Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

10 August 2014

புதிதாக அவதரித்த மாமேதை தங்கர் பச்சன்

       அம்பேத்கரின் கொள்கைகளை பரப்புவதற்காகவும் செயல்படுவதற்காகவும் ஒர் மாமேதை தோன்றி இருக்கிறார். தமிழகத்தின் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது திணிக்கப்படும் வன்கொடுமைகளை கண்டு தினம் தினம் வேதனைபட்டுக் கொண்டிருக்கிறார். அந்த வேதனையிலேயே சாப்பிடகூட முடியாமல் எலும்பும் தோலுமாய் தேயிந்து போய் விட்டார். படுத்தால் தூக்கம் வருவதில்லை. எந்த செயலும் செய்ய முடியாமல்  பாவம் பித்து பிடித்ததுபோல் 'அம்பேத்கர்' 'அம்பேத்கர்' என்று அலைந்து கொண்டிருக்கிறார். அந்த மாமேதை யார் தெரியுமா? திரைபட இயக்குனர் தங்கர் பச்சான் தான். தலித்துகளின் விடுதலைக்காக  கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக தன்னை அர்பணித்துக் கொண்ட மாமேதை தங்கர் பச்சான் ரொம்பவும் கொதித்து போய்தான் இருக்கிறார். தாழ்தப்பட்ட மக்கள் கொடுமைக்குள்ளாக்கப்படுவது தெரிந்தால் உடனே அங்கே ஆஜராகிவிடுகிறார்.
                                  
                       கடந்த ஆண்டு தருமபுரி நத்தம் சேரி சூறையாடப்பட்டதை அறிந்தவுடன் பதற்றத்துடன் முதலில்  ஓடிப்போய் அந்த மக்களை சந்தித்து ஆறுதல் சொன்னதோடு பல உதவிகளை செய்தார். "இக்கொடுமைகளை செய்தது பா.ம.க தான். தூண்டிவிட்ட ராமதாசை கைது செய்யகோரி தைலாபுரத்தை லட்சக்கணக்கான மக்களோடு முற்றுகையிடப் போகிறேன்" என்று செய்தியாளர்களிடம் மிகத் துணிச்சலாக அறிவித்தார். இந்த அறிவிப்பை கேட்டு காவல்துறை மிரண்டு போய், "உங்களால் தமிழகதில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போகக் கூடாது" என்று காலில் விழுந்து கெஞ்சியதால் அப் போராட்டத்தை கைவிட்டு விட்டார்.
                                   
                        இந்த நிலையில் திடீரென இளவரசன் கொலை செய்யப்பட்ட செய்தி அறிந்த தங்கர் பச்சான், இளவரன் உடல் கிடந்த ரயில் இருப்பு பாதைக்கே சென்று ஒப்பாரி வைத்து அழுதார். இந்த காட்சி பார்ப்போரின் இதயத்தை உலுக்கியது. செய்தியாளர்கள் 100 பேருக்கும் மேற்பட்டோர் தங்கர் பச்சானை சூழ்ந்து கொண்டு, "இளவரசன் சாவுக்கு யார் காரணம்?"என்று கேட்டனர். தேம்பி தேம்பி அழுதபடியே செய்தியாளர்களிடம் பேசிய தங்கர், "இந்த தம்பி திவ்யாவ கூட்டிட்டு ஓடிய பிறகு அவனுக்கு தங்குவதற்கு  கூட யாரும் அடைக்கலம் கொடுக்கல. தலித் மக்களுக்காக பாடுபடுறேன்னு சொல்ற தலைவர்கள் கூட அடைக்கலம் கொடுக்கல. நான் தான் ரெண்டு பேருக்கும் அடைக்கலம் கொடுத்து சோறுபோட்டேன். இந்தக் கொடுமையை செய்தது ராமதாசும் காடுவெட்டி குருவும் தான். இவர்களை கைது செய்யாவிட்டால் நான் மனித வெடிகுண்டாக மாறி தைலாபுரத்தில் விழுவேன். ஏங்க காதலிப்பது தப்பாங்க, இதுக்கு போய் இப்படி கொலை செய்வாங்களா? நான் கூட 'அழகி' படம் எடுத்தேன் அதுல தெரு ஓரத்துல வாழும்  கீழ்  சாதி பொண்ணை மேல் சாதி பையன் காதலிக்கிற மாதரிதான் படம் எடுத்தேன். அப்ப என்ன கொல்லு வாங்களா? ஒன்பது ரூபாய் நோட்டு படத்துல கூட தலித்துகளுக்கு ஆதரவா தான் படம் எடுத்தேன் " என்று கொதித்து போன தங்கர் பச்சானிடம் ஒரு செய்தியாளர் இடை மறித்து, "உங்களின் 'ஒன்பது ரூபாய் நோட்டு' மாதவன் படையாட்சி வரலாறுதானே ? நீங்க மாத்தி சொல்றீங்க" என்று கேட்டதும், "இந்த சென்ஸார் கமிட்டி செய்த சதி. நான் மாதவன் பறையருன்னுதான் எடுத்தேன் அவனுங்க மாத்திட்டாங்க. நான் சும்மாவிடப் போவதில்லை" என்று பேசிகொண்டே இருக்கும் போதே செய்தியாளர்கள் ஒவ்வொருவராக கிளம்பிப் போய்விட்டார்கள்.

                இப்படி இளவரசன் படுகொலையிலும் துணிச்சலாக தமது கருத்தை சொல்லி போராடியவர்தான் தங்கர் பச்சான்.
                  
              தற்போது அம்பேத்கரின் புத்தங்கள் முழுவதும் கரைத்து குடித்துவிட்டார். இப்போது அம்பேத்கர் வழியில் ஊர் ஊராய் அம்பேத்கர் கொள்கைகளை விளக்குவதற்காக நடைபயணம் மேற்கொண்டிருக்கும் தங்கர் பச்சானை செய்தியாளர்கள் சந்தித்தனர்.



             
கேள்வி: ஏன் திடீரென அம்பேத்கர் மேல் பாசம்?
              
தங்கர்: இங்க அம்பேத்கர்ப் பத்தி யாருக்குமே தெரியல. அவர தமிழ் நாட்டுல அறிமுகப்படுத்துனதே நான் தான். அவரப்பத்தி நான் ஒரு படம் எடுக்க போரேன்.
              
கேள்வி: முன்பு ராமதாஸ் கூட அம்பேத்கர் மீது பாசம் உள்ளது போல் நடித்தார். ஊர் ஊராய் சிலை வைத்தார். அதைப் போல தான் இந்த அம்பேத்கர் பாசமா?
              
தங்கர்: (முகத்தை கோபமாக வைத்து கொண்டு) நான் கறுப்பா இருக்கேன் இது போதாதா? என்ன நம்புறதுக்கு?
              
கேள்வி: நீங்க எடுத்த படங்களில் ஒன்றாவது சமூக அக்கறையுள்ள படம் இருக்கா?
             
 தங்கர்: ஏங்க ஏங்க என்னங்க இப்படி கேட்டுட்டீங்க ? எல்ல படங்களுமே அப்படித்தாங்க எடுத்திருக்கேன்.பாருங்க என்கிட்ட இனி சினிமாவ பத்தி கேட்காதிங்க.
               
கேள்வி: அப்ப என்ன தான் கேட்கிறது?
                
தங்கர்: எனக்கு ஒரு பயலும் தயாரிப்பாளரா சிக்க மாட்டுறான். அந்த வெறில தான் அம்பேத்கருனு அது இதுன்னு உளறுரேன் மன்னிச்சுக்கோங்க.
                
செய்தியாளர்கள் கோபத்துடன், "இவனுக்கு ஆள் கிடைக்கலனா.. நாம என்ன பன்றது ? இவன எல்லாம் கீழ்பாக்கத்துக்கு தான் அனுப்பனும்". புலம்பிகிட்டே வெளியேற தங்கர் பச்சானோ திடீரென பல்டி அடித்தவராக, 

"இந்த நாட்டுல ஒரு பயலுக்கும் அறிவில்லைங்க. நான் தான் எல்லாத்தையும் சொல்லித்தர வேண்டி இருக்கு அடுத்தப் படம் எம்.ஜி.ஆர் பத்தி எடுக்கப்போறேன். யாருக்கும் தெரியாத விசயத்த படமா எடுக்கப்போறேன்" என்று அறிவித்ததும் எல்லோரும் துண்டக்காணோம் துனியகாணோம் என்று ஓட ஆரம்பிக்கிறார்கள். யாராவது படம் எடுக்க விரும்புவோர் தங்கர் பச்சானை தயவு செய்து தொடர்புகொள்ளுங்கள். பாவம் பிழைத்து போகட்டும். 
                    
   
                                       
         
    
                        
                                       
                        

10 May 2013

மருத்துவர் இராமதாசின் பொய் முகமும், வேலாயுதபுர சாதியத்தின் கோர முகமும்-வன்னிஅரசு

“நெல்லை மாவட்டம் கழுகுமலைக்கு அருகே உள்ள அந்த ஊரில் வசிக்கின்ற நானூறு ரெட்டியார் குடும்பத்தினர் கதறி அழுகின்றனர். தாழ்த்தப்பட்டோர் எங்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள் என்று காப்பாற்றும்படிக் கதறி அழுகிறார்கள்”
vanniarasu_velayuthapuram_6
நாதஸ்வர வித்வான் எம்.எஸ்.முத்தையாவுடன்...
கடந்த 25-4-2013 அன்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னியர் சாதிச் சங்கக் கூட்டத்தில் கூடியிருந்த இலட்சக்கணக்கானோர் மத்தியில் நூற்றுக் கணக்கான உளவுத் துறை அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் இந்த அதிர்ச்சித் தகவலை மருத்துவர் இராமதாசு வெளிப்படுத்தினார். அந்த ஊர் எது என்று ஊடகவியலாளர்களும் உளவுத்துறையும் ஆராய ஆரம்பித்தனர்.
8-5-2013 அன்று நாமும் அந்த ஊரைத் தேடி பயணப்பட்டோம். அந்த ஊரின் பெயர் டி.வேலாயுதபுரம். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையிலிருந்து 3வது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த டி.வேலாயுதபுரம் (மருத்துவர் இராமதாசு சொல்வதைப்போல் நெல்லை மாவட்டத்தில் இல்லை.)
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுநகர் மாவட்டத் துணைச் செயலாளர் இராசா, ஆதித் தமிழர் பேரவையின் விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் முத்துகிருஷ்ணன், கவுதமன் ஆகியோருடன் நாமும் அந்த ஊருக்குச் சென்றோம். புளியம்பழங்களைச் சுமந்துகிடக்கும் மரங்களும், மஞ்சநெத்திப் பூக்களின் மணம் மரப்பும் மரங்களும் வழிநெடுக எங்களை வரவேற்றன. தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த 47 குடும்பங்களும், ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட குடும்பங்களும், 4 வண்ணார் குடும்பத்தினரும் அடங்கியதுதான் இந்த வேலாயுதபுரம்.
வேலாயுதபுரத்திற்குள் விடுதலைச் சிறுத்தைகள் கொடி பறக்கும் காரில் நுழைந்தவுடனேயே அந்த ஊர் மக்கள் கும்பல் கும்பலாகக் கூட ஆரம்பித்தனர். ஊர் மந்தைக்கு அருகே இரண்டு போலிசார் காவலுக்கு நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் வேலாயுதபுரம் சேரிக்குச் செல்லும் பாதையைக் கேட்டுச் சென்றோம். எலந்தப் பழங்களை சின்னஞ்சிறு பிள்ளைகள் முள் படாமல் பொறுக்கிக் கொண்டிருந்தார்கள். ஊருக்கும் சேரிக்கும் இடையே ஒரு கிலோ மீட்டர் இடைவெளி உள்ளது. சேரிக்குள் நுழைந்தோம்.
இந்தியாவிலுள்ள எல்லா ஊர்களும் சேரியை எப்படி நடத்துகின்றனவோ அப்படித்தான் வேலாயுதபுரமும் சேரியை நடத்துகிறது. ஊருக்கே செருப்புத் தைத்துக் கொடுத்தாலும் அருந்ததிய மக்கள் செருப்புப் போட்டுக்கொண்டு ரெட்டியார் தெருவுக்குள் நடக்க முடியாது. சைக்கிள் வாங்கலாம். ஆனால் உருட்டிக்கொண்டுதான் போக வேண்டும்; ஏறிச் செல்ல முடியாது. அங்குள்ள நடுநிலைப் பள்ளிக்குச் செல்லும் அருந்ததியர் குழந்தைகளுக்கு தனியேதான் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 5ஆம் வகுப்புக்கு மேல் யாரும் படிக்கக் கூடாது.
இங்குள்ள அருந்ததியர்களுக்குச் சொந்தமாக நிலங்கள் எதுவும் இல்லை. கூலி வேலைக்குத்தான் செல்லவேண்டும். பெண்கள் அங்குள்ள தீப்பெட்டித் தொழிற்சாலைகளுக்குச் சென்று தீக்குச்சிகளை அடுக்க வேண்டும். ஆண்கள் சீமைக் கருவேல மரங்களை வெட்டி கரிக்கட்டைகளாக்கி திருநெல்வேலி, தூத்துக்குடி, கழுமலை, சங்கரன்கோவில் போன்ற ஊர்களுக்குச் சென்று விற்றுப் பிழைப்பு நடத்த வேண்டும். இதுதான் அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்நிலை.
vanniarasu_velayuthapuram_7
சுபா குடும்பத்தாருடன்..
கடந்த 10-8-2006 அன்று தீப்பெட்டித் தொழிற்சாலையில் வேலைசெய்யும் சுபா என்கிற 16 வயது பெண், “இந்த ஊரின் கொடுமையிலிருந்து எங்கள் மக்கள் விடுதலை பெற வேண்டும்” என்று எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொள்கிறார்.
ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் சுபாவை தொடர்ச்சியாக தொந்தரவு செய்து வந்துள்ளனர். சாதிப் பெயரைச் சொல்லி கேலியும் செய்து வந்துள்ளனர். சுபா மட்டுமல்லாது சேரியிலிருந்து வருகிற எல்லா பெண்களிடமும் ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்த இளைஞர்கள் கேலியும் கிண்டலும் செய்து கடுமையாக நடந்துகொண்டிருக்கிறார்கள். இதனால் மனமுடைந்த சுபா தற்கொலை செய்துகொள்கிறார். காவல்துறையோ, வழக்கம்போல் சிலரைக் கைது செய்துவிட்டு பின்பு அவர்களை விட்டுவிடுகிறார்கள். சுபாவின் தற்கொலையை அடுத்து, போலிஸ், கோர்ட் என்று அதே சேரியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் அலைய ஆரம்பிக்கிறார். “போலிசுக்கெல்லாம் போக வேண்டாம்!” என்ற ரெட்டியார்களின் கட்டளையை மீறி கருப்பசாமி களப்பணியாற்ற ஆரம்பித்தார்.
இந்நிலையில், கடந்த 12-4-2013 அன்று ஆடு மேய்த்துக்கொண்டிருந்த கருப்பசாமி வெட்டிப் படுகொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கு தொடர்பாக ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்த 13 இளைஞர்கள் கைது செய்யப்படுகின்றனர்.
“இந்த ஊர்ல ஒவ்வொரு நாளும் செத்துச் செத்துப் பிழைக்க வேண்டியிருக்கு தம்பி. எங்க தெருவுக்குள்ள ரேசன் கடை இல்லை. அவுங்க தெருவுக்குள்ள இருக்கிற ரேசன் கடைக்குத்தான் போக வேண்டும். யாரும் இல்லாத நேரமாப் பாத்து ஜன்னலுக்கு வெளியே நின்னுதான் வாங்க வேண்டும்” என்றார் சேரித்தெரு நாட்டாமை சுப்பிரமணி.
சுப்பிரமணியின் மகன் முத்துகிருஷ்ணனுக்கு ஊரில் அஞ்சல் அலுவலக உதவியாளராகப் பணி கிடைத்தது. “சக்கிலியப் பய தொட்ட லட்டர நாங்க வாங்கணுமா? ஒழுங்கு மரியாதையா வேலை வேணாம்னு எழுதிக் கொடுக்கச் சொல்லு” என்று தினமும் ரெட்டியார் சமூகத்தினர் சுப்பிரமணியை மிரட்ட ஆரம்பித்தனர். மிரட்டலுக்குப் பயந்து முத்துகிருஷ்ணன் வேலை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு சென்னைக்குச் செல்கிறார். இது கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. ஆனால், முத்துகிருஷ்ணனோ சென்னைக்குப் போய் அடுத்தடுத்த போட்டித் தேர்வுகளை எழுதி இப்போது தலைமைச் செயலகத்தில் கமாண்டோவாக துப்பாக்கியும் கையுமாகப் பணிபுரிகிறார்.
நாதஸ்வர வித்வானாக அம்மாவட்டங்களில் புகழ்பெற்றவராக மதிக்கப்படும் எம்.எஸ்.முத்தையா, “இப்பகுதியில் திருவிழாக் காலங்களில் நடைபெறும் எந்த நிகழ்ச்சிக்கும் நாங்கள் போகக் கூடாது. ஊரில் உள்ள நிகழ்ச்சியில்தான் நாதஸ்வரம் வாசிக்க வேண்டும். அதுவும் இலவசமாகத்தான் வாசிக்க வேண்டும். உறவினர்களின் வீடுகளுக்கு நாங்கள் போக வேண்டுமென்றாலும், உறவினர்கள் எங்கள் வீடுகளுக்கு வரவேண்டுமென்றாலும் ஊர் மந்தையில் காலில் விழுந்து கேட்டுவிட்டுத்தான் போக வேண்டும், வரவேண்டும்” என்றார். சிறந்த நாதஸ்வர வித்வானான எம்.எஸ்.முத்தையாவுக்கு கடந்த ஆண்டுதான் அரசு கலைமாமணி விருது வழங்கிச் சிறப்பித்தது. ஆனால் வேலாயுதபுரமோ...?
vanniarasu_velayuthapuram_8
கருப்பசாமி குடும்பத்தாருடன்..
அடிமைத்தனத்திற்கு எதிராக 2006ஆம் ஆண்டு உயிர்நீத்த சுபாவின் மறைவுக்குப் பிறகு அருந்ததியர்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பேச ஆரம்பித்தார்கள். மந்தையில் துணிச்சலாகக் கேள்வியெழுப்ப ஆரம்பித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அரிபால் ரெட்டியார், அருந்ததியர் பலரை மந்தையில் வைத்தே அடித்துள்ளார். இவர் வேலாயுதபுரத்திலிருந்து வெளியேறி துபாயில் சென்று பணிபுரிந்து வந்தவர். “நான் போகும்போது ஊரு இப்படியில்லையே. இவனுகளுக்கு யார் துணிச்சலத் தந்தது? இவனுகள ஆரம்பத்துலயே அடக்கி வைக்கணும்” என்று அரிபால் ரெட்டியார் கொதித்துப்போனதன் விளைவு சேரியைச் சுற்றி முள் வேலி அமைக்கும் பணி தொடங்கியது. 47 குடும்பங்கள் வசிக்கும் அருந்ததியர் குடியிருப்பைச் சுற்றி இரும்பு முள்வேலி அமைத்தனர். அருந்ததியர்கள் இந்த முள்வேலிக்குள்தான் வாழ வேண்டும். ரெட்டியார்களின் காடு கரைகளில் கால் வைக்கக் கூடாது. கால் வைத்தால் தீட்டுப் பட்டுவிடுமாம்.
இந்தத் தீண்டாமை முள்வேலி அமைக்கும்போது பஞ்சாயத்து தலைவர் இராதாகிருஷ்ணன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இவர் ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். “என்னையும் சக்கிலியர்களோடு ஒதுக்கி வைத்துவிடுங்கள். இதற்கு நான் உடன்படமாட்டேன்” என்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். விளைவு 2011 பஞ்சாயத்துத் தேர்தலில் தோழர் இராதாகிருஷ்ணன் தோற்கடிக்கப்பட்டு அமராவதி என்பவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மதிமுகவைச் சேர்ந்தவர். இவரது கணவர் பழனிச்சாமி ரெட்டியார்தான் இப்போது அருந்ததியர்களை ஒடுக்குவதில் மும்முரமாக இருக்கிறார். இவரோடு போஸ், அரிபால், சுப்புராஜ் (அதிமுக), இராஜேந்திரன், மணிகண்டன், நாராயண ரெட்டியாரின் மகன் பால்ராஜ், தவிட்டு ரெட்டியாரின் மகன் ரமேஷ், நாராயணன், பெத்து ரெட்டியார், சீனிச்சாமி ரெட்டியார் ஆகியோர்தான் தீண்டாமை முள்வேலி உள்ளிட்ட தீண்டாமைக் கொடுமைகளைச் செய்வதில் முன்னணியில் நிற்பவர்கள். 
கடந்த 12-4-2013 அன்று கருப்பசாமி படுகொலை செய்யப்பட்டதை அடுத்துதான் இந்தத் தீண்டாமை முள்வேலி உலகுக்கே தெரிய வந்துள்ளது. 13-4-2013 அன்று அந்த ஊருக்கு வந்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. இராஜேந்திரன் அவர்கள் தீண்டாமை முள்வேலியைப் பார்த்துக் கொதித்துப் போய்விட்டார். அவரே முன்னின்று முள்வேலியைப் பிரித்து எறியும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார். ஆனாலும், கழுகுமலை காவல்நிலைய அதிகாரிகளோ உள்ளூர்ப் பகை வேண்டாம் என்று ரெட்டிகளோடு ஒட்டி உறவாடிக்கொண்டுதான் இருக்கின்றனர்.
இத்தகைய சேரியைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும்போதுதான் அந்த அதிர்ச்சியான தகவல் நமக்கு வந்தது.
ஆதித்தமிழர் பேரவையின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கலைச்செல்வன் தலைமையில் தோழர்கள் சிலர் எங்களைப் பார்ப்பதற்காக சேரிக்குள் வர முயன்றனர். அப்போது ஊர் மந்தையில் பெண்கள் வழிமறித்து, “ஏண்டா சக்கிலியப் பயலுகளா, எங்கடா வந்தீங்க? இந்த நாய்களுக்கு நீங்கதான் சப்போர்ட்டா? கார்ல உள்ள போன அந்த சக்கிலிய நாயிகள நாங்க வெளியே விடப்போறதில்ல...” என்று வாய்க்கு வந்தபடி கூச்சலிட்டு அவர்களை அடிக்காத குறையாக விரட்டியடித்துள்ளனர். காவலுக்கு நின்ற போலிசோ வேடிக்கை பார்த்ததைத் தவிர ஒன்றும் செய்யவில்லை. இதையறியாமல், நாங்களோ அந்தத் தீண்டாமை முள்வேலியையும் ஊர் மக்களையும் பார்த்துக் கொண்டிருந்தோம். ஒரே ஒரு போலிஸ்காரர் எங்களிடம் வந்து, “சார் கொஞ்சம் இருங்க. அவங்க கும்பலா கூடி கோபத்தோட இருக்காங்க. போலிஸ் ஃபோர்ஸ் வந்ததுக்குப் பிறகு நீங்கள் போகலாம்” என்றார்.
vanniarasu_velayuthapuram_9
காவல் துறையினருடன்...
மாலை 5 மணிக்கு சேரிக்குள் போன நாங்கள் இரவு 7 மணியளவில் வெளியேற முயன்றோம். போக முடியவில்லை. சப்-இன்ஸ்பெக்டர் இரு காவலர்களுடன் வந்து, “சார் எங்க பின்னாலயே வாங்க” என்றபடி நடந்து சென்றார்கள். நாங்கள் காரில் பின்தொடர்ந்தோம். ஊர் தெருவை நெருங்கும்போதே அந்தக் குரல் கேட்டது.
“அந்தச் சக்கிலியப் பயலுகள இறக்கிவிடுங்க. இவனுங்களுக்கெல்லாம் கார் ஒரு கேடா?” என்று கத்த ஆரம்பித்தனர். கைகளில் அரிவாள், வேல்கம்பு, ஈட்டி மற்றும் கற்கள். நிலைமையை அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்திவிட்டு எங்களிடம் மிக அமைதியாகச் சொன்னார், “சார் போகலாம் சார். பேசிட்டேன். போற வழியில மந்தையில போய் இனிமே வரமாட்டோம்னு சொல்லிட்டுப் போயிருங்க” என்றார்.
அதிர்ந்துபோன நாங்கள், “அவர்களிடம் போய் சொல்ல வேண்டுமா? இல்லை காலில் விழுந்து செல்ல வேண்டுமா? என்ன நடக்கிறது இங்கே” என்று கோபத்துடன் கேட்டோம். சப்-இன்ஸ்பெக்டர் மீண்டும் அந்த ஊர் மக்களிடமே சென்றுவிட்டார். உயர் அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு பேசிய பிறகு டி.எஸ்.பி. தலைமையில் காவல்துறையினர் வந்தனர். இரவு 8 மணிக்கு மேல்தான் சேரியைக் கடந்து ஊரையும் கடந்து வெளியேறினோம். நடந்ததை கழுகுமலைக் காவல் நிலையத்தில் புகாராக எழுதிக் கொடுத்துவிட்டு நடவடிக்கை எடுக்கக் கோரி வற்புறுத்தி வந்தோம்.
டி.வேலாயுதபுரம் சேரியைப் பார்வையிடச் சென்ற நமக்கே இந்த நிலை என்றால் காலங்காலமாய் அங்கேயே குடியிருக்கும் அப்பாவி அருந்ததிய மக்களின் நிலையை எண்ணிப் பாருங்கள். இலங்கையில் முள்வேலி முகாம்களை அகற்றக் கோரி தமிழர்களெல்லாம் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிற சூழலில்தான், சொந்த மண்ணிலேயே முள்வேலிக்குள் மண்ணின் மைந்தர்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர்.
இவ்வளவு கொடுமைகளையும் செய்துவிட்டு தலித்துகள்தான் கொடுமை செய்கிறார்கள் என்று மருத்துவர் இராமதாசு பேசுவது நியாயம்தானா? அவர் பொது மேடையில் நாகரிகமாகப் பேசுவதில்லை. பேசும் பேச்சிலும் உண்மை இல்லை. ஆனால் தொடர்ந்து எங்களிடம் ஆதாரம் இருக்கிறது என்று சவால் விட்டுக்கொண்டேயிருக்கிறார். 'விடுதலைச் சிறுத்தைகள் பெண்களைக் கடத்துகிறார்கள், அதை வைத்துப் பேரம் பேசுகிறார்கள்' என்று வாய்க்கு வந்தபடி பேசி ஆதாரம் இருப்பதாகச் சொல்கிறார். ஆனால் இதுவரை எந்த ஆதாரத்தையும் காட்டியதில்லை. இல்லாததை எப்படிக் காட்ட முடியும்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். இராமதாசு பேசுவதெல்லாம் பொய்யும் புரட்டும்தான் என்பதை இந்த வேலாயுதபுரம் சேரி உலகுக்குக் காட்டுகிறது. வேலாயுதபுரம் சேரிமக்களிடம் நாங்கள் வந்த நோக்கம் குறித்துப் பேசும்போது, “நீங்கதான் ரெட்டியார்களைக் கொடுமைப்படுத்துறதா டாக்டர் இராமதாசு சொன்னாரு. உண்மையான்னு பார்க்க வந்தோம்” என்று சொன்னபோது, ஒரு கிழவி கோபத்தோடு, “அந்த பிராடுகாரப் பயல இங்கக் கூட்டியா, அவனும் எங்கத் தாலிய அறுத்துட்டுப் போகட்டும்” என்றார்.
மருத்துவர் அவர்களே உங்கள் குடும்ப சுயநலத்திற்காக ஏன் இப்படி சேரிமக்களின் உயிரை எடுக்கிறீர்கள்?
- வன்னிஅரசு
Bookmark and Share

24 April 2013

கௌரவம் - சரியான நேரத்தில் வெளிவந்துள்ள சரியான படைப்பு - வன்னிஅரசு


கௌரவம் - சரியான நேரத்தில் வெளிவந்துள்ள சரியான படைப்பு - வன்னிஅரசு

அந்தப் பெரியவருக்கு வயது 70 இருக்கும். 23ஆம் புலிகேசி மன்னனைப்போல் அவருக்கும் ஒரு மீசை இருக்கும். இடுப்பில் பச்சை பெல்ட் மாட்டியிருப்பார். மேல் சட்டை இல்லை. முக்கால் அளவு வேட்டி. காலையில் எழுந்தவுடன் குளித்து விபூதிப் பட்டை தீட்டி பக்தி மணக்க மணக்க நடைபயணம் புறப்படுவார். யாரிடமும் பேசமாட்டார். யாராவது பேச முயற்சி செய்தால்கூட கண்டுகொள்ள மாட்டார். உணவு வாங்குவதற்கு வரிசையில்கூட வந்து நிற்க மாட்டார். எல்லோரும் உணவு வாங்கிச் சென்றபின் அவரது அலுமினியத் தட்டில் சோறு வாங்கிச் செல்வார். காவலர்கள் ஏதாவது கேட்டால்கூட, எதுவும் பேச மாட்டார். ஆனாலும் அந்த மத்திய சிறைவாசிகளில் பலர் அந்தப் பெரிசுக்கு மரியாதை கொடுத்துத்தான் வந்தார்கள்.

gouravam_450“டேய் இது எங்களுக்காக கட்டுன ஜெயிலுடா... பள்ளன் பறையன் எவனாவது ஜெயிலுக்கு வந்திங்கன்னா தேவன்னு சொல்லிப் பிழைச்சிட்டுப் போங்கடா” என்று தனிமைச் சிறையில் அடைபட்டிருக்கும் அந்த மனநலம் பாதிக்கப்பட்ட கைதி கூட இந்தப் பெரிசைப் பார்த்தால் வணக்கம் போடுவான்.

பெரிசு பெயர் பாண்டித்தேவர். உசிலம்பட்டியைச் சேர்ந்தவர்.

நானும் பலமுறை அவரிடம் பேச முயற்சி செய்து பேச முயன்றேன் முடியவில்லை. அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் விசாரித்துத் தெரிந்துகொண்டேன் - பாண்டித்தேவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையாம். மற்றபடி எந்த விவரமும் தெரியவில்லை. பாண்டித்தேவர் லாக்-அப் ஆகும்வரை நூலகத்தில்தான் இருப்பார். நூலகத்தில் உள்ள எல்லா நூல்களையும் படித்து முடித்தவர் அவர்தான். நூலக ஆசிரியர் சுருளிதான் என்னை பாண்டித்தேவருக்கு அறிமுகப்படுத்தினார். எனக்கு வரும் நூல்களை அவருக்கும் படிக்கக் கொடுத்ததன் மூலம் என்னோடு சகஜமாகப் பேச ஆரம்பித்தார். அப்புறம்தான் அவரது முழுக் கதையும் எனக்குத் தெரிந்தது.

ஆசை ஆசையாய் வளர்த்த அவரது மகள் பக்கத்து ஊரில் உள்ள தாழ்த்தப்பட்ட பள்ளர் வகுப்பைச் சேர்ந்த பையனைக் காதலித்துளளார். ஊரில் உள்ள புளிய மரங்களும் பனை மரங்களும்கூட இவர்களது காதல் கதையினை பேச ஆரம்பித்தன. பாண்டித்தேவருக்கு அது தெரியாமலா போய்விடும்! அவர் கோபத்தின் உச்சத்தில் இருக்கும்போது காதல் ஜோடி ஊரைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டது.

எட்டு மாதமாகக் கண்டுகொள்ளவில்லை. எட்டு மாதமாக வீட்டை விட்டே வெளியேறியதில்லை பாண்டித்தேவர். ஏதோ நடந்தது நடந்துபோச்சு என்று ஒன்பதாவது மாதம் வளைகாப்பு செய்து மகளை அழைத்து வருவதற்காக வைப்பதற்காக பாண்டித்தேவரின் மனைவி செல்கிறார். தலித் மருமகனும் மகிழ்ச்சியாக வளைகாப்பு முடித்து மனைவியை மாமியாருடன் அனுப்பி வைக்கிறார். வயறு நிறையக் குழந்தையோடு கை நிறைய வளையல்களோடு நெற்றி நிறைய மஞ்சள் குங்குமத்தோடு வாய் நிறைய சிரிப்போடு வந்த மகளைப் பார்த்து கட்டி அணைத்துக்கொண்டார் பாண்டித்தேவர். தன் கையாலேயே மகளுக்குச் சோறு ஊட்டிவிடுகிறார்.

இரவு 10 மணி. எல்லோரும் தூங்கப்போய்விட்டனர். நள்ளிரவில் திடீரென அலறல் சத்தம். வீட்டுக்குள் ஒரு உருவம் தீயில் எரிந்து விழுகிறது. வீட்டில் உள்ளவர்களும் அக்கம் பக்கம் உள்ளவர்களும் வந்து பார்க்கும்போது கருகிய நிலையில் பாண்டித்தேவரின் மகள் கிடக்கிறாள். வயிற்றுக்குள் இருந்த குழந்தையும் கருகி செத்துப்போனது.

“அப்பாடா... அப்பத்தான் என் சாதி கௌரவம் காப்பாற்றப்பட்டது தம்பி!” என்றார் பாண்டித்தேவர்.

“உங்க ஆசை மகளைக் கருக்கிட்டிங்களே. உங்க மகளைவிட சாதி பெரிசாப் போச்சா?” என்று கேட்டதற்கு,

அந்தப் பெரிசு எந்தச் சலனமும் இல்லாமல் சொன்னார்- “என்னை விட என் சாதி கௌரவம்தான் முக்கியம்”

இதற்காகத்தான் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை.

மதுரை மத்திய சிறையை இப்போது கடந்து போனாலும் அந்த பாண்டித்தேவர் என் நினைவில் வந்துபோவார்.

சக ஆயுள் சிறைவாசியாக நான் இருந்தாலும், இம்மாதிரியான காட்டுமிராண்டித்தனங்களின் எச்சங்களோடுதான் பயணப்பட்டேன். 1990ஆம் ஆண்டு நடந்த இந்த நிகழ்வை, 1998ஆம் ஆண்டு சிறைக்குச் சென்றபோது அறிந்தேன். இப்படியெல்லாமா மனிதர்கள் இருக்கிறார்கள் என்று கொதித்துப் போனேன்.

ஆனால், நாயக்கன்கொட்டாய் இளவரசன்-திவ்யா காதலை சாக்காக வைத்து மூன்று சேரிகளைத் திட்டமிட்டுத் தீக்கிரையாக்கிய சாதிவெறியர்களை நினைக்கும்போது, பாண்டித்தேவர் என்கிற பெரிசு பரவாயில்லைபோல் தோன்றியது.

விருத்தாசலம் அருகேயுள்ள புதுக்கூரைப்பேட்டையில் வன்னியப் பெண் கண்ணகி, தலித் வகுப்பைச் சேர்ந்த முருகேசனை காதல் திருமணம் செய்துகொண்டார். எல்லா காதலர்களும் செய்வதைப்போலத்தான் ஊரைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டார்கள். கண்ணகியின் உறவினர்கள் ஊர் ஊராய்த் தேடிக் கண்டுபிடித்து ஊர் மந்தைக்கு அந்த காதல் ஜோடியை இழுத்து வந்தனர். மக்கள் யாவரும் பார்த்துப் பதைக்க, காதல் ஜோடி கதறக் கதற விஷம் கொடுத்து எரித்துக் கொல்கின்றனர். தங்களுடைய சாதி கௌரவத்தைக் காப்பதற்காக மனிதநேயத்தை கொன்றழித்த இந்தக் கொடூரத்தின் முன்பு பாண்டித்தேவர் என் நினைவில் வந்து வந்து போகிறார்.

இப்படி சமூகத்தில் அன்றாடம் நடக்கும் அவலங்களை, அநியாயங்களை படைப்புகளாக்க இச்சம்பவங்கள் யாரையும் உறுத்தவில்லையோ, மனசாட்சியை உலுக்கவில்லையோ என்று வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும்போதுதான் ‘கௌரவம்’ திரைப்படம் வந்திருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் நீயா? நானா? நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ் கொடுமை செய்பவர்களைவிட அதனை அமைதியாக வேடிக்கை பார்ப்பவர்கள்தான் ஆபத்தானவர்கள் என்று குறிப்பிட்டார். அத்தகைய ஆபத்தானவர்கள் இந்தச் சமூகத்தில் பல்வேறு வடிவங்களில் உலவுகிறார்கள். மார்க்சியம் பேசுகிற, தமிழ்த் தேசியம் பேசுகிற, காந்தியம் பேசுகிற, முற்போக்குப் பேசுகிற எத்தனையோ இயக்குநர்கள் தமிழ்த் திரைப்பட உலகில் இயங்குகிறார்கள். எதற்கெடுத்தாலும் புரட்சி பேசுவது, அல்லது பெரியார் கருத்துகளைச் சொல்வது, இன்னும் கூடுதலாய் கருப்புச் சட்டையைப் போட்டுக்கொண்டு நாத்திகனாய் விசுவரூபம் எடுப்பார்கள். ஆனால் எடுக்கும் திரைப்படங்களைப் பார்த்தால் சமூகத்திற்கு எதிரான மசாலா படங்களையே எடுத்து பெருமை பேசுவார்கள்.

ஆனால் இயக்குநர் ராதாமோகன் அவர்கள் மிக நேர்மையாக இச்சமூகத்தில் நிலவும் சமூக அநீதியை திரைக்கதைப் போக்கில் எந்தத் திணிப்பும் இல்லாமல் அம்பலப்படுத்தியிருக்கிறார். சாதியின் பெயரால் நடக்கும் கௌரவக் கொலைகள் இயக்குநரை எந்த அளவுக்குப் பாதித்திருந்தால் இப்படியொரு படைப்பைப் படைக்கக் களம் இறங்கியிருப்பார்! சாதி எப்படியெல்லாம் சமூகத்திற்கு எதிராக இருக்கிறது என்பதை மிக நேர்த்தியாகப் திரைப்படமாக்கியிருக்கிறார்.

திரைப்படத்தில் பல இடங்களில் சினிமாத்தனமும் முரண்பாடுகளும் இருந்தாலும் இப்படியொரு கதையை களமாக அமைத்து தமிழகம் முழுவதும் சாதியை முன்வைத்து அரசியல் செய்பவர்களை அம்பலப்படுத்திய துணிச்சலுக்காகவே இயக்குநரையும் தயாரிப்பாளரையும் பாராட்ட வேண்டும்.

தன்னுடன் படித்த சண்முகத்தை தேடிப்போன நண்பர்களுக்கு அந்த டி.வெண்ணனூர் கிராமத்தில் நடப்பவை அதிர்ச்சியளிக்கின்றன. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சண்முகம் அந்த ஊரில் மேல் சாதிப் பண்ணையாரான பசுபதியின் மகளை காதலித்து கூட்டிக்கொண்டு ஓடிவிடுகிறார். அவர்கள் என்ன ஆனார்கள்? மர்ம முடிச்சுகளை கொஞ்சம் கொஞ்சமாக நண்பர்களுடன் சேர்ந்து அவிழ்க்கின்றனர். சாதி கௌரவத்தைக் காப்பதற்காக அந்த காதல் ஜோடியை வெட்டிப் படுகொலை செய்யும்போது இந்தியாவில் இப்படி எத்தனைக் காதலர்கள் வெட்டியும் நஞ்சு கொடுத்தும் எரித்தும் கொல்லப்பட்டிருப்பார்கள் என்பதை நினைக்கும்போது நம் குலை நடுங்குகிறது.

“உங்களுக்கு கௌரவம்தான் முக்கியம் என்றால் நீங்க சாக வேண்டியதுதானே? ஏன் என் பிள்ளையைக் கொன்னீங்க?” என்று பண்ணையாரை அவரது மனைவி கேட்கும்போது பல பெரிய மனிதர்களின் செவுளில் அறைந்ததுபோல் இருக்கிறது. கம்யூனிசம் பேசுகிற தொழிற்சங்கவாதிகூட எப்படி இருப்பார் என்பதை நாசர் தன் நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார். தலித்துகளுக்குள்கூட தீண்டாமை இருக்கிறது என்பதை சம்பந்தமில்லாமல் கம்யூனிஸ்டுகள் பேசுவதை இயக்குநர் சுட்டிக்காட்டியுள்ளார். சேரியைக் காட்டும்போதுகூட புரட்சியாளர் அம்பேத்கர் சிலை கோணியால் மூடப்பட்டிருக்கும் அயோக்கியத்தனத்தையும் சத்தமில்லாமல் படம்பிடித்துள்ளனர்.

தேநீர்க் கடைகளில் முன்பெல்லாம் தலித்துகளுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் ஊற்றுவார்கள். அதற்கடுத்து தனிக் குவளைகளை ஒதுக்கினார்கள். நாகரிகம் வளர வளர, அறிவியல் வளர வளர தீண்டாமையும் வேறொரு வடிவம் கொள்கிறது என்பதை திரைப்படத்தின் தேநீர்க் கடைகள் அம்பலப்படுத்துகின்றன. சேரியிலிருந்து வருகிற மாசி என்கிற இளைஞன் தேநீர் குடிக்க கடைக்கு வரும்போது மரத்தில் தொங்க விடப்பட்டுள்ள பயன்படுத்திவிட்டுத் தூக்கிப்போடும் காகிதக் குவளையில் தேநீர் குடிப்பான். உயர் சாதியினர் கண்ணாடிக் குவளையில் குடிப்பதை குளோஸ்-அப்பில் காட்டும்போது இப்பல்லாம் யார் சாதி பார்க்குறாங்க என்று முற்போக்குப் பேசுபவர்களின் முகத்தில் காறி உமிழ்வதுபோல் உள்ளது.

“சேரிக்காரர்கள் எவ்வளவுகாலம்தான் அடி வாங்குவார்கள். திருப்பி அடிப்பது எப்போது?” என்று சேரித் தோழர் கேட்கும்போது தலித் மக்களின் வலியையும் உணர்வையும் சரியாகப் பிரதிபலித்திருக்கிறார் இயக்குநர்.

மொத்தத்தில் சாதியின் பெயரால் நடக்கும் கொடுமைகளைக் களைய மாணவர்களும் இளைஞர்களும் களமிறங்கினால்தான் முடியும் என்று இயக்குநர் இளைஞர்களை உசுப்பேற்றியிருக்கிறார்.

இன்றைக்கு மாணவர்களை, இளைஞர்களை சாதிவெறி ஊட்டி தமிழகத்தை வன்முறைக் காடாக மாற்ற முயற்சி செய்து வரும் மனித சமூகத்திற்கே அவமானமான செயலை அரங்கேற்றி வருகிற காட்டுமிராண்டிகளுக்கு அறிவுரைக்கும் வகையில் சரியான நேரத்தில் வெளிவந்துள்ள சரியான படைப்பு இத்திரைப்படம். சமூகத்தில் தன்னோடு வாழும் சக மனிதன் ஏன் இப்படி சாதியின் பெயரால் அவமானப்படுத்தப்படுகிறான்? புறக்கணிக்கப்படுகிறான்? கொல்லப்படுகிறான் என்பதை பிரகாஷ்ராஜ், ராதாமோகன் ஆகியோர் கேள்வி கேட்டிருப்பது துணிச்சலான செயல், பாராட்டுக்குரிய செயல்.

சமூகநீதிக்காகப் போராடுபவர்கள், முற்போக்குப் பேசுபவர்கள், சமூகத்தை மாற்றத் துடிப்பவர்களும் இத்திரைப்படத்தைப் பார்க்க வேண்டும். அனைவரையும் பார்க்கத் தூண்ட வேண்டும். அப்போதுதான் இந்தச் சமூகத்தின் அவலங்களை பரப்புரை செய்ததற்கான கடமையைச் செய்ததாக அமையும்.

- வன்னிஅரசு ( vanni.viduthalai@gmail.com)

22 November 2012

ராமதாசுக்கு காலத்தை வென்று நிற்கும் பட்டம் மரம்வெட்டியா? குச்சிக்கொளுத்தியா?

பல்வேறு சிக்கல்களில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு. காவிரி நடுவர் ஆணையமும் உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்ட பிறகும் தமிழகத்திற்குக் காவிரி நீரைத் தர மறுக்கிறது கர்நாடக அரசு. தண்ணீர் தர மாட்டோம் என்று கன்னட தேசமே எழுந்து வேலைநிறுத்தம் நடத்துகிறது. ஆனால் தண்ணீர் விடக் கோரி கர்நாடகத்தை வலியுறுத்தும் வகையில் தமிழகத்தின் ஒற்றுமையைக் காட்ட முடியவில்லை.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழக அரசு, மத்திய அரசுக்கு வழக்கம்போல் கடிதம்தான் எழுத முடிகிறது. கேரள அரசோ அம்மாநில உரிமைகளுக்காக உறுதியாக நிற்கிறது. தமிழகம் எதிர்வினையாற்றக்கூட முடியவில்லை.
ramadoss_403'இருட்டறையில் உள்ளதடா தமிழகம்' என்கிற வகையில் தினமும் 10 மணி நேரம், 15 மணி நேரம் செயற்கையான மின்வெட்டால் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதனால் திருப்பூர், கோவை மாவட்டங்களில் தொழில்கள் பாதிக்கப்படுவதால் தொடர்ந்து தொழிலாளர்களும், ஆலை உற்பத்தியாளர்களும் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
தலைமுறை தலைமுறையாய் மக்களை அழித்தொழிக்கும் அணுஉலை கூடாது என்று 500 நாட்களுக்கும் மேலாக தென்தமிழகத்தில் வெகுமக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கடலுக்குள் இறங்கினால்தான் பிழைப்பு நடத்த முடியும் என்கிற நிலைமையில் உள்ள அம்மக்கள் கடலுக்குள் செல்லாமல் தொடர்ந்து போராட்டக் களத்தில் தம்மை ஈடுபடுத்தி வருத்திக் கொண்டிருக்கிறார்கள். இதே அணுஉலை முதலில் கேரளாவுக்கு வந்தபோது ஒட்டுமொத்தக் கேரள மக்களும் கட்சி, சாதி, மத பேதமின்றி போராடி அணுஉலையை விரட்டியடித்தார்கள். ஒட்டுமொத்தத் தமிழர்களையும் காவு வாங்கத் துடிக்கும் அணுஉலைக்கு எதிராக ஒரு பகுதி மக்கள் மட்டுமே போராடிக் கொண்டிருக்கும் அவல நிலை இங்கே தொடர்கிறது. தமிழக அரசோ அணுஉலை எதிர்ப்பாளர்களை அடக்குவதிலேயே முனைப்பு காட்டி வருகிறது.
அடுத்தத் தலைமுறையை செழுமைப்படுத்தக்கூடிய கல்வி வியாபாரத் தளமாக மாறிப்போனதால் ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாமானிய மக்கள் கல்வி கற்க முடியாத நிலை, கொழுத்த பணக்காரர்கள்தான் மேற்கல்வியைத் தொடர முடியும் என்கிற அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஊழலும் கையூட்டும் நீக்கமற தலைவிரித்தாடுகின்றன கல்வித் துறையில்.
விவசாய நிலங்களையெல்லாம் வீட்டு மனைகளாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் நில வணிகர்கள். வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் கைகளில் தமிழர் நிலம் சிறைபட்டுக் கிடக்கிறது. மார்வாரிகளும் சேட்டுகளும் தமிழச்சிகளின் நகைகளைச் சூழ்ச்சி செய்து பறிமுதல் செய்வதுடன் வீடுகளையும் பறிமுதல் செய்கிறார்கள். சில்லறை வணிகத்தில்கூட அந்நிய முதலீடு என்கிற பெயரில் பிற மொழிக்காரர்கள் ஆதிக்கம் நடைபெறுகிறது. பெட்டிக் கடைகள்கூட இனி தமிழர்களின் கைகளிலிருந்து பறிக்கப்படலாம். தமிழகத்தில் இருக்கிறோமா அல்லது வடநாட்டில் இருக்கிறோமா என்கிற அளவில் வியாபாரத் தளங்களிலும் பிற மொழிக்காரர்களின் ஆதிக்கம் தமிழகத்தைக் கவலைகொள்ளச் செய்கிறது.
கடலோர மீனவர்கள் தினந்தோறும் சிங்களப் படையினரால் கொல்லப்பட்டு வருகிறார்கள். கடல் வளம், சிங்களர்களால் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.
முள்ளிவாய்க்கால் போருக்குப் பிறகு தமிழீழ நிலத்தில் தமிழர்கள் சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். தமிழினம் என்கிற ஓர் இனம் வாழ்ந்ததாகவே தடயம் இருக்கக்கூடாது என்கிற அளவில் அழித்தொழிப்பு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
தமிழ் நிலத்தில் இவ்வளவு சிக்கல்கள் தமிழர்களை முற்றுகையிட்டுக் கொண்டிருக்கின்றன. இனம், மொழி, பண்பாடு திட்டமிட்டே சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இவை பற்றியெல்லாம் எந்த அக்கறையும் கவலையும் இல்லாமல் காதலைப் பற்றியும், காதல் திருமணத்தைப் பற்றியும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார் மகா புரட்சியாளர் ஒருவர். கற்காலத்தை நோக்கி தமிழகத்தைப் பின்னோக்கி நகர்த்திக் கொண்டிருக்கும் அந்தப் புரட்சியாளரின் பெயர் மருத்துவர் இராமதாசு.
எஸ்.எஸ்.எஸ். (ட்ரிபிள் எஸ்) என்கிற தொண்டு நிறுவனத்தின் மூலம் வன்னிய சமுதாய மக்களுக்கு அறிமுகமாகி, வன்னியர் சங்கத்தை உருவாக்கி, அதையே பாட்டாளி மக்கள் கட்சியாய் முற்போக்கு முலாம் பூசி, மீண்டும் சாதி அரசியலில் தீவிரமாகியிருக்கிறார். கடந்த காலங்களில் முன்னுக்குப் பின்னான அறிக்கைகள் மூலம் அரசியலையே அதிர்ச்சியடைய வைத்த அவர், தாழ்த்தப்பட்ட மக்களின் குடிசைகளைக் கொளுத்தி அதன் மூலம் தங்களை வலிமை மிகுந்த சமூகமாய்த் தமிழ்கூறும் நல்லுலகுக்குக் காட்டிக் கொண்டவர். இதனால் 'குச்சிகொளுத்தி இராமதாசு' என்கிற சிறப்புப் பட்டத்தையும் பெற்றார். வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு கேட்டு போராடுவதாகச் சொல்லி சாலையோர மரங்களை வெட்டிப் போட்டு தங்களது மகத்தான வீரத்தைப் புறநானூற்றுத் தமிழர்களிடம் காட்டியதற்காக 'மரம்வெட்டி இராமதாசு' என்னும் கூடுதல் சிறப்புப் பட்டத்தையும் பெற்றார்.
இத்தனை பராக்கிரமங்களையும் செய்து திராவிடக் கட்சிகளின் துணையோடு அரசியல் அதிகாரத்திற்கு வந்தவர் பல்வேறு புரட்சிகரத் திட்டங்களை அறிவித்தார். தனது குடும்பத்திலிருந்து யாரும் பதவிக்கு வரமாட்டார்கள்; தமது கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறு செய்தால் சவுக்கடி கொடுக்கப்படும்; தலித் ஒருவரை முதல்வராக்குவோம் என்றெல்லாம் புரட்சிகர வசனங்களைப் பேசினார். இப்போதோ 'புதிய அரசியல்! புதிய நம்பிக்கை!' என்று தமது தவப்புதல்வன் அன்புமணிக்காக, கட்சிக்காக உழைத்தவர்களையெல்லாம் விரட்டிவிட்டு தன்னந்தனியாக நிற்கிறார். "ஜெயலலிதாவோடு கூட்டுச் சேர்வது பெற்ற தாயோடு படுப்பதற்குச் சமம். எனவே அவரோடு கூட்டு சேரமாட்டோம்" என்று அறிவித்த சில ஆண்டுகளிலேயே ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்து அரசியலில் பெரும் புரட்சியை உருவாக்கினார்.
தலித் ஒருவரை முதல்வராக்குவோம் என்று அறிவிப்பில் மட்டும் புரட்சி செய்த மருத்துவர் இராமதாசு, திராவிடக் கட்சிகளோடு கூட்டணி இல்லை என்று புரட்சி வசனமும் பேசி வருகிறார். வருகிற தேர்தல் இந்தப் புரட்சி வசனத்தை காமெடி வசனமாக்கப் போவது உறுதி.
இந்த நேரத்தில் இன்னொரு புரட்சியை ரத்தக் களறியோடு ஆரம்பித்திருக்கிறார் மருத்துவர். அதாவது சாதி மறுப்புத் திருமணம் கூடாது என்பதுதான் அந்தப் புரட்சி. மீறிச் செய்தால் என்ன நடக்கும் என்பதற்கு தர்மபுரிதான் சாட்சி என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
தான் வாழ்ந்த காலம் முழுவதும் தமிழர் விடுதலைக்காகப் பாடாற்றியவர் அய்யா பெரியார். தமிழர் விடுதலையடைய வேண்டுமென்றால் சாதி மறுப்புத் திருமணங்கள் அவசியம் என்பதை வலியுறுத்தி, அந்தத் தள்ளாத வயதிலும் மூத்திரப் பையைத் தூக்கிக் கொண்டு களமாடினார். பெரியார் மட்டுமல்ல புரட்சியாளர் அம்பேத்கர், அய்யா வைகுண்டர் என அனைவரும் சாதி மறுப்புத் திருமணங்களை வலியுறுத்திக் களமாடினார்கள்.
ஆனால் வாராது வந்த மாமணியாய் வாய்க்கப் பெற்றுள்ளதாகக் கருதிக்கொள்ளும் மருத்துவர் இராமதாசு, சாதி மறுப்புத் திருமணங்கள் கூடாது என்கிறார். காரணம் கேட்டால், எல்லாம் நாடகக் காதல் என்கிறார். இரு தனி நபர்களுக்கிடையே எழும் இயற்கையான உணர்ச்சியை அரசியலாக்கும் அருவறுப்பான நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார் இந்தப் புரட்சியாளர். முதலில் சாதி மறுப்புத் திருமணங்கள் வேண்டாம் என்றவர், இப்போது காதல் திருமணங்களே கூடாது என்கிறார்.
பாலின உணர்ச்சி தொடர்பாக பல்வேறு உரிமைப் பிரச்சனை உலகளாவிய அளவில் எழுந்துள்ளது. திருநங்கைகள் மட்டுமல்ல ஓரினச் சேர்க்கையாளர்கூட தங்களது உரிமைகளுக்காகத் தெருவில் இறங்கிப் போராடத் தொடங்கியுள்ளனர். இச்சிக்கல்கள் குறித்து சமூக அக்கறை உள்ளவர்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மருத்துவரோ எவ்வளவு பிற்போக்குத்தனமாகவும் பிழைப்புவாதியாகவும் செயல்படுகிறார் பாருங்கள்.
இனிமேல் காதலை மையப்படுத்தித் திரைப்படங்களே எடுக்கக்கூடாது என்று சொன்னாலும் சொல்வார் போலிருக்கிறது. தெருவில் இனி ஆணும் பெண்ணும் சேர்ந்து நடக்கக் கூடாது; பூங்காக்களில் கடற்கரைகளில் ஜோடி ஜோடியாக உட்காரக் கூடாது; மீறினால் தருமபுரி போல் நடக்கும் என்று இனி எச்சரிக்கை விடுத்தாலும் விடுவார் போலிருக்கிறது. அப்படியான ஒரு பாசிசத்தை தமிழக அரசியலில் திணித்துக் கொண்டிருக்கிறார். இவர் அடுத்தவர்களுடைய படுக்கையறையை எட்டிப் பார்க்கும் அருவறுப்பான அரசியலுக்குள் தள்ளப்பட்டதன் பின்னணி என்ன?
anbumani_ramadoss_500
தொடர்ச்சியாக ஏற்பட்ட தேர்தல் தோல்வியும், இவரால் புறக்கணிக்கப்பட்ட வன்னியர் சமூகம் இவரைப் புறக்கணித்ததும்தான் காரணம். பாமகவில் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்த திரு.வேல்முருகன் அவர்கள் நீக்கப்பட்ட பிறகு பாமகவின் பெரும்பகுதி அவர் பக்கம் இணைந்தது. இதனால் பதற்றமடைந்த மருத்துவருக்குக் கிடைத்த அரிய மருந்துதான் இந்தக் காதல் விவகாரம்.
"கீழ் சாதிக்காரங்க நம்ம பொண்ண தூக்கிட்டு ஓடுறான். சும்மா இருக்கீங்களே...." என்று சாதி உணர்வைத் தூண்டுகிற பிரச்சாரத்தால் மீண்டும் வன்னிய சமூகத்தினருக்கு சாதிவெறியூட்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். இது மட்டுமல்லாது, தலித் அல்லாத பிற சமூகத்தினரையும் ஒருங்கிணைத்து, தலித்துகளுக்கும் தலித் அல்லாதவருக்கும் இடையே பகையை உருவாக்க முயலுவதுதான் மருத்துவரின் புதிய அரசியல். ஆகவேதான் சாதிக் கட்சிகளுடன் மட்டும்தான் கூட்டணி என்று வெளிப்படையாக அறிவித்து மீண்டும் முருங்கை மரத்தில் ஏறுகிறது இந்த வேதாளம். அதற்குக் கிடைத்த வாய்ப்புதான் தருமபுரி நத்தம் சேரி. இப்போது அவர் நினைத்ததுபோல் செய்து முடித்துவிட்டார். எதிர்வினையாற்ற வேண்டியவர்கள் தலித்துகள்தான். அதிலும் குறிப்பாக, 'அடங்க மறு! அத்து மீறு! திமிரி எழு! திருப்பி அடி!' என்கிற முழக்கங்களை முன்வைத்த விடுதலைச் சிறுத்தைகள்தான் எதிர்வினையாற்ற வேண்டியவர்கள். ஆனால் சிறுத்தைகளோ அமைதி காக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை தலித் இயக்கங்கள் எழுப்புகின்றன.
"பெரியாரிய, மார்க்சிய, தமிழ்த்தேசிய சக்திகளும் மனித உரிமை ஆர்வலர்களும், இன்ன பிற சனநாயகச் சக்திகளும் இத்தகைய இக்கட்டான நிலைமையில் ஆற்றவிருக்கும் எதிர்வினைகளுக்காக - செயற்பாடுகளுக்காக விடுதலைச் சிறுத்தைகள் காத்திருப்பதையே தற்போதையக் கடமையாகக் கருதுகிறது.
சமூக நல்லிணக்கத்தின் மீதும் சனநாயகத்தின் மீதும் நம்பிக்கையுள்ள அனைவரையும் ஒருங்கிணைக்கவும், தமிழகத்தை முற்போக்கான திசைநோக்கி இட்டுச் செல்லவும் பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் முன்வந்தால், அதற்கு உண்மையாக ஒத்துழைக்க விடுதலைச் சிறுத்தைகள் எப்போதும் கைகளை நீட்டியபடியே காத்திருக்கிறது."
என்ற தனது அறிக்கை மூலம் தமிழ்ச் சமூக ஒற்றுமைக்காகத் தான் எப்போதும் தயாராக இருப்பதை உணர்த்தியிருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள்.
முதிர்ச்சியாக நடந்துகொள்ள வேண்டிய வயது பெரியவர் இராமதாசுக்கு இருக்கிறது. தொல்.திருமாவளவன் அவர்களுக்கோ 50 வயதுதான் ஆகிறது. இளைஞர்களை வழிநடத்தும் துடிப்புமிக்க இளைஞர். ஆனால் இந்த வயதில் மிகவும் முதிர்ச்சியாகவும் பொறுப்புணர்வோடும் நடந்துகொள்வதோடு, தமிழகத்தில் மற்றவர்களைக் காட்டிலும் சமூகப் பொறுப்பும் அக்கறையும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு உள்ளது என்பதைத்தான் திருமாவளவன் அவர்கள் தமது அறிக்கையின் மூலம் உணர்த்துகிறார். "கலவரத்தை உருவாக்க ஒரு ரவுடி போதும். கலவரத்தைக் கட்டுப்படுத்த நல்ல தலைவன் தேவை." கலவரத்தைக் கட்டுப்படுத்தியிருக்கிறார் தொல்.திருமாவளவன் அவர்கள். கலவரத்தை உருவாக்கிய ரவுடிகளை தமிழ்ச் சமூகம் அறியும்.
இச்சூழலில் தமிழர் ஒற்றுமை குறித்து அக்கறைப்படுபவர்கள், 'நாம் தமிழர்' என்று உரத்துக் குரல் கொடுப்பவர்கள், பிரபாகரன் வழியில் நடப்போம் என்று சொல்பவர்கள் வாய்மூடிக் கிடப்பதன் பின்னணி என்ன?
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அய்யா நெடுமாறன் அவர்கள், மருத்துவர் இராமதாசோடு சேர்ந்து தலித்துகளுக்கும் எங்காவது நினைவு முற்றம் அமைக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறாரோ?
'நாம் தமிழர்' என்று முழங்கும் சீமான்கள் மாவீரர் மாதமான நவம்பர் மாதம் என்றாலும் அமைதிப்படை படப்பிடிப்பில் கவனம் செலுத்தத்தான் முடிகிறது. இவர்களால் வேறென்ன கிழிக்க‌ முடியும்?
தருமபுரி நிகழ்வுக்குக் கண்டனம் தெரிவிக்காதவர்கள், சாதி மறுப்புத் திருமணத்தை எதிர்க்கும் மருத்துவர் இராமதாசுக்குக் கண்டனம் தெரிவிக்காதவர்கள் மருத்துவரின் கருத்தை ஆதரிப்பதாகத்தானே அர்த்தம். நடுநிலை என்பது ஏமாற்று வேலைதானே. பாதிக்கப்பட்டவன் பக்கம் நிற்பதே அறம். இந்த அறம் நெடுமாறன் அவர்களுக்கு உண்டா? தமிழ்த் தேசியவாதிகளுக்கு உண்டா? அல்லது தலித்துகள் தமிழர்கள் இல்லை என்று எண்ணி இவர்கள் கள்ள மவுனம் சாதிக்கிறார்களா?
மருத்துவரை பல பட்டங்களைச் சொல்லி தமிழகத்தில் அழைக்கிறார்கள். தமிழினக் காவலர் என்றழைக்கிறார்கள். தமிழ்க்குடிதாங்கி பட்டமும், அம்பேத்கர் சுடர் பட்டமும் வழங்கி சிறுத்தைகள் அவருக்குச் சிறப்புச் செய்தார்கள். ஆனால் இப்பட்டங்களெல்லாம் இப்போது பொருத்தமில்லாமலே போய்விட்டன. காலத்தை வென்று நிற்கின்ற பட்டங்கள் 'மரம் வெட்டி இராமதாசு', 'குச்சிக்கொளுத்தி இராமதாசு' என்பவைதான். இதைவிடத் தீர்க்கதரிசனமான பட்டங்களை, புரட்சிகரமான பட்டங்களை யார் சுமக்க முடியும்?
மரம் வெட்டிக்கு நிகர் மரம் வெட்டிதான். குச்சிக்கொளுத்திக்கு நிகர் குச்சிக்கொளுத்திதான் என்பதை மருத்துவர் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்.
- வன்னி அரசு, மாநிலச் செய்தித் தொடர்பாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

நன்றி : கீற்று இணையதளம் 

31 July 2012

நாம் தமிழர் கட்சியின் கொள்கை ஆவணம்: 'அய்யோ இப்பவே கண்ணைக் கட்டுதே!' -வன்னிஅரசு

"அரசே என்ன இது? உங்கள் உடல் மூடப்பட்டு முகம் மட்டும் தெரிகிறது. அந்த மல்யுத்த வீரனுடைய முகம் மூடப்பட்டு உடல் மூடப்படாமல் இருக்கிறது. ஒன்றும் புரியவில்லையே"
"அட மங்குனி அமைச்சரே! உன் மூளைக்கு இதெல்லாம் புரியாது. இப்போது நான் எப்படி இருக்கிறேன் என்று எனக்குப் பின் வரும் தலைமுறைக்குத் தெரியவா போகிறது? இப்படி நோஞ்சானாக ஒரு மன்னன் இருந்தான் என்பதைவிட பராக்கிரமசாலியாக, மாபெரும் வீரனாக இருந்தான் என்று வரலாறு சொல்ல வேண்டும். வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!"
இம்சை அரசன் திரைப்படத்தில் வரும் இந்தக் காட்சி போல இருக்கிறது 'நாம் தமிழர்' சீமானின் பேச்சும் போக்கும்.
seeman_2992009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்குப் பிறகு தொடங்கிய ஓர் அரசியல் கட்சிதான் 'நாம் தமிழர்'. திரைப்படங்களில் ஒரே பாடலில் பண்ணையாருக்கு எதிராக மக்களைத் திரட்டும் கதாநாயகன் போல செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழக அரசியலில் புரட்சி செய்யக் கிளம்பியிருக்கிறார்.

தமிழீழத்தை மீட்பதற்காக விடுதலைப் புலிகள் நடத்திய மாபெரும் போர் தற்போதைக்கு முடிவுற்ற சூழலில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொடியையும் (பிற்பாடுதான் கொடியில் சிறிது மாற்றம் செய்தனர்) தமிழர் பெருந்தலைவர் சி.பா. ஆதித்தனார் ஆரம்பித்த 'நாம் தமிழர்' இயக்கப் பெயரையும் 'எடுத்து'க்கொண்டு தமிழக அரசியலில் புரட்சி செய்யக் கிளம்பி இருக்கிறார் அண்ணன் சீமான் அவர்கள் (சொந்த புத்தி எதுவுமில்லை என்கிற விவாதத்திற்கெல்லாம் போக வேண்டாம்).

22 July 2012

நாமே கட்டுவோம் வலிமையான அமைப்பை - வன்னிஅரசு

நாமே கட்டுவோம் வலிமையான அமைப்பை
- வன்னிஅரசு

நெருப்பைக் கடப்பது எளிது
பொறுப்பாய் நடப்பது கடிது
புயலைக் கொண்டுவருவது எளிது
மக்களை அமைப்பாக்குவது கடிது
எது கடிதோ, எது முடியாதோ
அதை நிகழ்த்துதல்தான் புரட்சி

பொதுக் கிணற்றில்
புது பக்கெட் வாங்கிக்கூட
தண்ணீர் எடுக்க முடியாது
பொதுத் தெருவில்
புதுச் செருப்புடன்கூட
நடமாட முடியாது
சைக்கிளில் செல்ல முடியாது
நல்ல பெயர் வைக்க முடியாது
நல்ல சோறு சாப்பிட முடியாது
கை நிறைய காசு இருந்தும்
கொட்டாங்குச்சியில்தான் தேநீர்
அது ஒரு காலம்
அது நீலத் துண்டுகளின் காலம்
அது மனுக்கொடுக்கும் காலம்
அந்தக் காலம் இப்போது மலையேறிவிட்டது

அடங்க மறு
அத்து மீறு
திமிறி எழு
திருப்பி அடி
இந்த முழக்கமே பொதுப் பாதையைத் திறந்து விட்டது
பொதுக் கிணற்றை உடைத்து
சேரிப்பக்கம் மடை மாற்றியது
தேநீர்க் கடைகளெல்லாம் அதிர்ந்தன
தனிக் குவளைகள் உடைந்தன

இந்த அதிசயத்தை நிகழ்த்தியது யார்?
இந்தப் புரட்சியை நடத்திக் காட்டியது யார்?

பொன்விழாக் காணும் போராளித் தலைவரை
காலம் முன்மொழிகிறது
அர்ப்பணிப்பு வழிமொழிகிறது

நெல்லை விதைத்தால்
நெல்லைத்தான் தரும் வயல்
வானம் பார்த்த பூமியானாலும்
கம்மங் கதிர்களும் வரகு கதிர்களும்
காத்துக்கிடக்கின்றன விவசாயிகள் வருகைக்காய்
முளைப்பாரித் திருவிழாவும்
பெரிசுகளின் கும்மியாட்டமும்
வயலுக்கும் வீட்டுக்குமாய்
தானியங்கள் குவிந்து கிடக்கும்.

அந்த விவசாயிக்குத் தெரியும்
நிலம் என்னுடையது
பயிர் என்னுடையது
உழைப்பு என்னுடையது
இலாபமும் என்னுடையது

அந்த விவசாயிக்குத் தெரியும்
நமக்கு நாமே திட்டத்தின்கீழ்தான்
வெள்ளாமையைப் பெருக்க முடியும் என்று

இப்போது சொல்லுங்கள்
இந்த அமைப்பு என்னுடையது
இந்த கோட்பாடுகள் என்னுடையவை
இந்த அமைப்பின் அனைத்தும்
எனக்கே எனக்கு

நாமே கொட்டுவோம் தங்கக் காசுகளை
நாமே கட்டுவோம் வலிமையான அமைப்பை
தொடர்வோம் தகதக தங்க வேட்டையை

ஜக்கம்மா இது உனக்கே ஞாயமா?

"கீழ்ச் சாதிக்காரங்க சமைக்கிற சோத்தச் சாப்பிட்டா சாமிக் குத்தம் ஆயிடும். எங்க ஜக்கம்மாவுக்குக் கோவம் வந்து எங்களல்லாம் அழிச்சிடும்... அதனாலதான் இந்தச் சாப்பாட்டை எங்க பிள்ளைங்கள விடல"
- இப்படி ஒரு நவீன சாதிய வன்கொடுமை ஜக்கம்மாவின் பேரால் நடந்துகொண்டிருக்கிறது.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரிலிருந்து சிவகாசி செல்லும் சாலையிலிருக்கிறது கொத்தமங்கலம் கம்மப்பட்டி. கே.கம்மப்பட்டி என்று அழைக்கப்படும் அந்த ஊரில் இராஜகம்மளத்து நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த 200 குடும்பங்களுக்கும் மேற்பட்ட மக்கள் நிலைகொண்டுள்ளனர். வானம் பார்த்த பூமியான அந்தக் கரிசல் பூமியில் விவசாயம்தான் அப்பகுதி மக்களுக்குத் தொழிலாய் இருந்தது. ஆனால் அப்பகுதியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிலில்தான் நல்ல வருமானம். இருந்தாலும் இந்த ராஜகம்மளத்து நாயக்கர்களுக்கோ வீடு வீடாய்ச் சென்று குறி சொல்வதுதான் குலத் தொழிலாம்.
வருடத்தில் ஆறு மாதம் ஊர் ஊராய், வீடு வீடாய்ச் சென்று என்ன நடக்கப் போகிறது என்று குறி சொல்வார்கள். 'யார் வாயிலும் விழலாம்; ஆனால் கம்மளத்து நாயுடுகளின் வாயில் மட்டும் விழக்கூடாது' என்று பயந்துகொண்டு ஊர் மக்கள் அரிசி, பருப்பு போன்ற தானியங்களும் பணமும் கொடுப்பார்கள். 'வீட்டில் கருப்பு இருக்கிறது, தோஷம் இருக்கிறது; அதை விரட்ட வேண்டுமானால் ஜக்கம்மாவுக்குப் படையல் செய்ய வேண்டும்' என்று கூறி கூடுதலான பணமும் பெற்றுக்கொள்வார்கள். இதுதான் இம்மக்களின் ஓராண்டு வருமானம். அரசு வேலை பெறுவதில் அதிகக் கவனம் செலுத்துவதில்லை. குழந்தைகளை ஆரம்பக் கல்வி வரை மட்டுமே படிக்க வைப்பார்கள். மேற்கொண்டு படிப்பது ஜக்கம்மாவுக்குப் பிடிக்காதாம்.
ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இம்மக்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இம்மக்கள் அதிகம் குடியேற ஆரம்பித்தார்கள். வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய வீரபாண்டிய கட்டபொம்மன் இச்சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் செய்தி. வீட்டில் தெலுங்கு மொழியிலும், வெளியில் தமிழ் மொழியிலும் பேசிவரும் கம்பளத்தார்கள், சாதி வெறியில் தமிழகத்தின் எந்தவொரு ஆதிக்க சாதிக்கும் சளைத்தவர்கள் அல்லர்.
இப்படியான மக்கள் வசிக்கும் அந்த கம்மபட்டியில், அம்மக்களின் வளர்ச்சிக்காகவே தொடக்கப்பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது. தொடக்கப்பள்ளிக்கான இடத்தை கம்மப்பட்டி ஜக்கம்மா வாரிசுகளே அளித்துள்ளனர். இப்பள்ளியில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் சத்துணவு அமைப்பாளராக கம்மப்பட்டியிலிருந்து 21 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள மானகசேரியைச் சேர்ந்த மரகதவல்லி பணி நியமனம் செய்யப்படுகிறார். மரகதவல்லிக்கு சமையல் உதவியாளராக சரவணக்குமாரி நியமிக்கப்பட்டுள்ளார். தாழ்த்தப்பட்ட பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் கம்மப்பட்டி தொடக்கப்பள்ளிக்குச் சென்று அடுப்பு பற்ற வைத்ததிலிருந்து தீண்டாமையும் பற்றிக்கொண்டது. திடீரென்று பள்ளிக் குழந்தைகள் மதிய உணவு நேரத்தில் சத்துணவு சாப்பிடாமல் வீட்டுக்கு வர ஆரம்பித்தார்கள். சமைத்த உணவு வீணாததுதான் மிச்சம். அப்புறம்தான் தெரிந்தது, "எஸ்.சி. ஆளுங்க சமைச்ச சாப்பாடு ஜக்கம்மாவுக்கு ஆகாது" என்று சத்துணவு ஊழியர்களிடம் அவ்வூர் மக்கள் சொன்ன செய்தி.
இது குறித்து மரகதவல்லி கல்வித்துறை அதிகாரியிடம் புகார் செய்துள்ளார். அதிகாரிகளோ, "அவுங்க உங்ககிட்ட பிரச்சனை பண்ணாதது வரை அந்த ஊருக்குப் போங்க. கொஞ்சமா சமையல் பண்ணுங்க. பசங்க வந்தால் சாப்பாடு கொடுங்க. இல்லேன்னா சாப்பாட்டை கீழே கொட்டிட்டு வாங்க" என்று, திணிக்கப்படும் நவீன சாதியத் தீண்டாமைக்கு ஆதரவாகவே பேசி அனுப்பியுள்ளனர்.
மரகதவல்லியும் சரவணகுமாரியும் தினமும் பள்ளிக்குச் சென்று ஒரு படி அரிசியை சமைத்துக் கீழே கொட்டுவதுதான் வேலை. அரசுக்குத் தெரிந்தே இதனைச் செய்கிறார்கள். கீழே கொட்டுவதற்காகவே வேலைக்குச் செல்கிறார்கள். ஜக்கம்மா என்கிற தெய்வத்தின் பெயரால் இப்படிச் சாதியப் பார்வையுடன் தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் அந்தக் கம்மளத்து நாயக்கர்களிடம் இதுவரை அரசு அதிகாரிகளோ மற்ற யாருமோ பேசக்கூட முயற்சிக்காததுதான் வேதனையாக உள்ளது. தொடர்புடைய சத்துணவு ஊழியர்களோ, தங்களை வேறு ஊருக்குப் பணியிட மாற்றம் செய்ய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
தாழ்த்தப்பட்டோரல்லாத சத்துணவு ஊழியர்களை வரவேற்பதற்காக கே.கம்மப்பட்டி ஊருக்கு வெளியே ஜக்கம்மா காத்துக்கொண்டிருக்கிறாள். அரசோ பின்னால் நின்றுகொண்டு ஜக்கம்மாவுக்கு விசிறிக்கொண்டிருக்கிறது.
ஜக்கம்மாவின் பெயரால், சாமி குத்தம் என்ற பெயரால் புதுவிதமாக சாதியக் வன்கொடுமை நடந்து வருகிறது. இதற்கு அரசே துணை போகிறது. 'தீண்டாமை ஒரு பாவச் செயல். தீண்டாமை ஒரு பெருங்குற்றம்' என  பாடப் புத்தகத்தில் பாடம் சொல்லித் தருகிற இடத்திலேயே தீண்டாமை தலைவிரித்தாடுகிறது. அரசுதான் இப்படி என்றால் தமிழர்களுக்காகப் பாடுபடுவதாகவும் தமிழ்த் தேசியத்தை நிலைநாட்டுவதாகவும் தமிழர்களுக்கு விடுதலை வாங்கித் தருவதாகவும் தமிழகத்தில் பீற்றித் திரியும் தலைவர்கள் இச்சாதி வெறி குறித்து கண்டன அறிக்கை கொடுக்கக்கூடத் தயங்குகிறார்கள். விடுதலைச் சிறுத்தைகள்தான் அந்த ஊருக்குச் சென்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். சாதியத்தை ஒழிக்காமல் தமிழர்களுக்கான விடுதலையை எப்படிப் படைக்கப் போகிறார்களோ தெரியவில்லை.
கம்மளத்து மக்களுக்கு ஜக்கம்மாவே பக்கபலமாக இருக்கிறாள்... ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு...? ஜக்கம்மா இது உனக்கே ஞாயமா?
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=20558%3A2012-07-22-02-12-36&catid=1%3Aarticles&Itemid=264http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=20558%3A2012-07-22-02-12-36&catid=1%3Aarticles&Itemid=264

21 February 2012

கம்யூனிசத்தை அவமதிக்கும் தோழர் தா.பாண்டியன்

thaa_pandian_360
கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான தோழர் ஜீவா அவர்களைப் பற்றி கேட்கக் கேட்க பிரமிப்பாக இருக்கும். அவ்வளவு நேர்மையான - தூய்மையான தலைவராக யாவராலும் மதிக்கப்படுபவராக இந்தத் தலைமுறைக்கு மட்டுமல்லாமல் அடுத்தடுத்தத் தலைமுறைக்கும் பாடமாக வாழ்ந்தவர் தோழர் ஜீவா.
1960ஆம் ஆண்டு கோவையில் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றச் சென்றிருக்கிறார் தோழர் ஜீவா. அவருடைய எழுச்சிகரமான உரைக்குப்பின், கோவை மாவட்டத்தின் சார்பில் ஜீவா அவர்களிடம் கட்சி வளர்ச்சி நிதி வழங்கப்பட்டது. இரவு 10 மணிக்கு மேல் ஆகிவிட்டது. அவருடன் வந்த தோழர்கள் சிலர், “தோழர் சாப்பிடப் போகலாமா?” என்று கேட்கின்றனர். அதற்கு ஜீவா, “உங்களிடம் பணம் இருந்தால் சாப்பிடப் போகலாம்; என்னிடம் இல்லை” என்றிருக்கிறார். உடன் வந்த தோழர்களோ, “இதோ உங்களிடம்தான் இவ்வளவு பணம் இருக்கிறதே” என்று அவர் கையில் இருந்த மஞ்சள் பையைக் காட்டிக் கேட்டார்கள். அதற்கு, “இது என்னுடைய பணம் அல்ல; கட்சிப் பணம். இதை கட்சியில் ஒப்படைக்க வேண்டும்” என்று பதில் அளித்துவிட்டு அங்கிருந்து நடந்தே பேருந்து நிலையத்திற்குச் சென்றுவிட்டார் ஜீவா. இப்போது அரசியல் வகுப்பெடுக்கும் தலைவர்கள் ஜீவாவின் நேர்மையைப் பற்றிச் சொல்லும்போது இச்சம்பவத்தை பெருமிதத்துடன் கூறுவார்கள்.

29 January 2012

முத்துக்குமாரின் கேள்விகள் தொடருகின்றன



2009ஆம் ஆண்டு சனவரி 29. இந்த நாளை உணர்வுள்ள தமிழர் எவரும் மறந்து விட முடியாது.  முத்துக்குமார் சாவடைந்து மூன்று ஆண்டுகள் உருண்டோடி விட்டன.  

'கரும்புலி முத்துக்குமார்' என்று தமிழர்களால் அழைக்கப்படும் அந்த மாவீரன் தன் உடலுக்கு நெருப்பு வைத்துக்கொண்டு, தமிழீழ விடுதலை நெருப்பை தமிழகமெங்கும் பற்ற வைத்து 3 ஆண்டுகள் ஓடிவிட்டன.  3ஆம் ஆண்டு நினைவுநாள் நம் மனசாட்சியைப் பிடுங்கித் தின்றுகொண்டிருக்கிறது.  
இன்றைக்கும் அந்த சாஸ்திரி பவன் அலுவலகத்தைக் கடக்கும்போதும், மூலக்கொத்தளம் இடுகாட்டிற்குச் செல்லும்போதும் நெருப்பை அள்ளித் தின்ற அந்த முத்துக்குமாரின் நினைவுகள் நம்மை அப்படியே சுட்டெரிக்கின்றன. கீழ்ப்பாக்கம் மருத்துவமனை சவக்கிடங்கில் அவனது உடலை கரிக்கட்டையாய் காட்சிக்கு வைத்திருந்தபோது தமிழர்களின் ஒட்டுமொத்த மௌனமும் கரிக்கட்டையாய் அங்கே கிடந்ததை உணரமுடிந்தது. முத்துக்குமாரின் ஈகச் சாவை, தமிழ்த் தீவிரவாதி என்று காவல்துறை திசை திருப்ப முயற்சிசெய்தபோது அந்த மருத்துவமனை வளாகமே தமிழ் உணர்வாளர்களால் கனன்றுகொண்டிருந்ததைக் கண்டுதான் காவல்துறை ஒதுங்கியது.  ஆட்டுவித்துக்கொண்டிருந்த அன்றைய கருணாநிதி அரசும் மௌனித்தது.  இளைஞர்களின் அதிவுயர் கோபம் கொளத்தூர் பகுதியை மட்டுமல்லாமல் சென்னையைத் திணறவைத்தது.  முத்துக்குமாரின் வித்துடல் கொளத்தூரிலிருந்து மூலக்கொத்தளம் இடுகாட்டிற்குக் கொண்டுசெல்லப்பட்டபோது எத்தனை எத்தனை தடைகள், எத்தனை எத்தனை முழக்கங்கள், எத்தனை எத்தனை இளைஞர்களின் முகங்கள்... நெருப்பே முழக்கமிட்டுப் போவதுபோன்ற உணர்ச்சிப் பிழம்புகள்.

26 January 2012

பழ.நெடுமாறன் அவர்களுக்கு பகிரங்கக் கடிதம்


படம் நன்றி : ஜீனியர்விகடன்
மேதகு பிரபாகரன் வழியா? அரசியல் புரோக்கர் நடராசன் வழியா?

தமிழ்த் தேசியப் பெருந்தலைவர் என்று உலகத் தமிழர்களால் அழைக்கப்படும் மரியாதைக்குரிய அய்யா பழ.நெடுமாறன் அவர்களுக்கு வணக்கம்.  நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்; விரும்புகிறேன்.
‘கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனால் அங்க ரெண்டு கொடுமை அவுத்துப்போட்டு ஆடுச்சாம்’ என்ற கதையாக இந்துத்துவ-சாதியத்தை அடித்தளமாகக் கொண்ட இந்திய தேசிய கொள்கையிலிருந்தும் பார்ப்பனியக் கொள்கையிலிருந்தும் விடுபட்டு தமிழ்த்தேசியக் களத்திற்கு வந்தால் இங்கும் அதே கொடுமை தலைவிரித்தாடினால் என்ன செய்வதய்யா?  அந்தக் கொடுமைகளை உங்களைப் போன்றவர்களும் முன்னெடுத்துச் செல்வதைப் பொறுக்க முடியாமல்தான், சமூகத்தின் கடைக்கோடியிலிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும், தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கும் விடுதலைச் சிறுத்தைகளில் ஒருவனாகவும் இருந்து தங்களுக்கு இந்த மடலை எழுதுகிறேன்.
உங்களைப் புண்படுத்தும் நோக்கத்துடனோ, அல்லது திட்டமிட்ட அரசியல் நோக்கத்துடனோ இம்மடலை தங்களுக்கு எழுதவில்லை.  உங்களை, உங்களின் அரசியல் பயணத்தை மதிப்பவன் என்கிற உரிமையில் இந்த மடலை எழுதுகிறேன். ஆனால் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் எழுப்பும் எந்த கேள்விக்கும் உங்களால் பதில் சொல்லப்படுவதில்லை. ஒரே வார்த்தையில் அதை அவதூறு என்று சொல்லாமல் - மௌனமாக இருந்துவிட்டுச் செல்வீர்கள். முன்னர் எல்லா காலத்தையும் விட ஏராளமான இளைஞர்கள் இன்று தமிழ்த் தேசிய அரசியலில் ஈர்ப்பாகி அமைப்புகளுக்கு வருகிறார்கள். அவர்கள் இனியும் ஏமாறக்கூடாது என்பதாலேயே இதை எழுதுகிறேன்.

19 January 2012

தமிழகத்தில் நடப்பது சண்டிராணி ஜெயலலிதா அரசா? மலையாள வெறியன் உம்மன்சாண்டி அரசா?


அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.  நஞ்சு கொடுத்துக் கொல்லப்படுவதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.  கழுத்தை நெறித்துக் கொலை செய்வதைப்  படித்திருப்போம். ஆனால் கொதிக்க வைத்த வெந்நீரை ஊற்றிக் கொலை செய்யப்படுவதை இப்போதுதான் தமிழகம் கேள்விப்பட்டிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு, திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்தவர்  சாந்தவேல்.  மனைவி சித்ரா, பெண் குழந்தைகள் தட்சனா, சஞ்சனாவுடன் தானுண்டு, தனது பிளம்பர் வேலையுண்டு என்று வாழ்ந்து வந்தார்.  ஒவ்வோர் ஆண்டும் சபரிமலை சென்று அய்யப்பனை வழிபடுவதையும் மற்றொரு முக்கிய வேலையாகக் கொண்டிருந்தார். 

02 November 2011

முருகதாசின் ஏழாம் அறிவில் ஓர் அறிவு "மிஸ்ஸிங்'

""என்னுடைய "தாய்மண்' என்கிற கதையை மட்டும் திரைப்படமாக எடுத்திருந்தால் ஈழமே விடுதலை அடைந்திருக்கும்'' என்றுபுலம்பெயர்ந்த தமிழர்களிடமெல்லாம் நாக்கைத் தொங்கப் போட்டு அலைவதைப் போலச் சொல்லித் திரியும், தங்கர்பச்சானாக இருக்கட்டும்...

""ஈழ விடுதலை அரசியலைப் பரப்புவதற்காக கட்சி ஆரம்பிக்கச் சொன்னவரே அண்ணன் பிரபாகரன்தான்'' என்று மேடைதோறும் முழங்கித் திரியும் "புரட்சித் தலைவியின் அன்புத் தம்பி' சீமானாக இருக்கட்டும்...

26 September 2011

மூளை இல்லாதோர் அணுகவேண்டிய முகவரி: தோழர் தா.பாண்டியன்


Photo : http://www.flickr.com/photos/bhagathk

"ஆட்டுக்கும் நாலு காலு மாட்டுக்கும் நாலு காலுன்னு பெரிய பெரிய தத்துவமெல்லாம் சொல்லுவீங்களே! உங்களுக்கே இந்த நிலைமையா?" - நடிகர் ஜனகராஜ் ஒரு திரைப்படம் முழுக்கப் பேசி வரும் வசனம் இது.

இந்தக் காமெடி போல தமிழக அரசியலிலும் பெரிய பெரிய தத்துவங்களை அவ்வப்போது அவிழ்த்து விட்டுக்கொண்டிருக்கிறார் மூத்த அரசியல்வாதி தா.பாண்டியன் அவர்கள்.  சொந்த மூளையைத்தான் கம்யூனிஸ்ட் கட்சி பயன்படுத்தும் அடுத்தவர் மூளையைப் பயன்படுத்துவதில்லை என்ற பெரிய தத்துவத்தைச் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

25 September 2011

தமிழ்த் தேசியவாதிகளே! சேரித் தமிழர்களுக்காகவும் ஒரு சொட்டுக் கண்ணீர்விடுங்கள்!


உங்கள் வீடு சாதி வெறியர்களால் கொளுத்தப் பட்டிருக்கிறதா?  அந்தக் கொளுத்தப்பட்ட வீட்டிலிருந்து பாதி எரிந்தும் எரியாமலும் உள்ள துணிகளைப் பார்த்துக் கதறியிருக் கிறீர்களா?  வீட்டில் இருந்த கொஞ்சம் அரிசியும் அந்த நெருப்பில் "கருகிப்'' போனதை முகர்ந்திருக்கிறீர்களா?  எரிகின்ற சேரிச் சாம்பலுக்குள் கிடக்கிற 50 பைசா, 1 ரூபாய் பைசாக்களைத் தேடியிருக்கிறீர்களா?

ஒப்பாரியும் ஓலமுமாய் வழிந்தோடும் கண்ணீருடன் உங்கள் தாய் கதறுவதைப் பார்த்திருக்கிறீர்களா?

20 September 2011

'நம்புங்கய்யா... நானும் ரவுடிதான்!'

cartoon bala
'அறுக்க மாட்டாதவன் இடுப்பைச் சுத்தி அம்பத்திரண்டு அரிவாளாம்!' - ஊரையும் மரத்தையும் சுற்றித் திரிகிற ஒன்றுக்கும் உதவாத ஊதாரிகளைப் பார்த்து ஊர்ப் பெரிசுகள் இப்படித்தான் கிண்டலிப்பார்கள்.  சுருக்கமாக 'கைப்புள்ள வடிவேலு'வைப் போன்ற கேரக்டர்களைத்தான் இப்படிச் சொல்வார்கள்.

தமிழக அரசியலிலும் ஒரு கைப்புள்ள சுற்றிக்கொண்டு திரிகிறார்.  அவர்தான் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்!  காங்கிரஸ் கட்சி ஏதோ தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்கவே முடியாத கட்சி போலவும், எல்லா கட்சிகளும் காங்கிரஸ் வந்தால்தான் ஜெயிக்கவே முடியும் என்று கெஞ்சுவது போலவும் இளங்கோவன் உதார் விட்டுக்கொண்டு திரிகிறார்.  கைவிலங்கு உடைஞ்சதாகவும், விடுதலை அடைந்து விட்டதாகவும், தனித்துப் போட்டியிடப் போவதாகவும் உளறிக்கொண்டு திரிகிறார்.  ஏதோ தனித்துப் போட்டியிட்டு 10 மாநகராட்சிகளையும், 152 நகராட்சிகளையும், ஒட்டுமொத்த ஊராட்சிகளையும் கைப்பற்றுவது போல காமெடி செய்து வருகிறார்.


18 September 2011

மாறாதய்யா மாறாது!


"அம்மா முன்ன மாதிரியெல்லாம் இல்ல... முதிர்ச்சியாவும் பொறுப்பாவும் நடக்கிறாங்க" - இது ஜெயலலிதா முதலமைச்சர் ஆனதும் ஊடகவியலாளர்களின் முதல் சந்திப்பில் செய்தியாளர்கள் அதிசயமாகப் பேசக்கொண்டது.  "இனி வாரம் ஒரு பிரெஸ் மீட்" என்று ஜெயலலிதா அம்மையார் அங்கே அறிவித்ததோடு சரி, இன்றுவரை பிரெஸ் மீட் எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.

100 நாள் ஆட்சியைப் பற்றிக் கூறுகிறபோது, "அம்மாவிடம் மாற்றங்கள் தெரிகிறது!" என்றுதான் சரத்குமாரிலிருந்து த.மு.மு.க. ஜவாகிருல்லா வரை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பெருமையடித்துக் கொண்டார்கள்.


17 September 2011

நேரடியாக மோதிக் களம் காண்கிற 'கபடி' அரசியல்தான் சிறுத்தைகளுக்குத் தெரியும்!


'நான் உமி கொண்டு வருகிறேன்; நீ அரிசி கொண்டு வா! இரண்டு பேரும் ஊதி ஊதி சாப்பிடுவோம்!' என்கிற எனது கட்டுரைக்கு மறைமுகமாகப் பதில் சொல்ல முனைந்திருக்கிறார் யமுனா ராஜேந்திரன் அவர்கள்.  ஆனால் யமுனா ராஜேந்திரனுக்கு தமிழக அரசியல் இயக்கங்களின் அரிச்சுவடியோ, அதன் இயங்குதளம் குறித்த புரிதலோ இல்லை. அதனால்தான் அரசியல் இயக்கங்களின் ஒற்றுமையின்மையை அறிவுலகினரின் கையெழுத்து அறிக்கையோடு ஒப்பிடுகிறார்.  அநீக்கு எதிரான ஓர் அறிக்கையை எழுதி அதை இணையம் வழியே அனுப்பி வெவ்வேறு தத்துவார்த்தக் கோட்பாடுகளைக் கொண்ட முரண்பட்ட சிந்தனைவாதிகளிடம் கையெழுத்து வாங்குவதையும், வெகுசன மக்களிடையே அரசியல் செய்யும் அரசியல் அமைப்புகளின் கூட்டியக்கத்தையும் ஒன்றுபோலப் புரிந்து கொள்ளும் தன்மை இல்லாமல் எழுதியிருக்கிறார். அறிக்கைதான் ஒற்றுமையின் அடையாளம் என்றால் அந்த ஒற்றுமை அரை நூற்றாண்டு காலமாக தமிழக கட்சிகளிடையேயும், தமிழ் அமைப்புகளிடையேயும் உள்ளது என்று ஆணித்தரமாக சொல்வேன் யமுனாவுக்கு.  ஏனென்றால் சம காலத்தில் நாம் எதிர்கொள்ளும் எல்லா நெருக்கடிகளிலும் எல்லா அரசியல் கட்சிகளுமே அவரவர் கண்டன அறிக்கையை வெளியிடுகின்றன.  காங்கிரஸ் கட்சி கூட ஈழத் தமிழர் பிரச்சனையில் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. யமுனாவின் அளவுகோலின்படி சுயநலம் துறந்த உயரிய நோக்கம் கொண்ட அரசியல் ஒன்றை அறிக்கைகளே தீர்மானிக்கும் என்றால் நான் சொல்வது சரிதானே?


16 September 2011

லெப் கேணல் திலீபன் உண்ணாநிலை அறப்போர் - இரண்டாம் நாள் உரை


னது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய மக்கள் அனைவருக்கும் வணக்கம். நின்று கொண்டு பேச முடியாத நிலையில் இருப்பதால் இருந்து பேசுகிறேன். நாளை நான் சுயநினைவுடன் இருப்பேனோ என்று தெரியாது அதனால் இன்று உங்களுடன் பேச வேண்டும் என்று விரும்பினேன். நான் எமது இலட்சியத்தில் உறுதியாக இருக்கின்றோம். 650 பேர் வரையில் இன்று வரை மரணித்துள்ளோம்.

15 September 2011

லெப் கேணல் திலீபன் உண்ணாநிலை அறப்போரை தொடங்கினார்


லெப் கேணல் திலீபன் வான் நல்லூர் கந்தசாமி கோயிலில் கீழ் வரும் ஐந்து காரங்களை முன்வைத்து 15.09.1987 அன்று சாகும்வரை உண்ணாநிலை அறப்போரை தொடங்கிய நாள் இன்று. 


1. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இன்னும் தடுப்புக் காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.

2. புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களக் குடியேற்றம், உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

3. இடைக்கால அரசு நிறுவப்படும் வரை "புனர்வாழ்வு" என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.

4. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் காவல் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

5. இந்தியா அமைதிப்படையின் மேற்பார்வையில், ஊர்க்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு, தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் குடிகொண்டுள்ள இராணுவ, காவல் நிலையங்கள் மூடப்பட வேண்டும்.

13 September 2011

பேய் அரசாண்டால்...


இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் அரச பயங்கரவாதம் காக்கிச் சட்டை வடிவத்தில் தலித்துகளைக் கொன்று குவிக்குமோ என்று தெரியவில்லை?

ஜெயலலிதா அம்மையார் அரியணைக்கு வந்ததும் வராததுமாய் தலித்துகளின் இரத்தத்தை தமிழகத்தின் வீதிகளில் தெளித்திருக்கிறார். 

மாவீரன் இம்மானுவேல் சேகரனின் நினைவுநாளான செப்டம்பர் 11 ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தின் தென் மாவட்டங்களிலிருந்து காலை முதலே எழுச்சிகரமான உணர்ச்சிகளுடன் பரமக்குடியை நோக்கி ஆண்களும், பெண்களும், இளைஞர்களும் வாகனங்களில் அணிவகுக்க ஆரம்பித்தனர்.  தம்மைத் தலைநிமிர வைத்த அத்தலைவனின் நினைவுநாளில் அஞ்சலி செலுத்தத்தான் எவ்வளவு ஆர்வத்துடனான கடமை!  மக்கள் திரள் கட்டுக்கடங்காமல் போனது.