்றி பெற்றுள்ளார். 2019லிருந்து உபா வழக்கில் சிறையில் வாடும் ரஷித் வெற்றி, மோடியின் சர்வாதிகாரத்திற்கு எதிரான ஜனநாயகக் குரல் என்பதை மறுக்க கூடாது.
![]() |
UAPA கைதி அப்துல் ரஷீத் ஷேக் எம்.பி. |
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ள இடத்தில் தலித் மக்கள் பாஜகவுக்கு எதிராக திரட்சியான வாக்கை அளித்துள்ளனர். வளரும் சமூகங்களின் ஆய்வு மையம் - லோக்நிதி சிந்தனைக்குழு நடத்திய ஆய்வில் 8 சதவிகிதத்திற்கும் குறைவான மக்களே அயோத்தியில் புதிய கோயில் வேண்டும் எனக் கூறியுள்ளனர். மீதமிருக்கும் 92 சதவிகிதம் பேர் அயோத்தியிலேயே பாஜகவின் இந்துத்துவத்திற்கு எதிராக எழுச்சிபெற்று கூடியுள்ளனர்.
மத்திய உள்துறை இணை அமைச்சரான உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அஜய் மிஸ்டாவின் மகன் லக்கிம்பூர் கெனியில் விவசாயிகள் மீது டிராக்டரை ஏற்றி கொலை செய்தார். இப்போது, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா படு தோல்வி அடைந்துள்ளார். மக்கள் விரோதமாக செயல்பட்ட மோடி அமைச்சர்கள் 19 பேர் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளனர். மோடி அமைச்சரவையில்
இடம்பெற்றிருந்த 20 அமைச்சர்கள் தங்கள் தொகுதிகளில் தோல்வியடைந்துள்ளனர்.
மண்ணைக் கவ்விய மோடியின் அமைச்சர்கள்
கொடுங்கோல் ஆட்சி - மோடியின் தோல்வியே சாட்சி:
தமிழ்நாடு, பஞ்சாப், மணிப்பூர், மிசோரம், சிக்கிம் ஆகிய ஐந்து மாநிலங்களில் மாநில கட்சிகளுக்கு எதிராக நேரடி போட்டியில் ஈடுபட்ட பாஜக படு தோல்வியை சந்தித்துள்ளது. தமிழ்நாட்டில் 23 தொகுதிகளிலும், பஞ்சாபில் 13 தொகுதிகளிலும் மணிப்பூரில் 2 தொகுதிகளிலும் சிக்கிம், மிசோரம் ஆகிய இடங்களில் தலா ஒரு தொகுதிகள் என 40 தொகுதிகளை மொத்தமாக பாஜக இழந்துள்ளது. இந்த மாநிலங்கள் மோடியின் பாசிச குணத்திற்கு எதிராகவும் அடிப்படையில் தேசிய இன விடுதலையைக் கோரும் மாநிலங்களாகவும் உள்ளன. தாமரையின் செல்வாக்கும், மோடியின் சர்வாதிகாரத்தனமும் தேசிய இனங்கள் முன் கைகட்டி நிற்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் ஊழல், விவசாயிகளின் துயரம், போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு, இவை எல்லாவற்றையும் விட மாநில அரசுகளை அழிக்கநினைக்கும் மோடியின் அரசியல் நடவடிக்கைக்கு எதிராக மக்கள் எழுச்சியுடன் வாக்களித்து பாஜகவை தோற்கடித்துள்ளன.
NSA கைதி அம்ரித்பால் சிங் எம்.பி.
அஸ்ஸாமின் திப்ருகர் மத்திய சிறையில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் அம்ரித்பால் சிங் ஒரு வருடத்திற்கும் மேலாக தடுப்புக் காவலில் உள்ளார். இவரைப் போலவே, பாராமுல்லா தொகுதியில் பொறியாளர் ரஷீத் வெற்றியும் பார்க்கப்படுகிறது. மோடி ஆட்சியில் 2019ல் உபா வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ரஷித் வெற்றி, மோடியின் சர்வாதிகாரத்திற்கு தேர்தல் வெற்றியாகவேகணிக்கப்படுகிறது.
சமத்துவ இந்தியா என்ற கனவை அடைவதற்கு நீண்ட காலம் இன்னும் போராட வேண்டி இருக்கிறது. ஆனால், நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடித்தளமாக கொண்ட குடியரசின் அடித்தளத்தை வலுப்படுத்துவது மோடி காலத்தில் அதிமுக்கியமானது. மோடியின் சர்வாதிகார கரங்களில் இருந்து இந்தியாவை மீட்டு, குடியரசின் அடித்தளத்தைக் கட்டமைக்க பாடுபட்டு உயிர்த்தியாகம் செய்த, இன்றும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோருக்கும் சமத்துவ குடியரசிற்காக கனவு கண்டு கொண்டிருக்கும் மக்களுக்கும் இந்த தேர்தல் நிம்மதி பெருமூச்சை விட வைத்துள்ளது.
- வன்னி அரசு
22 May 2024
'சமாஜ்வாதி கட்சியும் காங்கிரசும் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலில் புல்டோசரை வைத்து இடித்து விடுவார்கள். புல்டோசரை எங்கு இயக்க வேண்டும் எங்கு இயக்கக் கூடாது என்று அவர்கள் யோகி ஜியிடம் (யோகி ஆதித்யநாத்) பயிற்சி எடுக்க வேண்டும்' - உத்தரப்பிரதேசம் பாரபங்கியில் மோடி பேச்சு
2024 நாடாளுமன்ற தேர்தலில் மத உணர்வைக் கூர் தீட்டி விடுவதில் பாஜக மூத்த தலைவர்கள் மிகத்தீவிரமாக இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் கூறாத பல கருத்துக்களைக் கூறி வாக்கு சேகரிக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் தேர்தல் வியூகம் என்பது முழுக்க முழுக்க பொய்யின் மீதே கட்டப்பட்டுள்ளது.
மோடி கும்பல் மற்றும் பாஜகவின் இந்த பொய்ப் பிரச்சாரத்திற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, இந்தியாவில் தற்போது மோடி அலை என்பது முற்றிலும் இல்லாமல் துடைத்தெறியப்பட்டுவிட்டது.
இன்னொன்று, குறைந்தபட்ச வாக்குகளைத் தக்கவைத்துக்கொள்ளவாவது இந்து பெரும்பான்மைவாதத்தைக் கையில் எடுத்து வாக்கு சேகரிக்கலாம் என்ற தந்திரம் தான்.
பாஜகவின் முதல் பொய்:
பாஜக 400 இடங்களைக் கைப்பற்றும் என்று பாஜக பிரச்சாரம் செய்கிறது. உண்மையில், 441 தொகுதிகளில் மட்டுமே பாஜக இந்தியா முழுமைக்கும் போட்டியிடுகிறது. தென்னிந்தியாவில் பாஜகவுக்கு செல்வாக்கே இல்லாத போது பாஜகவால் எப்படி 400 இடங்களைக் கைப்பற்ற முடியும். இதைக் கொஞ்சம் விரிவாக அலசி ஆராய்ந்தால் பாஜக உண்மையிலேயே 400 இடங்களைக் கைப்பற்ற முடியுமா என்ற கருத்துருவாக்கத்திற்கு விடை கிடைக்கும்.
அதாவது, கேரளாவில் பாஜக இதுவரை வெற்றி பெற்றதே இல்லை. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் கூட, 1999 மற்றும் 2014 ஆகிய இரண்டு நாடாளுமன்ற தேர்தலில் தான் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. கர்நாடகாவில் பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ சர்ச்சை அந்த மாநிலத்தில் பாஜகவின் செல்வாக்கை சரித்துவிட்டது.
2023 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பாஜக வீழ்ச்சி கர்நாடகாவில் வீழ்ச்சி அடைந்துள்ளது ஒரு பக்கம் இருக்க பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுக்கு பாலியல் கொடுமை இழைத்ததால் பாஜக கூட்டணி ஒட்டுமொத்தமாக தோல்வியை தழுவும் நிலையில் உள்ளது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு உடன் கூட்டணி வைத்த பாஜக கரை ஏறுவதே கடினம் என்பதே களநிலவரம். காரணம், முந்தைய காலங்களில், மோடியை பயங்கரவாதி என்று கூறிய சந்திரபாபு நாயுடு தற்போது மோடியுடன் அமைத்துள்ள கூட்டணி பொறுந்தாத கூட்டணியாகவே பார்க்கப்படுகிறது. விவசாயிகள் போராட்டத்தில் பஞ்சாப்பில் மோடிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததன் மூலமாக டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் பாஜகவின் தோல்வி உறுதியாகிவிட்டது. ஹரியானாவில் மூன்று சுயேச்சைகள் பாஜகவுக்கான ஆதரவைத் திரும்பப்பெற்றதால் ஹரியானாவில் ஆட்சி கவிழும் சூழல் உள்ளது. மேற்குவங்கத்தைச் சொல்லவே வேண்டாம், மம்தா பானர்ஜி மோடி அலையை குடுவைக்குள் அடைத்துவைத்துவிட்டார்.
ஏழு மலை, ஏழு கடல் தாண்டி மறைத்துவைக்கப்பட்டது போலத்தான் பாஜகவின் வெற்றி வாய்ப்பு மேற்கு வங்கத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில், ஏக்நாத் ஷிண்டேவை வைத்து சிவசேனாவை உடைத்ததால் உத்தவ் தாக்கரே மீது அனுதாப அலை உள்ளது. அதோடு, சரத்பவார், காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளதால் பாஜக வெற்றி எளிதல்ல.
2019 நாடாளுமன்ற தேர்தல் முடிவை கணித்தால், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் உள்ள 129 இடங்களில் பாஜகவுக்கு வெறும் 29 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அப்படி இருக்கும் போது பாஜகவால் எப்படி மொத்தம் போட்டியிடும் 441 இடங்களில் 400 இடங்களைக் கைப்பற்ற முடியும் என்பதை ஆராய்ந்து பார்த்தால், பாஜக சொல்வது பொய் பித்தலாட்டம் என்பது புரிந்துவிடும். இந்த அரசியல் கணக்குகளைக் கூட ஆய்வு செய்யாமல் ஊடகங்களும் மோடியின் ஊதுகுழலாக மாறிவிட்டனவா? அப்படியென்றால், பாஜக ஏன் 400 இடங்களைக் கைப்பற்றுவோம் என்று கூறுகிறது.
2019 மோடியின் பொய் பிரச்சாரம்:
2014 நாடாளுமன்ற தேர்தலில், கருப்பு பணத்தை மீட்பேன், ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் லட்சக் கணக்கில் பணத்தைக் கொட்டுவேன், விவசாயிகளின் பொருளாதாரத்தை இரட்டிப்பாக்குவேன் என அடுக்கடுக்கான பொய்யை பிரச்சாரத்தில் மோடி கட்டவிழ்த்துவிட்டார். ஆனால், மோடியின் முதல் ஆட்சி காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் அவர் நிறைவேற்றவில்லை. இந்த பின்னணியில் 2019 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மோடிக்கு சில பொய் பரப்புரைகள் தேவைப்பட்டன.
பாலகோட் வான்வழித்தாக்குதல் சம்பவத்தின் மூலமாக தேசிய வாக்குவங்கியை அணி திரட்ட முயன்றார். 2) இந்து கடவுளர்களின் புராண கதைகளை அறிவியலோடு இணைத்து அதன் மூலம் வாக்கு வங்கியைப் பெருக்க முயன்றார். இதை விரிவாக ஆராய்ந்தால், பாகிஸ்தானின் ரேடாரால் இந்தியாவின் போர் விமானங்களைக் கண்டறிய முடியாது என்று பொய்யைக் கட்டவிழ்த்துவிட்டார். ஆனால், இரண்டாம் உலகப்போரின் போதே எதிரி விமானங்களைக் கண்டறிவதில் ரேடாரின் பங்களிப்பு மிக முக்கியமானது என்பதை வரலாறு கண்டது.
கொரோனா சமயத்தில், தட்டை எடுத்துக்கொண்டு வெளியே வந்து சத்தம் எழுப்பி தட்டுங்கள், அது முன்கள பணியாளர்களை ஊக்குவிக்கும் என்றார் மோடி. சங்பரிவார் கும்பல் மோடிக்கு ஒத்து ஊதுவதாக நினைத்து தட்டால் தட்டுங்கள் கொரோனாவும் ஓடுவிடும் என்று பிரச்சாரம் செய்தன. இதனை யாரும் கேள்வி கேட்கக் கூட இல்லை.
இந்து கடவுளர்களின் புராண கதையாடலை அறிவியலோடு இணைத்து மோடி பேச்சு உச்சபட்ச நகைச்சுவையாக இருந்தது. 2014ல் பண்டைய இந்தியாவில் மகாபாரதத்தின் கதாப்பாத்திரத்தை மரபணு சிகிச்சைக்கும், விநாயகரை பிளாஸ்டிக் சர்ஜரிக்கும் எடுத்துக்காட்டாக மோடி வட இந்தியாவில் பிரச்சாரம் செய்தார். மோடி பேச்சு அடிப்படை அறிவியல் அறிவு கூட இல்லா முட்டாள் தனமானது என்று தெரிந்தும் அதைப்பற்றி யாரும் பேசவில்லை.
2024-ல் மோடியின் நூதன பொய்:
இப்படி மோடி 2014ல் பேசிய பேச்சுக்கள் தற்போது அவரை எங்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது என்றால், மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஆறே மாதங்களில் மீட்டுவிடுவார் என்கிறார்கள். காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறாத விஷயங்களை மோடி குறிப்பிடுகிறார். இரண்டு எருமை மாடு இருந்தால் அதில் ஒன்றை காங்கிரஸ் பிடுங்கி இஸ்லாமியர்களுக்கு கொடுத்துவிடும் என பொய் சொல்லுகிறார். ஒரு நாட்டின் பிரதமராக இரண்டு முறை இருந்து, மூன்றாவது முறையாக பிரதமராக ஆசைப்படும் ஒருவர் இப்படி பொய்யிலேயே மூழ்கி, பொய்யிலேயே உறைந்து இருக்கும் நாட்டை எங்குமே பார்க்க முடியாது.
இவையெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட மோடி, பிரிவினைவாதத்தை தூண்டி மதரீதியாக பிளவுபடுத்தும் வேலையையும் செய்து கொண்டு இருக்கிறார். ஆனால், இந்திய தேர்தல் ஆணையம் கூட மோடியின், பாஜக தலைவர்களின் பேச்சை கண்டிக்கவோ விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பவோ இல்லை. யாரும் கேட்க முடியாது என்ற ஆணவத்தின் உச்சத்தில் நின்றுகொண்டிருக்கிறார் மோடி.
சமாஜ்வாதி கட்சியும் காங்கிரசும் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலில் புல்டோசரை ஓட்டி இடித்து விடுவார்கள். புல்டோசரை எங்கு இயக்க வேண்டும் எங்கு இயக்கக் கூடாது என்று அவர்கள் யோகி ஜியிடம் (யோகி ஆதித்யநாத்) பயிற்சி எடுக்க வேண்டும் என உத்தரப்பிரதேசம் பாரபங்கியில் மோடியின் பேச்சுக்கு தேர்தல் ஆணையம் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.
மத - இன - சாதிய ரீதியாக பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்கக் கூடாது என்கிறது அரசியல் சாசனம். ஆனால், 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு மேடையிலும் வாயைத் திறந்தால் மோடி உச்சரிக்கும் வார்த்தைகள் அனைத்துமே இஸ்லாமியர்கள் - இந்துக்களிடையே பிரிவினையைத் தூண்டும் வகையில் தான் இருக்கிறது.
மோடியின் பக்தர் பூரி ஜெகந்நாதர்:
உண்மையிலேயே, இந்துக்களையும் இந்துக் கடவுளர்களையும் மோடி - ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார் கும்பலால் காப்பாற்ற முடியுமா? மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?
இந்து கடவுள்களின் உன்னதங்கள் காப்பாற்றப்படுகின்றன? என்ற மோடி - சங்பரிவார கும்பல்கள் தான் இந்துக்களையும் இந்து கடவுளர்களையும் தங்களின் சுயநலத்திற்காக பலி கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். மோடியைக் குளிர்விப்பதற்காக ஏழை மக்களின் தூதர் மோடி என்கிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். இந்துக் கடவுளான ஜெகநாதரே பிரதமர் நரேந்திர மோடியின் பக்தர் தான் என்று ஒடிசா மாநில பாஜக தலைவர் சம்பித் பத்ரா கூறுகிறார். இப்போது அப்படி சொன்னதற்காக மூன்று நாட்கள் விரதம் இருக்கப்போவதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை பாகிஸ்தானிடம் இருந்து காப்பாற்ற மோடியால் மட்டுமே முடியும் என்று கூறிவந்தவர்கள், இன்று பூரி ஜெகந்நாதரே மோடியின் பக்தர் என்று கூறுவதில் ஆச்சரியம் இல்லை. இவர்களின் நோக்கம் முழுக்க முழுக்க சர்வாதிகாரம் மட்டுமே. இந்து கடவுள்களைக் காப்பேன் என்று கூறியவர்கள் மோடியே கடவுள் என்ற நிலைக்கு வந்துநிற்கிறார்கள் என்றால் அவர்களின் நோக்கம் என்ன என்பது புரிந்துவிடும். தேர்தல் வெற்றிக்காக, சாதியைக் கூர்தீட்டிவிடுவது. மதப்பிளவை ஏற்படுத்துவது. வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவது என்ற நோக்கம் மட்டும் தான் இவர்களுக்கு உள்ளது.
இந்த சூழலில், நான் பயோலஜிக்கலாக பிறக்கவில்லை, கடவுளால் அனுப்பப்பட்டவன் என்று உச்சகட்டமாகவும் கோமாளித்தனமாகவும் பேசியுள்ளார். இதை விட யாரும் தாய் தந்தையை அவமதித்து விட முடியுமா?தாய் தந்தையையே அவமதிப்பவர்கள் மக்களை அவமதிக்க துணியமாட்டார்களா? கேவலம் வாக்குகளுக்காக எத்தனை கேவலத்தையும் செய்வார் மோடி!
இந்தியா தனது ஜனநாயக மாண்பைக் காத்துக்கொள்ள வேண்டும் என்றால் மோடி போன்ற சர்வாதிகாரிகளும், ஆர்.எஸ்.எஸ். - பாஜக போன்ற மக்கள் விரோத கட்சிகளும் தலை தூக்காமல் பார்த்துக்கொள்வது நம்மைப் போன்ற இந்தியாவை நேசிப்பவர்களின் பிரதான கடமை
- வன்னி அரசு
21 May 2024
இந்தியா ஒரு கொடூரமான காலக்கட்டத்தில் இருக்கிறது என்பதை பல கட்டுரைகள் வாயிலாக விளக்கிக்கொண்டே இருக்கிறேன். அதற்கு ஆவணங்களாக மோடி ஆட்சியின் இந்த பத்து ஆண்டு காலத்தில் பல சம்பவங்களை இந்தியா கண்டுவிட்டது. மோடி தனது அந்திம காலத்தை எண்ணிக்கொண்டு இருக்கும் இன்றைய நாளில் கடந்த காலங்களில் மோடி செய்த அத்தனை வரலாற்று பிழைகளுக்கும் விடை கிடைத்துக்கொண்டு இருக்கின்றன. அரசியல்ரீதியாக ஒரு பாசிஸ்ட் தனது வரலாற்று சறுக்கல்களை தொடங்கிவிட்டார் என்பதை தான் மோடி அந்திம கால அரசியல் சம்பவங்கள் உணர்த்துகின்றன.
ராகுல் காந்தியின் நாடாளுமன்ற பதவி பறிப்புக்கு நீதிமன்றம் நெத்தியடி கொடுத்தது போலவே பிரபீர் வழக்கிலும் மோடியின் அரசியல் தந்திர சூழ்ச்சிக்கு வரலாற்று மரண அடி விழுந்துள்ளது. பிரபீர் வழக்கின் மூலமாக இரண்டு உண்மைகள் வெளிப்பட்டு வந்துள்ளன. மோடி - அமித்ஷா - சங்பரிவார் கும்பல், பத்திரிகையாளர்கள், பாஜக-ஆர்.எஸ்.எஸ். சித்தாந்த எதிர்ப்பு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்களை ஒடுக்குவதற்காக பயன்படுத்தும் விமர்சனங்கள் கேள்விக்குள்ளாகியுள்ளது. அதாவது, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்திற்கு எதிராக பேசுபவர்களை நகர்புற நக்சல்கள், சீனா - பாகிஸ்தான் கைக்கூலிகள், பயங்கரவாதிகள், இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள் என்றெல்லாம் சித்தரித்து கருத்துருக்களை மக்கள் மத்தியில் உலவ விட்டு பாசிச தனத்தை கட்டமைத்தார்கள். பாஜக - மோடி - சங்பரிவார் கும்பலின் இந்த போலி பிரச்சாரத்தை பிரபீர் விடுதலை இந்திய மக்களுக்கு அம்பலப்படுத்தியுள்ளது.
![]() |
பீமா கொரேகான் வழக்கு போராளிகள் - பாதிரியார் ஸ்டேன் சுவாமி உயிருடன் இல்லை |
இன்னும் உடைத்து பேச வேண்டுமென்றால், நியூஸ் கிளிக் நிறுவனரும் தலைமை ஆசிரியருமான பிரபீர் புர்கயஸ்தா மீது டெல்லி போலீஸ் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், நியூஸ் கிளிக் செய்தி நிறுவனம் சீன அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்று இந்தியாவின் ஆன்மாவைத் தகர்க்க தகவல் யுத்தத்தை செய்ததாக குற்றம்சாட்டியது. அத்துடன், நக்சலைட் - காஷ்மீர் பிரிவினைவாத அமைப்புகளுக்கு நிதி அளித்தது. கொரோனா பெருந்தொற்று, டெல்லி கலவரத்தை தூண்டியது, விவசாயிகள் எதிர்ப்பு இயக்கத்தை தூண்டியது என பல்வேறு குற்றச்சாட்டுகள் நியூஸ் கிளிக் மீது வைக்கப்பட்டன. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் நியூஸ் கிளிக் மீதானது மட்டும் அல்ல, மோடியின் சர்வாதிகாரத்தனத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் இந்தியாவின் ஆன்மா மீதானது. மோடியின் பாசிசதனத்தையும், சங்பரிவார் கும்பலில் சூழ்ச்சி வலையையும் பிரபீர் வழக்கில் உச்சநீதிமன்றம் அறுத்தெறிந்துவிட்டது. சரி இனி இந்த வழக்கின் பின்னணியை முதலில் பார்க்கலாம்.
நியூஸ் கிளிக் நிறுவனர் பிரபீர் கைது:
கடந்த ஆண்டு அக்.3ஆம் தேதி பிரபல இடதுசாரி ஊடக நிறுவனமான நியூஸ்கிளிக்கின் (NewsClick) நிறுவனரும் ஆசிரியருமான பிரபீர் புர்கயாஸ்தா அவர்களை டெல்லி காவல்துறை கைது செய்தது. இதற்காக டெல்லியில் மொத்தம் 88 இடங்களிலும், நாட்டின் பிற மாநிலங்களில் 7 இடங்களிலும் சோதனைகளை நடத்தப்பட்டது.
![]() |
தோழர் பிரபீர் புர்கயாஸ்தா |
மூத்த ஊடகவியலாளரான பிரபீர் மீது இந்திய தண்டனை சட்டம் 153A (மதம், இனம், மொழி, சாதி அடிப்படையில் பகைமையை தூண்டுதல்), 120B (சட்டவிரோத செயலுக்கு சதித்திட்டம் தீட்டுதல்) மற்றும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் (UAPA) 13 (சட்டவிரோத செயல்), 16 (தீவிரவாத செயல்), 17 (தீவிரவாத செயலுக்கு நிதி திரட்டுதல்), 18 (தீவிரவாத செயலுக்கு சதித்திட்டம் தீட்டுதல்) & 22C (சட்டவிரோத செயல் புரிந்த நிறுவனம்) ஆகிய கடும் பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
நியூஸ் கிளிக் வழக்கின் பின்னணி:
2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியூஸ் கிளிக் ஊடகத்தின் அன்னிய நேரடி முதலீட்டு செயல்பாட்டில் முறைகேடு நடைபெற்றதாக டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு (116/2020) ஒன்றை பதிவு செய்கிறது. இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிகிறது. பொருளாதார குற்றப்பிரிவு வழக்கின் எப்.ஐ.ஆர் நகல் கூட நியூஸ் கிளிக் தரப்பிற்கு தரப்படாமல் மேலும் ஒரு வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்கிறது. நியூஸ் கிளிக் அலுவலகத்திலும், நிர்வாகிகளின் வீடுகளிலும் ED சோதனை நடத்தப்படுகிறது. பின்னர் 2021ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தால் ED வழக்கிற்கு தடை விதிக்கப்படுகிறது, மேலும் தோழர் பிரபீர் கைதுக்கும் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.
தோழர் பிரபீரின் சட்டவிரோத கைது:
முந்தைய வழக்குகளுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்திள்ள நிலையில், அதே பழைய குற்றச்சாட்டை புதிய எப்.ஐ.ஆராக (224/2023) பதிவு செய்து, 2023ஆம் ஆண்டு அக்.3ஆம் தேதி மாலை கைது செய்யப்படுகிறார் பிரபீர் புர்கயாஸ்தா. அடுத்த நாள் அக். 4 காலை 6 மணியளவில் நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
முதல் நாள் மாலை கைதான பிரபீர், அடுத்த நாள் காலை ரிமாண்ட் செய்யப்படுகிறார் என்ற தகவல் அவரது வழக்கறிஞரான அர்ஷ்தீப் குராணாவுக்கு காவல்துறை தெரிவிக்கவில்லை
![]() |
கைது செய்யப்படும் தோழர் பிரபீர் |
காவல்துறையால் கொண்டு வரப்பட்ட வேறொரு வழக்கறிஞரை பிரபீரின் எதிர்ப்பையும் மீறி அவரது சார்பில் முன்னிறுத்தி நீதிபதியிடம் ரிமாண்ட் உத்தரவு வாங்கப்படுகிறது.
பிரபீர் கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்படும் வரை அவர் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார், அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகள் என்னென்ன என எந்த விவரமும் அவருக்கோ, அவரது வழக்கறிஞருக்கோ விளக்கப்படவில்லை. ரிமாண்ட் உத்தரவில் நீதிபதி காலை 6 மணிக்கு கையெழுத்திட்ட பிறகு, 7.07 மணிக்கு அவரது வழக்கறிஞருக்கு தகவல் செல்கிறது.
எப்.ஐ.ஆர். எண் 224/2023 நகல், ரிமாண்ட் செய்த நீதிபதியிடம் முறையிட்ட பின்னர், அவரது உத்தரவின் பேரில் அக். 5ஆம் தேதி மாலை தான் பிரபீர் தரப்பிற்கு தரப்படுகிறது. அவரது கைதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை அக். 13ஆம் தேதி தனி நீதிபதி துஷார் ராவ் அமர்வு தள்ளுபடி செய்கிறது. இதனையடுத்து தான் உச்சநீதிமன்றத்தை அனுகினார் பிரபீர் புர்கயாஸ்தா.
குற்றம் இழைத்த குற்றப்பத்திரிகை:
நியூஸ் கிளிக் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆவணங்களையோ ஆதாரங்களையோ முறையாக காட்டாமல் வாய்க்கு வந்ததையெல்லாம் குற்றப்பத்திரிகையில் தாக்கல் செய்தது காவல்துறை. சுறுங்க கூற வேண்டுமென்றால், நியூஸ் கிளிக் மீதான குற்றப்பத்திரிகை அனுமானங்கள் மீதானது மட்டுமே. எட்டு சாட்சிகள் அளித்த சாட்சியங்களை அடிப்படையாக மட்டுமே கொண்டிருந்தது. அதாவது, பிரபீரும் அவரது கூட்டாளிகளும், இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவித்தார்கள். சீனாவிடம் இருந்து நிதிபெற்று சதி செய்தார்கள்(தகவல் யுத்தம்) விவசாயிகள் போராட்டத்தை தூண்டிவிட்டார்கள், காஷ்மீர், நக்சலைட்டுகளுக்கு நிதி அளித்தார்கள் என்றெல்லாம் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. இது அனுமானத்தின் மீது தான் உள்ளதே தவிர ஆதாரங்களின் அடிப்படையில் இல்லை.
சீன பணமும் குதர்க்க குற்றப்பத்திரிகையும்:
நியூஸ் கிளிக், பிரபீர் மீதான குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட முக்கிய குற்றச்சாட்டு, சீனாவிடம் இருந்து 92 கோடிக்கும் மேல் பணம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. அதாவது, குற்றப்பத்திரிகையில் ஒரு முக்கிய நபராக அமெரிக்க தொழிலதிபரும் சமூக ஆர்வலருமான நெவில் ராய் சிங்கம் என்பவர் 2018 - 2023க்கு இடைப்பட்ட காலத்தில் நியூஸ்கிளிக் செயல்பாடுகளுக்காக 92 கோடிக்கும் மேல் பணத்தை சேர்த்ததாக குறிப்பிடப்பட்டது. சீனப்பணத்தை நியூஸ் கிளிக்கோ பிரபீரோ பெற்றதற்கான எந்த ஆவணங்களும் பாஜக அரசிடமோ காவல் துறையிடமோ இல்லை.
![]() |
அமெரிக்க தொழிலதிபரும் சமூக ஆர்வலருமான நெவில் ராய் சிங்கம் |
இந்தியாவில் இன - மொழி - சமூக - அரசியல்ரீதியிலான பிரிவினைகளை ஏற்படுத்த சீனா - நக்சலைட்டுகள் - காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் கூட்டு சேர்ந்து நியூஸ் கிளிக்கும் பிரபீர் புர்கயாஸ்தா சதி செய்ததாகவும், இதற்காக பிரபீர் புர்கயாஸ்தா மற்றும் சிங்கம் ஆகியோர் ஒரு சர்வதேச இடதுசாரி கூட்டணியை கட்டியதாக குற்றப்பத்திரிக்கையில் குற்றம்சாட்டப்பட்டது. இந்த சர்வதேச இடதுசாரி கூட்டணியை கட்டும் முயற்சிக்காக மின்னஞ்சல்கள் பரிமாற்றம் நடைபெற்றதாகவும், அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள மக்களையும் ஜனநாயக விழுமியங்களையும் பாதுகாக்க அனைத்துப் பிரிவினரையும் புதிய மற்றும் புதிய இயக்கங்களின் கீழ் அணி திரட்ட வேண்டும் என இந்த இடதுசாரி கூட்டணி கொள்கையை வகுத்து மின்னஞ்சல் பரிமாற்றம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அப்படி ஒரு மின்னஞ்சல் ஆவணம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவே இல்லை.
தகவல் போர் செய்தாரா பிரபீர் புர்கயாஸ்தா?
ஜம்மு - காஷ்மீர், அருணாச்சலப்பிரதேசம் இந்தியாவின் பகுதி அல்ல எனக் காட்டும் வரைபடங்களை நியூஸ் கிளிக் வெளியிட்டதாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆனால், அப்படி ஒரு தகவல் நியூஸ் கிளிக் வெளியிடவே இல்லை. இதே போல், கொரோனா பெருந்தொற்றில், மோடி, ஒன்றிய அரசுக்கு எதிராக செயல்பட்டு சீனாவின் ஆதரவாளராக நியூஸ் கிளிக் இருந்துள்ளதாக குற்றப்பத்திரிகை கூறுகிறது. அதாவது, பிரபீர் புர்கயாஸ்தா உறுப்பினராக உள்ள அகில இந்திய மக்கள் அறிவியல் வலையமைப்பு மோடியின் நடவடிக்கைகளை குறைத்து மதிப்பிட்டதாக விமர்சித்தது. இதற்கான ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை.
![]() |
மோடியை அம்பலப்படுத்தும் நியூஸ்கிளிக் கட்டுரை |
இதே போல் தான், குடியுரிமை திருத்தச்சட்டம், விவசாயிகள் போராட்டம், 2019 நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு எதிரான பிரச்சாரம், பீமா கோரேகான் கலவரம், வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட கலவரம், டெல்லி கலவரம், காஷ்மீர், மணிப்பூர் பிரச்னை என நியூஸ் கிளிக் மற்றும் பிரபீர் புர்கயாஸ்தா மீது முன்வைக்கப்பட்ட காவல் துறையின் எந்த குற்றப்பத்திரிகை தகவல்களுக்கும் அடிப்படை ஆவணங்கள் சமர்பிக்கப்படவில்லை. எல்லாம், அனுமானத்தின் அடிப்படையிலும், ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் கும்பல் பரப்பும் வாட்சப் வதந்திகளை நம்பியே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அப்ரூவர் அமித் சக்ரபர்த்தி:
தோழர் பிரபீருடன் அதே நாளில் கைது செய்யப்பட்ட அமித் சக்ரபர்த்தி நியூஸ்கிளிக் நிறுவனத்தின் மனிதவள பிரிவு தலைவராகவும், இந்த நிறுவனத்தை நடத்தும் பிபிகே நியூஸ்கிளிக் ஸ்டுடியோ நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவராகவும் உள்ளார்.
![]() |
அப்ரூவர் அமித் சக்ரபர்த்தி |
கடந்த சனவரி மாதம் ஊபா வழக்கில் விசாரணைக்கு உதவக்கூடிய ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாகவும், அதனால் அப்ரூவராக மாறுவதாகவும், , இதனால் தனக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்று மனு அளித்தார் அமித் சக்ரபர்த்தி. விசாரணை நீதிமன்றத்தால் அப்ரூவராக அங்கீகரிக்கப்பட்டு, மன்னிப்பும் வழங்கப்பட்டது.
அப்ரூவராக மாறிய நபரை அந்த வழக்கு முடியும்வரை விடுவிக்கக் கூடாது என்பது தான் சட்டம். ஆனால் அமித் தரப்போ அவருக்கு 56 வயதாகிறது, போலியோ தாக்கத்தால் அவரது உடலில் 59% முடங்கியிருப்பதால் சக்கர நாற்காலியை பயன்படுத்துகிறார் என்று வாதிட்டது.
அப்ரூவர் அமித் தரப்பு கோரிக்கைக்கு தில்லி காவல்துறை எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து நீதிமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரமான சி.ஆர்.பி.சி. பிரிவு 482ஐப் பயன்படுத்தி கடந்த மே 6 ஆம் தேதி பிணையில் விடுவிக்கப்பட்டார் அமித் சக்ரபர்த்தி. அந்த தீர்ப்பில் குற்றஞ்சாட்டப்பட்டவரின் உடல்நிலையையும் மனிதநேயத்தோடு கருத்தில் கொண்டு விடுவிப்பதாக சொன்னது நீதிமன்றம்.
பாஜகவின் பொய் விமர்சனங்கள்:
பார்க்கின்சன்ஸ் நோயால் அவதியுற்று, தண்ணீர் பாட்டிலை கூட கைகளால் பிடிக்க முடியாமல், குடிப்பதற்கு ஸ்ட்ரா (straw) கேட்டார் 84 வயதான பாதிரியார் ஸ்டேன் சுவாமி. ஆனால் அதனை கொடுக்க மறுத்தது என்.ஐ.ஏ. நீதிமன்றம். பல மாத சட்டப்போராட்டத்துக்கு பின்னரே அவருக்கு ஸ்ட்ரா கொடுக்கப்பட்டது. பின்னர் சிறையிலேயே நிறுவன படுகொலை செய்யப்பட்டார்.
![]() |
பேராசிரியர் சாய்பாபா |
சமீபத்தில் ஊபா வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட 58 வயதான பேராசிரியர் சாய்பாபா, 90% உடலில் செயல்பாடுகள் முடங்கியுள்ள நிலையிலும் அவருக்கு பிணையோ, மருத்துவ சிகிச்சையோ மறுக்கப்பட்டது. 10 ஆண்டுகள் சிறைக் கொட்டடியில் இருந்த சாய்பாபாவை இருமுறை நாக்பூர் உயர்நீதிமன்றம் நிரபராதி என்று அறிவித்த பின்னர் தான் விடுவிக்கப்பட்டார்.
பாஜக ஆட்சி காலத்தில் மட்டும், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட எல்லோர் மீதும் இதுபோன்ற என்னென்ற அவதூறு குற்றச்சாட்டுகள் தான் முன்வைக்கப்பட்டுள்ளன. தேசத்திற்கு எதிராக பேசினார்கள். சீனாவின் கைக்கூலி, பிரிவினைவாதிகள், நகர்புற நக்சலைட்டுகள் என்று எத்தனை எத்தனை குற்றச்சாட்டுகளுடன் தானே சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் கொடிய ஆட்சியைக் கேள்விக் கேட்பவர்கள் மேலே குறிப்பிட்ட ஏதேனும் ஒரு குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக பாஜக கைது செய்த மக்கள் ஜனநாயகவாதிகளின் சமூக விடுதலை பங்களிப்புக்கு ஆதரவாக அமைந்துள்ளது பிரபீர் விடுதலை வழக்கு.
![]() |
சிறையிலிருந்து விடுதலையான பிரபீர் புர்கயாஸ்தா |
2004 முதல் 2014 வரை 112 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி 5,346 கோடி மதிப்பிலான சொத்துகளைக் கைப்பற்றியது. ஆனால், பாஜக ஆட்சியில் 2014 முதல் 2022 வரையிலான எட்டு ஆண்டுகளில் 310 சோதனைகளை நடத்தி கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
கடந்த எட்டு ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிரான அமலாக்கத்துறையின் வழக்குகள் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் கடந்த ஆண்டு செய்தி வெளியிட்டிருந்தது. 2014 மற்றும் 2022க்கு இடையில், 121 உயர்மட்ட தலைவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. 115 தலைவர்கள் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள். அதாவது 95% வழக்குகள் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதுதான். ஆக மொத்தத்தில், எதிர்க்கட்சிகளை முடக்கவும், சமூக ஆர்வலர்கள் மக்கள் நலன் சார்ந்து போராடுவதை முடக்குவதையுமே நோக்கமாக கொண்டு செயல்படுகிறது.
பிரபீர் வழக்கு போல், மீதம் உள்ள வழக்குகளிலும் முறையான விசாரணை நடத்தப்பட்டால் பாஜகவின் முகத்திரைக் கிழியும். புலனாய்வு அமைப்புகளும், அமலாக்கத்துறையும் வருமான வரித்துறையும் சி.பி.ஐ உள்ளிட்ட ஒன்றிய புலனாய்வு அமைப்புகள் மோடியின் வேட்டை நாய் போலத்தான் இருக்கின்றன. பிரபீர் வழக்கு மோடியின் வேட்டை நாய்களின் பல்லை உடைத்துள்ளது. இறுதியில், மோடியின் மொத்த முகத்திரையுமே விரைவில் கிழியும். விடுதலை சிறுத்தைகள் போல் இந்தியாவின் பல்வேறு ஜனநாயக சக்திகளும் மோடிக்கு எதிராக போராடத் தொடங்கிவிட்டன. இந்த போராட்டத்தின் மூர்க்கத்திற்கு முன் மோடி தொடை தெறிக்க ஓடிக்கொண்டு இருக்கிறார். மோடியின் இறுதி முடிவு மிகவும் கொடூரமாக இருக்கும் என்பதை காலம் விரைவில் இந்திய மக்களுக்கு உணர்த்தத்தான் போகிறது.
- வன்னி அரசு
10 May 2024
2013ஆம் ஆண்டு ஆக.20ஆம் தேதி பூனாவில் காலை நடைபயிற்சியின் போது இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார் பகுத்தறிவாளர் Dr.நரேந்திர தபோல்கர்.
மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும், சாதிய கொடுமைகளுக்கு எதிராகவும் களம் கண்டவர் நரேந்திர தபோல்கர். அவரின் கொலைக்கு பிறகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூடநம்பிக்கைகளுக்கு எதிராக தனிச்சட்டத்தை நடைமுறைப்படுத்தியது மராட்டிய மாநில அரசு.
![]() |
பகுத்தறிவாளர் தபோல்கரை தொடர்ந்து நாடு முழுவதும் அடுத்தடுத்து சிந்தனையாளர்கள் சனாதன தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் 2015ஆம் ஆண்டு பிப். 16ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கோவிந்த் பன்சாரே அவரது மனைவியுடன் சுடப்பட்டார்.
சனாதன கும்பலால் இந்து மன்னராக கட்டமைக்கபட்ட சிவாஜியின் உண்மை வரலாற்றை, அவரின் மதவெறி இல்லாத செயல்பாட்டை ‘யார் இந்த சிவாஜி?’ என்று தலைப்பிட்டு வாழ்க்கை வரலாற்று நூலாக எழுதி வெளிக்கொண்டு வந்தவர் பன்சாரே.
![]() |
தோழர் கோவிந்த் பன்சாரே |
நான்கு நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு பிப்.20ஆம் தேதி உயிரிழந்தார். தபோல்கரின் படுகொலையைப் போன்று அதே பாணியில் பன்சாரேவின் கொலையும் அரங்கேற்றப்பட்டது.
பன்சாரேவை தொடர்ந்து அவரது நண்பரும் சீர்திருத்தவாதியுமான 77 வயதான எம்.எம்.கல்புர்கி கர்நாடகாவின் தாரவாட்டில் அவரது வீட்டிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். ஹம்பி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தராக இருந்ததோடு கன்னட சமூகத்தில் நிலவும் பார்ப்பனிய பண்பாட்டுக்கு எதிராக கலகம் செய்தவர் பேராசிரியர் கல்புர்கி.
![]() |
பேராசிரியர் கல்புர்கி |
கல்புர்கியை தொடர்ந்து நாடறிந்த பத்திரிகையாளரும் செயற்பாட்டாளருமான 55 வயது கவுரி லங்கேஷ் அவரது வீட்டு வாசலில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று சனாதன தீவிரவாதிகளால் 2017ஆம் ஆண்டு செப்.5ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
![]() |
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் |
தபோல்கர் கொலை வழக்கில் ஐந்து பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ.
சனாதன் சன்ஸ்தாவின் கிளை அமைப்பான ஹிந்து ஜன ஜக்ருதி சமிதியின் துணை தலைமை ஒருங்கிணைப்பாளர் பல் மருத்துவரான விரேந்திரசிங் தாவ்டே, சனாதன் சன்ஸ்தா வழக்கறிஞர் சஞ்சீவ் பூனலேகர், அவரது உதவியாளர் விக்ரம் பாவே, தபோல்கரை துப்பாக்கியால் சுட்ட சச்சின் அந்துரே மற்றும் சரத் கலாஸ்கர்.
Dr.நரேந்திர தபோல்கர், கோவிந்த பன்சாரே, எம்.எம்.கல்புர்கி மற்றும் கவுரி லங்கேஷ் என இந்த நால்வரின் படுகொலைகளையும் திட்டமிட்டு அரங்கேற்றியவர்கள் சனாதன பயங்கரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவின் உறுப்பினர்கள் தான் என்பது விசாரணையில் அம்பலமானது.
மருத்துவர் தாவ்டே தான் தபோல்கர் படுகொலைக்கு மூளையாக செயல்பட்டவன் கம்யூனிஸ்ட் தலைவர் பன்சாரே கொலை வழக்கிலும் தாவ்டே கைது செய்யப்பட்டு, அவன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தபோல்கரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சச்சின் அந்துரே மற்றும் சரத் கலாஸ்கர் ஆகிய இருவருக்கும் தான் ஆயுள் தண்டனை விதித்து பூனாவில் அமைந்துள்ள ஊபா சிறப்பு நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளித்துள்ளது.
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் முக்கிய நபராக இருப்பவன் சரத் கலாஸ்கர். அவனது அறையில் தான் லங்கேஷ் கொலைக்கு சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும், லங்கேஷை சுட்ட சனாதன தீவிரவாதிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சியும் அளித்தவன் என்றும் குற்றப்பத்திரிகை உள்ளது.
இந்த கலாஸ்கரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் சனாதன் சன்ஸ்தா வழக்கறிஞர் பூனலேகர், அவனது உதவியாளரும் கைது செய்யப்பட்டனர்.
![]() |
வீரேந்திரசிங் தாவ்டே |
நான்கு முற்போக்காளர்களும் வெவ்வேறு காலகட்டத்தில் கொல்லப்பட்டிருந்தாலும், அனைவரும் 7.65 மி.மீ நாட்டு துப்பாக்கி பயன்படுத்தி தான் கொல்லப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக கல்புர்கி மற்றும் கவுரி லங்கேஷ் கொலை இரண்டும் ஒரே துப்பாக்கியால் நடைபெற்றது என்கிறது தடயவியல் ஆராய்ச்சி குழு.
இந்த நாட்டு துப்பாக்கியை தான் அழித்துவிடும்படி கலாஸ்கருக்கு உத்தரவிட்டது தான் வழக்கறிஞர் பூனலேகர் மீதான குற்றச்சாட்டு.
கவுரி லங்கேஷ் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான அமோல் காலே என்பவன் சனாதன் சன்ஸ்தாவின் ஹிந்து ஜன ஜக்ருதி சமிதியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவன், இன்னொரு குற்றவாளியான அமித் தேக்வேகார் சனாதன் சன்ஸ்தாவின் ஊழியராக இருந்தவன்.
நான்கு முற்போக்காளர்களின் வழக்கிலும் சனாதன் சன்ஸ்தா எனும் ஒரே தீவிரவாத கும்பலைச் சேர்ந்தவர்கள் தான் ஈடுபட்டுள்ளனர். நான்கு வழக்குகளிலும் உள்ள குற்றப்பத்திரிகைகள் அதை தான் அம்பலப்படுத்துகிறது.
இன்று ஊபா சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு இந்த படுகொலைகளுக்கு மூளையாக செயல்பட்ட சனாதன் சன்ஸ்தா அமைப்பின் தலைவன் தாவடே, அதன் வழக்கறிஞர் சஞ்சீவ் பூனலேகர், உதவியாளர் விக்ரம் பாவே ஆகியோரை போதிய சாட்சிகள் இல்லை என்று விடுவித்ததை ஏற்கமுடியாது. எந்தவித ஆதாரமுமின்றி பீமாகொரேகான், டெல்லி கலவரம் உள்ளிட்ட வழக்குகளில் அப்பாவிகள் சிறையில் உள்ள நிலையில், திட்டமிட்டு தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
![]() |
நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சனாதன் சன்ஸ்தா தீவிரவாதிகள் விரேந்திரசிங் தாவ்டே, சஞ்சீவ் பூனலேகர் மற்றும் விக்ரம் பாவே |
இந்து மதத்துக்கு எதிராக செயல்படும் தபோல்கரை கொல்லும்படி தாவடே தான் நேரடியாக தன்னிடம் தெரிவித்தார் என்று நீதிமன்றத்தில் சொல்லியுள்ளான் துப்பாக்கியால் சுட்ட கலாஸ்கர்.
2015 ஆகஸ்ட் தொடங்கி 2022 திசம்பர் வரை உயர்நீதிமன்ற மேற்பார்வையில் நடைபெற்று வந்தது தபோல்கர் வழக்கு. குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் எதிர்ப்பையடுத்து, வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று சொல்லி உயர்நீதிமன்ற மேற்பார்வை விலக்கிக்கொள்ளப்பட்டது.
இந்துக்களுக்கு எதிரானவர்களையும், சனாதன தர்மத்தை எதிர்ப்பவர்களையும் கொல்ல வேண்டும் என்று கூலிப்படையை ஏவி கொலை செய்வதே இவர்கள் அமைப்பின் திட்டம் என்று தபோல்கர் வழக்கில் குற்றஞ்சாட்டியது சிபிஐ.
![]() |
பீமா கொரேகான் வழக்கில் சிறைப்படுத்தப்பட்டுள்ள போராளிகள் |
முன்னர் சனாதன பயங்கரவாதிகளால் அறங்கேற்றப்பட்ட சிந்தனையாளர்களின் கொலைகளை அடுத்து, இப்போது ஊபா சட்டத்தின் கீழ் பல ஆண்டுகளுக்கு எந்தவொரு விசாரணையும் இல்லாமல் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் இஸ்லாமிய இளைஞர்கள் என அனைவரையும் சிறையிலடைத்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு.
- வன்னி அரசு