05 July 2021
02 July 2021
19 June 2021
29 May 2021
எந்த மாநிலத்திலும் மக்கள் அமைதியாக நிம்மதியாக வாழ்ந்து வருவது பாஜகவிற்கு பிடிக்காது போல, அதிலும் யூனியன் பிரதேசங்கள் ஆக இருந்தால் எளிதாக தங்களுடைய சர்வாதிகாரத்தை நிலை நாட்ட முனைகிறது ஆளும் பாஜக அரசு.
ஏற்கனவே காஷ்மீர் மாநிலத்தை அந்த மக்களின் உணர்வுகளுக்கு எதிராக சிதைத்துப் போட்டது மோடி தலைமையிலான பாஜக. சிறப்பு அதிகாரமான 370 ரத்து செய்து ‘காஷ்மீரி’ எனும் தேசிய இனத்தை அழித்து வருவதை பார்த்தோம். அதேபோல இப்போது லட்ச தீவுக்குள் தமது இந்துத்துவ கவனத்தை செலுத்தி வருகிறது பாஜக. லட்சத்தீவு மக்கள் இப்போது தமது உரிமைகளை பாதுகாக்க போராடிக்கொண்டிருக்கிறார்கள். பக்கத்து கேரள மாநில மக்களும் ‘சேவ் லட்சத்தீவு’ என்னும் முழக்கத்தோடு போராடி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் லட்சத் தீவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி பிரஃபுல் கோடா பட்டேல் நீக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
லட்சத்தீவில் என்னதான் நடக்கிறது?
என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு முன் அந்த தீவு குறித்து தெரிந்து கொண்டால்தான் பாஜக ஆர்எஸ்எஸ் வகையறாக்களின் சதி பின்னணி தெரியும்.
பொதுவாக நமது சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளர்கள் 2 லட்சத்திற்கும் குறைவில்லாமல் இருப்பார்கள்.ஆனால் லட்சத்தீவில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 65 ஆயிரத்து 473 பேர் தான் வசித்து வருகிறார்கள்.அதாவது நமது தொகுதிகளில் கால்வாசி பேர் தான் லட்சத்தீவில் வசித்து வருகிறார்கள்.
இசுலாமியர்கள் 96.58 சதவீதம் பேர்,
கிறிஸ்தவர்கள் 0.49சதவீதம் ,
இந்துக்கள் 2.7 சதவீதம் பேர் வசித்து வருகிறார்கள்.
மதம் வேறு வேறாக இருந்தாலும் அத்தனை மக்களும் பழங்குடியினர்கள் தான்.
பேசுகிற மொழி மலையாளம், ஆங்கிலம் என இருந்தாலும் வட்டார மொழிகளான திவெகி, ஜெசரி தான் அதிகம் பேசப்படுகிறது. விவசாயம் அங்கே இல்லை. அதனால் மீன்பிடித் தொழிலும் தேங்காய் வியாபாரமும் தான் மக்களின் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை.
கடந்த டிசம்பர் 5,2020 வரை அமைதியாக நிம்மதியாக இருந்த லட்சத்தீவு இப்போது தீவைச் சுற்றியுள்ள கடல் அலைபோல கொந்தளித்து நிம்மதி இழந்து வருகிறது.
பிரஃபுல் கோடா பட்டேல் தான் கடந்த டிசம்பர் மாதம் அந்த தீவில் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக மோடி அரசால் நியமிக்கப்பட்டார். பொதுவாக லட்சத்தீவு போன்ற யூனியன் பிரதேசங்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற அதிகாரிகள்தான் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்படுவார்கள்.
ஆனால், மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது தாம் நினைப்பதை செய்யக் கூடியவராக இருந்த இந்த பட்டேலை லட்சத்தீவுக்கு அனுப்பி வைத்திருப்பதுதான் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
யார் இந்த பிரஃபுல் கோடா பட்டேல்?
முதலில் இவர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முழுநேர ஊழியர்.
2007 ஆம் ஆண்டு பாஜக சார்பில் குஜராத் ஹிமத் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2010ஆம் ஆண்டு குஜராத்தில் பரபரப்பாக பேசப்பட்ட வழக்கு 'ஷெராபுதின் போலி என்கவுண்டர்’ வழக்கின் பின்னணியில் அன்றைய குஜராத் மாநில உள்துறை அமைச்சர் அமித் ஷா கைது செய்யப்பட்டார். அமித்ஷாவுக்கு பதிலாக இந்த பிரஃபுல் கோடா பட்டேல் அமைச்சராக நியமிக்கப்பட்டார் அதற்குப் பிறகுதான் குஜராத் மாநிலத்தில் நிறைய இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இஸ்லாமியர் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வேட்டையாடப்பட்டனர். அதற்குப் பின் 2012ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பட்டேல் தோல்வி அடைந்தார். மோடி இந்திய ஒன்றியத்தின் தலைமை அமைச்சராக 2014ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு இந்த பிரஃபுல் பட்டேல், டையூ-டாமன் யூனியன் பிரதேசத்திற்கு தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். அங்கு போனவர் சும்மா இருந்தாரா என்றால் அதுவும் இல்லை.
பிரஃபுல் பட்டேல் நிர்வாக தலைவராக உள்ள டாமன் & டியூ யூனியன் பிரதேசத்தில் ஏழு முறை எம்பியாக இருந்தவர் மோகன் டேல்கர்.
2021 பிப் 22 அன்று மும்பையில் ஒரு ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை கடிதத்தில் பிரஃபுல் பட்டேல் தான் அவரது தற்கொலைக்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் டாமன் பகுதி அதிகாரிகள், அரசியல்வாதிகள் பலரது பெயரையும் குறிப்பிட்டு, பிரஃபுல் பட்டேல் தூண்டுதலின் பேரில் அவர்கள் மிரட்டியதாக சொல்லியுள்ளார். மோகன் டேல்கர் இறக்கும்போதும் எம்பியாக இருந்தார்.
இவரது தற்கொலை வழக்கில் பிரஃபுல் பட்டேல் உட்பட 9 பேர் மீது தற்கொலைக்கு தூண்டிய வழக்கை மும்பை போலீஸ் பதிவு செய்துள்ளது . மோகனின் மகன் அபினவ் டேல்கர் மராத்திய முதல்வர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து, தனது தந்தையின் மரணத்துக்கு முழுமுதற் காரணம் பிரஃபுல் பட்டேல் தான் என்றும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளார். பிரஃபுல் பட்டேல் தனது தந்தையிடம் 25 கோடி கேட்டு மிரட்டியதாகவும், அவரது கல்லூரியை அபகரிக்க திட்டமிட்டதாகவும் புகாரளித்துள்ளார். மேலும், டாமனில் இறந்தால் தனது மரணம் மூடி மறைக்கப்படும் என்று அஞ்சியே, திட்டமிட்டு மும்பைக்கு வந்து அப்பா தற்கொலை கொண்டுள்ளார் என்று அபினவ் குறிப்பிட்டுள்ளார்.
அப்படிப்பட்ட கொலைச்சதியுடையவரை, மிரட்டி பணம் பறிப்பவரை தான்
இப்போது கூடுதலாக லட்சதீவிலும் பொறுப்பு கொடுத்து அழகு பார்க்கிறார் மோடி.
அதாவது ஐஏஎஸ் அதிகாரிகள் நிர்வாகம் பார்க்கவேண்டிய பொறுப்புகளை முதன்முறையாக ஒரு அரசியல்வாதிக்கு அளித்த பெருமை மோடிக்கே சேரும். அதுவும் ஆர்எஸ்எஸ் போன்ற சமூக விரோத அமைப்புக்கு கொடுத்த பெருமைக்குரியவர் மோடி.
சரி இந்த பிரஃபுல் கோடா பட்டேல் என்ன சட்டங்களை பிறப்பித்தார் ? எதற்காக இவ்வளவு எதிர்ப்பு ?
ஏன் அவர் திரும்ப பெறவேண்டும்? எனும் கேள்விகளுக்கு விடை தேடுவதற்கு முன்பு லட்சத்தீவு குறித்து கொஞ்சம் அறிந்தால்தான் பாஜக ஆர்எஸ்எஸ் கும்பலின் சதி நமக்கு புரியும்.
லட்சத்தீவில் பெரும்பான்மை அளவில் இசுலாமியர் தான் வசிக்கிறார்கள். இந்துக்கள், கிறிஸ்தவர்கள் வசித்தாலும் எல்லோரும் தாயாய் பிள்ளையாய் தான் வாழ்கிறார்கள். பெரிதாக குற்ற வழக்குகள் அங்கே இல்லை. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அடிப்படையில் 2017ஆம் ஆண்டு 8 வழக்குகளும் 2018-ல் 6 வழக்குகளும் 2019ஆம் ஆண்டு 16 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் 12 வழக்குகள் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது போடப்பட்ட வழக்குகள். 2019-ம் ஆண்டு போதைப்பொருட்கள் வைத்திருந்ததாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மற்றபடி லட்சத்தீவில் பெரிதாக எந்த குற்றச் செயலும் நடந்ததில்லை.
பங்காராம் எனும் ஒரே தீவில் மட்டும் தான் மதுவுக்கு அனுமதி. மற்றபடி லட்சத்தீவில் வேறு எங்கும் அனுமதி இல்லை. பிற மாநிலத்தவர் லட்சத்தீவில் துண்டு நிலத்தைக் கூட விலைக்கு வாங்க முடியாது. ஏனெனில் இது பழங்குடிகளின் பூர்வீக மண். இவர்களுக்கு உணவு மாட்டுக்கறி தான். பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவில் ஆட்டுக் கறியும், கோழிக்கறியும் கொடுக்கப்பட்டு வந்தது. இதன் மூலம் அந்த மக்களின் உணவு முறையை புரிந்து கொள்ளலாம்.
இப்படியான அழகு பூமியை தான் பல சட்டங்களைக் கொண்டு வந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது பாஜக அரசு.
சட்டங்கள் என்ன?
1. LDAR - Lakshadweep Development Authority Regulation - அதாவது லட்சத்தீவு மேம்பாட்டு ஆணைய ஒழுங்குமுறை வரைவு 2021 என்னும் பெயரில் ஒரு சட்டத்தில் திணித்து உள்ளது. இதன் மூலம் நிலங்களை அரசு எடுத்து வளர்ச்சிக்காக யாரிடமும் கொடுக்கலாம் யார் வேண்டுமானாலும் தொழில் செய்ய நிலங்களை வாங்கி குடியேறலாம்.
2. விலங்குகள் பாதுகாப்பு சட்டம் 2021 (Lakshadweep Animal Preservation Regulation) சட்டத்தின் மூலமாக மாட்டுக்கறி வைத்திருந்தால் சிறை. அதுவும் ஓராண்டில் இருந்து 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை. ஒரு லட்சத்திலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதத்தொகை வசூலிக்கப்படும். பள்ளிகளில் அசைவ உணவு கிடையாது. சைவம் தான் ஆடு மாடு என எதையும் இறைச்சிக்காக கொல்லக்கூடாது. இச்சட்டத்தின் உள்நோக்கத்தை யார் வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம். அதாவது இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் லட்சத்தீவில் மாட்டுக்கறி தான் பிரதான உணவாக வணிகமாக வைத்திருக்கிறார்கள். இதைத் தடுப்பது தான் இச்சட்டத்தின் முக்கிய நோக்கம்.
3. பஞ்சாயத்து ஒழுங்குமுறை வரைவு (Draft Lakshadweep Panchayat Regulation, 2021) மூலமாக இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் பங்கேற்க முடியாது. இந்த வரைவும் இஸ்லாமியர்களை குறிவைத்து தான் கொண்டு வரப்பட்டது என குழந்தைகளுக்கு கூட புரியும்.
4. சமூக விரோத செயல்கள் தடுப்புச் சட்டம் 2021 (Lakshadweep Anti social Activity Regulation) இதன்மூலம் யாரை வேண்டுமானாலும் கைது செய்து ஓராண்டு வரை சிறை படுத்தலாம். பொதுவாக லட்சத்தீவில் குற்றச்செயல்கள் குறைவாகத்தான் உள்ளன. இதை தேசிய குற்ற ஆவண காப்பகமே தெளிவுபடுத்தியுள்ளது. அப்படி இருக்கும்போது இச்சட்டம் எதற்காக? யாரை அச்சுறுத்த எனும் கேள்விகள் தொடர்கின்றன. சட்டங்கள் மட்டுமல்லாது கடற்கரை ஒழுங்குமுறை சட்டத்தின் மூலமாக காலம்காலமாக கடற்கரையில் கூடாரங்கள் அமைத்து மீன்பிடி தொழில் செய்து வரும் பழங்குடிகளின் கூடாரங்களை அடித்து அழித்து உள்ளனர். அங்கு புதிதாக சுற்றுலாவுக்கான கட்டிங்களை எழுப்ப முயற்சித்து வருகிறது பாஜக அரசு. இவை மட்டுமல்லாது ஆசிரியர்கள் பணிநீக்கம், அங்கன்வாடி கடைகள் மூடல், ஒப்பந்த தொழிலாளர்கள் நீக்கம் இப்படி நீண்ட காலமாக அரசு பணியில் இருப்பவர்களை நீக்கியுள்ளது பாஜக அரசு. குறிப்பாக பால் பண்ணைகளை இழுத்து மூடி உள்ளது. அப்படியானால் பாலுக்கு என்ன செய்வது? என்று கேட்டால் குஜராத்திலிருந்து பால் இறக்குமதி செய்வோம் என்று சொல்கிறது லட்சத்தீவு நிர்வாகம். இப்படி ஏகப்பட்ட குளறுபடிகளை நிர்வாக அதிகாரியாக பொறுப்பு ஏற்றதில் இருந்து ஏற்படுத்தியுள்ளார் மோடியின் நண்பர் பிரஃபுல் கோடா பட்டேல்.
எதற்காக லட்சத்தீவு குறி வைக்கப்படுகிறது?
கடந்த 2007, 2008ஆம் ஆண்டு மலேகான் குண்டுவெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு, சம்சவுதா ரயில் குண்டு வெடிப்பு சம்பவங்களில் கைதானவர்களில் முக்கியமானவர்கள் அசீமானந்தா சாமியாரும் பிரக்யா சாமியாரும் ஆவர். இவர்கள் இருவருமே ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சார்ந்தவர்கள். அசீமானந்தா, பழங்குடி மக்களிடம் பணி செய்வதற்காக அனுப்பப்பட்டவன். குறிப்பாக அந்தமான் தீவுக்கு அனுப்பப்பட்டு பழங்குடி மக்களில் பலரை படுகொலை செய்தான். 'கர்வாப்சி' நிகழ்ச்சி நிரலுக்கு பல தேவாலயங்களை அழித்து படுகொலைகளை முன்னின்று நடத்தியவன். அதன் பின்புதான் குண்டுவெடிப்பு சம்பவங்களில் அசீமானந்தா கைது செய்யப்பட்டான். இப்படி பழங்குடிகளை இஸ்லாமியர்களை அழிப்பதற்கு ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சார்பில் சட்டத்திற்குப் புறம்பாக அசீமானந்தா போன்றோரை அனுப்பி வைத்தார்கள். இப்போது ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் நேரடியாக நிர்வாக அதிகாரியாக நியமித்து சட்டத்தின்படி படுகொலைகளை நடத்துகிறது பாஜக அரசு. காஷ்மீரத்தை எப்படி சிதைத்ததோ அதே போல லட்சத்தீவையும் சிதைப்பது தான் பாஜகவின் சதித் திட்டம்.
இதற்கு முழு காரணம் அந்த தீவை கார்ப்பரேட்டுகளிடம் வணிகத்திற்காக ஒப்படைப்பது தான். அதுவும் குறிப்பாக இஸ்லாமியர்கள் வசிக்கும் அந்த தீவை அதானி மாதிரியான கார்ப்பரேட் கும்பலிடம் ஒப்படைப்பதுதான் பாஜகவின் சதித்திட்டம். இதற்கான செயல் அதிகாரி தான் இந்த பிரஃபுல் கோடா பட்டேல். மோடி தான் தலைமை அதிகாரி. 65 ஆயிரம் மக்கள் உள்ள லட்சத்தீவில் கடந்த 2004 நாடாளுமன்றத் தேர்தலில் 187 வாக்குகளை தான் பாஜக பெற்றது.2019 நாடாளுமன்ற தேர்தலில் 125 வாக்குகள்தான் பாஜக பெற்றது. நோட்டாவை விட குறைவான வாக்குகளைப் பெற்றது பாஜக.
ஜனநாயக ரீதியாக லட்சத்தீவில் எதுவும் செய்ய முடியாத அவலத்தில், கோபத்தில் இப்படி மக்களை பழி வாங்குவது சரியா? சனநாயகத்தை அழித்தொழிப்பது சரியா?
வன்னி அரசு
28.5.2021
13 February 2021
21 September 2020
05 September 2020
27 May 2015
பண்புடை யாளர் தொடர்பு (குறள் 783 - நட்பு-பொருட்பால்)
இப்போது அந்தக் கலகலப்பு காணாமல் போய்விட்டது. அந்தச் சிரிப்பு சிதைந்துபோய் விட்டது. எப்போதும் எல்லோருக்கும் நலன்தரும் அந்தத் தோப்பு சாய்ந்துவிட்டது. அந்தக் கப்பல் கவிழ்ந்துவிட்டது. அன்பைச் சுமந்து பயணித்த அந்த உடல் புதைக்கப்பட்டுவிட்டது. இவ்வளவுகாலம் எங்களோடு பயணித்த அந்த மாமனிதர் இப்போது எங்களுடன் இல்லை. அவரது நினனவுகளைச் சுமந்துகொண்டே பயணித்தாலும் பாரம் தாங்க முடியவில்லை. சோகம் அழுத்திக்கொண்டே இருக்கிறது. திடீர் திடீரென கண்கள் கண்ணீரை வாரி இரைக்கின்றன. வலிமை மிகுந்த இதயம் வலிப்பதுபோல் இருக்கிறது. எப்போதும் ஊக்கப்படுத்திக்கொண்டே இருக்கும் அந்த மாமனிதர் இப்போது எங்களோடு இல்லை. அவர் இருக்கும் இடத்தில் கவலையும் சோகமும் காணாமல் போய்விடும்.
ஆம்... இப்போது வெற்றிச்செல்வன் காணாமல் போய்விட்டார். கவலையும் துக்கமும் நம்மைச் சூழ்ந்துகொண்டன. யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாத அந்த மாமனிதனை வாரிக்கொடுத்துவிட்டு நடைப்பிணமாக நடமாடிக் கொண்டிருக்கிறோம்.
சென்னை, அசோகர் நகர், 100 அடிச்சாலையில், விடுதலைச் சிறுத்தைகளின் திடலில்தான் அந்த மனிதரை முதன்முதலில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது எழுச்சித்தமிழரின் களப்பணியில் கால் நூற்றாண்டு விழா பணிகளில் மூழ்கியிருந்தேன். சிறப்பு மலர் தயாரிப்புக்காக திடலிலேயே இரவு பகல் தங்கி பணி செய்துகொண்டிருந்த சூழலில், ஒரு நாள், "நான் மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன் தோழர்" என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி, ஆனால் மார்க்சியச் சித்தாந்தத்தை உள்வாங்கியதோடு, சிறுத்தைகளில் தன்னை இணைத்துக்கொண்டதைப் பெருமையாகச் சொன்னார். 'களப்பணியில் கால் நூற்றாண்டு' மாநாட்டுக்காக அவர் செய்த விளம்பரங்கள்தான் அனைத்துச் சிறுத்தைகளையும் அவரை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தன. அந்த அளவிற்கு தன்னுடைய பெயர்தாங்கிய கட்-அவுட்கள், பதாகைகள், சுவரொட்டிகள், செய்தித்தாள் விளம்பரங்கள் என்று சென்னையையே மிரள வைத்தவர்.
தலைவர் மீதும் கட்சியின் மீதும் அடங்காப் பற்றுக்கொண்டவர். தலைவருடைய செயல்பாடுகளை எப்போதும் பெருமையாகப் பேசிக்கொண்டேயிருப்பவர். அவரின் இந்த உணர்வுதான் வெற்றிச்செல்வனோடு எனக்கு நெருக்கத்தை ஏற்படுத்தியது. ஆண்டுக் கணக்கு ஆறேழு ஆண்டுகளேயானாலும், அறுபது ஆண்டுகால நட்பைப் போல அது மாறியது. உற்ற தோழனாக, நம்பிக்கை நண்பனாக, கட்சியிலும், கட்சிக்கு வெளியிலும் பெருமையாகப் பேசிக்கொள்ளும் வகையில் எங்கள் நட்பு இறுக்கமானது. எனது வாழ்வில் நம்பிக்கைக்குரிய நண்பனாக வெற்றிச்செல்வன் முன்நின்றார். என்னை எங்குமே அவர் விட்டுக்கொடுத்ததில்லை. எனக்காக வாதாடுவார். நான் எங்காவது தவறுதலாகப் பேசியிருந்தால்கூட, "யோவ் ஏன்யா இப்படி பண்ற?" என்று உரிமையுடன் கண்டிப்பார், திட்டுவார்.
அடுத்த 15 நிமிடங்களில் தம்பி அகரனிடமிருந்துதான் அந்தத் துயரச் செய்தியைக் கேள்விப்பட்டேன். 'அடப்பாவி இப்போதுதானே பேசினேன். அதெப்படி அதற்குள் இந்தக் கொடூரம் நடந்திருக்கும்' என்று துடிதுடித்தவாறு வெற்றிச்செல்வன் எண்ணுக்குத் தொடர்புகொண்டேன். தொலைபேசியை எடுத்து, 'என்ன தலதளபதி?' என்று மீண்டும் என்னைக் கலாய்க்க மாட்டாரா? என்று ஏங்கியபடி காத்திருந்தேன். அவரது தொலைபேசியிலிருந்து அந்த அம்மா பாடல் 'ரிங்டோன்'தான் கேட்டுக்கொண்டேயிருந்தது. அவர் எந்த அம்மாவை நேசித்தாரோ அந்த அம்மாவைத் தேடியே போய்விட்டார். நானோ அனாதையாகிவிட்டேன்.
பொதுவாக அரசியல் என்பதே போட்டி நிறைந்ததுதான். காட்டிக்கொடுப்புகளும், காலை வாரிவிடுவதும்தான் நான் கடந்த 20 ஆண்டுகளாகச் சந்தித்துவரும் அரசியல். யாரையும் நம்ப முடியாது. எல்லோரையும் நாம் நேசித்தாலும் நம்மை நேசிக்க யாரும் இருக்க மாட்டார்கள். இந்தச் சூழலில்தான் உண்மையான அன்பையும், நட்பையும், கள்ளம் கபடமில்லாச் சிரிப்பையும் சுமந்த ஒரு மாமனிதர் கிடைத்தாரென்றால் அவர் மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன்தான். தவறுகளை நேருக்கு நேராகச் சுட்டிக்காட்டும் துணிச்சல்காரர். அதேபோல்தான் அண்ணன் தகடூர் தமிழ்ச்செல்வன் அவர்களும். நாங்கள் மூவரும் இணைந்து கட்சிப் பணிகளை, தலைவர் கட்டளையிட்ட பணிகளைச் செய்துவந்தோம். அரசியலில் உண்மையாய் இருப்பது சிரமம். ஆனால் நாங்கள் மூவரும் ஒருவருக்கொருவர் உண்மையாய், நம்பிக்கையாய் இருந்தோம். அரசியலில் மட்டுமல்ல, வீட்டு நிகழ்வுகளையும் அப்படியே பகிர்ந்துகொண்டோம்.
பாம்புகளும் ஓநாய்களும் நரிகளும் சிங்கங்களும் உலவுகிற இந்த அரசியல் உலகில் நல்ல மனிதராக வாழ்ந்தவர் வெற்றிச்செல்வன். அவதூறுகளும், அவமதிப்புகளும், துரோகங்களும், ஏமாற்றங்களும், மோசடிகளும், ஜால்ராக்களும் நிலவுகிற அரசியல் களத்தில் உண்மை, அன்பு, நம்பிக்கை என்று உயர்ந்து நின்றவர் வெற்றிச்செல்வன். ஆயிரமாயிரம் தம்பிகளுக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தந்துகொண்டே இருந்தவர். தமிழகம் முழுக்க மாவட்டத்திற்கு பல நூறு தம்பிகளைக் குடும்ப உறவாகக் கொண்டவர்.
வன்னி அரசு.
20 March 2015
இப்படித்தான் இந்தியா முழுக்க ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இப்போக்குக்குக் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் காட்டியுள்ளது உச்ச நீதிமன்றம். வட மாநிலங்களில் மிக வலிமை வாய்ந்த சாதியான ஜாட் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது தவறு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
இதற்கு முன்பாகவே தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் ஜாட் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைப்பது தொடர்பாக மத்திய அரசு கருத்து கேட்டது. அதற்கு, சமூக பொருளாதார ரீதியாக எடுக்கப்படும் சென்சஸ் பணி (2011) முடிந்த பிறகுதான் இதனைப் பரிசீலனை செய்ய முடியும் என்று சொன்னது. ஆனாலும் தொடர் அழுத்தத்தின் காரணமாக, ஐ.சி.எஸ்.எஸ்.ஆர். என்னும் சமூக அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி மையத்திடம் ஜாட் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைப்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர உத்தரவிட்டது ஆணையம். ஐ.சி.எஸ்.எஸ்.ஆர். நிறுவனமோ எந்த நேரடி கள ஆய்வும் செய்யாமல் இருக்கும் பழைய தரவுகளின் அடிப்படையில் தமது கடமையை வெறும் புள்ளிவிவரங்களாகத் தொகுத்து தந்தது. இந்த புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ஜாட் சமூகத்தைச் சேர்க்கக் கூடாது என்று பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கருத்துச் சொன்னதுடன் எதிர்ப்பையும் பதிவு செய்தது. ஆனாலும் கடந்த காங்கிரஸ் அரசு அரசியல் இலாபத்திற்காக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் எதிர்ப்பை மீறி ஜாட் சமூகத்தின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது. பா.ஜ.க.வும் இதனை வரவேற்றது.
வட மாநிலங்களில் பீகார், குஜராத், அரியானா, இமாச்சலப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், தில்லி, இராஜஸ்தான் (இரு மாவட்டங்களில் மட்டும்), உத்திரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் மிக அதிகமாக வாழும் ஜாட் சமூக மக்கள் தங்களை ஆரிய பாரம்பரியத்தில் வந்தவர்களென்று, இராஜபுத்திரர்களுக்கு இணையாகக் கருதி வருபவர்கள். இந்தியாவையே ஆளப் பிறந்தவர்கள் என்று மார்தட்டுபவர்கள். நாடாண்ட பரம்பரை என்று மீசையை முறுக்கிக் கொள்பவர்கள். அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களை, நம்ம ஊரு 18 பட்டி பஞ்சாயத்து மாதிரியான ‘காஃப்’ பஞ்சாயத்தின் மூலம், நம்ம ஊரு வன்னியர், தேவர், கவுண்டர் மாதிரி அடக்கி ஒடுக்கி வருபவர்கள்.
ஜாட் காஃப் பஞ்சாயத்து |
மிர்ச்பூர் கலவரம் என்றைழைக்கப்படும் சம்பவத்தில் 2010ஆம் ஆண்டு மிர்ச்பூர் சேரிக்குள் புகுந்த ஜாட் சாதி வெறியர்கள் அங்கிருந்த குடிசைகளை தீக்கிரையாக்கினார்கள், இதில் 70வயது தந்தையையும் அவரின் 18 வயதான மாற்றுத் திறனாளி மகளையும் குடிசைக்குள் உயிரோடு எரித்துக் கொன்றனர். மிர்ச்பூர் தலித்துகள் பொருளாதாரத்தில் வலிமை பெற்று வந்ததாலேயே திட்டமிட்டு தாக்கப்பட்டதாக பின்னர் உண்மை அறியும் குழுக்கள் கண்டறிந்தனர். இந்த இடத்தில் உங்களுக்கு 2012ல் சாதி வெறியர்களால் தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்ட தர்மபுரி கலவரம் நினைவுக்கு வரலாம். (மிர்ச்பூர் கலவரத்தின் படங்கள்)
அதேபோல் முஸாபர் நகரில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இஸ்லாமியர்கள் மீது ஜாட் இந்துக்கள் கொடூரத் தாக்குதலைத் தொடுத்து கலவரங்களை உருவாக்கினர். 40க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டும் 50,000 பேர் முகாம்களில் தஞ்சமடைந்தனர். அதற்கு அவர்கள் சொன்ன காரணம், இங்கே குச்சிக்கொளுத்தி இராமதாசு கிளப்பிவிட்டதுபோல, இஸ்லாமிய இளைஞர்கள் ஜாட் இனப் பெண்களைக் கிண்டல் செய்தனர் என்பது தான். பின்னர் இந்த பகுதியில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க மிகப் பெரும் வெற்றி பெற்றது. சாதி வெறியின் புகலிடம் இந்துத்துவம் தானே?
முஸாபர் நகரின் அப்பாவி இஸ்லாமியர்கள் |
ஹிசார் மாவட்டம்: இரண்டு வருடங்களுக்கும் மேலாக தலித்துகளின் முற்றுகை போராட்டம் |
ஜந்தர் மந்தரில் மூன்று மாதங்கள் நடந்த பகானா தலித்துகளின் போராட்டம் |
பத்தி 48- பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் புதிய சாதிகளை சேர்ப்பது போன்ற முக்கிய முடிவுகள் பழமையான, காலாவதியான தரவுகளை கொண்டு எடுக்கப்படகூடாது. பிற்படுத்தப்பட்டோர் ஆணைய சட்டத்தில் பகுதி 11ல் குறிப்பிடப்படுவது போல 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிற்படுத்தப்பட்டோர் சாதி பட்டியலை மறு ஆய்வுக்கு கொண்டு வர வேண்டியது அவசியமாகிறது. இது தற்காலத்திற்கு ஏற்ற புதிய புள்ளி விவரங்கள், தரவுகளின் தேவையை உணர்த்துகிறது.
பத்தி 53- பின்தங்கிய நிலைக்கு சமூகம், கலாச்சாரம், பொருளாதாரம், கல்வி மற்றும் அரசியல் என பல தனித்த காரணிகள் இருக்கலாம். ஆனால் சாதியை மட்டுமே பிற்படுத்தப்பட்டதற்கான அளவீடாக எடுத்துக் கொள்ளகூடாது என நாம் தொடர்ந்து சொல்லி வருகிறோம். இதற்கு புதிய அளவீடு முறைகளை உருவாக்கி, புதிதாக தோன்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை கண்டறிதல் வேண்டும். . இதன் அடிப்படையிலேயே சமூகம் மற்றும் கல்வியில் பின்தங்கிய பிரிவினர்க்குரிய உரிமைகள் மூன்றாம் பாலினம் என்று சொல்லப்படும் அரவாணிகளுக்கும் பொருந்தும் என்று 2014ல் தீர்ப்பு ஒன்று வந்துள்ளது.
பத்தி 54- இனிமேலும் பிற்படுத்தப்பட்ட நிலையை கணக்குகள் அடிப்படையில் வகுக்கப்பட்ட சமூகம், பொருளாதாராம், கல்வியை குறித்தான தரவுகள் மட்டும் தீர்மானிக்க முடியாது. அதன் அடிப்படையில் முன்பு எடுக்கப்பட்ட தவறான முடிவுகளை வைத்து மீண்டும் அந்த தவறை அனுமதிக்க முடியாது. மேலே கூறப்பட்டுள்ள தகுதிகளின் அடிப்படையில், அரசியல் ரீதியாக நன்கு ஒருங்கிணைக்கப்பட்டுள்ள ஜாட் போன்ற சாதிகளை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்ப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்த தீர்ப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பிரேந்தர் சிங் தலைமையில் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த 27 ஜாட் எம்பிக்கள், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லீயை சந்தித்து மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியுள்ளனர். இத்தீர்ப்பை ரத்து செய்யாவிட்டால் பெரும் போராட்டத்தை நடத்தப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இதற்குப் பணிந்துபோன இந்துத்துவ பாஜக அரசு மேல் முறையீடு செய்யவும் தயாராகிவிட்டது. ஏனென்றால், இந்துத்துவத்தைக் கட்டிக்காப்பதுதானே பாஜகவின் மநுதர்மமாக இருக்கிறது.
கடந்த பல நூறாண்டு காலமாக அரசியல் சமூகம் பொருளாதாரம் என அனைத்து மட்டங்களிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டு சமூக இழிவுக்குள்ளாக்கப்படும் சமூகங்களுக்குத்தான் இடஒதுக்கீடு, அவர்களை கை தூக்கி மேலே விடுவது தான் இடஒதுக்கீட்டின் நோக்கம், இதுவே சமூக நீதி என புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் போராடினார்கள். ஆனால், இன்று சாதிப் பெருமை பேசுகின்ற சமூகத்தினரும் கூட இடஒதுக்கீட்டுப் பலனை அனுபவித்து வருகின்றனர்.
இடஒதுக்கீட்டிற்கான போராட்டம் ஒன்றில் ஜாட் சாதியினர் |
மூன்றாம் பாலினமான அரவாணிகளுக்கும் இடஒதுக்கீடு தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழிகாட்டியதன் அடிப்படையில் அவர்களை இந்த அரசு பரிசீலிக்க வேண்டும். 'ஆண்ட பரம்பரை' 'தீச்சட்டியிலிருந்து பிறந்தவன்' 'இந்த ராஜாவின் பரம்பரை - அந்த சமஸ்தானத்தின் வாரிசு' எனப் பேசுகின்ற அனைத்துச் சாதியினரையும் ஒரு தொகுப்பாகச் சேர்த்து ‘ஆண்ட பரம்பரை கோட்டா’ ஒன்றை உருவாக்கி அதில் இணைத்துவிடுவது நல்லது. இதுதான் உண்மையான சமூகநீதியின் உச்சமாக இருக்கும்!
வன்னி அரசு.